தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை, முன்வைத்தவர். ஒப்பியல் நோக்கையும், சமூகவியற் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர். ‘கலை கலைக்காக’ என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர். இலக்கியத்திற்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர். சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்.

 kailasapathy_324தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்றுநெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர். கலை இலக்கியச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லத் தீவிர முயற்சியில் ஈடுபட்டவர். ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகச் செயல்பட்டவர். சிறந்த கல்வியாளராக விளங்கியவர். கல்விக் கோயிலான யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர். இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இத்தனை பெருமைக்கும் உரியவர். ‘ஈழம் தந்த கொடை’! கலாநிதி க.கைலாசபதி.

 மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் இளைய தம்பி கனகசபாபதி-தில்லைநாயகி நாகமுத்து வாழ்விணையருக்கு 05.04.1933 ஆம் நாள் கைலாசபதி பிறந்தார். இவரது தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்து சேர்ந்தார். உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு ராயல் கல்லூரியிலும் பயின்று முடித்தார். பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். ‘தமிழும் மேலைத் தேய வரலாறும்’ - என்பதைப் பாடமாகப் படித்தார்.

 பல்கலைக் கழகக் கல்வி முடிந்தபின் ‘தினகரன்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், இலங்கைப் பல்கலை கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக் கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.

 பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ‘நடமாடும் கலைக் களஞ்சியம்’ பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். ‘தமிழில் வீரயுகப் பாடல்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து ‘கலாநிதி’ (முனைவர்) பட்டம் பெற்றார். இந்த ஆய்வும், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனின் அறிவார்ந்த வழிகாட்டலும் கைலாசபதியின் எதிர்கால எழுத்துப் பணிக்கான ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன.

 கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார். சங்க இலக்கியத்தைக் கிரேக்க, கெல்டிக், ஐரிஷ் இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார். வீர யுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

 ‘தமிழில் வீரயுகப் பாடல்கள்’ என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது. கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறிமரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல் தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் ஆய்வு நூல்களில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது.

 மேலும், இவரது ஆராய்ச்சி நூலை, செக்கோஸ்லாவியத் தமிழறிஞர் ‘கமில் சுவலபில்’ தமது தமிழிலக்கிய வரலாற்று நூலில் விதந்து பாராட்டியுள்ளார்.

 தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

 ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழத்தில் யாழ்-வளாகத் தலைவராக இருந்து பல்கலைக் கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும், மூன்று ஆண்டுகள் செயல்பட்டார். அமெரிக்காவிலுள்ள ‘அயோவோ பல்கலைக்கழத்திலும், கலிபோர்னியா பல்கலைக் கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக, யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார். அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் ‘புதியதைப் படைக்கும் எழுத்துக்களுக்குரியர்’ (குநடடடிற in உசநயவiஎந றசவைiபே) என இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.

 யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு, இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு, இலங்கைப் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு, இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.

 “இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது. இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்” என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.

 “கலை, இலக்கியம் முதலியவற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சமூகவியலை பற்றுச் கோடாகக் கொள்ள வேண்டும். ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடைப்படையில் இருக்க வேண்டும்”. என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

 “உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்” என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.

 “மரபு வழிக் கலை வடிவங்களையும் அவற்றின் கூறுகளையும் நாடகம் என்னும் வரம்புக்குள் கொண்டு வந்து அதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பிற நாட்டு நாடக உத்திகளையும் தக்க வண்ணம் ஏற்று, காலத்துக்கேற்ப மாற்றம் செய்தால் தமிழ் நாடகம் புத்துயிர் பெறும்” என்பது அவரின் நாடகக் கொள்கையாகும்.

 “குழந்தைகளின் வயது, மூளைவளர்ச்சி, மொழித்திறன், ஆற்றல், ஏற்புடைமை இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு குழந்தைகளுக்கான இலக்கியத்தைப் படைக்க வேண்டும் என்பார்.

 “தேசிய இலக்கியம் என்பது பிரதேச எதிர்ப்பு, சுதேசிய விருப்பு, சமுதாய நோக்கு, சனநாயக நாட்டம், மனிதாபிமானம் என்ற ஐந்து தன்மைகளைக் கொண்டது. அது சமூகத்தை மாற்றிப் புதியதாய் அமைக்க வேண்டும் என்னும் இலட்சியத்தைக் கொண்டதாயும் உள்ளது. சமுதாய மாற்றத்துக்குப் பாடுபடும் பாணியிலேயே சகலவிதமான சனநாயக இயக்கங்களுடனும், போராட்டங்களுடனும் அது தன்னை அய்க்கியப்படுத்திக் கொள்கிறது. சாதியொழிப்புப் போராட்டத்திலிருந்து, கிராமியக் கலைகளின் புத்துயிர்ப்பு வரையிலான எண்ணற்ற செயல்களுடன் தேசிய இலக்கியம் நெருங்கிய உறவு கொண்டிருக்கிறது.” எனத் தேசிய இலக்கியம் பற்றித் தெளிவுறுத்துவார்.

 இலங்கையில் முற்போக்கு இலக்கியம், தேசிய இலக்கியம், மண் வாசைன இலக்கியம் ஆகியன அதனதன் இயல்போடு வளர பாடுபட்டவர்.

 “உணர்ச்சிவழி நின்று செயல்படுவதைவிட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன; இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை”- என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

 ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’, ‘தமிழ் நாவல் இலக்கியம்’, ‘ஒப்பியல் இலக்கியம்’, ‘அடியும் முடியும்’, ‘இலக்கியமும் திறனாய்வும்’, ‘கவிதை நயம்’, ‘சமூகவியலும் இலக்கியமும்’, ‘நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்’, ‘திறனாய்வுப் பிரச்சினைகள்’, ‘பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்’, ‘இலக்கியச் சிந்தனைகள்’, ‘பாரதி ஆய்வுகள்’, ‘ஈழத்து இலக்கிய முன்னோடிகள்’, ‘இரு மகாகவிகள்’, ‘சர்வதேச அரசியல் நிகழ்வுகள்’ முதலிய நூல்களை, திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.

 சீன நாட்டின் அழைப்பினை ஏற்று தமது குடும்பத்தினருடன் அங்கு சென்றார். சீணப் பயனம் பற்றி, ‘மக்கள் சீனம் - காட்சியும் கருத்தும்’ என்ற நூலைத் தமது துணைவியாருடன் இணைந்து எழுதியுள்ளார். அய்ந்து ஆங்கில நூல்களையும் படைத்து அளித்துள்ளார்.

 இலங்கையிலிருந்து வெளிவந்த, ‘தொழிலாளி’, ‘தேசாபிமானி’, ‘செம்பதாகை’, ‘ரெட்பானர்’, முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில், சமூக இயல் முன்னேற்றத்திற்கான கட்டுரைகளை வடித்தார். பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க’த்தின் ‘இளங்கதிர் ’இதழிலும், இலக்கிய இதழான ‘மல்லிகை’யிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. இதழிலும், தமிழ்நாட்டு இதழ்களான ‘தாமரை’ ‘சாந்தி’, ‘சரஸ்வதி’, ‘செம்மலர்’, ‘தீக்கதிர்’, ‘ஜனசக்தி’, ‘ஆராய்ச்சி’, முதலியவற்றிலும் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார்.

 இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான தத்துவார்த்த நூல், கைலாசபதியின் ‘தமிழ்நாவல் இலக்கியம்’!. தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகின்றது! இந்த ஆய்வு நூல், அறிவியல் அடிப்படையிலான சமூகவியல் அணுகுமுறையைக் கொண்டதாகும்.

 மார்ச்சிய அணுகுமுறையில் ஆய்வை மேற்கொண்டு தமிழ்ச் சமூக அரசியல் – பொருளாதார வளர்ச்சியினூடாகத் தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தினார், கைலாசபதி. ஆவர் கல்வித்துறை நிபுணர், இதழாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர், விமர்சகர், பேச்சாளர் - எனப் பன்முகத்தன்மையுடன் விளங்கினார்.

 முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி க.கைலாசபதி, இரத்தப் புற்று நோயால் தாக்குண்டு தமது நாற்பத்தொன்பதாவது வயதில் 06.12.1982 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

 தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழநாட்டிலிருந்து எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. தமிழ் இலக்கியத் திறனாய்வுத்துறையில் கலாநிதி க.கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றும் விளங்குவார்.!

குறிப்பு : 06-12-2010 அன்று கலாநிதி கைலாசபதி அவர்களின் 28 வது நினைவு தினம் ஆகும்.

Pin It