தேவையான மதிப்பெண்கள் இருக்கின்றன. தேவையான தேர்வுகளையும் எழுதியாயிற்று. இனி அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.

 ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர்களிடம் இருந்து ஒரு சில ஆவணங்களை (documents) எதிர்பார்க்கின்றன. மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அந்த ஆவணங்களையும் சேர்த்தே அனுப்ப வேண்டும். அந்த ஆவணங்கள் எவை எவையென்று விரிவாகப் பார்ப்போம்.

காரண அறிக்கை : (Statement Of Purpose)

காரண அறிக்கையைச் சுருக்கமாக ‘SOP’ என்றுக் கூறுவர். இதைப் பற்றி நாம் பார்க்கும் முன் ஒரு கேள்வி.

நீங்கள் ஒரு நேர்முகத் தேர்வுக்கு போகின்றீர்கள். அப்பொழுது அங்கே உங்களிடம் 'நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?' 'உங்களை நாங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்' என்று கேள்விகள் கேட்டார்கள் என்றால் நீங்கள் நீண்ட விளக்கத்தினைக் கொடுப்பீர்கள் அல்லவா!  அந்த விளக்கத்தினை எழுத்து வடிவினில் எழுதுவதே இந்தக் காரண அறிக்கை ஆகும்.

பொதுவாக பல்கலைக்கழகங்கள் ஒரு மாணவரைத் தேர்ந்து எடுக்கும் முன், அந்த மாணவரின் இலக்குகளைப் பற்றியும் கனவுகளைப் பற்றியும் அறிந்துக் கொள்ள ஓரளவு முயலும். அதற்காகத் தான் இந்த அறிக்கையை அவர்கள் மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றார்கள்.

இவ்வறிக்கையில் மாணவர்கள் அவர்களின் முந்தைய படிப்பைப் பற்றியும் (இளநிலை பட்டத்திற்கு விண்ணப்பிக்கின்றார்கள் என்றால் பள்ளிப் படிப்பினைப் பற்றியும் முதுநிலைக்கு என்றால் கல்லூரி படிப்பினைப் பற்றியும்) ஏன் குறிப்பாக அந்த நாட்டில், அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்புகின்றார் என்பதைப் பற்றியும் எதற்காக விண்ணப்பிக்கும் அந்தப் படிப்பைப் படிக்க விரும்புகின்றார் என்பதைப் பற்றியும் விளக்கமாகக் கூற வேண்டும். கூடவே அந்த மாணவர் பெற்று இருக்கும் கூடுதல் தகுதிகள் அதுவும் குறிப்பாக விண்ணப்பிக்கும் அந்தப் பாடத்திற்கு ஏற்றால் போல் இருக்கும் தகுதிகளைக் குறிப்பிட வேண்டும். அவரது கனவை அடைய எப்படி அந்தக் கல்லூரியின் பாடத் திட்டம் அவருக்கு உதவும் என்று அவர் கருதுகின்றார் என்பதைப் பற்றியும் அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் சில ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு முதுநிலைப் பட்டத்திற்கு விண்ணப்பித்தீர்கள் என்றால் உங்களுடைய பணிப் பட்டறிவைப் பற்றியும் குறிப்பிடுவது நல்லது.

மேலும் நீங்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் உங்களுக்குப் பண உதவி வேண்டி இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதையும் நீங்கள் இந்தக் காரண அறிக்கையிலேயே குறிப்பிடலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மாணவர்களின் இலக்கையும் செயல் திட்டத்தையும் அவர்களின் தகுதியோடு விவரிப்பதே காரண அறிக்கை(‘SOP’) ஆகும்.

இந்த அறிக்கையை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கண்டிப்பாக எதிர்பார்க்கும். ஒரு வேளை இந்த அறிக்கை அந்தப் பல்கலைக்கழகங்களை ஈர்த்து விட்டது என்றால், படிக்க வாய்ப்புடன் சேர்த்து மாணவருக்கு படிக்க உதவித் தொகையும் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.

சுட்டுதவிக் கடிதங்கள்: (Reference Letters)

பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் மற்றொரு முதன்மையான ஆவணம் சுட்டுதவிக்  கடிதங்கள் ஆகும்.

உங்களின் திறமைகளையும் நீங்கள் எவ்வாறு அந்தப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்குத் தகுதியானவர் என்று நீங்கள் கருதும் கருத்துகளையும் உங்கள் ஆசிரியர்களோ பணியிடத்தில் உள்ள உயர் அலுவலர்களோ அந்தப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவிக்கும் வண்ணம் எழுதும் கடிதமே சுட்டுதவிக் கடிதங்கள் ஆகும்.

எல்லாப் பல்கலைக்கழகங்களும் இதைப் போன்ற இரண்டு சுட்டுதவிக் கடிதங்களை எதிர்பார்க்கின்றன.

அந்தக் கடிதங்களை நீங்கள் உங்களுக்குப் பாடம் எடுத்த எந்த ஆசிரியரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்... ஆனால் நீங்கள் எந்தப் பாடத்தில் சேர்வதாக இருக்கின்றீர்களோ அந்தப் பாடம் தொடர்புடைய ஆசிரியரிடம் நீங்கள் இந்தக் கடிதத்தினைப் பெற்றுக் கொள்வது என்பது சற்று சிறப்பாக அமையும். அதே போல் நீங்கள் பணி புரிந்து இருந்தீர்கள் என்றால், உங்களின் உயர் அலுவலர்களிடம் இருந்தும் நீங்கள் உங்களின் திறமையினைப் பற்றிய கடிதத்தினைப் பெற்று கொள்ளலாம்.

அந்த கடிதம், எழுதும் ஆசிரியரின் கையொப்பத்துடன், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் (பள்ளியோ கல்லூரியோ அல்லது அலுவலகமோ) முத்திரையினையும் பெற்று இருக்க வேண்டும்.

சில சமயங்களில், இந்தக் கடிதங்களை வாங்குவதற்கு மாற்றாக, உங்களைப் பற்றி அந்த ஆசிரியர்களும் மேலாளர்களும் கொண்டுள்ள கருத்தினை அறிவதற்கு  சில இணையத்தப் பக்கங்களை குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் பயன்படுத்துவது உண்டு. அந்த நிலையில், உங்கள் ஆசிரியர்கள் அந்த இணையப் பக்கத்திற்குச் சென்று அந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

ஆனால், பல ஆசிரியர்கள் இந்தக் கடிதம் எழுதும் பொறுப்பினை ஏற்றுக் கொள்வது இல்லை. எனவே நாமே தான் கடிதத்தினை அவர்கள் எழுதியவாறு எழுதி அவர்களிடம் கையொப்பம் மட்டும் வாங்க வேண்டி இருக்கும். அப்படியே அந்த நிறுவனத்தின் முத்திரையையும் பெற்று விட்டால் சுட்டுதவிக் கடிதம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ஆயத்தமாகி விடும்.

சான்றிதழ்கள் :(Transcripts)

சரி... சுட்டுதவிக் கடிதங்களும் வாங்கியாயிற்று.  காரண அறிக்கையையும் எழுதியாயிற்று. அடுத்து நாம் செய்ய வேண்டிய காரியம் நமது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), நமது இளநிலையர் சான்றிதழ் (Degree Certificate) ஆகிய இரண்டின் படியையும் நாம் படித்த பல்கலைக்கழகத்தில் இருந்து பெற வேண்டும். பெற்ற பின் இந்தச் சான்றிதழ்களையும் மேலே குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு ஆவணங்களையும் உங்களது விண்ணப்பத்தோடு சேர்த்து அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் இறுதி ஆண்டு மாணவராக இருந்தால் உங்களது மதிப்பெண்கள் பட்டியல் மட்டும் போதும். அதேப் போல் நீங்கள் பணிப் பட்டறிவு உள்ளவராக இருந்தால் உங்கள் பட்டறிவுக்கான சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டும்.

உங்களது மதிப்பெண் பட்டியலின் படியையும் நீங்கள் பெற்றப் பட்டத்தின் படியையும் நீங்கள் படித்த பல்கலைக்கழகத்தில் இருந்து வாங்கச் சில வழிமுறைகள் உள்ளன. அதைப் பற்றி உங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலேயே செய்தியினை வெளியிட்டு இருப்பார்கள். எடுத்துக்காட்டிற்கு, இப்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் நீங்கள் உங்கள் சான்றிதழ்களின் படியினை வாங்க வேண்டும் என்றால் படி ஒன்றிற்கு ஐந்நூறு உருபா கட்டணம் செலுத்தி ஒரு படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தீர்கள் என்றால் இரண்டு வாரங்களில் உங்களது படி கிடைத்துவிடும். அந்தப் படியை நீங்கள் மற்ற ஆவணங்களோடு இணைத்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் : (Application)

பொதுவாக ஒரு பல்கலைக்கழகத்திற்கு உரிய விண்ணப்பங்கள் அதன் இணையத்தளங்களிலேயே கிடைக்கும். நாம் அந்த விண்ணப்பங்களை நிரப்பி அனுப்புவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

௧) அந்த விண்ணப்பத்தை தரவிறக்கிக் கொண்டு அதனை நிரப்பிய பின்பு மற்ற ஆவணங்களுடன் இணைத்து அந்த விண்ணப்பத்தையும் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது.

௨) இணையதளத்திலேயே அந்த விண்ணப்பத்தினை நிரப்பி விட்டு, அந்த விண்ணப்பத்தின் குறியீட்டு எண்ணை ஏனைய கோப்புகளில் குறித்து விட்டு அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது.

இந்த இரண்டு முறைகளில் நாம் எதை வேண்டும் என்றாலும் பின்பற்றலாம். ஆனால் சில பல்கலைக்கழகங்களில் இரண்டு விண்ணப்பிக்கும் முறைகள் இருப்பதில்லை என்பதினையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே விண்ணப்பிக்கும் முன்னர் அந்தப்  பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறையினை உறுதி செய்து விட்டே நாம் விண்ணப்பத்தை  நிரப்பத் தொடங்க வேண்டும்.

அனைத்துக் கோப்புகளையும் உரிய சான்றிதழ்களையும் அந்த விண்ணப்பத்தோடு இணைத்தோ அந்த விண்ணப்பத்தின் குறியீட்டு எண்ணோடு சேர்த்தோ அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பிய நமது விண்ணப்பத்தின் நிலையை நாம் நமது குறியீட்டு எண்ணின் மூலம் அந்தப் பல்கலைக்கழக இணையதளத்திலேயே அறிந்து கொள்ளலாம். அந்தப் பல்கலைக்கழகம் நமது விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டது என்றாலும் சரி அதனை ஏற்றுக் கொண்டது என்றாலும் சரி அல்லது அதனைத் தள்ளிவிட்டது என்றாலும் சரி அந்த நிலையை நாம் நமது விண்ணப்பத்தின் குறியீட்டு எண்ணின் மூலமே இணையதளத்தினில் அறிந்து கொள்ளலாம். மேலும் அந்த நிலையைப் பற்றி நமக்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து மின் அஞ்சலும் அனுப்புவார்கள் என்பதினால் நம்முடைய விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள நாம் கடினப்படத் தேவை இல்லை.

வெளிநாடுகளுக்கு விண்ணப்பிப்பதைப் பற்றி நாம் தெளிவாக பார்த்து விட்டோம். இனி அடுத்த பதிவில் எவ்வாறு அங்கு கல்வி கற்க உதவித் தொகையைப் பெறுவது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தொடரும்....

Pin It