கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் .. இது நேசமித்திரனின் புத்தகம் உயிர்மை வெளியீடு..நேயாவுக்கும் உயிர்த்தோழிக்குமான ஒற்றைப் புத்தகம் இது.. இது சுமந்து வரும் நினைவுகள் தொலையாதவை.. தொலைக்க முடியாதவை.. குரல்களின் வழி வழிகிறது.
 
கவிதைகளில் ஒரு வித்யாசமான உலகத்தைப் பார்க்கவேண்டுமென்றால் இந்தக் கவிதைகளைப் படிக்கலாம் உங்கள் கண்ணுக்குப் புலப்படும் உலகமே வேறொரு கோணத்தில். . நேசனின் கவிதைகள் கற்பாறைகளினூடாக பயணம் செய்யும் அனுபவம் தருபவை.. எங்கே காட்டருவி வரும், எங்கே ஆகாயம் புலப்படும் எங்கே வனம் வரும் என புலப்படாத ஒரு பாதையில் செல்வதைப் போல அது.
 
எந்தக் கோட்பாடுகளை எல்லாம் ஒழுக்கம் என சொல்லிக்கொண்டிருக்கிறோமோ அவற்றின் மீதெல்லாம் ஒரு கேள்விக்கணையை எய்து கொய்யும் கவிதைகள்..
 
”ஒரு வஞ்சத்தைப் போல
ஒளித்து வைக்கிறது முதல் பூவை
காம்பின் நிறமுடைய
உதடுகளில் இருந்து கசியும்
கருணைக்காக..”
 
”வழி மொழிகின்றன குழந்தையின் உதடுகள்..
தொலைக்காட்சி பொம்மைகளின்
குரலை. ”
 
கார்ட்டூன் பொம்மைகளுக்கு குரல் கொடுப்பவள் போல கவிதைத்தொகுதி சில சமயம் குழந்தைத்தனத்தோடும், சிலசமயம் முதிர்ச்சியுடனும், சிலசமயம் சலிப்புடனும், சிலசமயம் விழிப்புணர்வு தூண்டியும் சிலசமயம் எச்சக் கணைகளோடும், பல சமயம் எதிர்பாராத உறுதியோடும் வீர்யத்தோடும் அச்சமூட்டியும் அதிர்வுகளோடும் செல்கிறது .
 
பறவைகளற்ற ஒரு உலகு, உடல்தானம் பெற்ற டி என் ஏக்கள்,லேசர் திரைச்சீலையில் பாலையைக் கடக்கும் நாகங்கள் போல ஒருவரை ஒருவர் கைவிடுவதாக அறிவித்துக் கொள்வது, அலை தோலுரிக்கும் கடல் அரவம், எரியும் காகிதம் புல்வெளி வீழ்வதாய், சிறகு முளைக்கும் கனவுகளோடு மல்பெரி இலைகளைத் தின்பதும்,,டாஸ்மாக் பையூதியும், வனம் எரியும் பாம்புகளின் பாதையும், அலகில் துள்ளும் மீனுக்கு ஒரு கண்ணில் ஆகாயமும் தற்கொலை குறிப்புக்களும், பரிசளிக்க விரும்பிய நாளில் பால் மாறிய செய்தியும் கொஞ்சம் அதிர்வேற்படுத்துகின்றன....
 
விலா எலும்பில் விந்து வைத்திருந்தவன் மகள், அக்காவிடம் அம்மாவைத்தேடுதல், என உறவுகளும் மற்றும் பின்ன உடலின் ஸ்கலிதங்கள் என கோமாளி மீனுக்கு பெண்ணுறுப்பு வால்புறமிருப்பதும். விநோதம்.
 
ஒலியின் உடல் மொழி அற்புதம்.. கருவிலிருந்து வெளியேறுவதை உணரத்தரும் வலம்புரி இசையதிர்வு.. ஆனால் அரட்டுவது கிளை படரும் சிறுத்தையின் அதிர்வில் சங்குகளில் ஒளிந்து கொள்ளும் நத்தைகள்..
 
நார்சிச வனம் மாற்றும் நாசிசத்திமிர், ப்ரேதமுத்தம் வைப்பரில் சிக்கிய சிறு தும்பியின் ரத்தம் அரக்கில் உறைவதை வரைவதும், கடவுளர்க்கும் க்ரோமோசோம் குறிப்பதும், குதிரை முடியால் கொலை செய்யும் பெண்ணும், வெளிச்சத்தோடு பறக்கும் பாலுண்ணிக்கு ஈர்ப்பு வேறோர் கோளிலும், காளான் தலை உலகமும், கிலாகோவும் எஸ்கார்ட் பெண்ணும், ஸ்டெராயிடும் ஐ பில்லும், கூடும் இரு ஆண்களை நிழலாக்கும் ஈரிலைத்தாவரத்தின் கிளைகளும் எழுப்பும் கேள்விகள் அநேகம்..
 
கார்ட்டூ்ன், லெஸ்பியன், கிகாலோ, ஸ்டென்சில், டி என். ஏ, ஃபாசில், தெர்மோகோல், ஃபோட்டொ சிந்தடிக் முத்தங்கள் ஈயும் வெப்காம் சஞ்சயர்கள், கிரமஃபோன், பிரமிட் வவ்வால்கள், ஹைட்ரோதெர்மல் நாசி,கிராஃபிக்ஸ், கார்பன் தாள், ஓபியப் பாதரசம், ரேடிய விடியல், அர்மதான் வளி வெளி, மார்ஃபிங், மாயன் காலண்டர், டெசிபல், ந்யூரான் மடிப்புக்கள், டாரெட் கார்டுகள், பெரிகார்டியல் திரவம், இங்குபேட்டர், சோலார், போன்சாய், ஹார்மோன், பிக்சல்கள், டெசிபல்கள், ஸ்டெராயிட், ஐ பில், ஓசோன், டங்ஸ்ட்டன், பைனரி, பிக் பாங் தியரி, பாசில் மூலம் அறிவது, ரப்பர், ப்ளாட்டினம், என விஞ்ஞான ஆங்கில வாத்தைகள் அதிகம் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும் வாழ்வியலோடு கலந்து விட்டதால் படிக்க எளிதாய் விட்டதுதான்.. பரிணாமங்கள் மாறுவது போல மொழியும் மாறிக் கொண்டிருப்பதற்கான ஒரு பதியனிட்டது போலிருக்கிறது..
 
கம்ப்யூட்டர், ஆன் லைன் வழி நடக்கும் ஒரு குறிப்பிட்ட சமூக மாற்றத்தையும் அங்கங்கே கோடிட்டு செல்கின்றன கவிதைகள்.. வெப்காம் மூலம் பார்த்து குடும்பம் நடத்துவது, பிக்சல்கள் மூலம் ஆண் பெண் நட்பு தரிசித்துக் கொள்வது, டெசிபல்கள் மூலம் களியாட்டம் நிகழ்த்துவது என கொஞ்சம் கோலத்தையும், அலங்கோத்தையும் கூட வரைகின்றன..குரல்கள்..
 
அருவி வனத்தின் அரையி்டைப் பின்னல் ஆவது, ஒளியேந்தும் இலை கீழிருக்கும் மெல்லிருள், கடல் தாவரத்தின் சுவாசம், வெய்யிலைச் சலிக்கும் மரம், கர்ப்பகால தொப்புள் நிலா, கிள்ளிய இருள் சாட்சியாய் நிலா, தெர்மோகோல் ஆகாயம், நட்சத்திர உமிகளாய்ச் சிப்பிகள். சூரிய அடையில் பாலைபறவையின் நிலாக்கல் முட்டை, உதட்டுக்கு இருக்கும் குழந்தையின் விரல்களாய் மார்பகம், காற்று குடித்து மிதக்கும் கோப்பையில் நிலாப்பிறை..நிலாக்குவளை மிதக்கும் நிசி..இன்னும் இன்னும் நிறைய என்னை ரசிக்க வைத்தவை.. நீர்ப்பறவை மேலோட்டமாக கால் பாவி செல்வது போலத்தான் எல்லாவற்றையும் பாவி பாவிப் பறந்து படித்தேன்.. திரும்ப திரும்ப தேனீ போலவும் சிலவற்றில் செம்மாந்தும்..
 
“வதுவையின் துவக்க வாசனை மிதக்கும்
மென்னகைக்கு ஆறேழுமுறை உயிர்த்தெழ சாகலாம்..”
 
”ஆலிவ் தளிர் யேந்திய பறவையின் குரலில்
ஆர்க்கிமிடிஸின் மகா நிர்வாணச் சொல்..”
 
”பாறையின் மீதமிருக்கும் நீர் தழும்பாய்
தண்டவாளத்துண்டு அதிர்ந்ததும் கேட்கும்
களிக்கூச்சல்..”
 
“இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்
பிராயம் தொலைந்த பெண்
பழைய வாடிக்கையாளனை..”
 
”வெளியேறுகையில் கடைசியாகவும்,
நுழைகையில் உடலை முந்தியும் நுழையும்
நிழலைப் பழக்கியிருக்கும் இவ்வீட்டில்” 
 
புத்தகம் முழுமையுமே நாம் ஒவ்வொரு வரியாக சிலாகித்துக் கொண்டே போகலாம். இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலமற்று, என்றும் பொருந்தும்,சொற்சித்திரங்கள் வரையப்பெற்ற குகையினூடே சென்று மங்கிய தீவட்டி ஒளியில் எல்லா ஓவியத்தையும் சிதைக்காமல் கருத்தோடு பார்க்க வேண்டிய கவனத்தை உண்டு பண்ணுகின்றன கவிதைகள் அனைத்தும்..
 
நிறைய புதுமையான சிந்தனைகள், ஆங்கிலக் கலப்போடு வந்தாலும் அவற்றின் வீர்யம் கருதி வாசிப்பு இயல்பாகிறது.. சி்லவற்றை இரண்டு மூன்று முறை படித்தால் பல கோணங்கள் விரிவாகின்றன.. வாசிப்பாளனுக்கு ஒரு சித்திரத்தை.. கோடு காட்டி மன கான்வாசில் முழுமையுறச் செய்கிற உத்தி நேசனுக்கு கைவந்தது..இ்ன்னும் வேறு விதங்களில் நாமே வரைந்து பார்க்க ஊக்கியாகவும் இருக்கும்.
 
நிறைய கவிதைகள் முன்பே படித்திருக்கிறேன் என்றாலும் கீ வேர்டு என்பதை நேசன் குறிப்பிட்டு இருப்பார்.. அதன் மூலம் இன்னும் எளிதாக நம்மை அடையும் கவிதைகள் புத்தகம் மூலம் சிறிது தாமதமாகத்தான் கைவரப் பெறுகின்றன.. 
 
இயற்கையை எல்லாம் செயற்கையாய் மாற்றிக் கொண்டிருக்கும் நாம் கவனிக்க வேண்டும் இந்த எச்சரிக்கையை எல்லாம்...
 
”செல்போன் கோபுரம் வீசும் மின் வலை
மெல்லக் கொல்லும்.
 
கம்பியில் உறங்கப் பழகுகிறது கூண்டுப் பறவை.. ”
 
“குடை ரிப்பேர்செய்து கொண்டிருக்கிறோம்
மரம் நட்டு “
 
என்ன சொல்ல...நேசனின் வார்த்தைகளில் சொல்கிறேன்.. இத்தொகுதி “சிறகுதான் ஆனால் கனம் பென்குவினுடையது.. ”

Pin It