ஆன்மீகக் கருத்துகளுக்கு இடம் தருகிற பாட நூல்கள் ஏன் நாத்திகக் கருத்துகளுக்கு இடம்தரக் கூடாது? அப்படி இடம் தந்தால் இருபதே ஆண்டுகளில் இந்த சமுதாயத்தை விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்திக்கிற மனிதநேயப் பொதுவுடைமைச் சமுதாயமாக மாற்றிக் காட்ட முடியும்.

இன்றைய உலகில் விஞ்ஞானம் மிக மிக வளர்ந்திருக்கிறது. சரி! விஞ்ஞானப்பூர்வ மனோ பாவம் அதே அளவு வளர்ந்திருக்கிறதா? இல்லை! அதுவும் இந்தியா போன்ற பழம் பிரதேசங்களில் மூட நம்பிக்கைகள் கொடிகட்டி பறப்பதை கண்கூடாகவே காண முடிகிறது. நமது நாட்டில் மெத்தப் படித்த பல மேதாவிகள் கூட சூரியனையும் சேர்த்துத்தான் “நவக்கிரகம்” என்று நம்புகிறார்கள்! வழிபடுகிறார்கள்! ஆனால் உண்மை அதுவா? இல்லை! சூரியன் ஒரு நட்சத்திரம்! அதேபோல “இராகுகால” நம்பிக்கை! பூமத்திய ரேகையையொட்டி பூமியின் சுற்றளவு சுமார் 40ஆயிரம் கிலோ மீட்டர். அந்த தூரத்தை 24 மணி நேரத்தில் பூமி தன்னைத் தானே சுற்றுவதன் மூலமாகக் கடக்கிறது என்றால், ஒரு நிமிடத்தில் அது கடக்கும் தூரம் சுமார் 27 கி.மீ.மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழல்வதால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் கொல்கத்தா விற்கும் தொடர்ந்து வரும் மும்பைக்கும் உள்ள கால வித்தியாசம் ஒரு மணி நேரம். அதே போல் சென்னைக்கும் நீலகிரிக்கும் உள்ள நேர வித்தியாசம் 15 நிமிடங்கள். இதில் இராகுகாலம் என்று நாம் குறிப்பிடும் ஒன்றரை மணி நேர காலவரம்பு சென்னைக்கும் நீலகிரிக்கும் எப்படி ஒரு சேரப் பொருந்தும்?

அதே போல நட்சத்திரங்கள் பற்றி நம்முடைய பஞ்சாங்கங்கள் குறிப்பிடும் செய்தியும் கணிப்பும் அறிவியல் பூர்வமற்ற அப்பட்டமான கேலிக் கூத்துகளே! “அம்மாவின் புடவையை மடிக்க முடியாது அப்பாவின் சில்லறையை எண்ண முடியாது! அது என்ன?” என்ற விடுகதைக்கு விடையாக “வானத்தையும் நட்சத்திரத்தையும்” குறிப்பிடுவார்கள். அதையே இன்றைய விண்ணியற்பியல் விஞ்ஞானம் பொய்யாக்கி விடும் போலும்! பிரபஞ்சத் திலுள்ள மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1019 (லட்சம் கோடி கோடி) என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதில் ஒரு 27 நட்சத்திரங்களையும் இல்லாத இராகு, கேது உள்ளிட்ட சில கிரகங்களையும் வைத்துக் கொண்டு நம்முடைய பிறப்புக்கும் அவை களுக்கும் ஒரு முடிச்சுப் போடுகிறார்கள் நம் ‘பெரியவர்கள்’.

“விண்வெளியிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் இவற்றுக்கும் மனித வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! ஆகவே ஜோதிடம் என்பது விஞ்ஞான பூர்வமற்ற ஒரு அபத்தமே!” என்று ஆணி அடித்தாற்போல தெளிவுபடுத்தியவர்தான் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்.

அந்த ஜோதிடத்தை, விஞ்ஞானப் பூர்வ மானது என்று நிரூபிப்பதற்கும் பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாக வைப்பதற்கும் வளர்ப்பதற்கும் இன்றைய பாஜக மோடி அரசு பாடாய்ப்படுகிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. பூமியிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனிடமிருந்து வெளிச்சம் நமக்கு வந்து சேர எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் 8 நிமிடங்கள். அப்படியென்றால் நம்மை அடைய சுமார் 4 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் வெளிச்சத்தைத் தரும் “பிராக்சிமா சென்டூரி” என்ற நட்சத்திரம் எவ்வளவு தொலை வில் இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள்.

இத்தனைக்கும் அந்த நட்சத்திரம்தான் சூரிய குடும்பத்துக்கு மிகமிக அருகில் இருக்கும் நட்சத்திரம். இதுபோன்ற விஷய ஞானமோ, நட்சத்திரம் என்பது அடிப்படையில் ஒரு நெருப்புக்கோளம் என்ற தெளிவோ இல்லாமல், நமது முன்னோர்களில் சிலர், அவர்களுக்கு வாய்த்த அரைகுறையான அறிவைக் கொண்டு கற்பிதம் செய்து வைத்ததை இந்த விஞ்ஞான யுகத்தில் நாம் ஏற்பது எப்படி சரியாகும்? இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் படிக்காதவர் களிடம் மட்டுமல்ல படித்தவர்களிடமும் இருக்கிறது. படிப்புக்கும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு கல்வி முறைதான் நமது நாட்டில் நடப்பிலுள்ளது. ஆன்மீகக் கருத்துகளுக்கு இடம் தருகிற பாட நூல்கள் ஏன் நாத்திகக் கருத்துகளுக்கு இடம் தரக் கூடாது? அப்படி இடம் தந்தால்ஒரு இருபதே ஆண்டுகளில் இந்த சமுதாயத்தை விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்திக்கிற மனித நேயப் பொதுவுடைமைச் சமுதாயமாக மாற்றிக்காட்ட முடியும். அந்த அடிப்படையில் இருபத்தோராம் நூற்றாண்டில் பயணம் செய்யும் மனித சமுதாயத்துக்கு பத்து கேள்வி பதில்கள் தேவையான சிந்தனைத் தெளிவைத் தரக்கூடும்.

1. நாம் வாழும் இந்த பூமியின் வயது என்ன? 

460 கோடி ஆண்டுகள்.

2. முதல் உயிரினம் முதன் முதலாக பூமியில் எப்போது தோன்றியது? 

(சைனோ பைட்டா பாசி போன்றது) 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக.

3. கடவுள் தான் மனிதனை படைத்தார் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன. மனிதன் திடீரென்று படைக்கப்பட்ட வனல்ல பரிணாம வளர்ச்சிப்படி உருவானவன் என்று டார்வின் கொள்கை கூறுகிறது! இரண்டில் எது சரி?

டார்வின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையே சரி. சைனோ பைட்டா பாசி போன்ற முதல் உயிரிலிருந்து “நீர்வாழ் உயிர்கள்” தோன்றின. நீர்வாழ் உயிரினங் களிலிருந்து “நில நீர் வாழ்வன” தோன்றின. நிலநீர் வாழ்வன உயிரினத்தி லிருந்து “ஊர்வன” தோன்றின. இவ் விரண்டு இனங்களுக்கும் இணைப்பாக தண்ணீர்ப் பாம்பு, ஆமை போன்றவற்றை குறிப்பிடலாம். ஊர்வன உயிரினங்கள் “பறப்பன”வாக பரிணாம வளர்ச்சி அடைய இணைப்பாக உருவான உயிரினம் பறக்கும் பல்லி!

அதேபோல் “பறப்பன” உயிரினம் “பாலூட்டி” இனமாக வளர்ச்சியுற்ற போது இணைப்பாகத் தோன்றிய உயிரினம் வவ்வால்கள் எனலாம். ஏனென்றால் வவ்வால்கள் பறக்கவும் செய்யும் குட்டிபோட்டு பால் கொடுக்க வும் செய்யும்; அந்தப் பாலூட்டிகள் இனத்தில் பலப் பல உயிர்கள் தோன்றிய பிறகு “ஹோமோ சேபியன்ஸ்” என்ற ‘நாம்’ தோன்றினோம். இப்படி டார்வின் முன் வைத்த “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” நிரூபணமானதொரு உண்மை. ஆனால் கடவுள் மனிதனைப் படைத்தார் என்று மதங்கள் காலங்காலமாகச் சொல்லி வருவது விஞ்ஞானப்பூர்வமாக எந்த விதத்திலும் நிரூபிக்கப்படாத அப்பட்டமான கற்பனையே!

4) டார்வின், வாலஸ் போன்றோர் முன் வைத்த பரிணாம வளர்ச்சிக் கொள்கைப் படி நம்மிலிருந்து (ஹோமா சேபியன்ஸ்) ஏன் புதிதாக ஒரு இனம் தற்காலத்தில் தோன்றவே இல்லை?

பரிணாம வளர்ச்சி மாற்றம் என்பது நீண்டகால இடைவெளியில் தேவைகளின் நிர்ப்பந்தத்தால் நிகழ்வது! உதாரணமாக 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரில்லா இனத்திலிருந்து உயிரியல் ரீதி யாக கொஞ்சமே வேறுபடும் சிம்பன்சி இனம் தோன்ற காலம் எடுத்துக் கொண்ட இடைவெளி ஆண்டுகள் 25 லட்சம்! ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனத்தின் முன்னோடி இனமான “ஹோமோ எபிலிஸ்.” 17.5 லட்சம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய “ஹோமோ எரக்டஸ்” - அந்த இனத்தி லிருந்து பரிணாமம் பெற்ற நாம் அதாவது “ஹோமோ சேபியன்ஸ்” தோன்றி 5 லட்சம் ஆண்டுகள் கூட முடியவில்லை. ஆகவே “ஹோமோ சேபியன்ஸ்” எனப்படும் நமது மனிதஇனத்திலிருந்து புதிதாக ஒரு வளர்ந்த இனம் பரிணாமம் பெற சில லட்சம் ஆண்டுகள் ஆகக் கூடும்.

ஆனால் பாலின செல்களில் (செக்ஸ் செல்கள்) இருந்து உயிர்கள் தோன்று வதற்கு மாறாக உடல் செல்களிலிருந்தே (சோமாடிக் செல்கள்) உயிர்களை இனப் பெருக்கம் செய்யும் “குளோனிங் முறை” போன்ற மரபணுவியல் விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சிக் காரணமாக இயல்பாக நடக்க வேண்டிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை அதன் போக்கில் விடாமல், மனித இனமாகிய நாமே வெகு வேகமாக முந்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதை மறந்து விடக்கூடாது!

5) சுமார் 360 கோடி ஆண்டுக்கு முன்னால் தோன்றியது போல் புதிதாக ஒரு உயிரினம் பூமியில் இன்று ஏன் தானாகத் தோன்ற வில்லை? (இனப்பெருக்க முறையில் மட்டும்தானே தோன்றுகிறது?)

இந்த பூமியில் முதல் உயிரி தானாக தோன்றியபோது காற்று மண்டலத்தில் ஹைட்ரஜன், நைட் ரஜன், கரியமில வாயு, மீத்தேன் போன்ற வாயுக்கள் இருந்தன. ஆக்சிஜன் மட்டும் கொஞ்சம்கூட கிடையாது. ஆனால் இப்போது ஆக்சிஜன் இருக்கிறது.

அது உயிரி தோற்றத்தை முற்று முழுதாகத் தடுத்துவிடுவதால் புதிய உயிரினம் தானாகத் தோன்றவில்லை. (ஆதாரம்: அல்டேன்/ஒபரின், மில்லர்/ஊரே ஆய்வுகள்) இனப் பெருக்க முறையில் மட்டுமே தோன்று கிறது!

6. சூரியன் என்பது யாது?

13 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடும் விஸ்தாரமான பரும அளவு கொண்ட ஒரு நட்சத்திரம். ஹைட்ரஜன், ஹீலியம் அணுக்கள் கொண்ட நெருப்புக் கோளம். உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கு மான மூலசக்தி! அதன் உட்புற வெப்ப நிலை லட்சம் டிகிரி சென்டி கிரேடு. வெளிப்புற வெப்ப நிலை 6000. இந்த மாபெரும் நெருப்புக்கோளமான சூரியனை பகவானாக்கி சூரிய வாகனத்தை குதிரைகள் இழுத்துச் செல்லும் புராண அபத்தத்தை என்னவென்று சொல்ல?

7. விண்வெளியிலுள்ள மொத்த நட்சத்திரம் எத்தனை?

இலட்சம் கோடி கோடி நட்சத்திரம் எண்ணிப் பார்க்கவே நமக்கு தலை சுற்றவில்லையா?

8. பூமியில் உள்ளதுபோல் வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்கிறதா?

வாழலாம். கோடி நட்சத்திரத்திற்கு ஒரு கிரகம் இருந்து, அதில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தால் கூட லட்சம் கோடி கிரகங்களில் பூமியைப் போல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதைக் கண்டறிய நமது விஞ்ஞானம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.

9. பிரபஞ்சத்திற்கு எல்லை கண்டறியப்பட் டுள்ளதா?

ஏறக்குறைய 1250 கோடி ஒளிஆண்டுகள் தூரம் பிரபஞ்சத்தின் எல்லை என்று டாஃப்ளர் விளைவின்படி கணித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். அதாவது பூமி தோன்றுவதற்கும் (460 கோடி ஆண்டுகள்) முன்னால் பிரபஞ்சத்தின் ஒரு முனையிலிருந்து புறப்பட்ட வெளிச்சம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ.வேகத்தில் பயணம் செய்துகூட இன்னும் நம்மை வந்தடையவில்லை. அதாவது ஒரு ஒளி ஆண்டு என்பது சுமார் 10 லட்சம் கோடி கி.மீ. அப்படியென்றால் பிரபஞ்சத்தின் எல்லை சுமார் 1250 கோடி ஒளி ஆண்டுகள் தூரம்.

அதாவது சுமார் 125 கோடி கோடி கோடி கி.மீ. இதைவிட நமக்கு ஆச்சரியம் தரும் விஷயம் வேறெது? சிந்தித்துப் பாருங்கள்! அந்த பிரபஞ்சத்திற்கும் அப்பால் என்ன என்று ஒரு கேள்வி போட்டால் தலை சுற்றலைத் தவிர எதுவுமே மிஞ்சாது!

10. மறுபிறப்பு என்பது உண்டா?

இதயம், கார்னியா (கண்), சிறுநீரகம், கல்லீரல் போன்ற மாற்றக்கூடிய உடல் உறுப்புகளை - இல்லாதவர்களுக்கு, பழு தடைந்தவர்களுக்கு தானம் செய்பவர்கள் தான் மறுபிறப்பு அடைபவர்கள் எனச் சொல்லலாம். மற்றபடி மறுபிறப்பு என்பதெல்லாம் வெறும் கற்பனை தான்!

இவை போன்ற அடிப்படையான, தெரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகளை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் அறியச் செய்ய வேண்டும். ஆனால், இன்றைய மோடி அரசு விஞ்ஞானப்பூர்வ மனோபாவத் துக்கு நேர் எதிரான புராணக் குப்பைகளை பாடத் திட்டங்களில் புகுத்தும் “காவி மயமாக்கும்” கல்வித் திட்டத்தையல்லவா நடைமுறைப்படுத்த எத்தனிக்கிறது?

நமது மனித இனம் “ஹோமோ சேபியன்ஸ்” மிகச் சரியாக 5 லட்சம் ஆண்டு களுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றி 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் குடி பெயர்ந்தது என்பதை மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் இவைகளை “ஐசோடோப் டேடிங்” முறையில் ஆய்வு செய்து தெளிவாக கணக்கிடுகிறது இன்றைய நவீன விஞ்ஞானம்! ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக இந்துத்துவா சங்பரிவாரத்தைச் சார்ந்தவர்கள் இராமன் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியில் பிறந்ததாக கதையளக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் அது அபத்தம் மட்டுமல்ல; நாட்டிற்கு விஞ்ஞானப் பூர்வ மனோபாவத்துக்கு எதிரான அபாயமும் அல்லவா?

இணையத்திலிருந்து

Pin It