"உலகை இவன் மாற்றியதற்கு முன்னர் இவனை உலகம் மாற்றியது"

மொழி : ஸ்பானிஷ்
வெளிவந்த வருடம் : 2004
படத்தின் நீளம் : 126 நிமிடங்கள்

ஓட்டை வண்டி வைத்து 13000 கி,மீ கடப்பதா? என்ன துணிச்சல்? என்ன தைரியம்? முடியுமா? அது என்ன அனுபவம்? என்கின்ற ஆவலை கிளப்பி கதை துவங்குகின்றது.கதை நடப்பது 1950களில் ஆரம்பத்தில். சேகுவேரா மற்றும் அவரது நண்பர் ஆல்பர்ட் கிரனடோ இருவரும் நிகழ்த்தும் நீண்ட பயணமே இந்த திரைப்படம். இது வரலாறு. இந்த இரண்டு இளைஞர்கள் வாழ்விலும் பின் காலத்தில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட நிகழ்வு. சேகுவேரா ஒரு மருத்துவ மாணவர், அவரது நண்பர் ஒரு ஆராய்ச்சியாளர். அவரது நண்பர் வயதில் சற்று மூத்தவர். தென் அமெரிக்க கண்டத்தை தங்கள் கண்கள் மூலமாக காண வேண்டும் என்று நீண்ட பயணத்தினை துவக்கின்றனர்.

அர்ஜண்டினா தலைநகரத்தில் இருந்து வெணிசுலா வரை செல்வது தான் பயணத்தில் குறிக்கோள். பயண தூரம் சுமார் 13000 கி.மீ. காலம் எட்டு மாதங்கள். இந்த பயணத்தில் இவர்களுக்குள் ஏற்படும் மாற்றம், அனுபவங்களே இந்த திரைப்படம்.

பழைய மோட்டர் சைக்கிள் ஒன்றில் பயணத்தை துவக்குகின்றனர். தென் அமெரிக்காவின் ரம்மியம் கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படக்காட்சிகளின் அழகியலை பற்றியே எவ்வளவோ பேசலாம். ஒவ்வொரு காட்சியிலும் நம்மை அந்த இடத்திற்கே கொண்டு சென்றுவிடுகின்றது. ரசிக்க வைக்கிறது.. ஏதோ நாமும் அவர்களோடு பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தியது. சே குவேரா என்ற மாபெரும் புரட்சியாளனை பற்றி எந்த அறிகுறியும் படத்தில் காணமுடியாது. அவன் ஒரு சாதாரண இளைஞனாக வலம் வருகின்றான். சேகுவேராவின் வரலாறுகளை படித்தவர்களுக்கு இப்படி ஒரு சேகுவேரா இருந்தது ஆச்சரியபட வைக்கும்.

பயணத்தில் இடையே சேவின் காதலி இடத்தில் சில நாட்கள் தங்குவார்கள். பின்னர் பயணம் மீண்டும் தொடரும். சே மற்றும் அவரது நண்பரின் நெருக்கம் உருக்கம். ஒரு கனமாக கதையினை பல இடங்களில் நகைச்சுவை இழையோடு கலந்து கலக்கியிருக்கிறார் இயக்குனர் வால்டர் சாலஸ். பயணத்தில் இருவருக்கும் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் சுவாரஸ்யம். ஆங்கிலத்தில் வசனங்களை படித்தாலும் நிறையவே ரசிக்க முடிகின்றது.

ஒரு கட்டத்தில் வண்டி நாசமாகி, பொடி நடையாக பயணம் தொடர்கின்றது. ஒரு மருத்துவரின் உதவி, பசி பட்டினி, கொடுமை என பல்வேறு அனுபவங்களோடு கடைசியாக அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு வருகின்றார்கள். தொழுநோயாளிகளின் மருத்துவமனை. ஆற்றின் ஒரு புறம் நோயாளிகள், மறுபுறம் மருத்துவர்கள். நோயாளிகளோடு நடக்கும் உறவு நெகிழவைக்கின்றது. சில வாரங்கள் இங்கே தங்குகின்றார்கள். தன் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அங்கிருந்து கிளம்புவதாக திட்டம். பிறந்த நாள் அன்று மருத்துவர்களோடு சின்ன விழா நடக்கும். பின்னர் சே ஒரு சின்ன உரை நிகழ்த்துவார். நடு இரவு ஆற்றின் இந்த பகுதியில் இருந்து அந்த பகுதிக்கு நீந்தியே செல்ல முனைவார். இந்த காட்சி நெஞ்சை தொட்டு உணர்சிகள் பொங்கியது. சேகுவேரா ஒரு ஆஸ்த்மா நோயாளி என்பது குறிப்பிடதக்கது. அடிக்கடி இந்த தொல்லையால் வாடினார்.

மனதை நெகிழவைக்கும் காட்சிகள், உறையவைக்கின்ற காட்சிகள், கண்ணீரை தானாக பரிசாக எடுத்துக்கொள்ளும் காட்சிகள் படத்தில் ஏராளம். தன் காதலி கொடுத்த 15 டாலரை எந்த கஷ்டம் வந்தாலும் செலவு செய்யாமல் வைத்திருந்தது சேவின் நேர்மைக்கு உதாரணம். இரவில் சந்திக்கும் தம்பதிகள், மோட்டர் சைக்கிள், நண்பர்களின் நட்பு, எடுத்த காரியத்தில் முனைப்பு போன்றவை படம் முடிந்து நீண்ட நேரம் மனதில் தங்கியது.

இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளது. கேன்ஸ் விருதுகள் நான்கினை பெற்றுள்ளது. பல்வேறு விருதுகளையும் தட்டி சென்றுள்ளது.

சேகுவேராவும் அவரது நண்பரும் டையரிக்குறிப்புகளை புத்தகமாக வெளியிட்டு உள்ளனர். ஒரு புத்தகத்தினை தமிழில் படித்ததாக நினைவு. பிற்காலத்தில் சே, பிடல் கேஸ்ரோவுடன் இணைந்து கியூபாவில் நிகழ்த்திய புரட்சி பெரும் வரலாறு. சே வின் வரலாற்றை கண்டிப்பாக படிக்க வேண்டும். நிஜ கிரனடோ விமானம் பறப்பதை பார்வையிடுவது போல படம் முடிகின்றது. இவர் இன்றும் உயிரோடு தான் இருக்கின்றார்.

சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

Pin It