கொஞ்சம் வேலையா இருக்கேன்.. சாயந்திரம் அஞ்சுக்கு மேல பேசறீங்களா...
மாரியப்பன் முகத்தில் போன் கலை. பொழுதுக்கும் பூக்கூடை பிரித்தது போலவே இருக்கிறான்.
என்ன மாரியப்பா... இத்தனை போனு வருது... ஆளாளுக்கு கேட்டார்கள். ஆளுக்குள் போன் மழை. போனை எடுத்தா நச்சு நச்சுங்கறானுங்க போலதான் அவன் முக பாவனை.
புதுசா பிரெண்ட்ஸ் புடிச்சிட்டியா. இல்ல ஆளு ஏதும் செட்டாகிடுச்சா...
நின்னு ஒரு கெத்து பார்வை... போங்கடான்னு சொல்ற வெத்து பார்வை. நின்று நிதானித்து நக்கலடிப்பது போல சிரித்துக் கொண்டான்.
லேத் ஓட்டுவதில் கில்லாடி என்றாலும்... புதிதாக வேலைக்கு சேர்ந்தவன் போலவே இருக்கும் அவன் உடல்மொழி. எது ஒன்றுக்கும் சிரித்துக் கொள்கிறவன்... அழும் போதும் முதலில் சிரித்து விட்டே ஆரம்பிப்பான்.
ஏன் உங்களுக்கு மட்டும்தான் போன் மேல போன் வருமா... எங்களுக்கெல்லாம் வராதா...
மதிய உணவு வேளையில்...மண்டைக்கனம் பிடித்த சீனியரிடம் வேண்டுமென்றே வாயை ஒருக்களித்து சொல்லிக்கொண்டிருந்தான்.
ஏழெட்டு கால் வந்து விட்டது. அத்தனைக்கும் அதே அஞ்சு மணி பதிலே. மாரியப்பன் புன்னகை அப்பனான மாறி விட்டான். வழக்கமாக (சிரித்தாலும்) இறுகிய முகத்தில் இருப்பவன்... இந் நாட்களில் பளபளவென பாக்கு மர மினுமினுப்பில் இருக்கிறான்.
உறவுகள் கிடையாது... அப்பா அம்மா செத்துட்டாங்க.... இருக்கற நாலைஞ்சு நண்பர்களும் அவனை பெருசா எடுத்துக்கறது இல்ல.... தனி ஆளுன்னு சொல்லிருக்கான்... காதல் கீதல்னு மாட்டிகிட்டான் போல.
மணிக்கொரு தரம் போன் ரிங் ஆகிக் கொண்டே இருக்கிறது. ரிங் வரும் போதெல்லாம் எங்கள் கவனம் மாரியப்பன் மீதே. எங்களைப் பெருமையாக பார்த்தவன்... போன் எடுத்து அஞ்சு மணிக்கு மேல பேசுங்க என்றபடியே வேலையைப் பார்த்தான்.
அவன் நடையில் ஒரு தினுசு கூடியிருந்தது. தாடையில் மட்டும் கொத்தாக முளைத்திருக்கும் தாடி ஒதுக்கப்படாமலேயே பிரெஞ்சு தாடி போல தான் இருக்கும். நல்ல நெட்டை. ஆனால் கொஞ்சம் கூன் போட்ட உடல்வாகு. ஒல்லிப்பிச்சான். ஆனால் உடலில் இரும்பு எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும். பத்து விரல்லயும் பாம்பு கண்ணு மாதிரி நகம் வெச்சிருப்பான். இத தான் வெட்டலாம்லடா என்றால்... வெட்டல்லாம் முடியாது. வேணும்னா உள்ள இருக்கற அழுக்கை எடுத்தர்றேன் என்பான்.
இவன் புரியாத மாதிரி இருக்கானா.. இல்ல புரிஞ்சிக்கற அறிவே இவ்ளோ தானா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு. சரியாக புரிந்து கொள்ள மாட்டான். ஆனால் புரிந்தவரை சரியாக இருக்கும்.
கம்பனில என்னை ஓட்டறதுக்குதான பேசறீங்க. என்னை மனுஷனா மதிச்சா பேசறீங்க... ஒரு நாளாவது என்ன சார்னு யாராவது சொல்லிருக்கீங்களா. லேத் ஓட்டுறதுல எனக்கு பத்து வருஷம் அனுபவம் இருக்கு. ஆனா பொடியன கூப்பிடற மாதிரிதான கூப்பிடறீங்க. சரி அத விடு... வீட்டுக்கு போனப்பறம் சாயந்திரம் ஒரு நாளாவது எனக்கு யாராவது போன் பண்ணிருக்கீங்களா.. நான் பேசவும் ஆள் இல்ல. என்கிட்ட பேசவும் ஆள் இல்ல. அதான். ஒரு திட்டம் போட்டேன். பைக் கடை... போன் கடை... கார் கடைனு அப்பப்போ போயி வாங்கற மாதிரி விசாரிச்சுட்டு வருவேன். அப்பப்போ டிப் டாப்பா துணி போட்டுட்டு எங்க போறன்னு கேப்பியே... இதுக்கு தான். ஆதார் காடு காட்டினா முடிஞ்சுது. பாதி வித்த மாதிரி பேசுவாங்க. லோன் மேட்டருக்கு வரும்போது அவசர வேலையா போற மாதிரி ரெண்டு நாள்ல சொல்றேன்னு சொல்லி எந்திரிச்சிருவேன்...
சிரித்தான். அவன் உருவாக்கிய உலகத்தில் அவன் மட்டுமே இருப்பது போல தெரிந்தது. இதுவரை அவனைப் பார்த்து கேலி செய்தவர்களையெல்லாம் இப்போது அவன் கேலி செய்வது போல இருந்தது. கண்களை விரித்து நெற்றியை ஒருக்களித்து ஒரு வெற்றி பாவனையைக் காட்டினான்.
ரெண்டு நாளைக்கு அப்புறம் அவுங்களே கூப்பிடுவாங்க. அதுவும் மாரியப்பன் சார்னுதான் பேசவே ஆரம்பிப்பாங்க.. அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ஒரு நாளைக்கு ரெண்டு கால் போதாது... அதுவும் புள்ளைங்கதான் பேசுங்க. அது இன்னும் சூப்பரா இருக்கும்.
அவன்கிட்ட என்னத்த பேசறது என்று யோசித்தவர்கள் எல்லாம் அவனிடம் பேச காத்திருக்க வேண்டும் போல தோன்றியது. அவனும் ஒரு பொருட்டான தருணத்தை அவன் சரியாக கடத்தாமல் போயிருக்கலாம். ஆனால் எனக்குள் கடந்து விட்டது. கிடந்து தவிக்கிறது.
மாரியப்பன் மாரியப்பன் சாராக தெரிந்தான்.
இடையில் வந்த காலை அட்டன் பண்ணி.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்.. நாளைக்கு சாயந்திரம் ஒரு ஆறுமணிக்கு கூப்பிடறீங்களா என்று சொல்லி உதடு பிதுக்கி சத்தம் வராமல் சிரித்துக் கொண்டான். நான் பாவனையற்று அவனையே பார்த்தேன்.
மனுஷ குரல்ல இருக்கற ஆசுவாசம் கையில் இருக்கற போன் தராதுதான். மாரியப்பன் பேச இன்னும் இருக்கிறது. கேட்க நான்தான் என்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
- கவிஜி