
பாலைவெளிப் பொழுதுகளில்
சிறகுகளை
எரித்துக் கொண்டிருப்பவன் நான்
உன் மின்மினிக் கண்கள் வைத்த
நெருப்பினில் மிச்சமின்றித்
தீய்ந்து புகைகிறதொரு பெருங்காடு
தனிமைக் கிணற்றினில் செத்து மிதக்குமொரு
தவளையின் பிரேதமென் கனவு
‘ஓ’வென விழுமிள மரக்கிளை பற்றியே
தவிக்கிறது சிறு உயிர்க்கூடு
சுழித்துக் கிளம்பிய புயலின் இதழ் கொண்டு
முத்தமிட்டு துவைத்தவள் நீ
உடைந்து சிதறிய வளையோடு
சேர்த்தொரு
மனசைச் சிதைத்தவன் நான்
காலம் கொத்தியது
யாரின் கண்களை
உன் பனிக்கரம் தொடாத தூரத்தில் எனை
வாரி எறிந்தது எவரின் கரங்கள்
நள்ளிராப் பொழுதொன்றில்
பிர்கையில் தழுவிய
கதகதப்பில் உயிர்க்கிறது மூச்சு
நாமிட்ட மாலைகள்
பிரிவுக்காக அல்லவே
இரவு கழிந்தும் எரிகிறது விளக்கு
நீ சொன்ன காலம் கழிந்தது போலவே
- பச்சியப்பன்