தூத்துக்குடி மாவட்டம் (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்), திருச்செந்தூர் வட்டம் (அன்றைய ஸ்ரீவைகுண்டம் வட்டம்) ஆறுமுகநேரியில் கலிங்கர் தூசிமுத்து, அம்மையார் பூவம்மாள் தம்பதியினரின் மகனாக 22.12.1915-ல் பிறந்தார் கே.டி.கோசல்ராம் என்னும் போராளி. ஆறுமுகநேரியில் 5-ஆம் வகுப்பு வரை பயின்றவர், தனது குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்ததால் சென்னை வேப்பேரியில் செயின்ட் பவுல்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை பயின்றார். அனுபவக் கல்வியால் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். அவரது ஆங்கிலப் புலமையை அவரது நாடாளுமன்றப் பேச்சுகள் பறைசாற்றுகின்றன.

kt kosalram1930-ல் தனது 15 –ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதிலேயே வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்ட விடுதலைப் போராளி கே.டி.கோசல்ராம். சிறுவயதினராக இருந்ததால் ஒருவாரம் சப்ஜெயிலில் வைத்து, பின்னர் விடுவித்தது ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கம். 1942-ல் நடந்த போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி அதிகமாக விதித்ததை எதிர்த்து, உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். குரும்பூர் சதி வழக்கில் முதல் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு, 21 மாத சப்ஜெயில் தண்டனை பெற்றார்.

சாக்கு சட்டை அணியச் செய்து, கைவிலங்கு மாட்டி தனி அறையில் கே.டி. கோசல்ராமை ஆங்கியலேய அரசாங்கம் அடைத்து வைத்தது. இன்றைய பங்குனி மாத வெயிலில் ஜீன்ஸ் துணியிலான ஆடையை இறுக்கமாக அணிந்து, ஒருவரின் கைகளைக் கட்டிவிட்டால் அவரின் நிலை என்ன என்பதை யோசித்துப் பார்க்க முடியாத கடும் நிலை எனலாம். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்பு கைதியாக தஞ்சை மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார் கே.டி.கோசல்ராம். அவரது விடுதலையை விரும்பாத ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கம் சுமார் நான்கரை ஆண்டுகாலம் கே.டி.கோசல்ராமை சிறையில் அடைத்து வைத்திருந்தது. 1945-ல் கே.டி.கோசல்ராம் விடுதலையானார்.

சமூகப் பணி:

தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேச சட்டம் வரும் முன்பாக திருச்செந்தூர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று முருகனை வழிபட உரிமை பெற்றுத் தந்தார். ஆறுமுகநேரியில் உப்புத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளராகப் பணியாற்றினார்.

வளர்ச்சி விரும்பிய போராளி:

வளர்ச்சி என்றால் என்ன? வளர்ச்சி என்றால் யாருடைய வளர்ச்சி? இந்திய மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள் என்று கூறுபவர்கள் இந்திய மக்களின் வளர்ச்சியை விரும்புகிறார்களா என்று பல கேள்விகளை எழுப்பும் இக்காலகட்டம். ஆனால் அன்றே வளர்ச்சி என்பது மக்களுக்கான அரசாங்கத்தின் திட்டமாக இருக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து, பல சமூக நலத் திட்டங்களைக் கொண்டு வந்தவர் கே.டி.கோசல்ராம். கிராமப் பகுதிகளில் சிறுதொழிற்சாலைகளைக் கொண்டு வர பெறும் முயற்சி மேற்கொண்டார்;. கிராமப்புற பொருளாதார மேம்பட்டால் மக்களின் வாங்கும் சக்தியும், பணப்புழக்கமும் அதிகரித்து, மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்லும் நிலை குறையும் என்பதை அறிந்து மக்கள் நலத் திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காலகட்டத்தில் நிறைவேற்றப் பாடுபட்டவர் நம்மவர்.

ஆறுமுகநேரியில் இரயில்வே நிலையம் அமையக் காரணமாக இருந்தவர் கே.டி.கோசல்ராம். அவரது செயல்பாடுகளால் கிராமத்து மக்கள் பெரிதும் பயனடைந்தனர். தினசெய்தி என்னும் நாளிதழையும் நடத்தி வந்தார்.

அரசியல் வாழ்க்கை:

அரசியல் வாழ்க்கையையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த நமது அன்பிற்குரிய சகமனிதர் கே.டி.கோசல்ராம். மணிமுத்தாறு அணை கண்ட மாவீரர் கே.டி.கே. என்று சாத்தான்குளம் பேருந்த நிறுத்தத்தில் உள்ள பெயர்ப்பலகையை அங்குள்ள கடைகள் மறைத்து விட்டாலும், அவரது உழைப்பு அடித்தட்டு மக்களின் இரத்தத்தில் கலந்து விட்டதால், இப்புரட்சியாளனை யாராலும் மறக்க முடிவதில்லை.

ஆறுமுகநேரி கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக தம் அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார் கோசல்ராம். தற்போது ஆறுமுகநேரி நகரப் பஞ்சாயத்தாக உள்ளது. பின்னர் திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆக மக்கள் பணியாற்றினார். 15 ஆண்டுகள் நெல்லை மாவட்ட இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும், 3 வருடங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் இருந்து, கட்சியை மக்கள் நலப் பணியுடன் ஒன்றிணைத்து வழிநடத்தியவர் கே.டி.கோசல்ராம். சீனப்போராளி மாசேதுங் மொழியில் நம்மவரின் செயல்பாடுகளை சொல்ல வேண்டுமானால், பொதுவான திட்டங்களை குறிப்பான செயல்பாடுகளுடன் ஒன்றுபடுத்தி மக்கள் பணியாற்றிய, தலைமை தாங்கும் தகுதி படைத்த மக்கள் தொண்டன் கே.டி.கோசல்ராம்.

அணை கட்ட போராடி வென்ற வரலாறு:

கே.டி.கோசல்ராம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில்தான், "மணிமுத்தாறு அணைகட்ட கே.டி.கோசல்ராம் நிதி வசூலித்துத் தந்தால் திட்டம் நிறைவேற்றப்படும்" என்று கூறினார் அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.பக்தவச்சலம் அவர்கள். அவரது கூற்றை சவாலாக ஏற்றுக்கொண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட நம்மவர், ஒரே வாரத்தில் ஒன்றேகால் கோடி ரூபாயைத் திரட்டி பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்களிடம் கொடுத்து, அணை கட்டும் பொதுப் பணிக்கு அஸ்திவாரமிட்டார். 1958-ல் நடந்த இச்சம்பவம் இன்றைய இளைஞர்களுக்கு மறந்து போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஊருக்கு உழைத்தவன் உருப்பட மாட்டான் என்ற நிலை மாறி, ஊருக்குழைத்திடல் யோகம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்த மணிமுத்தாறு அணை கண்ட நம் சக மனிதரின் வரலாறு தெரிய வேண்டியது இக்காலத்திய அவசியம்.

திருநெல்வேலியிலிருந்து 50.8 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டது மணிமுத்தாறு அணை. 1958-ஆம் ஆண்டில் சிங்கம்பட்டி அருகில் கட்டப்பட்டது. மழைக்காலத்தில் வங்கக்கடலில் கலக்கும் நீரை சேமிக்கக் கட்டப்பட்டது. 118 அடிவரை நீர் தேக்கலாம். இவ்வணைக்கட்டு 3 கி.மீட்டர் நீளம் உடையது. இதனால் 65000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதாவது 26315 ஹெக்டேர் நிலங்கள் விவசாயத்தைக் காப்பாற்றி வருகிறது. வடக்கே நாங்குநேரி மற்றும் திசையன்விளை, தெற்கே வீரவநல்லூர் மற்றும் கரிசல்பட்டி ஆகியவை இவ்வணைக்கட்டால் பாசன வசதி பெறுகிறது. இவ்வணைக்கட்டானது புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் அஸ்திவாரத்துடன் சேர்ந்து 150 அடி (46 மீட்டர்) உடையது. நீளம் 9268 அடியாகும். அதாவது 2825 மீட்டர். இவ்வணை கிடைமட்ட அழுத்தத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்ட Gravity Dam ஆகும். இவ்வணைக்கட்டில் 7 Spillway உள்ளது.

இயற்கை அமைப்பு:

தாமிரபரணி நதியின் குறுக்காக 3 கிலோமீட்டரில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது. இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும், அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ளதாலும் மணிமுத்தாறு அணை எனப் பெயர் வழங்கப்பட்டது. மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கிறது.

நெல்லை மாவட்டம் களக்காடு மலைப்பகுதியில் செங்காந்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. அணைக்கட்டு போல் தீயவர்களுக்கு அசைந்து கொடுக்காமல் மக்களின் நலனுக்காக உழைத்த மாமனிதர் கே.டிகோசல்ராமின் பெயரை உச்சரித்தவாறே இம்மணிமுத்தாறு இன்றளவும் ஓடிக் கொண்டிருக்கிறது. மனிதரை நல்வழிப்படுத்த அறநூல்களும் நல் ஒழுக்கமும் தேவை. ஓடும் ஆற்றை நம்வழிப்படுத்தி மக்கள் பயன்பெற கே.டிகோசல்ராமின் உழைப்பு வழிசெய்தது.

அரசியல் வெற்றிகள் (மக்களின் வெற்றிகள்):

திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் நலப்பணியாற்றியவர். அன்றைய திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் (சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி தாலுகாக்கள் அடங்கியது) 1977, 1980 மற்றும் 1984-ல் வென்று மக்களின் நலனுக்கான அவையாக மக்களவையை தலைநிமிர வைத்தவர் கே.டி.கோசல்ராம்.

1985 –ஆம் ஆண்டு நம்மவரின் இவ்வுலக வாழ்வு முடிவுற்றாலும், அவரது மக்கள் நலப்பணிகள் இன்றளவும் தென்னாட்டு மக்களால் போற்றப்பட்டு வருகிறது.

- சுதேசி தோழன்

Pin It