
சாலையெங்கும் சிந்திய புளியம்பூக்கள்
நசுங்காமல் சிரிக்கும்
எவனோ மென்று துப்பிய
கரும்புக் கோதில்
மொய்த்த எறும்புகளும்
உயிரில் திளைக்கும்
டவுனுக்குப் போகக் கிடக்கும்
பால் கேன் ஓரம் உறங்கிவிழும்
பால்காரனின் கனவும்
வண்ண வண்ணமாய் விரியும்
வழியனுப்ப வந்திருக்கும் அம்மாவிடம்
புதுப்பெண் பேச்சும்
இன்னும் நீளும்
நடுரோட்டில்
ஒன்றையொன்று கவ்வி விளையாடும்
நாய்க்குட்டிகளின்
சந்தோசக் குதிப்பும்
ஓய்வின்றித் தொடரும்
பேருந்திலிருந்து
கணவன் தள்ளாடி இறங்கும்வரை
குழந்தையோடு கொஞ்சும்
செல்லத்தாயின் குரலும்
குடிசை தாண்டிக் கேட்கும்
அந்த ஏழரைக்குப் பிறகு
அடிக்கும் வாடைக்குப்
பிணவாடை என்று பெயர்.
- பச்சியப்பன்