தளி சட்டமன்ற தொகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தத் தொகுதியில் பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தளி. இராமச்சந்திரனை அறிவித்துள்ளமை அதிர்ச்சியடைய வைக்கிறது.

2012ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பெரியார் திராவிடர் கழகமாக செயல்பட்டபோது கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி எனும் பழனிச்சாமி, தளி. இராமச்சந்திரனின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்துப் போராடியதால் துப்பாக்கியால் சுட்டும் தலையைத் துண்டித்தும் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தளி. இராமச்சந்திரன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. 100 கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

1992இல் நாகமங்கலத்தைச் சார்ந்த என்.சி.ராமன் கொலை செய்யப்பட்டார். இதில் தளி.இராமச்சந்திரனும் குற்றம் சாட்டப்பட்டார். கொலையை நேரில் பார்த்த என்.சி.ராமன் தம்பி சந்திரசேகர், பல்வேறு அச்சுறுத்தல்களையும் மீறி சாட்சி கூறியதால் அவரும் ஒசூர் பேருந்து நிலையத்தில் மக்கள் முன் வெட்டி கொல்லப்பட்டார். அப்போது தளி. இராமச்சந்திரன் தனது பெயருள்ள வேறு ஒரு இராமச்சந்திரனை ஆள்மாறாட்டம் செய்து சரணடைய வைத்து தப்பித்துக் கொண்டார்.

இந்த ஆள்மாறாட்டம், தோழர் பழனி கொலைக்குப் பிறகு மீள் விசாரணை செய்ததில் தளி. இராமச்சந்திரனையும் அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளியாக்கப்பட்டு, குற்றப்பத்திரிக்கை மாற்றப்பட்டு இப்போது வழக்கு நடந்து வருகிறது. ரியல் எஸ்டேட் தொழிலுக்காக இப்பகுதி விவசாயிகளை மிரட்டி நிலங்களைப் பறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தளி. இராமச்சந்திரன்.

ஓசூர் நீதிமன்ற விசாரணையில் தளி. இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் குறுக்கீடு செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மக்களை அச்சத்தின் பிடியில் தளி. இராமச்சந்திரனும், அவரது ஆட்களும் வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்தது.

2006ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட தளி.இராமச்சந்திரன் 'சீட் ' கேட்டபோது தொகுதி உடன்பாட்டில் சி.பி.ஐ கட்சிக்கு அத்தொகுதி சென்றது. சி.பி.ஐ மாவட்ட செயலாளர் நாகராஜ் ரெட்டி சி.பி.ஐ சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு பணபலத்தால் வெற்றி பெற்றார். தளி. இராமச்சந்திரன் தோழமை கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவரை கட்சியிலிருந்து நீக்கியது.

ஆனால் சொந்த கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடித்தவரையே கட்சியில் சேர்த்துக் கொண்டது சி.பி.அய். தியாகத் தழும்புகளும், எளிமையும் நிறைந்த தோழர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, பணபலம் என்ற ஒற்றைக் காரணத்துக்காக கிரிமினல் கொலை வழக்குகளில் சிக்கியுள்ள தளி.இராமச்சந்திரனை பொதுவுடமை “புரட்சியாளராக்கி” களம் இறக்கியுள்ள நிலையிலும், அங்கே எதிர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி உள்ள நிலையிலும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தத் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

தோழர் நல்லக்கண்ணு போன்ற நேர்மையான தலைவர்கள் இருக்கும் கட்சியில் தளி.இராமச்சந்திரன் கட்சியின் வேட்பாளரா என்ற வேதனையான கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It