ஒரே நாட்டு மக்களைப் பிறவியில் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான் இருக்கின்றதே தவிர, வேறெங்கும் இல்லை என்பது உலகக் கல்வி ஞானமுடையவர்கள் யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கும் சாதியும் எவ்விதக் கொள்கைக்கும் பொருத்த மில்லாமல் வெறும் பிரிவுக்கும், இழிவுக்கும் மாத்திரம் ஆதாரமாய் இருப்பதைத் தவிர மற்றபடி அவற்றால் யாதொரு பயனும் இல்லாமல் இருப்பதும் யாவரும் அறிந்ததாகும்.

எனவே இப்படிப்பட்ட சாதி உயர்வும் தாழ்வும் எப்படி ஏற்பட்டதென்றும், இதற்கு ஆதாரம் என்ன என்பதையும் சற்றுக் கவனிப்போம்.

பொதுவாகச் சாதி என்பது இந்துக்கள் என்பவர்களுக்குள் ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர்களுக்குள் மாத்திரம்தான் “கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது” என்கின்ற கொள்கையின்மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவை முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்ததாகவும், கடைசிச் சாதி என்பது மிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாகக் குறிக்கப்பட்டிருக்கின்ற விவரம் யாவரும் அறிந்ததேயாகும்.

இப்படி இருந்தாலும் இப்போது அநேக சாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போமானால், அதற்குக் கிடைக்கும் சமாதானம் மிக மிக இழிவைத் தரத் தக்கதாகவே இருப்பதை உணரலாம்.

அதாவது, “ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப் பட்ட நான்கு வருணத்தாரும் தங்களில் சாதிமுறை தவறிக் கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும், கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவு”களென்றும், அப்படிப்பட்ட பிரிவுகளுக்கும் பஞ்சம சாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றதென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.

அப்படிச் சொல்லப்படுவதிலும் இப் “பஞ்சம சாதிகள்” என்பது, இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் பல முக்கியமான சாதிக்காரர்கள் என்பவர்களே - பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சம சாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன.

ஆகவே அதில், உதாரணமாக, இன்று தமிழ்நாட்டில் பிரபல சாதியும் பிரமுக சாதியும் என்று சொல்லிக் கொள்ளப்படுவதான வேளாள சாதியார் எனப்படுபவர்களே பஞ்சம சாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம சாதியிலும் - பிராமண க்ஷத்திரிய குலப் பெண்ணைச் சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட் டிருக்கின்றன.

இவர்களில் இந்தப்படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தால் அவர்களுக்குக் ‘காணியாளர்’ என்று பெயர் என்றும்; மற்றபடி ‘சிற்றரசு’, ‘மந்திரித்துவம்’ முதலிய பதவிகளில் இருப்பவர்களாயிருந்தால், அவர்களுக்கு ‘வேளாண் சாமாந்தர்’ என்கின்ற பெயர் என்றும் குறிக்கப்பட்டிருப்பதுடன், இவற் றிற்கு ஆதாரம், சுப்பரபோதகம், பிரம்மபுராணம், வைகாநசம், மாதவியம், சாதி விளக்கம் என்கின்ற நூல்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

தவிர, மேற்கண்ட பிராமண சாதி ஆண், க்ஷத்திரிய சாதிப் பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே ‘சவர்ணர்’ எனவும், ‘தெலுங்கர்’ எனவும் குறிப்பிடப்பட் டிருக்கின்றனர். அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவர் அனைவரையும் குறிபபிடத்தக்கதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோலவே, பிராமணன் வைசியப் பெண்ணுடன், கல்யாணத்தால் பிறந்த பிள்ளை ‘அம் பட்டன்’ என்றும், சோரத்தால் பிறந்த பிள்ளைகள், ‘குயவர்’ என்றும், ‘நாவிதர்’ என்றும் குறிக்கப்பட் டிருக்கின்றது. அதுபோலவே, பிராமணன் சூத்திரப் பெண்ணுடன் கல்யாணத் தால் பிறந்த பிள்ளை ‘பரதவர்’, அதாவது ‘செம் படவர்’ என்றும், சோரம் செய்ததால் பிறந்தவர் ‘வேட்டைக்காரர்’, அதாவது ‘வேடுவர்’ என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்கள் ‘சண்டாளர்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

பிராமண குலப் பெண்களுடன் சண்டாளர் கூடிப் பிறந்த பிள்ளைகள் ‘சருமகாரர்’ அதாவது ‘சக்கிலிகள்’ என்று குறிப்பிடப்படுகின்றது. க்ஷத் திரியகுலப் பெண்ணுடன் ‘சண்டாளர்’ முதலிய வர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் ‘வேணுகர்’ (அதாவது வேணுகானம் செய்பவர் களும்), கனகர் (அதாவது, தங்க வேலை செய்பவர் களும்), ‘சாலியர்’ (அதாவது நெசவு முதலிய வேலை செய் பவர்களும்) ஆவார்கள் என்றும் கூறப்பட்டிருக் கின்றன.

இந்த மாதிரி ‘கீழ்-மேல்’ சாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட சாதிகளில் ஒன்றாகிய அயோவகச் சாதிப் பெண்ணிடம் நிடாதனுக்குப் பிறந்த பிள்ளைகள் ‘பார்க்கவர்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்தப்படியே இப்போது அமுலில் உள்ள சாதிகளையெல்லாம் குறிக்கும்படியாகவே இன்னும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.

இதுபோலவே, இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி நூல்களில் - அதாவது அபிதானகோசம், அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்துப் பண்டிதர்களும் ஆதாரமாய்க் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல சாதிகளை இதைவிடக் கேவலமாகவும் குறிக்கப்பட்டிருக்கின்றதோடு, 4 சாதி தவிர மற்ற சாதிகள் எல்லாம் மேற்கண்ட நான்கு சாதிக்குள் மேல் - கீழாகவும், கீழ் - மேலாகவும் கல்யாணம் செய்தும், விபசாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டவர்கள் என்றே கூறப்பட்டிருக்கின்றன.

செட்டியார்மார்களையும், ஆசாரிமார்களையும் மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது. ஆகவே, சாதியைக் கட்டிக்கொண்டு அழுவது இவ்விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள் வதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.

உண்மையில் யாருக்கு, யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொல்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் - ஒரு இழிவைக் கற்பித்து அதை நம் மக்கள் மீது சுமத்தி, ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டு மிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே சாதிப் பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட் டவும்; அவ்விதக் ‘கொடுமையை’ ஒழிப்பதற்காக வுமே இதை எழுதுகிறோம்.

‘குடிஅரசு’, 16.11.1930 தலையங்கம்

Pin It