நாகர்கோவில் பிரபல வழக்கறிஞரும், நமது சுயமரியாதை இயக்கத்திற்கோர் தூண் போன்றவரும், நமது மகாநாடுகள் பலவற்றில் தலைமை வகித்து அரிய சொற்பொழிவாற்றியவருமான தோழர் பி. சிதம்பரம் பி.ஏ., பி. எல். அவர்கள் திருவிதாங்கூர் சட்டசபைக்கு வர்த்தகத் தொகுதியில் அபேட்சகராக நின்று போட்டியின்றித் தெரிந்தெடுக்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

தோழர் சிதம்பரம் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமைமிக்குடையார், சரித்திர ஆராய்ச்சியில் நிபுணத்துவமுடையார், சட்ட ஆராய்ச்சியில் வல்லுநர், சமய ஆராய்ச்சியில் பேரறிஞர். சமதர்மப் பற்றுடையார். இவர் சட்டசபைக் குத் தேர்ந்தெடுக்கப் பெற்றது, நமது சுயமரியாதை இயக்கத்திற்கு ஓர் பெரும் வெற்றியென்றே கருதுகிறோம். இவர் தேர்தலால் திருவிதாங்கூரில் வருணாச்சிரம ஆதிக்கம் ஒழிந்து எங்கும் சமத்துவமும், சுயமரியாதையும் பொங்கிப் பொலிந்து மக்களெல்லோரும் சாந்தியும், சமாதானமுமுற்று சமதர்ம நெறியை அடைவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 13.08.1933)

Pin It