(தகவல் தொழில்நுட்பத் துறையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து 19.2.2011 அன்று சென்னை சோழிங்கநல்லூரில் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். )

 

தமிழர்களுக்கு சொந்தமான கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தமிழரின் இறையாண்மைக்கு எதிரான இந்தியப் பார்ப்பன ஆட்சியின் தேச விரோத நடவடிக்கையாகும். மீன் வளம் நிறைந்த கச்சத் தீவு பறி போனதினால் தமிழர்களின் மீன் வள உரிமை பறி போய் மீனவர்களின் குருதியும், சிங்கள கப்பல் படையினால் கடலில் ஓடுகிறது. தமிழரின் இறையாண்மையில் தலையிட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரசுக்கு தேச பக்தியை போற்றும் தார்மீக உரிமை கிடையாது.

 

பார்ப்பன ஏடான ‘இந்து’ தமிழ்நாட்டில் சிங்கள அரசின் தூதுவராக செயல்பட்டுக் கொண்டு, ஈழ  தமிழர்களுக்கும், அவர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்துக்கும் எதிராக நஞ்சைக் கக்கி வருகிறது. இந்து நாளேடு “கச்சத் தீவு பிரச்னை முடிந்து விட்ட ஒன்று” என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றை தீட்டியது.

 

“இந்தியாவும், இலங்கையும் கச்சத் தீவு பிரச்சினை முடிந்துவிட்ட பிரச்சினையாகவே கருதினாலும் தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகள் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார்கள். தமிழக மீனவர்கள் தங்களது பிரச்சினைக்கும் கச்சத் தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்கள். அவர்கள், சிறீலங்கா கடற்பரப்புக்குள் தங்கு தடையின்றி மீன் பிடிப்பதற்கு உரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள்.

 

இறையாண்மையுள்ள ஒரு தேசமான இலங்கை, இந்த உரிமையை வழங்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்திய அரசுக்கும் அதைக் கேட்கும் உரிமை இல்லை.” (‘இந்து’ ஜூன் 22, 2009) என்று ஆணவத்தோடு பார்ப்பனத் திமிரோடு பச்சையாக தமிழக மீனவர்களுக்கு எதிராக எழுதியது ‘இந்து’ நாளேடு.

 

தமிழகத்தின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட ஒரு பகுதியை இலங்கைக்கு ‘தாரை’ வார்க்கப்பட்டதைக் கண்டிக்க முன் வராத ‘இந்து’ பார்ப்பன ஏடு, இலங்கையின் இறையாண்மை யாகிவிட்டதாகக் கூறி கச்சத் தீவை தமிழர்கள் கேட்க என்ன உரிமை இருக்கிறது என்று எழுதுகிறது.

 

இவர்களுக்கு அவர்கள் முன் வைக்கும் சட்ட வாதங்களின் அடிப்படையிலேயே நாம் பதில் சொல்ல முடியும்.

 

இலங்கைக்கு கச்சத் தீவு வழங்கப்பட்டதற்கு இதுவரை நாடாளுமன்றத்தின் ஒப்புதலே பெறப்படவில்லை. நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றதால் தான். கச்சத் தீவு வழங்கப்பட்டது, சட்டப்படி செல்லும். இதன் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

 

இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி நேரு பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே கச்சத் தீவு பிரச்னையில் அலட்சியம் காட்டி வந்திருக்கிறது.

 

•              1955 ஆம் ஆண்டு கச்சத் தீவில் இலங்கைக் கப்பல் படை போர்ப் பயிற்சிகளை நடத்தியது. இந்தியா ‘கண்டனம்’ தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது. தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

 

•              இந்தியாவிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட இலங்கை அரசு மீண்டும் 1956 இல் கடற்படை பயிற்சியைத் தொடர்ந்தது. “இரு நாட்டுத் தூதர்களும் பேசி முடிவு காணும் வரை பயிற்சியை ஒத்திப் போடுமாறு” இந்தியா வேண்டுகோள் விடுத்தது. அப்போது கச்சத் தீவு தமிழ்நாட்டுக்கு உரியது என்று, இந்திய அரசு கூறவில்லை. “பயிற்சியை ஒத்தி வைக்கிறோம்; ஆனால் கச்சத் தீவு எங்களுடையது” என்று, இலங்கை அரசு கூறியது.

 

•              1956 இல் நாடாளுமன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த அனந்தன் நம்பியார், இப்பிரச்னையை எழுப்பினார். அப்போது பிரதமர் நேரு, “இந்த சின்னஞ்சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராட வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. கச்சத் தீவுக்கு இலங்கை உரிமை கோருவதால் இந்தியாவின் தன்மானம் ஒன்றும் இழந்து போய்விடவில்லை. இலங்கை நமது அண்டை நாடு; நாம் அந்நாட்டுடன் உறவுடன் இருக்கவே விரும்புகிறோம்” என்றே அலட்சியமாக பதில் கூறினார்.

 

•              மீண்டும் 1968 இல் கச்சத் தீவுக்கு இலங்கை உரிமை கோரியது. அப்போது நாடாளுமன்றத்திலும் இப்பிரச் சினை எழுப்பப்பட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி, “இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கச்சத் தீவு இருந்திருக்கிறதா என்பது பற்றி விவரம் கேட்டுள்ளோம்” என்று பதில் கூறினார்.

 

•              இந்தியாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சராக இருந்த பி.ஆர். பகத், “கச்சத் தீவு இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கும் உரியது அல்ல” என்று பச்சையாக பொய் பேசினார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இந்த பதிலைக் கேட்டு வெட்கம்; வெட்கம் என்று குரல் எழுப்பினர்.

 

•              கச்சத் தீவு பிரச்சினையில் தமிழர்களின் உரிமைகளை அலட்சியப்படுத்திய காங்கிரஸ் ஆட்சி, 1974 இல் இலங்கைக்கு தாரை வார்க்க முன் வந்தது. இதற்கான அரசியல் பின்னணியையும் நாம் கருதிப் பார்க்க வேண்டும்.

 

•              1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தை அனுப்பி, வங்க தேசத்தை தனியாகப் பிரிக்க, பிரதமர் இந்திரா பாகிஸ்தானில் தலையிட்டார். அதை விரும்பாத அமெரிக்கா இந்தியாவை அச்சுறுத்த ‘எண்டர்பிரைஸ்’ என்ற அணு ஆயுதம் தாங்கிய கப்பலை கொல்கத்தா நகரைத் தாக்கும் திட்டத்தோடு இந்தியப் பெருங்கடலுக்குள் அனுப்பியது. அப்போது இந்தியாவுக்கு ஆதரவாக சோவியத் ரசியா களமிறங்கத் தயாரானது. அதனால் அமெரிக்கா பின்வாங்கியது. இந்தியப் பெருங்கடல்  பரப்பை ராணுவ மோதலுக்கு பயன்படுத்தினால், பெரும் கேடுகள் உருவாகிவிடும் என்பதால் அய்.நா. தலையிட்டது. இந்தியப் பெருங்கடலில் நின்று கொண்டோ அல்லது கடலுக்கு மேல் பறந்து கொண்டோ எந்த நாடும் கடல் ஓரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாது என்று அய்.நா. தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

 

•              இந்தியாவுக்கு வடக்கே பாகிஸ்தான், சீனாவும் உள்ளன. கிழக்கும் மேற்கும் உள்ள கடல் பகுதிகளினால் இந்தியா வுக்கு அதிக ஆபத்துகள் இல்லை. இந்தியாவுக்கு தெற்கே உள்ள ஒரே தரைப் பகுதி இலங்கை தான். வங்க தேச விடுதலைக்குப் பிறகு பாகிஸ்தான், இலங்கையில் விமானத் தளம் ஒன்றை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது. வங்க தேசப் போரின் போது இலங்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் பாகிஸ்தான் விமான தளம் அமைப்பதைத் தடுக்க, பிரதமராக இருந்த இந்திரா, இலங்கை பிரதமர் சிறீமாவோ, பண்டார நாயகாவிடம் சமரசம் பேசத் தொடங்கினார். “கச்சத் தீவை இலங்கைக்கு தந்து விட்டால், பாகிஸ்தான் விமான தளத்துக்கு இடம் தரமாட்டோம்” என்று சிறீமாவோ பண்டார நாயகா பேரம் பேசினார். தமிழ்நாட்டின் ஆட்சியைக் கலந்து பேசாமலே கச்சத் தீவை ஒப்படைக்க இந்திரா சம்மதித்தார். இரு பிரதமர்களும் கூடிப் பேசினர். தமிழகத்தின் கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் 20.6.1974 இல் புதுடில்லியில் இந்திராவும், 28.6.1974 இல் கொழும்பில் சிறீமாவோ, பண்டார நாயகாவும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் (23.7.1974) அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுரவன்சிங் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.  அறிக்கை சமர்ப்பிக்க எழுந்த உடனேயே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாஞ்சில் மனோகரன், இரா. செழியன், பி.கே.எம். மூக்கையா தேவர், எஸ்.எம். முகம்மது ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்து, வெளி நடப்பு செய்துவிட்டனர். அப்போது தமிழகத்தைச் சார்ந்த 38 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். தி.மு.க.வும், இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. தி.மு.க.வும், பிற கட்சிகளும் எதிர்த்த போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், துரோகத்துக்கு துணை நின்றனர்.

 

•              தி.மு.க. உறுப்பினர்கள் 22 பேர்; காங்கிரஸ் 9; இந்திய கம்யூனிஸ்ட் 4; பார்வர்டு பிளாக் 1; முஸ்லீம் லீக் 1. ஒரிசாவிலிருந்து சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந் தெடுக்கப்பட்ட பி.கே. தேவ் மற்றும் ஜனசங்கத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய் ஆகியோர் கூட, கச்சத் தீவு தமிழகத்துக்கே உரியது என்று பேசினர். ஆனால்,  காங்கிரஸ் உறுப்பினர்களோடு சேர்ந்து கொண்டு தமிழக கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை என்பது துயரமான வரலாறு. கம்யூனிஸ்ட் உறுப்பினர் எம். கல்யாணசுந்தரம் கச்சத்தீவு ஒப்பந்தத்தை வரவேற்பதாகக் கூறி, மீனவர் பிரச்சினையில் மட்டும் வினாவை எழுப்பினார்.

 

•              அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரன்சிங், “தற்போது இரு நாட்டு மீனவர்களும் அனுபவித்து வரும் மீன் பிடிக்கும் உரிமையும், அங்குள்ள அந்தோணியார் கோயில் விழாவுக்கு பயணம் செய்யும் உரிமையும் எதிர்காலத்தில் முழுமையாகக் காப்பாற்றப்படும் என்றும் 1921 ஆம் ஆண்டு கொழும்பு ஒப்பந்தப்படி கச்சத் தீவுக்கு மேற்கே எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் போலவே கச்சத் தீவைச் சுற்றியும் மீன் பிடித்து வருகின்றனர். அந்த உரிமை தொடர்ந்து காப்பாற்றப்படும்” என்றும் உறுதி அளித்தார்.

 

•              1921 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் மற்றும் இலங்கை பிரிட்டிஷ் அதிகாரிகள் கச்சத் தீவு எல்லையை இலங்கையோடு இணைத்து ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றி, அதை ஒப்புதலுக்கு பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தனர். பிரிட்டிஷ் ஆட்சி அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. அன்னிய ஆட்சி என்று கூறப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியே கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கும் முடிவை ஏற்காத போது, இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஆட்சி, இந்த துரோகத்தை இழைத்தது.

 

•              1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கூட தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமையை வலியுறுத்தியது.

                ஒப்பந்தத்தின் விதி 5 - “இந்திய மீனவர்களும், வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத் தீவுக்கு இது நாள் வரை வந்து போனது போல் வந்து போகவும், கச்சத் தீவை அனுபவிப்பதற்கும் முழு உரிமை உடையவர்கள். இதற்காக சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ நுழைவுக்கான அனுமதியோ பெற வேண்டியது இல்லை” என்று கூறியது.

 

•              1974 இல் வழங்கப்பட்டிருந்த இந்த உரிமை, 1976 இல் பறிக்கப்பட்டு விட்டது. 1976 இல் இந்திராவின் காங்கிரஸ் ஆட்சி, நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்து, அடிப்படை உரிமைகளைப் பறித்திருந்த காலம். அப்போது இந்தியாவின் வெளியுறவு செயலாளர் கேவல் சிங் என்ற அதிகாரியும், இலங்கை வெளியுறவு செயலாளராக இருந்த டபிள்யூ.டி. ஜெயசிங்கே என்ற அதிகாரியும், கடிதங்களை பரிமாறிக் கொண்டு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி, தமிழர்கள் கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமையைத் தடுத்து நிறுத்தி விட்டனர்.

 

இரு நாட்டின் பிரதமருக்கு இடையே உருவான ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டிருந்த உரிமையை இரு மாநில அதிகாரிகள் உருவாக்கிய ஒப்பந்தத்தில் பறித்து விட்டனர்! கச்சத் தீவை வழங்குவதற்கு இருநாட்டு பிரதமர்களும் செய்து கொண்ட ஒப்பந்தம், நாடாளுமன்றத்தில் அறிக்கையாக முன் வைக்கப்பட்டதே தவிர, வாக்கெடுப்பு நடத்தி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்பதே உண்மை! எனவே சட்டப்படியாக கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்படவில்லை. இதே அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. பார்ப்பன ‘இந்து’ நாளேடுகள் இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து சிங்களர்களின் குரல் ஒலிப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கச்சத் தீவு தமிழர்களுக்கே உரிமையானது என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உண்டு!

'கச்சத்தீவு’ - தமிழ்நாட்டுக்கே உரிமையானது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்து, கல்வெட்டு - தொல்லியல் துறை ஆய்வாளரும் பேராசிரியருமான புலவர் செ. இராசு, ‘நமது கச்சத் தீவு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதி: 

சேதுபதி அரச மரபினருக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதி யில் கச்சத் தீவும் அடங்கியிருந்தது. குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட் டிருந்தன. 

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. 

சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாதசுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. அங்கிருந்து அபிசேகத்திற்குப் பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவை பற்றி இலங்கை தினகரன் ஏட்டில் 1.5.1975 அன்ற விரிவான கட்டுரை வெளிவந்தது. 

தாயுமானவர், இலங்கையின் வடபகுதியிலிருந்து தமிழகம் நோக்கி வந்த டச்சுக்காரர்களைச் சேதுபதிக்கு ஆதரவாகப் படை நடத்திச் சென்று, கச்சத்தீவுக்கு அப்பால் விரட்டியடித்துக் கச்சத்தீவைச் சேதுபதிக்கு உரித்தாக்கினார் என்பர். 

1803 முதல் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டு வரப்பட்டது. 1795 ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்து மறைந்தபின் சேதுபதி அரச கட்டிலில் எவரும் ஆட்சி புரியவில்லை. இருப்பினும் முத்துத் திருவாயி நாச்சியார் மகளும் 1795 இல் மரணம் அடைந்த முத்துராமலிங்க சேதுபதியின் தமக்கையுமாகிய இராணி மங்களேசுவரி நாச்சியாரை, இந்தியாவில் நிர்வாகம் நடத்தி வந்த பிரிட்டிஷ் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 இல் பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகத்தில் இருந்தார். 

ஜமீன்தாரிணிக்கு “இஸ்திமிரார் சன்னது” என்ற ஜமீன் உரிமைப் பட்டயம் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டயத்தில் சேதுபதி ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கிந்தியக் கம்பெனியார் 1822 ஆம் ஆண்டு சேதுபதி ஜமீன்தாரிடமிருந்து கச்சத் தீவைக் குத்தகைக்குப் பெற்றனர். அப்போது நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் நிர்வாகம் நடைபெற்றாலும் தீவுகள் ஜமீன் வசமே இருந்தன. 

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானம் பெரிய அளவில் பெருகியதாலும், கம்பெனி இயக்குநர்கள் மீது பல புகார்கள் கூறப்பட்டதாலும், இந்திய ஆட்சியைக் கம்பெனியார் வசமிருந்து இங்கிலாந்து அரசு மேற் கொண்டது. 1.9.1858 இல் கம்பெனிக் கொடியை இறக்கி யூனியன் ஜாக்கொடியை ஏற்றி இந்திய நாட்டைக் கம்பெனி யார் இங்கிலாந்து அரசிடம் ஒப்படைத்தனர். விக்டோரியா மகாராணியார்  தன் பிரகடனத்தில் இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவைக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பின்னாளில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி.பியரீஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். 

“நான் 1936-40 ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் உதவி வரைவாளராக இருந்தேன். இலங்கை வடக்கு மாவட்ட எல்லைகள் பற்றிப் பரிசீலனை செய்தேன். பழைய ஆவணங்கள், வரலாற்றுச் சான்றுகளைப் பார்வை யிட்டேன். விக்டோரியா மகாராணியாரின் பிரகடனத்தில் கச்சத் தீவு சேதுபதி மன்னர்கட்கு உரியதாகக் கண்டிருந்தது. அவ்வாறே கச்சத்தீவை நீக்கி வடக்கு மாவட்டப் படம் வரைந்தேன்”. 

என்பது இலங்கை அமைச்சரவை அரசுச் செயலாளர் கூறிய சொற்களாகும். இவை கூறப்பட்டது 8.5.1966 அன்று ஆகும். இச் செய்தி இலங்கை “டெய்லி மிர்ரர்” நாளிதழிலும், இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளிவந்தது. 

ஜமீன் நில உரிமைச் சட்டப்படி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் கரையோரக் கிராமங்களுடன் இணைக்கப்பட்டன. பெருவாரியான காலங்களில் கச்சத் தீவு, இராமேசுவரத் துடனும், சில சமயம் தனுஷ்கோடியுடனும் இணைக்கப்பட்டது. 

இராமேசுவரம் நகரியத்தின் ஒரு பகுதியாகவும், இராமேசுவரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியாகவும் கச்சத் தீவு இருந்தது. ஒரு சமயம் இராமேசுவரம் நகரியக் குழுவினர் கச்சத் தீவில் காடு வளர்க்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்தனர். பின் இத்திட்டம் கைவிடப்பட்டது. 

23.06.1880 ஆம் வருடம் இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த எட்டு கடற்கரைக் கிராமங்களையும், கச்சத் தீவு, மண்ணாளித் தீவு, முயல் தீவு, குத்துக்கால் தீவு ஆகிய நான்கு தீவுகளையும் இராமநாதபுரம், மதுரை மாவட்டச் சிறப்பு ஆட்சியர் எட்வர்டு டர்னர் அவர்களிடமிருந்து, கீழக் கரை சாயபு மாப்பிள்ளை மரக்காயர் மகன் ஜனாப் முகம்மது அப்துல் காதர் மரக்காயர் அவர்களும், இராமசாமிப் பிள்ளை மகன் முத்துசாமிப் பிள்ளையும் கூட்டாக வருடம் ஒன்றுக்கு எழுநூறு ரூபாய் குத்தகைக்கு எடுத்தனர். அதற்குரிய பத்திரம் இராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 2.7.1880 அன்று பதிவு செய்யப்பட்டது. சேதுபதி ஜமீன்தாரிட மிருந்து குத்தகைக்குப் பெற்ற கிராமங்களையும், தீவுகளை யுமே மாவட்ட ஆட்சியர் இவ்வாறு குத்தகைக்கு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இடங்கள், “இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்தது” என்று தெளிவாகப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 

4.12.1885 அன்று சேதுபதியவர்களின் எஸ்டேட் மேலாளர் டி. ராஜாராமராயரிடமிருந்து முத்துசாமிப் பிள்ளை என்பவர் சாயவேர் சேகரிக்கக் கச்சத்தீவை ஆண்டுக்குப் பதினைந்து ரூபாய்க்குக் குத்தகைக்கு எடுத்தார். 

முத்துராமலிங்க சேதுபதி 1767 ஆம் ஆண்டு முத்துக் குளிக்கும் சில கடற்கரைக் கிராமங்களையும், தீவுகளையும் பெற்றிருந்தபோது, மன்னாரிலிருந்து பாம்பனுக்கு டச்சுக் காரர்களை வர அனுமதியளித்தார். டச்சுக் கப்பல் வரும் இடங்களில் ஒன்றாகக் கச்சத் தீவு குறிக்கப்பட்டிருந்தது. டச்சுக்காரர் அனுமதியைப் பெற்றிருந்தாலும், ஜமீனைச் சேர்ந்தவர்கள் எவர் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமென்றாலும் கச்சத் தீவுக்குச் செல்லலாம். டச்சுக்காரர்கள் தடுக்கக் கூடாது என்ற விதி ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் சேதுபதி ஜமீன்தாரின் கச்சத் தீவு பரம்பரை உரிமை நிலைநாட்டப்பட்டது. 

இராமநாதபுரம் சேதுபதி அவர்களின் ஆட்சிச் செயலர் 20.4.1950 இல் எஸ்டேட் மேலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கச்சத்தீவு பற்றியும், 1929-1945 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண அரசின் மீன்பிடித் துறை, அதனைக் குத்தகைக்கு எடுத்து அனுபவித்தது பற்றியும், மீன் பிடிப்பவர்கட்கும், சங்குகள் சேகரிப்பவர்கட்கும் அவைகளைக் குத்தகைக்கு விடப்பட்டது பற்றியும் எழுதியுள்ளார். 

இலங்கை நெல்லிமலைத் தோட்டத்திலுள்ள சோலை மலை ஆசாரி என்பவர் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். இராமநாதபுரம் ஜமீன்தாரர் பாஸ்கர சேதுபதியவர்களும், சுவாமி விவேகானந்தரும் ஒருங்கு வீற்றிருக்கும் அரிய காட்சியைக் கண்ட சுந்தரப் புலவர் என்பவர் சில பாடல்கள் பாடியதாகவும், அதைக் கேட்டு மகிழ்ந்த பாஸ்கர சேதுபதியவர்கள் கச்சத் தீவின் ஒரு பகுதியை அனுபவிக்கச் சுந்தரப் புலவருக்கு உரிமை கொடுத்ததாகவும் சோலைமலை ஆசாரி எழுதி யுள்ளார். விவேகானந்தர் பாஸ்கர சேதுபதியவர்களுடன் இருந்த நாள் 27.1.1897 ஆகும். 

சென்னை மாகாணத்தில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் எஸ். சுப்பராயன் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிறைவேறச் செய்தார். அதன்பின் சென்னை மாகாண அரசின் ஆவணங்களில் “இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், இராமேசுவரம் கிராமப்புல எண்.1250, 285 ஏக்கர் 20 சென்ட் கச்சத்தீவு அரசுப் புறம்போக்கு” என்ற குறிக்கப்பட்டது. 

1921 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற குழுக் கூட்டம் ஒன்றிய சென்னை மாகாண ஆங்கிலேய அதிகாரி ஏ.ஜி.லீச் என்பவர் கச்சத் தீவு பற்றிய சேதுபதி மன்னர்களின் உரிமை ஆவணங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். 

“கச்சத் தீவின் உரிமை பற்றி இப்போது பேசவில்லை. எல்லை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஆவணப்படி இந்திய அரசோ அல்லது சென்னை மாகாண அரசோ கச்சத்தீவிற்கு உரிமை கொண்டாடுவதை இந்த ஒப்பந்தம் தடுக்காது” என்று இலங்கைக் குழுவின் தலைவர் கூறினார். இது ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. 

சென்னை நிலத் தீர்வை உதவி அலுவலர் எஸ்.ஏ.விசுவ நாதன், 11.11.1958 இல் வெளியிட்ட இராமேசுவர நிலப் பதிவேடு எண்.68 இல் கச்சத் தீவு இராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

1.7.1913 இல் சென்னை மாகாண அரசுச் செயலர், சேதுபதி மன்னரிடமிருந்து சில தீவுகளைப் பதினைந்து ஆண்டுகட்குக் குத்தகைக்கு எடுத்தார். சேதுபதியரசர்க்குச் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் ஐம்பதாயிரம். அதில் “ஜமீன்தாரிக்குச் சொந்தமான இராமேசுவரத்தின் வட கிழக்கில் உள்ள கச்சத்தீவு” என்று குறிக்கப்பட்டுள்ளது. 

1957 ஆம் வருடம் வெளியிடப்பட்டு, 1.1.1966 இல் திருந்திய இரண்டாம் பதிப்பாக வெளிவந்த ஆவணப் பதிவு நூலில் 107 ஆம் பக்கம் தனுஷ்கோடிக்குச் சேர்ந்த குடியில்லாத சிறு கிராமமாக (ழயஅடநவ) கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது. 

1913 முதல் 1928 வரை சென்னை மாகாண அரசின் மீன்வளத் துறை குத்தகைக்கு விட்ட இடங்களில் கச்சத் தீவும் ஒன்று. சேதுபதியரசரிடமிருந்து சென்னை மாகாண அரசு அதிகாரிகள் கச்சத்தீவைக் குத்தகைக்குப் பெற்று மீனவர் கட்குக் குத்தகைக்கு விட்டதுடன், சேதுபதியரசர்களின் அதிகாரிகளும் நேரடியாகக் குத்தகைக்கு விட்டுள்ளனர். அனைத்திலும் கச்சத்தீவு இடம் பெற்றுள்ளது. 

தொண்டி, நம்புதாழையைச் சேர்ந்த மீனவர் பலர் அவ்வாறு குத்தகைக்குப் பெற்றுள்ளனர்.  19.2.1923 இல் இராமநாதபுரம் திவான் ஆர். சுப்பைய நாயுடு, அரசர் ஆர். ராஜேஸ்வர சேதுபதிக்கு ஜமீன் கடல் எல்லைப் பற்றி எழுதிய கடிதத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. இதைப் பரிசீலித்து சேதுபதியவர்கள் 27.2.1922 இல் கையொப்ப மிட்டுள்ளார்கள். 

கச்சத்தீவு பற்றிப் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்திலும் கச்சத்தீவு சேதுபதி அரசர்க்கு உரியதென்றும், இராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்தது என்றும் தவறாமல் குறிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தமிழக மண். 

இந்திய அளவைத் துறையினர் 1874 ஆம் ஆண்டுஇந்திய நில அளவைத் துறை உயர் அலுவலர் கர்னல் வாக்கர் அவர்களும், அவர் உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு அவர்களும் இந்தியாவின் நில அளவைத் துறைக்காகச் சென்னை மாகாணத்தில் அளவை மேற்கொள்ளும்போது கச்சத் தீவையும் அளந்தனர். கச்சத்தீவுக்குக் கச்சத் தீவு தெற்கு, கச்சத் தீவு வடக்கு என்று பெயரிட்டனர். 

கச்சத்தீவு 285 ஏக்கர் 20 சென்ட் என்று அளந்து கூறினர். கச்சத்தீவுக்கு சர்வே எண்.1250 என்றும் குறித்தனர். அதை ஒரு கல்லிலும் பொறித்துக் கச்சத்தீவில் நட்டனர்.  அந்தோணியார் கோயில் முன்பும் அக்கல் நடப்பட்டது. அக்கல் இன்னும் உள்ளது. 

இந்திய நில அளவைத் துறையினர் 1895, 1930 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் கச்சத்தீவு வந்தனர். அவர்கள் வரைந்த வரைபடங்களின் அடிப்படையில் 1952, 1956 ஆம் ஆண்டு வெளியீடுகளில் வெளியிட்ட அதில் கச்சத் தீவையும் குறித்தனர். இராமேசுவரத்தின் ஒரு பகுதி கச்சத் தீவு என்றும் குறிப்பிட்டனர். 

1874 முதல் 1956 வரை நில அளவை ஆவணங்களில் கச்சத்தீவு இந்தியப் பகுதியாகவே காட்டப்பட்டுள்ளது. 

கச்சத்தீவு சேதுபதியின் சீமை; தமிழகப் பகுதி; இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்றும் இவ்வளவு ஆவணங்கள் இருந்தும், கச்சத் தீவுக்குரிய ஆதாரங்களை ஆவணக் காப்பகங்கள் (இந்தியா, தமிழ்நாடு) பம்பாய் ஆகிய இடங்களில் தேடியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வெளிப்படையாகக் கூறுகிறார். 

பிரதமர் இந்திரா அம்மையாரோ கச்சத் தீவு ஆவணங்கள் அடிப்படையில் இலங்கைக்கு அளிக்கப்பட வில்லை. வேறு அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப் பட்டது என்று கூறுகிறார். 

இந்திய வழக்கு மன்றமும் கச்சத் தீவும் 

கீழக்கரை வாசுதேவன் செட்டியார் என்பவர் கச்சத் தீவிற்குச் சில பொருட்களைக் கொண்டு சென்றார். இந்திய அரசின் சுங்க இலாகாவினர் அவரைத் தடுத்தனர். பொருள்களைப் பறித்தனர். வழக்கு உச்சநீதிமன்றம் வரைச் சென்றது. விசாரணை செய்த நீதிபதிகள், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே. அங்கு  சென்று வாணிகம் செய்ய ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமையுண்டு. இந்தியர் யார் வேண்டுமானாலும் அங்கு போகலாம்” என்று தீர்ப்பளித்தனர். 

ஒரு முறை கச்சத் தீவுப் பகுதியில் ஒருவர் முத்துக்குளித்து எடுத்து வைத்திருந்த சங்குகளை வேறொருவர் திருடிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கை ஏற்று விசாரித்துத் தீர்ப்பளித்தது. இதனால் கச்சத் தீவுப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவைகளின் அதிகாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

இந்திய அரசின் முன்னாள் வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) நிரேன்டே “அன்றும் சரி, இன்றும் சரி, கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே” என்று கூறினார். 

மற்றொரு தீர்ப்பில் இராமநாதபுரம் துணை ஆட்சியர் இலங்கையின் தலைமன்னாருக்கு 5 கிலோ மீட்டர் மேற்கு வரை தன் அதிகாரத்தைச் செலுத்தியுள்ளார். பாம்பன் வந்த அரபுப் பயணிகளைக் குள்ளக்காரன் பெட்டியிலேயே இறக்கிவிட்ட இலங்கைப் படகோட்டிகள் மீது தொடரப்பட்ட வழக்கில் இலங்கைப் படகோட்டிகட்கு அபராதம் விதித்து மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அரசு அதிகாரிகளின் அலட்சியம்  

அ)    1972 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசு இதழின் திருத்திய புதுப்பதிப்பு வெளியிடப்பட்டது. அந்நூலின் தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வரைபடம் அச்சாகியுள்ளது. அந்த வரைபடத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாகக் கச்சத்தீவு காட்டப்படவில்லை. அன்றைய தேதியில் இந்தியப் பகுதியான கச்சத்தீவை விட்டுவிட்டு எப்படி வரைபடம் வரைந்தார்களோ தெரியவில்லை. முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் முன்னுரையையும் பெற்றுள்ளனர். 

ஆ)    பத்தாண்டுகட்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் குடியில்லாத ஊர்ப் பகுதிகள் கூடத் தவறாமல் குறிக்கப்படுவது வழக்கம். ஆனால் 1951, 1961, 1971 ஆண்டுகளில் ஆள் அற்ற பல இடங்களும் தீவுகளும் குறிக்கப்பட்டிருக்கக் கச்சத்தீவு விடுபட்டுள்ளது. இது தவறான செயல் ஆகும். 

இ)    சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தின் எச்.2, 38482/81, நாள் 29.9.1981 மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது எச்.2, 38495/91 நாள் 11.9.1981 குறிப்பின்படி கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட வரைபடத்திலிருந்து நீக்குவதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இராமேசுவரம் கிராமப் புல எண்.1250 சர்க்கார் புறம்போக்கு கச்சத் தீவு ஆர்.சி.எப்.23, 75/83பி ஏ.சி. நாள் 6.2.1982 குறிப்பாணையின்படி உத்தரவிட்டார். 

இராமநாதபுரம் வட்டாட்சியரும் 118/82 நாள் 19.2.1982 மூலம் இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத் தீவை நீக்க டேராடூனிலிருக்கும் இந்திய வரைபட அலுவலகத் திற்குக் கடிதம் எழுதினார். அதன்படி இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டது. 

இந்திய அரசின் இமாலயத் தவறு  

சேதுபதி சீமை என்று இவ்வளவு ஆவணங்கள் இருக்க, இலங்கை அரசு கச்சத் தீவுக்கு ஏன் உரிமை கொண்டாடியது? அது இந்திய அரசின் மெத்தனத்தினால்தான். 

1955, 1956 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசு கச்சத் தீவில் போர்ப் பயிற்சி செய்தது. பயிற்சியைக் கண்டிக்காத மத்திய அரசு “தூதர்கள் பேசும்வரை பயிற்சியை ஒத்திப் போடுக” என்றது. 

தொடர்ந்து பலமுறை கச்சத் தீவு தன்னுடையது என்று இலங்கை அரசு கூறியது. இந்திய அரசு ஒரு போதும் வன்மையாகக் கண்டிக்கவில்லை. 

1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. 

பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க வக்கற்ற இந்திய அரசு - மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது. வினோபா பாவேயின் “பூமிதானம்” என எண்ணிவிட்டனர். 

இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது. 

“ஒரு நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாடு தன்னுடைய பகுதி என்று அறிவித்தால், அதனை உரிய நாடு வலிமையாக எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அது ஆக்கிரமித்த நாட்டின் உரிமையை வாய்ச் சொல்லில் சொல்லாமல் ஒப்புக் கொண்டது என்றே பொருள்” - என்பதுதான் சர்வதேசச் சட்டமாகும். 

இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.

(பெரியார் முழக்கம் மார்ச் 2011 இதழில் வெளியானது)

Pin It