நமது நாட்டில் ஆங்கிலப் படிப்பு பரவ ஆரம்பித்ததன் பலனாகவும், ஏழு ஆண்டுகளாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்புக்கும் பின் வாங்காமல் உண்மைகளை எடுத்துக் கூறிப் பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணாச்சிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. இதனால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டும், பூதேவர்கள் என்று கூறிக்கொண்டும் இருந்த பார்ப்பனர் களுடைய கௌரவமும் குறைய தொடங்கி விட்டது என்பதும் உண்மையாகும். ஆகையால், அவர்கள் காங்கிரசின் பெயராலும், அரசாங்க உத்தியோகத்தின் செல்வாக்காலும் மற்றும் பல பொது இயக்கங்களின் பெயராலும் தங்களைத் தலைவர்களாகவும், தியாகிகளாகவும், தேசாபிமானிகளாகவும் செய்து கொண்டு பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி வாழ்ந்து வந்தவர்கள். இப்போது மேற்படி பொது இயக்கங்களிலும் பார்ப்பனரல்லாதார் புகுந்து தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்தவுடன் வேறு பல பேர்களாலும், பிரசாரங்களாலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி செய்கின்றார்கள்.

periyar 391நமது இயக்கமானது பார்ப்பனர்களை நமது மக்கள் உயர்வாக கருதுவதற்குக் காரணமாக இருந்த ‘மதம்’, ‘வேதம்’, ‘புராணம்’, ‘ஸ்மிருதி’, ‘கடவுள்’, ‘ஆன்மா’, ‘மோட்சம்’, ‘நரகம்’, ‘பாவம்’,‘புண்ணியம்’ முதலிய அடிப்படைகளிலேயே கை வைத்து அவைகளை அழிக்கத் தொடங்கியவுடன் அவர்கள் விழித்துக் கொண்டு அந்த அடிப்படைகளை மறுபடியும் புதுப்பித்து அவைகள் மூலம் மீண்டும் பழய ஆதிக்கத்தைப் பெறவே வழி தேடுகிறார்கள். இதற்காகவே பார்ப்பனர்கள் காங்கிரசின் பெயரால், ‘மகாத்மா’, ‘பாரதமாதா’, ‘அவதாரம்’, ‘கதர்’, ‘ஹிந்தி’, ‘கொடியேற்ற வணக்கம்’, ‘ஜெயந்தி விழாக்கள்’ முதலியவைகளைக் கொண்டு பாமர மக்களின் மனத்தில் பழய வருணாச்சிரம தருமத்தையும், மூட நம்பிக்கை களையும் உண்டாக்குவதோடு மட்டும் அல்லாமல், ‘பிராமண சபை’, ‘சனாதன தர்ம சபை’, ‘தருமரக்ஷணசபை’, ‘வேதோத்தாரண சங்கம்’, ‘அத்வைத சபை’ ‘ஹிந்துமத சபா’ முதலிய சங்கங்களை அமைத்துக் கொண்டு இவைகள் மூலமாகவும், மக்களுடைய பகுத்தறிவைத் தடுத்து அவர்களை வைதீக மூடநம்பிக்கையுடையவர்களாக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்த மாதிரியான வைதீக சபைக்காரர்களுக்கு நாம் நன்றி பாராட்டுகிறோமேயொழிய உண்மையில் அவர்களிடம் துவேஷமோ, கோபமோ அடையவில்லை. ஏனெனில், அவர்கள் பிராமணர்களின் உண்மை மனக்கருத்தை அச்சபைகளிற் செய்யும் பிரசங்கங்களின் மூலமாகவும் தீர்மானங்களின் மூலமாகவும் வெளிப்படுத்துவதால், பிராமணரல்லாதார் ஏமாறாமல் இருக்கவும் பிராமணர்களை நம்பிக் கொண்டிருக்கும் மக்களை எச்சரித்துத் திருத்தவும் முடிகிறது என்கின்ற இந்த காரணத்திற்காகவே நாம் அவர்களுக்கு நன்றி பாராட்டுவதாக கூறுகிறோம்.

பார்ப்பனர்களுடைய உண்மையான அபிப்பிராயத்தை அறிய வேண்டுமானால், சென்ற 23.11.31ல் கும்பகோணத்தில் கூடிய தஞ்சை ஜில்லா பிராமணசபையின் இரண்டாவது வருட கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகளைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அப்பொழுது, பணக்காரர்களாகவும், ஆங்கிலம் படித்தவர்களாகவும், வக்கீல் தொழில் செய்பவர்களாகவும் அரசாங்க உத்தியோகத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று நீங்கியவர்களாகவும், உபாத்தியாயர்களாகவும், ஒன்றுந்தெரியாத வைதீகர்களாகவும் உள்ள பார்ப்பனர்கள் ஒன்று கூடிப் பேசிய வார்த்தைகளின் சில பகுதிகளை கவனிப்போம். (இந்நிகழ்ச்சி சென்ற 26.11.31ந் தேதி வெளியான “தமிழ்நாடு” பத்திரிகையில் காணப்படுகிறது.)

“நவநாகரீகத்தில் அகப்பட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் தங்கள் தர்மத்தை மறந்து நிற்கிறார்கள். மாமிசம் உண்ணும் பிராமணர்களையும், குடிக்கும் பிராமணர்களையும் நாம் இப்போது பல இடங்களில் காண்கிறோம். எனக்குப் பிரத்தியட்சமாய் தெரிந்ததைத் தான் கூறுகிறேன். டில்லியில் ஒரு விருந்து நடந்தது. அதில் சற்றும் அச்சமில்லாமல் மாமிசம் சாப்பிட்ட பிராமணனை நான் அறிவேன். கவர்னர் முதலிய பிரமுகர்களுக்கு நடத்தும் விருந்துக் கச்சேரிகளில் ஆதிதிராவிடர்களால் பரிமாறப்பட்டு அநேக பிராமணர்கள் சாப்பிடுகிறார்கள். இது என்ன பிராமணீயம் என்று கேட்கிறேன். ஆதிதிராவிடர்களை கோவில்களுக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று நாம் சொல்லுகிறோம். ஆனால், ஆதி திராவிடர்கள் கையில் போஜனம் செய்யும் பிராமணர்களை நாம் கோயிலுக்குள் நுழையாமல் தடுக்கிறோமா? கடல்கடந்து வரும் பிராமணர்களை நாம் வரவேற்று உபசரிக்கிறோம். வைதீகர்கள் பிள்ளைகள் கூட ஐ.சி.எஸ். முதலான பரீட்சைகளுக்குச் சீமைக்கு செல்லுகிறார்கள். அதைப்பற்றி நாம் என்ன செய்கிறோம்?” என்று தலைமை வகித்த பார்ப்பனர் பேசியிருக்கிறார்.

இவர் பேசியிருப்பது முழுவதும் உண்மையான விஷயம் என்பதில் யாரும் சந்தேகப் படவேண்டியதில்லை. இந்த நிலைமையை சீர்திருத்திப் பழைய வைதீக நிலைமைக்கு மறுபடியும் பார்ப்பனர்களைக் கொண்டு வரவேண்டுமே என்னும் உணர்ச்சியோடு அவர் பேசியிருக்கலாம். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. மேற்கூறியபடி ‘ஒழுக்கம்’ கெட்ட பார்ப்பனர்களும் தங்களைப் பார்ப்பனர்களாகவே மதித்துக் கொண்டு மற்றவர்களை ‘சூத்திரர்களாக’ மதிக்கும் அகங்கார மனப்பான்மை தான் ஒழிய வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஏதோ இவர் இம்மாதிரி பார்ப்பனர்களின் நடத்தையை வெளிப்படையாகக் கூறிவிட்டாரே ஒழிய செய்கையில் மேற்கூறியவாறு ‘ஒழுக்கங்கெட்டவர்’களாக உள்ள பார்ப்பனர்களையெல்லாம் பகிஷ்கரிக்க எந்தப் பார்ப்பானும் முன்வர மாட்டான் என்பதை நாம் அறிவோம்.

நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த சம்பவத்தைக் கவனித்தாலே இது விளங்கும். திரு.காந்தி, பண்டித ஜவகர்லால் நேரு, லாலா லஜபதிராய் முதலியவர்களைக் கப்பலேறிச் சென்று வந்தவர்கள் என்ற காரணத்திற்காக உள்ளே செல்வதைத் தடுத்த கோயிலில் மகாராஜாவின் உத்தரவு காரணமாக கப்பல் பிரயாணம் செய்த சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் செல்லவில்லையா? அவர் இல்லாமல் வேறு ஒரு பார்ப்பனரல்லாதாருக்காக மகாராஜாவால் தடைநீக்கப்பட்டு அப்பார்ப்பனரல்லாதாரும் கோயிலுக்குள் போயிருந்தால் திருவாங்கூரில் உள்ள பார்ப்பனர்களும் பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள வைதீகர்களும் சும்மா இருந்திருப்பார்களா? திருவாங்கூரில் ‘இந்துமதம் அழிந்துவிட்டது’ என்று போடும் கூச்சல் ஆகாயத்தைப் பிளக்கும் அல்லவா?

அன்றியும், இதே சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பராய் இருந்த காலத்தில் கும்பகோணத்திற்கு வந்திருந்தபோது ‘உலககுரு’ என்று பார்ப்பனர்களால் கூறப்படுகின்ற ‘சங்கராச்சாரியார்’ அவரை ‘ஆசீர்வதித்து’ பாராட்டினாரே. இதுபோலவே ‘சூத்திரர்கள்’ என்கின்றவர்களிடத்தில் பேசினால் ‘பாவம்’ என்ற கொள்கையையுடைய ‘சங்கராச்சாரியாரும்’ மற்றும் வைதீகப் பார்ப்பனர்களும், உத்தியோகப் பார்ப்பனர்களையும், இங்கிலாந்து சென்று வந்த பார்ப்பனர்களையும், கறி தின்னும் பார்ப்பனர்களையும், குடிக்கும் பார்ப்பனர்களையும், வரவேற்றும், ஆசீர்வதித்தும் அவர்களைப் புகழ்ந்தும், அவர்களுடைய வாக்கு உதவியையும், பொருள் உதவியையும் பெற்றார்கள் - பெறுகிறார்களே இவற்றையெல்லாம் யாராவது கண்டித்தார்களா? இல்லையே. ஆகையால் மேற்கூறிய பார்ப்பனர் அபிப்பிராயத்தை வேறு எந்தப் பார்ப்பனரும் ஒப்புக் கொண்டு நடத்தையில் அனுஷ்டிக்க முன்வர மாட்டார்கள் என்பது நிச்சயம்.

மற்றொரு பார்ப்பனர் ‘ஆங்கிலப் படிப்பினால்தான் பார்ப்பனீயம் கெட்டது’என்று பேசியதற்குப் பதிலாக ‘நான் ஆங்கிலக் கல்வி கற்றவனே, ஆனால் என்னுடைய மத தர்மங்களில் அக்கல்வி தலையிட்டிருக்கிறதாய் நான் சொல்ல முடியாது. முக்கியமாய் நாம் நம் சிறுவர்களுக்கு சமஸ்கிருதக் கல்வியை புகட்டினால் பல தீமைகள் வராமல் தடுக்கலாம். இது மிகவும் முக்கியமான காரியமாகும்’ என்று ஒரு சர்வகலாசாலைப் பட்டம் பெற்ற பார்ப்பனர் பேசியிருக்கிறார். இதிலிருந்து படித்த பார்ப்பனர்களும் உத்தியோகம் செய்யும் பார்ப்பனர்களும் என்னதான் கெட்டாலும் தங்கள் பிராமணீயக் கொள்கைகளைத் தாம் விட்டுவிட்டதாக நினைத்துக் கொள்வதேயில்லையென்பது விளங்கும். அவர்கள் வருணாச்சிரம தர்ம முறைப்படியே தாங்கள் மேலாகவும் மற்றவர்கள் தங்களுக்குக் கீழாகவும் இருக்கவே விரும்புகிறார்கள் என்பதும், அதற்காகவே உழைக்கிறார்கள் என்பதும் உண்மையென்பதில் சந்தேகப்பட வேண்டியதில்லை.

மற்றும் ‘பிராமணீயம் ஒருநாளும் அழியாது அது எந்தக் காலத்திலும் நிலைப் பெற்றிருக்கும் சக்தியை உடையதாகும். சென்ற யுகங்களிலும் அனேக பிராமணர் நாஸ்திக புத்தியை உடையவர்களாய் இருந்தார்கள். இப்பொழுது இது புதிதல்ல’ என்று ஒருவரும்,

‘நீங்கள் இவ்விடத்தில் ஒரு சத்தியம் செய்து கொள்ள வேண்டும். பெண்களை நாம் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பக்கூடாது. தகுதியற்ற கல்வியைப் பெண்களுக்கு போதிப்பதனால் தான் நம்முடைய குடும்பங்கள் கெட்டுப்போகின்றன. நம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். சாரதா சட்டத்தை எதிர்த்து அதற்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசாங்கம் நமக்கு அநேக தீங்குகளை செய்யப் போவதும் நிச்சயம். ஆகையால், நாம் முன் ஜாக்கிரதையுடனிருந்து காரியங்களைக் கவனிக்க வேண்டும்’ என்று ஒருவரும் பேசியிருக்கின்றனர்.

இந்தப் பேச்சுக்களிலிருந்தும், இவ்வாறு பார்ப்பனர்கள் பிரச்சாரங்கள் செய்து கொண்டு வருவதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. ‘அவர்கள் அனைவரும், மீண்டும் வருணாச்சிரம தரும ராஜியத்தை நிலைநாட்டவே பாடுபடுகிறார்கள்’ என்பது தான். இந்த வகையில், பார்ப்பன சபைகளில் உள்ள பார்ப்பனர்களும், காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களும், அரசாங்கத்தில் உத்தியோகஞ் செய்யும் பார்ப்பனர்களும், மற்றும் எந்த இழிவான நிலையில் உள்ள பார்ப்பனர்களும், தங்கள் ஆதிக்கம் அழியாமல் இருப்பதற்கும், தங்கள் ஆதிக்கம் மறுபடியும் தேசத்தில் நிலைபெற்று பார்ப்பனரல்லாத மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பல துறைகளிலும் இருந்து உழைக்கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. இந்தக் காரணத்திற்காகவேதான் மதசம்பந்தமான ‘அவதார புருஷர்கள்’ என்று அவர்களாலேயே கொண்டாடப்படுகின்ற ‘ஆழ்வார்கள்’, ‘நாயன்மார்கள்’, ‘பக்தர்கள்’முதலியவர்களிலும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற வித்தியாசத்தை மனதிற்கொண்டு பார்ப்பனரல்லாத ‘ஆழ்வார்’களுக்கும், ‘நாயன்மார்’களுக்கும், ‘பக்தர்’களுக்கும் பெருமை கெடாமல் பார்ப்பனர்கள் என்பவர்களுக்கே பெருமை கொடுக்கும் இவர்கள், வருணாச்சிரம தருமத்தைக் குரங்குப்பிடியாக பிடித்திருக்கும் திரு.காந்தியை ‘மகாத்மா’வாகவும் ‘அவதார’புருஷராகவும் கொண்டாடுகின்றனர். இந்தியாவில் உள்ள மதங்களுக்கும், கலைகளுக்கும், நாகரீகங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் எனக் கூறும் காங்கிரசைப் போற்றுகின்றனர். இன்றேல், திரு.காந்தியை மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு காங்கிரசையும் ஒழித்துவிட அவர்கள் முயற்சி செய்யப் பின் வாங்க மாட்டார்கள் என்பது நிச்சயமான செய்தியாகும்.

மக்களுடைய பகுத்தறிவை வளர்ப்பதற்குரிய நூல்களோ, இலக்கியங்களோ இல்லாதததும், வருணாச்சிரம தருமத்தைப் போதிக்கும் துளசிதாஸ் ராமாயணம், பகவத்கீதை, முதலிய நூல்கள் உள்ளதுமாகிய ஹிந்தி மொழியை பிரசாரஞ் செய்கின்றனர். சனாதன தர்மத்தைப் போதிக்கும் சமஸ்கிருதப் படிப்பை விருத்திச் செய்யவேண்டும் என்று பேசுகின்றனர்.

இவ்வாறு செய்வதில் உள்ள தந்திரத்தையும் யோசித்துப் பாருங்கள். ஆங்கிலப் படிப்பினால் விஞ்ஞான அறிவும், பிற நாட்டு நாகரீகங்களும், சுதந்திர உணர்ச்சியும் உண்டான காரணத்தால் தான் இன்று பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தே மேற்கூறியவாறு பிரசாரஞ் செய்கின்றனர் என்று கூறுவதில் தவறு என்ன இருக்கின்றது என்று கேட்கிறோம்.

இச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும், கூறி வைதீக அரசியல் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை வெளிப்படுத்த விரும்புகிறோம். சென்ற சில தினங்களுக்கு முன் ‘குருவாயூர் கோயில் சத்தியாக்கிரகத்தை கண்டிக்க முன் வந்த திரு.எம்.கே.ஆச்சாரியார், ‘கோயில் பிரவேசஞ் செய்ய விரும்புகிறவர்கள், மத பக்தியினால் சுவாமி தெரிசனத்திற்காக கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. அரசியல் காரியங்களை முன்னிட்டு சமவுரிமை வேண்டும் என்பதற்காகவே கோயிற்பிரவேசம் விரும்புகின்றனர். ஆகையால், அதைத் தடுக்க வேண்டும்', என்ற அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார். இதிலும், எப்படியாவது மததர்மம் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் அடங்கியிருப்பதைக் காணலாம். ‘மத தர்மத்தை ஒப்புக் கொள்ளுகிறவர்களுக்கு கோயில் பிரவேசம் அளிக்கலாம்’ என்ற அபிப்பிராயத்தையும் அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதிலிருந்து மத தர்மம், ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டால் எந்த வகையிலும் பிராமணீயம் அழியாமல் நிலைக்கும் என்பதுதான் அவர் கருத்து என்பதை அறியலாம். ஆனால், மத தர்மம் ஒப்புக் கொள்ளப் படும்போது, எல்லா வகுப்பினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உரிமை எப்படி ஏற்படும் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இன்னார் கோயிலுக்குள் போகலாம், இன்னார் கோயிலுக்குள் போகக் கூடாது என்பதற்கும் அந்த பாழும் மத தர்மந்தானே காரணமாய் இருந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, திரு.ஆச்சாரியார் கூறும் மத தர்மத்தையும், பிராமணசபை யார் பிரசாரம் செய்யும் மததர்மத்தையும் எவ்வாறு நாம் ஒப்புக் கொள்ள முடியும்? ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே முடியாது. அழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்றே கூறுகின்றோம். ஆகையால், பார்ப்பனர்கள் செய்யும், எல்லாப் பிரசாரங்களும், மதத்தையும், மத தர்மத்தையும், அதன் மூலம் வருணாச்சிரம தருமத்தையும், பார்ப்பனீயத்தையும் காப்பாற்றவே செய்யப்படும் பிரசாரங்களே என்பதை மீண்டும் கூறி எச்சரிக்கை செய்கிறோம்.                                                                                    

(குடி அரசு - தலையங்கம் - 29.11.1931)

Pin It