
விடாமல் துரத்துகிறது
உன் நினைவுகள்
வெட்கமாய் இருக்கிறது
ஒரே வீட்டில்
அந்நியர்களாய் வாழ்ந்தது
உன்னிடம்
சிரிக்கக்கூட
தயங்கிய கொடுமை
எந்த மகனுக்கும்
வரவேண்டாம்
மூட்டு வலிக்குத்
தைலம் தர
தயங்கிய கையிது..
பிஞ்சிலேயே
முறித்திருக்கக் கூடாதா?
புடவை அடியில்
மறைந்து வரும்
வெற்றிலைக்கட்டுகள்
உன்னைச் சேராமலேயே
பழுப்பேறிக்
குப்பையானது
நீ அறியாதது
உறக்கத்திற்கான இரவுகள்
அழுவதற்கென்றானது
உனதகராதியில்
மட்டும்தான்
ஊமைக்காயங்கள்
உண்டென்றாலும்
உயிரோடு எரித்தது
முதியோர் இல்ல
விடைபெறலில்
முதுகில் உணர்ந்த
உன் பார்வைதான்.
- மாறன்