ஆணவக் கொலை தடுப்புச் சட்டம்: அமைச்சரிடம் கழகம் மனு
சாதி ஒழிப்பு முன்னணி மற்றும் தி.வி.க சார்பில் ஜூலை 19, 2021 காலை 11 மணியளவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆணவக் கொலைகளைத் தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும், கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய உதவிகள் உடனே வழங்கப்பட வேண்டும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி செந்தில், ஸ்ரீராம், ஜாதி ஒழிப்பு முன்னணி ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாஜக, பாமக இல்லாத வன்கொடுமை தடுப்புச் சட்டக் குழு
தமிழ்நாட்டில் பட்டியலின, பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்கான கமிட்டிக்கு புத்துயிர் அளித்து கமிட்டி புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் 45 தனித் தொகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், தொல்.திருமாவளவன், இரவிக்குமார் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள். 62 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் தனபாலும் இதில் இடம் பெற்றிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி, பாமக கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சியையும் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது கூடி கண்காணிக்கும் என்கிற அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டு இதே போன்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அது செயல் படாமல் முடங்கிக்கிடந்த நிலையில் அதற்கு புத்துயிர் கொடுக்கின்ற ஒரு நடவடிக்கையை தமிழக அரசு இப்போது மேற்கொண்டு இருப்பது பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.
- பெ.மு. செய்தியாளர்