கீற்றில் தேட...

நடு நிசியில் விழிப்பது எனக்குப் புதிதல்ல. ஆழ்ந்த உறக்கத்தின் பயனாக அது வாய்த்துவிடும். அது இரவின் மௌனத்தை கிரகிக்க என்னை தோதாக்க முயல வைக்கும் தருணங்கள்.

காலொன்று பழுதாகி இருக்கும் இப்பொழுது அறையை விட்டு வெளியே செல்ல வரும் எண்ணத்தைப் புறந்தள்ள முடியாமல் உட்கார்ந்து இருக்கிறேன்.

மருத்துவர் அறுவை சிகிச்சை செய்த வலது காலின் பாதத்தை கீழே வைக்காதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பி இருந்தார்.

‘எல்லோரும் கீழே வைத்து நடங்கள் என்று சொல்வார்கள் உங்களுக்கு சர்ஜ்சரி செய்திருப்பது எழும்பில் இல்லை சதையில் என்பதை மறந்து விடாதீர்கள்.’ என்றார்.

மகன் ஒவ்வொரு கடையாக தேடி அழகான வாக்கிங் ஸ்டிக்கை வாங்கிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான். மனைவி சிறு அசைவு என்றாலும் எழுந்து 'பாத் ரூம் போகனுமா' என்கிறார்.

மகளுக்கு என்னைவிட்டுச் செல்ல மனமே ஒப்பவில்லை. பின்னிரவு வரை போனில் 'திரும்பி வந்துவிடவாப்பா' என்று கேட்டுக் கொண்டே இருந்தார். 'அறுவை சிகிச்சையின் முதல் வாரம் முழுவதும் நான் எப்படி தவித்தேன்' என்று உங்களிடம் சொல்லவில்லையப்பா' என்றார். 'ஏன் இப்பொழுது வரை சொல்லவில்லை' என்று அடுத்த முறை வீட்டிற்கு வரும்போது கேட்க வேண்டும்.

அவசரத் தேவைக்குக் கீழே பிளாஸ்டிக் கப்பு அதற்கு பக்கத்தில் குப்பைத் தொட்டி. நான் படிக்கும் புத்தகங்கள். எனக்கான பழங்கள். இப்படியாக என் கட்டிலைச்சுற்றி என் தேவைகளுக்கான எல்லாமே கைக்கு எட்டும் வகையில் வைத்து இருக்கிறார்கள்.

நான் அந்த அலுமினிய ஸ்டிக்கை ஊன்றி அறையைக் கடந்து ஹாலை விட்டு வெளியே செல்லவேண்டும். ஹாலிலிருந்து ரிசப்ஷனுக்கு இறங்க இரண்டு படிகள் உள்ளது.அதில் கவனமாக இறங்க வேண்டும்.

வெளியே செல்லவேண்டும் என்ற தணியாத தாகத்தை என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. அந்த அலுமினிய ஸ்டிக்கை எடுத்தேன். அது கீழே ஊன்றி நடக்கும்போது சிறியதாக சத்தம் வரும். அது சோடாப் பாட்டில் மூடிகளை கால் சட்டைப் பையில் போட்டு நடப்பதை ஒத்திருக்கும். அவரவருக்கு ஏற்றார்போல் உயர ஏற்ற இறக்கம் சரியாக வைத்துக்கொள்ளும்படியாக இந்த அலுமினிய கம்பி இருப்பதால் அந்த சத்தம் வந்தது.

அதை எடுத்து இந்த சத்தத்தை நிறுத்த என்ன செய்யலாமென யோசித்தேன். குளிர்ந்த தண்ணீரைப் பாட்டிலை கீழே வைப்பதால் அதன் வெளிப்புற நீர் வழிந்து ஓடி அதில் நான் எதுவும் வழுக்கி விழுந்துவிடக்கூடாது என்று கர்ச்சீப்பை மடித்து அதன் மேல் பாட்டிலை வைத்து இருந்தார்கள்.

ஈரமாக இருந்த அதை கம்பியில் இருந்த பதினோரு ஓட்டையில் என் உயரத்திற்கு தகுந்த மாதிரி நான்காவது ஓட்டையில் மாட்டி இருந்ததற்கு கீழே இருந்த மூன்று ஓட்டையை மறைத்து கர்ச்சீப்பால் இறுக்க கட்டிய பிறகு அதை அழுத்தி தூக்கிப்பார்த்தேன். எந்த சத்தமும் வரவில்லை.

நல்ல வேளை கவனக்குறைவாக நான்காவது ஓட்டையும் சேர்த்து கட்டி இருந்தால் அட்ஜெஸ்ட்மெண்ட் அமுங்கி உள்ளேப்போக கம்பி கீழே இறங்கி நான் குப்புற விழுந்திருப்பேன்.

பாதத்தில் கட்டுப்போட்டிருக்கும் காலை மடக்கி ஸ்டிக்கை ஊன்றி மெதுவாக நொண்டி நொண்டி நடந்தேன். நல்ல வேளை இரண்டு மாதங்களுக்கு முன்பு கதவில் மாட்டியிருந்த டோர்க் குளோசரை மனைவி கழட்டி இருந்தது இப்போது எனக்கு வசதியாக இருந்தது.

பத்து நாளைக்குப் பிறகு ஹாலுக்கு வந்த பிறகுதான் என் வீட்டில் இருக்கும் உணர்வே வருகிறது. கதவைத் திறந்து லாவகமாக ஒரு குதி. அடுத்து ஒருக் குதி கீழே வந்துவிட்டேன். பேனையும் , லைட்டையும் போட்டு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்ததும் களைப்பாக இருந்தது. தண்ணீர் குடித்தால் தேவலாம் என்று தோன்றியது.

எனக்கு என் நாட்டிற்கு அதில் என் வீட்டிற்கு வந்ததுபோன்ற உணர்வு எழுந்தது. என் இரும்பு கட்டிலில் பாய் சுருட்டப்பட்டுக் கிடந்தது.

நான் முதல் மாடியில் இருப்பதால் தென்னை மரத்தின் தேங்காய்களை பக்கத்தில் பார்க்க முடிந்தது.

இந்த ஒரு மாதத்தில் தென்னையின் இரண்டு குலைகள் காய்கள் தேறி பறிக்கும் பருவத்தில் தொங்க ஆரம்பித்து இருந்தது. மேலே குருத்து மட்டைகளுக்கு கீழே உள்ள இரண்டு மட்டைகளில் வந்திருந்த பாலையில் ஒன்று பூ விரிந்தும் ஒன்று குரும்பைகள் விட்டும் இருந்தது.

பிளாஸ்டிக் டீபாயில் நீலம்,உயிர்மை, காலச்சுவடு , மணல் வீடு இதழ்கள் மற்றும் சில கவிதை புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தது. ஓஷோவின் தியானம்: பரவசத்தின் கலை என்ற புத்தகமும் இருந்தது அதை செல்ஃபிலிருந்து யார் இங்கு எடுத்து வந்தார்கள் என்று தெரியவில்லை. செல்ஃப் முழுவதும் இருக்கும் பெரும்பாலான ஓஷோ புத்தகங்களில் இதனை மட்டும் தேர்ந்தெடுத்திருந்ததால் அவருக்கு தியானத்தைப் பற்றித் தெரிய ஆசை இருக்க வேண்டும். இப்போது தியானம் பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடமும் வந்திருக்கிறது. துரதிஷ்டவசமாக இதனை தெரிந்ததாக சொல்லும் பெரும்பாலானவர்கள் அதன் அசல் புரிதலற்ற நேர்மைக் குறைவானவர்களாக இருக்கிறார்கள்.

சிலிண்டரின் மேல் தந்தி மற்றும் இந்து தமிழ் திசை பேப்பர் வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தது.ஏன் எங்களை தொடவே இல்லை என்று அவைகள் கேட்பதாக மனம் நினைத்துக்கொண்டது. எனக்காக உழைத்த ஷூக்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

தூசி ஏறிக் கிடந்ததில் இடது கால் ஷூவைப் பார்த்து ‘உன் தோழனின் நிலையைப் பார்த்தாயா.’ என்றேன்.

‘சீக்கிரம் வா.. நண்பா விதவிதமாக ஊர் சுற்றிக் காட்டிப் பழக்கிட்டியா. தனிமை பைத்தியம் புடிக்க வைக்குது. சீக்கிரம் வா…நண்பா.’ என்பதாக தோன்றியது.

'குருஜி சிலிண்டருக்கு பக்கத்துலப் போங்க. லைன் தெளிவாக இல்லை' என்று கபிலன் சார் ஜாம்பியாவிலிருந்து போன் செய்யும் போது அடிக்கடி கிண்டலடித்தது நினைவுக்கு வந்தது.

அறையில் உடல் குளுமையை உணர்ந்தாலும் மனம் அனலாக இருக்கும். இங்கு உடலுக்கு அனலாக இருந்தாலும். மனம் குளுமையில் ரசிக்கிறது. என் படுக்கையில் பாயை விரித்து படுக்கலாமா என்று நினைக்கும்போதுதான் கவனித்தேன் அங்கு புதிதாக மாட்டிய சுவற்றுப் பேனில் சிட்டுக்குருவி உட்கார்ந்து இருந்தது.

நான் கொஞ்சம் தலையை உயர்த்திப் பார்த்தேன். அது பேன் இறக்கைகளுக்கும் சுவற்றிற்கும் இடையில் பேனின் கொண்டையில் உட்கார்ந்திருந்தது. அலுமினிய ஸ்டிக்கைத் தள்ளி வைத்து விட்டு சத்தமில்லாமல் நாற்காலியை நகர்த்தி அதை நன்கு பார்ப்பது போன்று உட்கார்ந்து கொண்டு அதைப் பார்க்க ஆரம்பித்தேன்.

இரவில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிச்செல்லும் டாடா ஏஸ் வேன் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது. சத்தம் கேட்டுத் தெரு நாய்கள் ஓடி வேடிக்கை பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டது.

இந்த சிட்டுக்குருவி முன்பு இந்த பேனில் கூடு கட்டி குஞ்சுகள் பொறித்துச்சென்ற அதே சிட்டுக்குருவியாக இருக்குமோ ஆனால் அப்போது இரண்டு சிட்டுக்குருவிகள் வந்தது.

'நீங்க பாட்டுக்கும் எதுவுமே சொல்லாம கிளம்பிப்போயிட்டீங்க. பேனே போடாம இந்தக் கொசுக்கடியில நான் எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா. வாரத்துல ஒரு நாள் எட்டிப்பார்ப்பேன். என்னடா குஞ்சுகள் கத்திக்கிட்டு இருந்துச்சே. சத்தத்தை ஒன்னுமே காணோமேன்னு நான் கவலைப்பட்டதாவது தெரியுமா.நீங்க போன கொஞ்ச நாட்கள் கழித்து கூடு கீழே தொங்க ஆரம்பித்ததும்தான் மனைவி ‘கூடு கீழே இறங்க ஆரம்பித்துவிட்டால் குருவி இருக்காது’என்று சொன்ன பின்னர் தான் நான் அதை எடுத்துப் பார்த்தேன். ஆமாம்.ஏன் ஒரு குஞ்சு மட்டும் முட்டையிலிருந்து வெளி வந்ததுமே இறந்துபோனது. '

அந்தச் சிட்டுக்குருவி இறக்கைகளை சுற்றி மூடி இருக்கும் இரும்புத் தட்டின் மேல் தவ்வி உட்கார்ந்தது. ஒரு வேளை நான் பேசியது அதற்கு புரிந்திருக்குமோ. இந்த சிட்டுக்குருவி தான் நம்மை இங்கு அழைத்திருக்குமோ.

மகள் தற்போது கூட இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. கபிலன் சார் தான் சொன்னார். 'குருஜி... குருவி குஞ்சுகளை அழைச்சிட்டு போயிருச்சுன்னு கூட்டைப் பிரிச்சுறாதீங்க. அது மறுபடியும் முட்டைப் போட வரும்.'

'பாவி மனுசா... நான் கொசுக்கடியில அவதிப்பட்றதைப்பத்தி கொஞ்சம் கூட கவலைப்படவே இல்லையே.'

அந்த சிட்டுக்குருவி பறந்து எனக்கு முன்பிருந்த சன்னல் கம்பில் உட்கார்ந்தது.

'உனக்குத்தெரியுமா. நீங்கள் சென்று விட்ட கொஞ்ச நாளில் சொல்வனம் இதழில் உங்களைப் பற்றி எழுதிய கவிதையை தேர்ந்தெடுத்து வெளியிட்டு இருந்தார்கள்.'

அதனிடம் படிக்கலாமென கைபேசியைத் தேடினால் அப்போது தான் புரிந்தது. இங்கு வருகின்ற சிந்தனையில் அதை எடுக்காமல் வந்திருக்கிறேன்.

அந்த நேரம் பார்த்து படிக்கட்டு இரும்பு கதவின் வழியாக பக்கத்து வீட்டுப் பௌசியா பூனை உள்ளே நுழைந்தது. அது வருவதைப் பார்த்து சிட்டுக்குருவி பறந்துவிட்டது.

சிட்டுக்குருவியிடம் சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருந்தது. எரிச்சலோடு நாற்காலியை திருப்பிப் போட்டு உட்கார்ந்தால் பூனை உட்கார்ந்த நிலை என்னை அதைத் தூக்க வேண்டும் போலிருந்தது.உருவான எரிச்சல் பூனையைப் பார்த்ததும் காணாமல் போய்விட்டது.

'கீழே எத்திக்கிட்டு விழுந்ததில் சுளுக்கு என்றுதான் நினைத்தேன். கட்டுப் போட்டு எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்தேன். பிறகு வலி வந்ததால் எக்ஸ்ரே,ஸ்கேன், எம்ஆர்ஐ எல்லாம் எடுத்துப் பார்த்தால் மைனராக ஒரு சின்ன இஸூ என்று பத்து நாள் சலைனில் மருந்து கழந்து நரம்பில் காலை மாலை ஊசி போட்டார்கள். அந்த பத்து நாட்கள் கையில் வென்பார்மோட அலைந்தேன்.நீ கூடப் பார்த்து இருக்கலாம். அப்போது சரியாகி பிறகு ஒருநாள் பாதத்தின் கட்டை விரலுக்கும் நடுவிரலுக்கும் நேர் மேலே சின்னதா கட்டியாக வந்ததால இப்போது சர்ஜ்சரி பண்ணியிருக்கேன். உனக்கு ஒரு விசயம் தெரியுமா. எனக்கு வலிச்சது ஒரு இடம். எம் ஆர்ஐயும் அங்கதான் மைனர் இஸூன்னாங்க. ஆனா கட்டி வந்து ஆபரேசன் பண்ணி இருக்கிறது ஒரு இடம். அது ஏன்னு உனக்குத்தெரியுமா. நான் விழுந்தப்போ என் தோள் வழியாக எந்த சிராய்பும் இல்லாம உள்ள மண் துகள் போயி இருக்கு. டாக்டர் எல்லாமே ஆச்சரியப்பட்றாங்க. நான் கால் சரியானதும் வா. உன்னைப் பத்தி எழுதின கவிதைளும் இதழ்கள்ல வந்திருக்கு. கவிதைகளையும்,அந்த இரண்டு மண் துகள்களையும் நான் உனக்கு காண்பிக்கிறேன்.'

பட்டென்று அந்தப் பூனை இரும்புக்கதவில் நுழைந்து படிக்கட்டு வழியாக வெளியே சென்றுவிட்டது.

என் மகள் இருந்தால் 'என்னடா நடக்குது இங்கே' என்று கிண்டலடித்து ரகளை செய்திருப்பார்.

இவைகள் அழைத்து தான் நான் இங்கு வந்தேனா இல்லை எதார்த்தமாக நடந்ததா என்பதைக்கடந்து என் உள்ளம் நிறைவாக மனம் அமைதியில் சந்தோசமாக இருந்தது.

இந்த மகிழ்ச்சியை நீட்டிக்க முடியாமல் என் முன் அடுத்து ஒரு சவால் இருக்குமென்று நான் கொஞ்சமும் நினைக்கவே இல்லை.

ரிசப்ஷனிலிருந்து ஹாலுக்கு வர இரண்டு படிகளை ஆள் துணை இல்லாமல் என்னால் மேலே ஏறவே முடியாது என்பது இப்போது தான் புரிந்தது. இப்படியாகுமென்று நான் நினைக்கவே இல்லை.

இப்படி நான் ஏதாவது செய்வேன் என்றுதான் மருத்துவமனையில் இருக்கும்போது எனது தம்பி டாக்டருக்கு போன் செய்து 'அண்ணனை உடனே டிஸ்சார்ஜ் செஞ்சுராதீங்க சார். அவர் ஆபீஸூக்கு கிளம்பிப் போயிருவார்' என்று அவன் சொன்னதால் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

டாக்டரின் தந்தையும் டாக்டர். அவர் மாமாவின் கட்சித் தோழர் அவரிடம் மாமா கேட்டதற்கு 'ஆனந்த் தம்பி கோவிச்சுக்கும்' என்று சிரித்து அனுப்பிவிட்டார். டாக்டர் விசிட் வரும்போது கேட்டதற்கு 'ஆனந்த் அண்ணனைப் போன் பண்ணச்சொல்லுங்க' என்று சொல்லிவிட்டார்.

பிறகு நான் அவனுக்கு போன் செய்தேன். அவன் எடுக்கவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து பேசினான். 'திருச்செந்தூர் வந்தேண்ணே.சொல்லுங்க'என்றான்.

"முருகனை ஏன்டா தொந்தரவு பண்ட்றே. அவரு பாவம்.பேசாம அடிதடியை விட்டு விட்டு. ஆசிரமம் ஆரம்பிசிருவே."

"அதுவும் திட்டம் இருக்குண்ணே."

"ஏய்... டாக்டருக்குப் போன் பண்ணுப்பா. இங்க யாரும் உனக்குப் பயந்துகிட்டு விட மாட்டேங்கிறாங்க."

"டிஸ்சார்ஜ்க்கு என் கையெழுத்து வேணும்ன்னு உங்களுக்குத் தெரியாதாண்ணே."என்று அவன் பயங்கரமாக சிரித்துவிட்டு போனை வைத்த பிறகு அவன் டாக்டருக்குப் போன் செய்திருக்கவேண்டும். அதன் பிறகுதான் என்னை அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். வழக்கமாக அனுப்புவதைவிட மூன்று நாட்கள் கழித்துதான் அனுப்பினார்கள்.

மனைவிக்கு காலிங் பெல்லை அழுத்தலாம், எழுந்து என்னைக் காணாமல் அவசரமாக ஓடி வருவார். அதன் பிறகு அழுவார். எனக்கான தேவைகளுக்கு அவரிடம் நான் கேட்காமல் இருந்தாலே அழுவார். சர்ஜ்சரியிலிருந்து அவர் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்கிறார். அவர் என் மீது கொண்ட அன்பு அலாதியானது. இந்த செயல் அவருக்குள் வருத்தத்தை ஏற்படுத்தும் என யோசித்தேன். எல்லா சூழ்நிலைகளிலும் தனித்து இயங்க ஏதாவது ஒன்றை எல்லோரும் இருக்கும்போதே செய்து பார்க்கின்ற ஆள். அந்தப் பழக்கம் இருப்பதால் இப்போது வெளியில் வந்து முழித்துக்கொண்டு இருக்கின்றேன். ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்பதில் அசாத்திய நம்பிக்கையுடைய ஆள் நான். ஏதாவது கிடைக்கும் யோசிப்போம்.

பக்கத்து வீட்டு ஏசியன் மளிகை சாதிக் அலி பாயை கூப்பிடலாமா என்று தோன்றியது. அவர் வீட்டு ஹால் சன்னல் இப்பொழுது திறப்பதே இல்லை. இதற்கு முன் எங்கள் வீட்டிற்கு கீழே இருந்தவர்கள் இங்குள்ள ஹால் சன்னலை எப்பொழுதும் திறந்து வைத்து அதற்கு ஸ்கீரினும் போடாததால், பாய் அவர்கள் அவர் வீட்டுச் சன்னலைத் திறக்க முடியாமல் மன உளச்சலில் ஹாலுக்கு ஏசியைப் போட்டார்.

கீழே இருந்த ஜந்துக்கள் சொன்னாலும் புரியாத அஃறிணையாக இருந்தார்கள்.

ஏசியன் காலையில் சுபுஹூ தொழுவ பள்ளிக்கு கிளம்புவார். அப்போது கூப்பிட்டால் அவர் என்னைத் தூக்கிக்கொண்டு வந்து பெட்டில் போட்டு விடுவார். என் மீது அவர் தனித்த அன்பு வைத்திருந்தார். அவர் மனைவி என் மனைவியுடன் நெருங்கிப் பழகினார். 'அப்ஸ் அம்மா' என்று எங்கள் வீட்டிலிருந்து என் மனைவியின் குரலும், அங்கிருந்து 'ரின்ஜாய் அம்மா' என்று அவர் மனைவியின் குரலும், குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஒரு முறையாவது கேட்டு விடும். ரம்ஜான் முப்பது நாளும் கஞ்சியும் அவர்கள் நோம்பு திறக்க செய்யும் பலகாரங்களும், பழங்களும் தவறாமல் வீட்டிற்கு வந்துவிடும். என் மனைவி சுடும் சுழியன் அவர்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.

மணி இப்போது என்னவென்று தெரியவில்லை. நான் ரூமிற்கு வந்ததும் இங்கிருந்த கிளாக்கை ரூமிற்குள் கொண்டு வந்ததோடு அலுவலகம் வெளியிட்ட காலண்டரையும் எனக்கு எதிராக தொங்க வைத்துவிட்டார்கள். இதை இரண்டையும் நான் அடிக்கடி பார்க்கும் பழக்கமுடையவன் என்பதால் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்.

சுபுஹூ வரை காத்திருக்கலாம் என்றால் ஜமாத் தலைவராக இருக்கும்வரை விடாமல் பள்ளிக்கு காலை தொழுகைக்கு சென்றவர் இப்பொழுதெல்லாம் அதுபோல செல்வதில்லை. அவருக்கு வயிற்றில் ஏதோ பிரச்சினை என்று சொன்னார். கடையை அவர் மூடிவிட்டு வர எப்போதும் இரவு 10:50 மணி போல ஆகிவிடும்.அவர் காலையில் பள்ளி வாசல் போகாததற்கு ஏதாவது காரணம் இருக்கலாம். அது பற்றிய சிந்தனை நமக்கு எதுக்கென விட்டு விட்டேன்.

காலையில் அவர் ஒளூச் செய்யும்போது பாத்ருமில் தண்ணீர் சத்தம் கேட்கும் சில முறை வாய் கொப்பளித்து இருமும் சத்தமும் தெளிவாக கேட்கும். இங்கிருந்து நான் கூப்பிட்டாலும் அதேபோல் அவருக்கும் கேட்கத்தானே செய்யும். காத்திருக்கலாமா என்று தோன்றியது. மணி தெரியாமல் காத்திருப்பது முட்டாள்தனமாகப்பட்டது.

அப்பொழுதான் அழகான யோசனை ஒன்று வந்தது. ஏறும் படிக்குப் பக்கத்தில் ஸ்டிக்கை ஊன்றி அப்படியே படியின் மீது உட்கார்ந்தேன். கைகள் இரண்டையும் ஊன்றி ஆபரேஷன் காலை ரிசப்ஷன் பக்கம் நீட்டி ஹால் பக்கம் முதுகை வைத்து பிருஷ்டத்தை இரண்டு கை பேலன்ஷில் தூக்கி இடது காலை ஊன்றி இரண்டாவது படிக்கு வந்துவிட்டேன். அப்படியே காலை லேசாக மடக்கி ஹால் பக்கம் திரும்பி நிலைக் கட்டையில் பிருஷ்டத்தை வைத்து மறுபடியும் இடது கால் மற்றும் இரண்டு கைகளால் ஊன்றி ஹாலுக்குள் வந்துவிட்டேன். சிறப்பான யோசனை வெற்றிகரமாக உள்ளே வந்துவிட்டேன்.

உட்கார்ந்த படியே கதவை சாத்திவிட்டு அப்படியே கைகளின் பேலன்ஸில் வலது காலை நீட்டியபடி இடது காலை ஊன்றி பிருஷ்டத்தை தேய்த்து தேய்த்து வரும்போது வலது கால் முட்டி வலித்தது.ரூம் கதவை லேசாக தள்ளிக் கட்டிலிடம் நெருங்கியதும் இப்போது மேலே ஏற அலுமினிய ஸ்டிக் வேண்டும். ஹாஹ்… அதை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

மனைவி நன்றாக குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.

மயக்க மருந்து எடுத்ததாலும் மாத்திரைகள் அதிகம் எடுத்ததாலும் சாப்பிட்டு முடித்ததும் அதுவும் எனக்கு வேலையாக மிகவும் களைப்பாக வரும். இப்போது எனக்குத் தாகம் எப்படி இருக்குமென்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. தண்ணீர் குடிப்பதைவிட லைட்டை அணைத்து அந்த ஸ்டிக்கை எடுத்து வரவேண்டும் என்றத் தவிப்பில் வந்தது போலவே அங்கு சென்றுவிட்டேன்.

ஹால் பக்கம் காலை நீட்டி ரிசப்ஷன் சைடு முதுகை வைத்து நிலைக்கட்டையிலிருந்து மேல் படிக்கு சென்று ரிசப்ஷன் சைடு திரும்பி அந்த அலுமினிய ஸ்டிக்கை எக்கி எடுக்கும்போது பேலன்ஸ் தடுமாற நல்ல வேளையாக நன்றாக இடது காலால் நன்கு உதைத்து ஸ்டிக்கை கையால் எக்கி எடுத்துவிட்டேன்.

இரண்டு முறை மூச்சை வெளியே இழுத்துவிட்டு விட்டு

அப்படியே உட்கார்ந்தபடியே வாக்கிங்க் ஸ்டிக்கை மேலேத் தூக்கி, ஸ்டிக்கின் அடியில் இருந்த நான்கு காலின் ஒன்றில், பேனையும்,லைட்டையும் ஆஃப் செய்துவிட்டு ஸ்டிக்கை படுக்கை வசமாக வைத்து ஹாலுக்குள் தள்ளிவிட்டு நானும் கதவை சாத்தி நகர்ந்து வந்தேன். ஸ்டிக்கைத் தள்ளியதில் சத்தம் வந்ததால் இடது தோளில் வைத்து கழுத்தால் அழுத்திப்பிடித்து ஒரு வழியாக பெட்டில் ஏறி உட்கார்ந்து ஸ்டிக்கில் இருந்த கர்ச்சீப்பை அவிழ்த்து பாட்டிலுக்கு கீழே வைத்து விட்டு பிறகு பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடிக்க மூடியை திறந்தபோது மனைவி முழித்துக் கேட்டார்.

"என்னங்க...வேணும். "

 திடீரென்று கேட்ட அவரின் குரலில் நடுங்கி கொஞ்சம் நான் சுதாரித்து.

"ஒண்ணு வேணாம். தூங்கு "

கப்பை எடுத்து சிறு நீர் கழித்து. வெட் டிசியூப் பேப்பரை உருவி சிறுநீரை ஒத்தித் துடைத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு இன்னும் இரண்டு மூன்று டிஷ்ஷை உருவி முகம் கைகளைத் துடைத்து முடித்துப் படுக்கையில் வலது புறம் ஒருக்களித்துப் படுத்தபோது பழையபடி உற்சாகம் தொற்றிக்கொண்டது.

காலையில் மனைவியிடம் சொன்னால் உடனே மகனுக்கு போன் போட்டு விடுவார். ‘அவரைத்தான் உங்களுக்கு தெரியுமேம்மா நீங்கள் ஏன்ம்மா. தூங்குனீங்கம்பான்.’ அநேகமாக அவர் அழுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அப்படியே மகளிடம் அவன்,

‘என்ன…நிவேதனா…உங்கப்பா நினைச்சுக்கிட்டு இருக்கார்.நாங்களெல்லாம் சொல்றதைக் கேட்கவே கூடாதுன்னு நினைக்கிராறா. இதெல்லாம் நீ என்னான்னு கேட்க மாட்டியா.எப்பப் பார்த்தாலும் அவர்கிட்ட இதை எல்லாம் சொல்லாம. வேற என்ன பேசுற.’

மகன் எனக்குப் பேசுவான்.

‘அப்பா.. கால் நல்லா இருக்கா. வலி எதுவும் இருக்கா. ஏதாவது சாப்பிட்டீங்களா. காலை அசைச்சா வலிக்குதா. பணம் அனுப்பட்டுமா.’

மகளிடமிருந்து போன் வரும்.

‘போன் என்கேஜ்ட்டா இருந்துச்சு. அவன் பேசினானா. ரொம்பப் பவ்யமா பேசி இருப்பானே. இங்க என்கிட்ட கழுவிக் கழுவி ஊத்துறான். சரி அதவிடுங்க தந்தையாரே... நைட்டு தரமான சம்பவம் போல. குடும்பமே இரண கலமா இருக்கு.’

கபிலன் சாரிடம் ‘இப்பவாச்சும் நம்புங்க சார். நான் சின்னப்பையன்னு’ என்றால் ‘குருஜி...இது கிழவன்க தரையில் தவழ்றதும்பார்.’

நினைக்கும்போதே மனம் உற்சாகமாக இருந்தது.

ஏதாவது எழுதலாமெனத் தோன்றவே போனை எடுத்து அப்படியே எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டேன்.

- ரவி அல்லது