அறிமுகம்:

சமூக சமத்துவத்திற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் முறை மிகவும் கொடியது இந்து மதமும், மனுதர்மமும் கூடவே சேர்ந்து இந்தியாவில் சாதி முறையை இறுகப்படுத்தின. இழப்பதற்கு ஏதுமில்லாதவர்களிடம் கூட மூட நம்பிக்கைகளும், சாதிய இழிவுகளும் ஒட்டிக் கிடந்தன.

இக்கொடுமைகளுக்கு எதிராகத் தீர்க்கதரிசிகளாக, ஞானிகளாக நின்று அறிவாயுதம் ஏந்திக் கருத்தியல் போர் புரிந்தனர் பலர். நேரடியாக மக்களிடம் நின்று மக்களைத்திரட்டித் தலைமை தாங்கி சாதியம் மற்றும் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர் பலர். இவர்களை எல்லாம் பதிவு செய்வது அவசியமானது.

tanjore temple

வரலாறு என்பது மன்னர்களின், போர்களின், வரலாறு மட்டும் அல்ல. மக்களின் வரலாறு கீழிருந்து மேலெழுப்பும் வரலாற்று வரைவுகள் இன்று எழுதப்படுகின்றன. “உழைக்கும் மக்கள் அறிவுத்தாகம் கொண்டு இருக்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் வெற்றிபெற அது தேவைப்படுகிறது. உழைக்கும் மக்களில் பத்தில் ஒன்பது பேர் அறிவு தான் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் என்பதையும் அவர்களுடைய தோல்விகள் எல்லாம் அவர்களுடைய கல்விக் குறைவால் நேர்ந்தவை என்பதையும் இப்பொழுது உண்மையிலேயே கல்வி ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்வதும் தம் கடமை என்பதையும் உணர்ந்து விட்டார்கள்” என்பார் லெனின்.

இந்த அறிவு குறித்து, கல்வி குறித்து, விழிப்புணர்வின் ஒரு பகுதியாகத்தான் களத்திலே நின்று மக்களுக்காகப் போராடிய நாயகர்களின் வரலாறு களைப் பதிவு செய்வதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கீழத்தஞ்சையின் நிலவுடைமைக் கொடுமைகள் மனித குல நாகரிக வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் இன்றைய இளையதலைமுறை நம்ப மறுக்கும் இவை யாவும் இச்சமூகத்தின் மீது நடத்தப் பட்ட வன்கொடுமைகள் ஆகும். பொருளாதார நிலையில் நிலமற்ற நிலம் சார் உழைப்பாளிகளான இம் மக்கள் சாதி அடுக்கு நிலையிலும் ஒதுக்கப் பட்டார்கள். சாதி, நிலம் இரண்டின் பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட இவர்களுக்காகப் பொதுவுடைமை அமைப்புகள், இயக்கங்கள் கண்டனர். இவ்வியக்கங் களின் முன் நின்ற களப்பேராளிகளின் பங்கும், பணியும் குறிப்பிடத்தக்கவை.

ஆங்கிலேயே ஏகாதிபத்திய அடக்குமுறை இந்தியர்களை நசுக்கியது. இந்தியப் பொருளா தாரத்தைச் சுரண்டியது. கிட்டத்தட்ட இந்தி யாவை இங்கிலாந்தின் சந்தையாக மாற்றியது. அந்த அளவிற்குப் பொருளாதார அடக்குமுறைகள் இருந்தன. ஆங்கிலேயர்களை விரட்ட இந்தியத் தலைவர்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு இறுதியில் வெற்றிபெற்றனர். சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியக் காவல்துறை தஞ்சை மாவட்டத்தில் இருந்த பல்வேறு இளம் போராளிகளை அரசாங்கத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து எடுத்தது. ஏன்? யாருக்காக இளம் போராளிகளைக் கொன்றார்கள்? அப்படி என்னதான் அந்தப் போராளிகள் செய்தார்கள்?

மேற்கண்ட வினாக்களுக்கு விடை காண முற்பட்டால் இந்தக் கொள்ளையர்களைக் காட்டிலும் அந்த வெள்ளையர்களே எவ்வளவோ பரவா யில்லை என்று தோன்றும்.

இந்திய விடுதலைப்போராட்ட தியாகிகளை விட சமூக விடுதலைப் போராட்ட வீரர்களைத் தான் உயர்ந்தவர்களாக இன்று தஞ்சை மண் கொண்டாடி வருகிறது. காரணம் தஞ்சை மாவட்டத்தில் இந்து நிலப்பிரபுத்துவ கோட்டை களை இடித்து, சமூக விடுதலைக்கு வித்திட்ட மாபெரும் தியாகிகள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்கள்.

தஞ்சை மாவட்ட களநாயகர்கள்:

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் குறிப்பிட்ட சமூக அரசியல் பொருளாதார இயக்கங்களின் பங்களிப்புகள் மிக முக்கியமானவை. அதே வேளை, தனித்துவம் மிக்க தனி மனித ஆளுமை களின் செயலாக்கமும் தனித்து நோக்கவேண்டுவன.

சமூக விளைச்சலில் முன்னத்தி ஏர்களாய் தொழிற்பட்ட சமூகம் சார்ந்து இயங்கிய மக்கள் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் பல வெளி வந்துள்ளன. பொதுவான மனிதப் பண்பியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கக் கூடியதும், சமூக முன் மாதிரியாகத்திகழத் தக்கதுமாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் விளங்குகின்றன.

நாட்டின் விடுதலைக்கு முன்னரும், பின்னரு மான கால கட்ட அரசியல் சமூகப் பண்பாட்டு விழுமியங்களைக் கண்டறியும் நோக்காகவும், நாட்டின் விடுதலைக்கான போராட்டக்களத்தில் தொடங்கிப் பொருளாதாரச் சமத்துவம், பண் பாட்டு மீட்டுருவாக்கம் ஆகிய தளங்களில் விரியும் தன்மை கொண்ட ஆய்வுப் பொருண்மைகளைக் கொண்ட பல நூல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக மட்டுமின்றி சமூக நிலையிலும், பண்பாட்டு நிலையிலும், முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் தஞ்சை வட்டாரம் விளங்குகிறது. இன்றைய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் சமூக மாற்றத்திற்காகக் களத்தில் நின்ற கீழ்க்கண்ட நாயர்களின் வரலாறு, வாழும் வரலாறாய் வார்த் தெடுத்துக் கீழ்கண்ட நூல்கள் மூலம் வரலாற்றை அறிவிக்கின்றது.

இன்றைய தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தில் சமூக மாற்றத்திற்காகக் களத்தில் நின்ற கீழ்க்கண்ட நாயகர்களின் வரலாறு வாழும் வரலாறாய் வளர்த்தெடுத்துக் கீழ்க்கண்ட நூல்கள் மூலம் வரலாற்றை அறிவிக்கிறது.

1. பி.சீனிவாசராவ்- தோழனைக்காக்கத் துடித்த தோழன்

2. தியாகி களப்பால் குப்பு

3. மாவீரன் வாட்டக்குடி இரணியன்

4. எனையீன்ற ஆம்பலாப்பட்டு (ஆறுமுகம்)

5. பாதையில் படிந்த அடிகள், தலை நிமிர்ந்த தமிழச்சிகள், மணலூர் மணியம்மை

6. மாவீரன் கணபதி- கயிற்றில் தொங்கிய கணபதி

7. தோழன் வெங்கடேசன்

8. தோழர் பட்டுராசு

9. சாம்பவனோடை சிவராமன்

10. பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி

11. ஏ.எம். கோபு

12. மணலி கந்தசாமி-வாழ்வும் போராட்டமும்

13. எஸ்.ஜி. முருகையன் வாழ்வும் பணியும் ஆகியனவாகும்.

போராட்ட வடிவங்கள்:

தனுஷ்கோடியின் தந்தை சாத்தன் விளாத்தூர் கிராமத்தில் சுப்பிரமணிய அய்யர் பண்ணையில் பணி செய்துகொண்டிருந்தபோது நிலப்பிரபு வெங்கட்ராம அய்யர் அடித்ததினால் அடுத்து பாங்கல் கிராமத்திற்குத் தனது வீட்டின் நிலைக் கதவுகளைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு ஆடு மாடுகளைப் பிடித்துக்கொண்டும் மனைவி, குழந்தைகளுடன் ஓடி அங்குப் பிள்ளை இனப்பண்ணையில் பண்ணையடிமையாகப் பணியில் சேர்ந்து கொண்டார். அய்யர் பண்ணையிலிருந்து வரும் நபர்களைப் பிள்ளை இனத்தவர் காட்டிக்கொடுக்காமல் சேர்த்துக் கொள்வர் என்பது இங்கு முக்கியமான ஒன்றாகும்.

ஆலயநுழைவு:

குருக்களார் மடத்தைச்சேர்ந்த கோவில் கதவுகளைப் போராளி பி. வெங்கடேசன் திறந்து விட்டார். அனைத்து இன மக்களும் கோவிலினுள் சென்று வணங்கினர். ஊரில் உள்ள பசனைக் குழுவில் தாழ்த்தப்பட்ட மக்களையும் அழைத்துச் சென்று திருநீறு கேட்டதும் கோயில் குருக்கள் ஓடிவிட்டனர். பசனையும் நின்று போனது.

தோழர் பட்டுராசு தனது கிராமமான நெம்மேலியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அதில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை செய்த தாழ்த்தப்பட்ட ஆசிரியர்களைப் பணியமர்த்தினார். அனைத்து மாணவர்களையும் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச்சென்று அதிர்வை ஏற்படுத்தினார்.

வாட்டாக்குடி:

வாட்டாக்குடியில் தாழ்த்தப்பட்ட இனமக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றி உள்ள இடத்தை ஊர்ப் பண்ணையார் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தார். 30 சேரி குடும்பமும் வேறு வாழிடமும் வழியும் இல்லாது இருப்பதைக் கண்ட இரணியன் பண்ணை யாரிடம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேசி அந்தப் புறம்போக்கு இடத்தை மக்கள் பயன்படுத்த வழி செய்தார்.

முள்வேலி:

கழனிவாசல் கிராமத்தில் நிலப்பிரபுக்கள் அங்குள்ள குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் எடுக்கக்கூடாது என மிரட்டுவது பற்றி அறிந்த தனுஷ்கோடி அங்குள்ள விவசாயத் தோழர்களை அழைத்துக் கொண்டு தானே முன்நின்று குளத்தில் இறங்கி நீர் எடுத்துத் திரும்பினார். ஆலத்தூரில் நிலப்பிரபு சாம்பசிவஐயர் ரௌடிகளை அழைத்து வந்து தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த தெருவைச் சுற்றி முள்வேலி வைத்தார். தனுஷ்கோடி இக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி முள் வேலியை நீக்கி விட்டார்.

ஊருக்குள் நுழையத் தடை:

இதனால் மேலும் கோபமடைந்த நிலப் பிரபுக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் வயலில் நண்டு நத்தை பொறுக்கக்கூடாது எனவும், வரப்பில் நடக்கக்கூடாது எனவும், வலிவலம் தேசிகளுக்கு சொந்தமான நமசிவாயபுரம், காருகுடி, கோயில் பத்து, நெய்விளக்கு, கீழ் வலிவலம், சுந்தர பாண்டிய புரம் மற்றும் அனக்குடி ஆகிய எட்டு பண்ணை களுக்குள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்களான கே.ஆர். ஞாபனசம்பந்தம், பி.எஸ். தனுஷ்கோடி, கே.டி. நடராஜன், ஈசனூர் சுப்பையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் ஊருக்குள் வரக்கூடாது எனத் தடையுத்தரவு போட்டனர்.

மதுக்கூர் ஜமீன் தனது ஆதிக்கத்தில்உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில் கரைகாப்பு, ஏரிப் புறம்போக்கு, மேய்ச்சல் தரிசு நிலங்களையும் தனி யாருக்கு விற்றார். இவற்றையெல்லாம் தனி யாருக்கு விற்றால் ஊர் மக்கள் மற்றும் ஆடு, மாடு, மேய்வது, குளிப்பதற்கெல்லாம் எங்கே போவது எனக்கேட்டு ஆறுமுகம் தனது மக்கள் படையுடன் பெரும்போராட்டம் நடத்தினார். தனது மக்கள் படையுடன் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.

கூலி உயர்வு கேட்டதற்காக இராதா நரசிம்ம புரம் இராயர் பண்ணை நிலப்பிரபு இராயர் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லும் பாதையை அடைத்தும், தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் கள்ளியைப் போட்டும் வைத்தனர். இரணியன் பண்ணையார் இராயர் வீட்டுக்குச் சென்று கார்வாரியை நையப்புடைத்துப் பாதையைத் திறந்துவிட வைத்தார்.

பெண்ணடிமைப்போராட்டம்:

பெண்கள் அடிமைத்தனமாக வாழ்வதையும், கைம்பெண் நோன்பு நோற்பதையும் கடுமையாக எதிர்த்துப் போராடினார். மணியம்மை ஆண்களைப் போல் உடை உடுத்தி புரட்சி செய்தார். தனது உறவுக்காரச்சிறுவர்கள் பொதுஇடத்தில் மண் அள்ளியதைக் கண்டு அடித்த கார்வாரியின் கையை வெட்டினார், பண்ணையே அதிர்ந்தது.

இதுபோன்ற பெண்களுக்கு சைக்கிள் ஓட்டவும், தற்காப்புக் கலைகளையும் தான் கற்றுக்கொண்டு கற்பித்தார். பண்ணையடிமைப் பெண்களை நிலப்பிரபுக்கள் பாலியல் பலாத்காரம் செய்வதை எதிர்த்துப் போராடினார்.

தோழர் பட்டுராசு பெண்ணடிமையை எதிர்த்து தன் மனைவிக்கு மோதிரம் மட்டுமே மாற்றி சுயமரியாதையாகத் திருமணத்தை நடத்தியும், வாழ்ந்து காட்டினார்.

பண்ணையடிமைச்சிறுவர்கள்:

மஞ்சக்கொல்லை பண்ணையார் தனது பண்ணையில் வேலை செய்த சிறுவனை வேலை செய்யச்சொல்லிக் கட்டி வைத்து தாக்கினார். இதைக் கேள்விப்பட்டுச் சிறுவனை அழைத்து வரச் சென்ற தாய் தந்தை உட்பட சிலரைக் கட்டி வைத்து அடித்திருக்கிறார். அடிப்பட்ட சிறுவனுக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது. அதனால் மறுநாள் மாடு மேய்க்க வர இயலவில்லை எனக் கூறச்சென்ற சிறுவனின் தந்தையை மீண்டும் கட்டி வைத்து அடித்திருக் கிறார். மாடுகள் தானே பண்ணைக்கு முக்கியம், மனிதர்கள் அல்லவே.

இதைக் கேள்விப்பட்ட சிவராமன் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு பண்ணையைத் தாக்கச் சென்றார். பண்ணையார் செய்தியறிந்து ஒளிந்து கொண்டார் போலிஸ் காவலுக்கு நின்றது. மக்கள், வீட்டை முற்றுகையிட்டு போலிஸ்காரர்களுடைய துப் பாக்கியைப் பறித்துக்கொண்டு மக்கள் கோச மிட்டனர். பின்னர் போலிசின் வேண்டுகோளுக் கிணங்க சிவராமன் துப்பாக்கியைத் திருப்பிக் கொடுக்க வைத்தார்.

பாலியல் பலாத்காரம்:

காரைக்கால் சாலையில் நல்லாவூர் மேற்கேயும், கிழக்கேயும் உள்ள இரு ஊர்கள் மகாதேவ ஐயருக்குச் சொந்தமானவை. பண்ணையடிமைகளைச் சாட்டையால் அடிப்பது, சாணிப்பால் கொடுத்துக் கொல்வது அனைத்தும் இங்கு நடக்கும். இங்குத் தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவன் புதிதாகத் திருமணம் செய்தான். மணப்பெண்ணை முதலிரவு அன்றே பாலியல் பாலத்காரம் செய்தான் மகா தேவ ஐயர். இதைக் கேள்விப்பட்ட ஏ.எம். கோபு தனது தோழர்களுடன் மகாதேவ ஐயரைப் பழிதீர்த்து நிலப்பிரபுகளுக்கு எச்சரிக்கை விடும் நிகழ்வாக அமைத்தார்.

சுதந்திரப்போராட்டம்:

1941-இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து கொண்டு பி.சீனிவாசராவ் போராடினார். இரண்டு முறை சிறை சென்றார். 1932-இல் அந்நியத்துணியை எதிர்த்தும் போராடிச் சிறை சென்றார். 1935இல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் 25ஆம் ஆண்டு பொன் விழாவை இந்தியாவில் கொண்டாடக் கூடாது எனத் துண்டு பிரசுரங்களை அச்சடித்துக் கொடுத் தார். தஞ்சை மாவட்டத்தில் விவசாய சங்கங்கள் ஊர்தோறும் சென்று அமைத்தார்.

மலேசியாவில் தமிழர்களைக்கொலைகாரன், தாழ்ந்தவன் என்ற பொருள்படும்படியாக ஒரங்கிள்ளேவ் என்று அந்நாட்டவர் பேசுவர். கணபதி இதை எதிர்த்துக்கடுமையாகப் போராடினார். மலேசியா தமிழர்களுக்காக அரசிடம் 45 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி மலேசியா அரசிடம் உரிமைகளும் சலுகைகளும் பெற்றுத்தந்தார்.

1987இல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் இந்தித்திணிப்பை எதிர்த்து மலேசியாவில் கணபதி பேரணி நடத்தினார். தேநீர்க் கடை யிலும் கலப்பு மணங்கள் செய்வித்தும் ஜாதிக் கொடுமையை ஒழித்தார். எட்டாம்வகுப்பு மாணவராக இருந்தபோது திருவிடைமருதூர் ஆதின மேல்நிலைப்பள்ளியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடர்ந்து சுதந்திரம் வேண்டி ஏ.எம். கோவிந்தராசன் போராடிக் கைதாகிச் சிறை சென்றார்.

மடங்களுக்கு எதிரான போராட்டம்:

உத்திராபதி மடத்திற்கு எதிராகவும் பண்ணையடிமைகளுக்காகவும் குப்பு போராடினார். குத்தகை வார விவசாயிகள் மூன்றில் ஒன்று 33 வாரம் கேட்டு போராடினான். தென்பறையில் விவசாயிகளை ஒன்றிணைத்து குப்பு, வெங்கடேசன், இராமானுசன், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிற்று சங்கம் அமைத்தனர்.

பண்ணைக்களத்தில் பண்ணைக்கு முழுப் படியும், பண்ணையடிமைகளுக்கு முக்கால்படியும் அளப்பர். இதனை எதிர்த்துக் குப்பு போராடினார், கூலியாட்கள் கடையில் நெல்லைவிற்கும் போது கடைக்காரர் முழுப்படிப்பை முக்கால்படியாகக் குறைத்து அளப்பர். இதனை எதிர்த்துக் குப்பு தனியாகக் கடை வைத்து சரியாக அளந்து எடுத்தார். இதனைக்கண்ட ஆதிக்கத்தார் கடையை எரித்து விட்டனர்.

சாணிப்பால், சவுக்கடிக்கெதிரான போராட்டங்கள்:

குப்புசாமி பண்ணையடிமைகளையும், குத்தகை தாரர்களையும் அழைத்துப் பேசி நிலப்பிரபுக்களின் சாணிப்பால், சவுக்கடிக்கு எதிராகப் போராடினார். இதற்கான பேச்சுவார்த்தைக்கு மாவட்ட காவல் துறை துணை ஆணையர் திரு. மகாதேவன் அவர்கள் அரசு சார்பில் முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தினார். பண்ணையடிமைகளும், நிலப்பிரபுக் களும் தத்தம் நியாயங்களை எடுத்துக்கூறினர்.

இறுதிப்பேச்சு வார்த்தையில் பெரும் நில உடைமை யாளர் தியாகராசமுதலியார், காடுகொடுத்த நாயக்கர்கள், திருக்களார் மடாதிபதி கிருஷ்ண சாமி போன்றோரும், கே.டி. நடராஜன், களப்பால் குப்பு, சேரங்குளம் அமிர்தலிங்கம், ராமானுஜம் ஆகிய கம்யூனிச தலைவர்களும் கலந்துகொண்டு பேசியதில் சாணிப்பால், சவுக்கடி போன்ற கொடிய தண்டனைகள் விலக்கிக் கொள்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

கூலி உயர்வு கேட்டுப் போராட்டங்கள்:

1944-இல் டிசம்பரில் மாவட்ட ஆட்சியர் திரு. இஸ்மாயில்கான் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. வரதன் முன்னிலையிலும், கூலி உயர்வுகேட்டுப் போராடியதற்கான ஒப்பந்தக் கூட்டம் நடைபெற்றது. நிலப்பிரபுக்கள் சார்பில் சாம்பசிவ அய்யரும், விவசாய சங்கம் சார்பில் மணலி கந்தசாமி, கலப்பால் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டதன் விளைவாகப் பண்ணையாள் தினக் கூலியானது இரண்டு சின்னப்படிக்குப் பதிலாக மூன்று படி கொடுக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் நிறைவேறின.

கூலி உயர்வுக்காகவும், நிலத்தை விட்டு பண்ணையடிமைகளாகவும் வெளியேற்றக்கூடாது என மணலி கந்தசாமி போன்ற தலைவர்களே பைங்காட்டூரில் போராடினர் 24. 12. 1944இல் பைங்காட்டூர் விவசாயிகளுக்கும், திருக்களார் மடத்திற்கும் இடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இஸ்மாயில்கான் தலைமையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.

1945இல் கோனேரிராஜபுரத்தை மைய மாகக் கொண்டு அதைச்சுற்றிச் சுமார் 32 கிராமங்களிலும் குத்தகை 50ரூ வரக்கோரி களப்பால் குப்பு தலைமையில் போராட்டத்தைத் துவங்கினார். 5 நாள் போராட்டத்திற்குப் பிறகு சமரசம் ஏற்பட்டது.

மணலி கந்தசாமி, அமிர்தலிங்கம், குப்புசாமி பா. வெங்கடேசன் ஆகியோர் மன்னார்குடியில் கூட்டங்கள் நடக்கக்கூடாது என 144 தடை உத்தரவு அரசால் போடப்பட்டது. அவ்வளவு எதிர்ப்புகள், தலைவர்கள் சந்திக்க வேண்டி இருந்தது.

1946இல் குன்னியூரில் பொதுக்கூட்டம் நடந்தது. விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கஷ்டப் பட்டனர். கண்டு முதலும் குறைவாக இருந்தது. 1946 ஏப்ரலில் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிப் பகுதியை நடுவராகக் கொண்டு நில உடைமை யாளர்கள், விவசாயிகள் பேச்சுவார்த்தை ஏற் பட்டது. அதன்படி சாகுபடி செய்பவரை நிலத்தை விட்டு வெளியேற்றக்கூடாது என்பது உட்பட பல கோரிக்கைகள் கையெழுத்தாகின.

உத்திராபதி மடத்தில் குத்தகையை ரத்து செய்ய விவசாயிகள் வேண்டினர். மடாதிபதி மறுத்தார் விவசாய சங்கமும் போராட்டத்தில் இறங்கினர் பிறகு கோரிக்கை ஏற்று மடம் இறங்கி வந்தது.

கீழவெண்மணி:

கீழவெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட பண்ணையடிமைகளைக் கூலி உயர்வு கேட்டதற்காக உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். இதையும் விவசாய சங்கத்தோழர்களே எதிர்த்துக் குற்றவாளிகளைக் கைது செய்யப்போராடினர்.

முடிவுரை:

இவ்வாறு தஞ்சை மாவட்டத்தில் மக்கள் விடுதலைக்காகவும், சமத்துவத்திற்காகவும், உரிமைக் காகவும் போராடிய தலைவர்கள் மக்கள் மனதில் வரலாறாய் நின்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் பற்றிப் பாடல்களாகவும், பழமொழிகளிலும், நாட்டுப்புற வழக்கமாய்ப் பயின்று வரக்காண்பது இன்றும் உண்மையான மக்கள் விடுதலைக்கான தலைவர்கள் என்பது உண்மையாகிறது. இதன் மூலம் தஞ்சை மாவட்டக் களநாயகர்கள் வழியாக சமூக வரலாறு உயர்த்திப்பிடிக்கப்பட்டு வருகிறது.

(உங்கள் நூலகம் மே 2014 இதழில் வெளியானது)

Pin It