Satavahana Map

சாதவாகனர்களின் இருமொழி ஆட்சி:

அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவாகனர்கள் (SATAVAHANA) தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். சாதவாகனர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் (சாதவ என்பது சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன. (ஆதாரம் : 24/6/2010, இந்து ஆங்கில நாளிதழில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதிய, “Aanaaanan An epigraphic perspective on the antiquity of Tamil” என்ற கட்டுரை).

முதல் சாதவாகன அரசன் சிமுகா (கி.மு. 230-207):

 தொடக்க கால சாதவாகனர்கள் ஆந்திராவில் தோன்றவில்லை. மராட்டியத்தில்தான் தோன்றினார்கள். இவர்களது ஆரம்பகாலக் கல்வெட்டுப் பொறிப்புகள் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவர்கள் ஒரு சமயத்தில், மகதத்தையே பிடித்துச் சிறிது காலம் ஆண்டனர். சிமுகா(SIMUKA) என்பவன் தான் சாதவாகனர்களின் ஆட்சியைத் தோற்றுவித்தவன். இவனது ஆட்சிகாலம் கி.மு. 230-207 ஆகும். அதற்குப்பின் அவனது சகோதரன் கன்கா ஆட்சிக்கு வந்தான். இவர்களைப் பற்றிய பலசெய்திகளைpப் புராணங்கள் தருகின்றன. அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது.

சதகர்னி (கி.மு. 180-124):

 இந்த சதகர்னியின் (SATAKARNI) ஆட்சிக் காலம் கி.மு.180-124 எனவும், இவன் 56 ஆண்டுகள் ஆண்டான் எனவும் சொல்லப்படுகிறது. காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் இந்த சதகர்னியைத் தோற்கடித்ததாகக் குறிப்பிட்டுள்ளான். ஆகவே இவன் காரவேலன் காலத்தில் ஆட்சி செய்தான் எனலாம். காரவேலன் இறந்த பிறகு இந்த சதகர்னி கலிங்கத்தைக் கைப்பற்றியதாக யுக புராணம் தெரிவிக்கிறது. இவன் வட இந்தியாவின் சுங்க வம்சத்தைத் தோற்கடித்து அவர்களிடமிருந்து மேற்கு மால்வாவைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் மத்தியபிரதேசத்தைப் பிடித்ததாகவும், சாகர்களை பாடலிபுத்திரத்திலிருந்து வெளியேற்றியதாகவும் சொல்லப் படுகிறது. இவனுக்குப்பின் பல அரசர்கள் ஆண்டனர். atஅதன்பின் அவர்கள் கன்வா வம்சத்தின் கீழ் இருந்து கி.மு. 75-35 வரை ஆண்டனர்.

புலுமாயி (கி.மு 30-6) & ஆலா:

 புலுமாயினது (PULUMAYI) ஆட்சிகாலம் கி.மு 30-6 ஆகும். இவன் கன்வா வம்சத்தின் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக ஆண்டதோடு பல வெற்றிகளைப் பெற்று இறுதியில் மகத அரசின் பாடலிபுரத்தைக் கைப்பற்றி ஆண்டவன் ஆவான். இவனுக்குப்பின் வந்த ஆலா(HALA) என்கிற சாதவாகன அரசன் ‘கதா சப்தசதி’ அல்லது கதா சத்தசை என்கிற பெயரில் 700 செய்யுள்களைக் கொண்ட பிராகிருத அகக் கவிதைகளை தொகுப்பித்தான். இந்நூல் பெரும்பாலும் காதல் கவிதைகளைக் கொண்டது. இந்த ஆலாவின் ஆட்சிக்காலம் கி.பி முதல் நூற்றாண்டு ஆகும். இவனுக்குப்பின் வந்தவர்கள் வலிமை அற்றவர்களாக இருந்தனர்.

நாகப்னா (கி.பி. 119-124):

 சாகர்களின் மேற்கு சத்ரப் வம்சத்தை நிறுவிய அரசன் நாகப்னா(NAHAPANA) ஆவான் இவன் சாதவாகனர்களைத் தோற்கடித்து அவர்களின் பல பகுதிகளைப் பிடித்துக் கொண்டான். இந்த நாகப்னா பாரிகாஜா துறைமுகத்தைச் சுற்றிய பகுதியை ஆண்டதாக பெரிப்ளஸ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பெரிப்ளஸ் காலம் கி.பி. 70 ஆகும். நாகப்னா கி.பி. 60 வாக்கில் இளையவனாக இருந்த போது பாரிகாஜாவைச் சுற்றியுள்ள சிறு பகுதியை ஆண்டிருக்கலாம். இவன் அரசனாகி 46 ஆண்டுகள் ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த நாகப்னாவின் ஆட்சிக்காலம் கி.பி. 119-124 என விக்கிபிடியா குறிப்பிடுகிறது. இவனை கௌதமிபுத்ர சதகர்னி தோற்கடித்து இழந்த பகுதிகளை மீட்டான்.

கௌதமிபுத்ர சதகர்னி (கி.பி 106-130).:

 கௌதமிபுத்ர சதகர்னி (GAUTAMIPUTRA SATAKARNI) கி.பி. 106 வாக்கில் ஆட்சிக்கு வந்தான். இவன் ஆட்சிகாலம் கி.பி. 106-130 ஆகும். இவன் மேற்கு சத்ரப்() வம்சத்தைச் சேர்ந்த நாகப்னாவை அவனது கடைசிக் காலத்தில் தோற்கடித்து அவனை அடியோடு அழித்து இழந்த ஆட்சிப் பகுதிகளைத் திரும்பப் பெற்றான். இவன் தான் முதன் முதலாக தலைவடிவ நாணயங்களை வெளியிட்ட சாதவாகன அரசன் ஆவான். குசான அரசன் கனிசுகா கி.பி. 78இல் அரசன் ஆகி, சாலிவாகன அல்லது சகா சகாப்தத்தைத் தொடங்கினான் எனவும், சாகர்கள் உஜ்ஜயினியை கிபி. 78இல் பிடித்து சகா சகாப்தத்தைத் தொடங்கியதாகவும் கருதப்படுகிறது. சகா சகாப்தம் கி.பி. 78இல் இருந்து தொடங்குகிறது என்பதில் மாற்றமில்லை. இந்த சாலிவாகன அல்லது சகா சகாப்தத்தை கௌதமிபுத்ர சதகர்னி தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. குசான அரசன் கனிசுகா தான் சாலிவாகன அல்லது சகா சகாப்தத்தைத் தொடங்கினான் என்பதே பெரும்பாலோரால் ஏற்கப்படுகிறது.

வசிட்திபுத்ர புலுமாயி (கி.பி 130-160):

 கௌதமிபுத்ர சதகர்னியின் மகன் தான் இந்த வசிட்திபுத்ர புலுமாயி (VASHISHTIPUTRA PULUMAYI) ஆவான். இவனது நாணயங்களும், கல்வெட்டுப் பொறிப்புகளும் ஆந்திராவில் கிடைக்கின்றன. இவன் காலத்தில் பைத்தான் சாதவாகனர்களது தலைநகராக இருந்தது. இவனது காலத்தில் இருந்த மேற்கு சத்ரப் வம்ச அரசன் இருத்ரதாமன்-1 (கி.பி. 130-150) சாதவாகனர்களை இருமுறை போரில் தோற்கடித்தான். அதனால் பெரும் பகுதிகளை சாதவாகனர்கள் இழந்தனர். திருமண உறவுகள் இருந்ததால் அடியோடு அழிக்கப் படாமல் விடப்பட்டனர்.

யாஜன சதகர்னி (கி.பி. 170-199):

 இந்த யாஜன சதகர்னி (YAJNA SATAKARNI) தான் சாதவாகனர்களின் இறுதிச் சிறந்த அரசன் ஆவான். இவனது ஆட்சி ஆண்டுகள் கி.பி 170-199 ஆகும். இவன் மேற்கு சத்ரப் அரசைத் தோற்கடித்து சாதவாகனர்களின் பல பகுதிகளை மீட்டான். இவனுக்குப்பின் வந்தவர்கள் வலிமையற்றவர்கள். இதன்பின் கி.பி. 220 வாக்கில் சாதவாகனர் அரசு இல்லாது போனது. சாதவாகனர் வம்ச அரசர்கள் தங்கள் பெயரில் தங்களுடைய தாயின் பெயரை வைத்துக் கொண்டார்கள் எனத் தெரிகிறது. கௌதமிபுத்ர சதகர்னி என்கிற பெயரில் உள்ள கௌதமி என்கிற பெயரும், வசிட்திபுத்ர புலிமாயி, வசிட்திபுத்ர சதகர்னி ஆகிய பெயர்களில் உள்ள வசிட்தி என்கிற பெயரும் அரசர்களுடைய தாயின் பெயர்களாகும்.

தமிழ் அரசுகளும் சாதவாகனர்களும்:

 சாதவாகனர் சங்ககாலத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தமிழகத்தோடு போர் செய்ததாகவோ, வெற்றி பெற்று தமிழகப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டதாகவோ தகவல் இல்லை. அவர்கள் தமிழ் அரசுகளின் கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த தக்காணப் பகுதிகளைத் தாக்கி வென்றிருக்கலாம். ஆனால் உடனடியாகத் தமிழ் அரசுகளால் அவை திரும்பக் கைப்பற்றப்பட்டது. கிருட்டிணா நதிக்குக் கீழ் அவர்கள் வரவில்லை. சங்ககாலம் வரை தமிழ் அரசுகள் மிக வலிமையோடு இருந்தன. கி.பி. முதல் நூற்றாண்டு முடிய இந்நிலை நீடித்தது. கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் இந்நிலை மாறியிருக்கலாம். சாகர்கள், மேற்கு சத்ரப் அரசுகள், மகத அரசு போன்ற பிற வடநாட்டு அரசுகளோடு தான் சாதவாகனர்கள் போர் புரிந்ததாக அவர்களது கல்வெட்டுகளும், அவர்களைப்பற்றிய இன்ன பிற குறிப்புகளும் கூறுகின்றன.

 டாக்டர் கே. கே. பிள்ளை, ஆர். எசு. சர்மா ஆகிய இருவரும் தங்களது நூல்களில் சிமுகா(கி.மு. 230-207), சதகர்ணி(கி.மு. 180-124), கௌதமிபுத்ர சதகர்னி(கி.பி 106-130), வசிட்திபுத்ர புலுமாயி(கி.பி 130-160), யாஜன சதகர்னி(கி.பி. 170-199) ஆகிய ஐந்து சாதவாகன அரசர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். கி.பி.2ஆம் நூற்றாண்டில் ஆண்ட மூன்று முக்கிய அரசர்கள் குறித்துத் தான் ஓரளவு தரவுகள் உள்ளன. பிற அரசர்களின் ஆண்டுகள் புராணங்கள் தரும் ஆண்டுகளை வைத்தே தரப்பட்டுள்ளன. கி.மு. 180-124 வாக்கில் ஆண்ட சதகர்ணி குறித்து கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் குறித்துள்ளான்.

 சாதவாகனர்கள் தங்கள் ஆட்சி மொழியாகத் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. தமிழர்களின் கடற்படை வலிமையை, அவர்களது ஐக்கிய கூட்டணியின் வலிமையை, பொருள் உற்பத்தி, தொழிநுட்ப மேன்மை, வணிகம் ஆகியவற்றில் தமிழர்களின் உயர்நிலையை சாதவாகனர்கள் அறிந்திருப்பர். அதனால்தான் தமிழ் அரசுகளோடு அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை பகைமை பாராட்டாமல்இருந்தனர் எனலாம். சாதவாகனர்கள் அரசு அழிந்த உடன் தமிழகமும் களப்பிரர்களால் கைப்பற்றப்பட்டு விட்டது. கிறித்துவுக்கு முந்தைய சாதவாகனர்கள் குறித்த தகவல்கள் போதுமானதாக இல்லை எனலாம். புராணங்கள் சொல்வதுதான் அதிகம் உள்ளன. அவைகளை முழுமையாக நம்புவது என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. (ஆதாரம்: 1. பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா-தமிழி மாஜினி, ஜூன் 2004, பக்: 260-264. 2. தென் இந்திய வரலாறு, டாக்டர் கே. கே. பிள்ளை, 8ஆம் பதிப்பு, 2011 பக்: 34-37) 3. விக்கிபீடியா(SATAVAHANA DYNASTY).

மொழிபெயர் தேயம்:    

தமிழ்மொழி இருக்கிற நிலையில் இருந்து பெயர்ந்து கொடுந்தமிழாக மாறியிருந்த நிலையை மொழி பெயர்ந்தநிலை எனவும் அவ்வாறு மொழி பெயர்ந்த நிலையில் உள்ள கொடுந்தமிழைப் பேசும் பகுதியை மொழிபெயர் தேயம் எனவும் பண்டைய தமிழர்கள் குறிப்பிட்டனர். கி.மு.4-ம், 3-ம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு பெற்றிருந்தன. அதனால் தமிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து, கொடுந்தமிழே பேசப்பட்ட பகுதியை, மொழிபெயர் தேயம் என்றனர். இந்த மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப் பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31 ஆவது பாடல்,

 “தமிழ்கெழு மூவர் காக்கும்

 மொழிபெயர்த்தே எத்த” என உறுதிப் படுத்துகிறது.

மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்றால் தமிழ் அரசுகள் முக்கியமாக மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும்.

காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு :

 கலிங்க மன்னர் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழர்களின் ஐக்கிய கூட்டணி குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகும். அதன் 11வது மற்றும் 13வது வரிகள் தமிழரசுகள் குறித்துப் பேசுகின்றன.

Hathigumpha inscription: Sadananda Agarwal has prepared the text in Sanskrit, which has been published in his book Śri Khāravela, 2000.

Line 10-11 - And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies]. [His Majesty] caused to be cultivated Pithunda, founded by former kings of Kalinga, with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

 Line 13 - [His Majesty] caused to erect towers with strong and beautiful gateways at the cost of two thousand coins. [His Majesty] obtained horses, elephants and jewels losing strange and wonderful elephants and ships. The King of Pandya caused to be brought here Kalinga various pearls, jewels and precious stones hundred thousand in number.

11வது வரி : 11ம் ஆட்சியாண்டில் , 1300 ஆண்டுகளாக இருந்து வந்த, புகழ்பெற்ற ஊர்களையும், நகரங்களையும் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, “பித்துண்டா” என்ற நகரத்தைப் பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது, பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்.”

13வது வரி : “12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான, விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங்களையும் கலிங்கத்தின் தலை நகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன். (ஆதாரம் : www.jatland.com/home/Hathigumpha- inscription).சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

பித்துண்டா நகரம்:

 “பித்துண்டா” என்கிற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் என்பதைத் தெளிவாகக் காரவேலன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலிங்கத்தில் இருந்தமுந்தைய கலிங்கமன்னர்களால்உருவாக்கப்பட்ட இந்நகரம் (பித்துண்டா நகரம்) தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக, அவர்களின் காவல் அரணாக இருந்து வந்துள்ளது என்கிற செய்தி, தமிழகத்தின் வட எல்லையில் இருந்து கலிங்கத்தின் தென் எல்லை வரையான கடலை ஒட்டிய இன்றைய ஆந்திரப் பகுதி முழுவதும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்துள்ளது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கிறது எனலாம். அதன் மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் தான் இருந்து வந்தது என்கிற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது. 

(தொடரும்...)

- கணியன் பாலன், ஈரோடு.

Pin It