1. தலைகீழ் உலகம்
மீன்கள் நீல வானில் மிதக்கின்றன —
வெள்ளிப் புள்ளிகளாய் ஒளிர்ந்து!
பறவைகள் நீரில் நீந்துகின்றன —
விரிந்த சிறகுகள் மீன் துடுப்புகளாய்!
நான் இந்த மாய உலகைப் பார்க்கிறேன்,
நீங்கள் இந்த வரிகளில் மூழ்குகிறீர்கள்.
2. கடவுளின் நிழல்
நீயும் கடவுளாகலாம் —
அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
ஒரே நிபந்தனை:
அமைதியாய் இரு.
முழு அமைதியாய்.
3. மறுபிறப்பு
இனி என் முகத்தில்
அவமானத்தின் முத்திரை இல்லை.
ஒவ்வொரு “இல்லை”யும்
என்னுள் புதிய விதையாக முளைக்கிறது.
முறைகேடாக நிராகரிப்பவர்களுக்கே நாணம் இல்லையென்றால்,
நான் ஏன் தலைநிமிரக் கூடாது?
மீண்டும். மீண்டும். மீண்டும்.
4. மர்மங்களின் மரணம்
மர்ம மனிதன் → ரகசியம் → கேலிப் பொருள்!
மர்ம நோய் → வைரஸ் → வாக்குறுதி!
சில மர்மங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன,
சிலவற்றை ஊடகங்கள் விழுங்கி ஏப்பம் விடுகின்றன.
இறுதியில் —
“மர்மம் எதுவும் இல்லை” என்று
சிகப்பு நாடா சுற்றி,
கோப்பில் “முடிந்தது” என்ற முத்திரை.
அடுத்த மர்மத்துக்கு அழைப்பு!
5. பணியாணை மந்திரம்
முதல் முறையாக
அடையாள அட்டையை மார்பில்
மாட்டிய
மகன்,
நகரின் முதல்தர கம்பெனியில்
நிற்க...
ஊரில் தந்தை:
“கீழ்த்தெரு மேல்தெருவுக்கும்
இன்று நான் சமம்!” என முழங்க,
ஒரே மந்திரம்,
ஒரே பெருமிதம்:
“என் மகன்... MNC!”
6. விடுதலை
“ஏன் யாருக்கும்
என்னை நிரூபிக்க வேண்டும்?”
இந்தக் கேள்வியின் கூர்மையில்
என் சங்கிலிகள்
தானாகவே வெடித்துச் சிதறின.
7. வேண்டுகோள்
பறக்கும் மலரெனத் திரிந்த
பட்டாம் பூச்சி திடுக்கிட்டது —
நடமாடும் சோலையைக் கண்டு!
சோலையம்மா,
உன் பச்சைத் தோட்டத்தில்
ஒரு வண்டாகவோ,
ஒரு மெல்லிய நிழலாகவோ
என்னை ஏற்றுக்கொள்.
8. புடவையின் செய்தி
எல்லாப் பத்திரிகைத் தலைப்புகளையும்
நான் மறந்துவிட்டேன்.
உன் புடவையின் மடிப்புகளில்
நான் ஒரு சிறு, அமைதியான செய்தியாக துணுக்காக
இடம் பெற்றால்... போதும்.
9. கவிதையின் தத்துவம்
எனக்காகவே நீ எழுதப்பட்டாய் —
இது மட்டும் மாறாத உண்மை.
பிடித்தால் — இது என் கவிதை.
பிடிக்காவிட்டால்...
அடுத்த வரியில் இன்னொரு கவிதை பிறக்கும்.
10. பொருள்களின் பெருமை
உன் தலைக்கு மேல் குடை செருக்குடன் நிழல் தருகிறது,
உன் காலடியில் செருப்பு திமிருடன் துணை நிற்கிறது,
உன் உடலைத் தழுவும் புடவை மெல்லிய காதலை முணுமுணுக்கிறது.
இவற்றையெல்லாம் கேட்டு
இந்தக் கவிதை மட்டும்
என்னுடன் இணைந்து சிரிக்கிறது —
அமைதியாக, ஆழமாக.
11. காதல் எழுத்து
உனக்கு நான் பிடிக்கும் என்று
எழுத ஆரம்பிக்கிறேன்.
ஒருவேளை நான் பிடிக்காவிட்டாலும்,
என் வார்த்தைகள்
உன் இதயத்தைத் தொடத் தொடங்கிவிடும் —
மெல்ல... மெல்ல...
12. அழகின் கோபம்
நடக்கும் போது
உன் முதுகில் மட்டும் சாமரம் வீசுகிறாய் —
உன் முன்னழகு பொறாமையில் வியர்க்கிறது!
இடையில் உன் கூந்தலை
முன்னால் விட்டுக்கொள்...
சமநிலை தானாக வரும்.
13. புதிய பிறந்தநாள்
உன்னை முதன் முறை பார்த்த நாளை
என் பிறந்தநாளாக்கி,
அரசு கெஜட்டில் பதிவு செய்துவிட்டேன்.
உன்னைச் சந்திப்பதற்கு முன்
நான் வாழ்ந்த அத்தனை நாட்களும்
தாயின் கருப்பை தாண்டிய
நீண்ட... காத்திருப்பு மட்டுமே.
14. நவீன பாதுகாப்பு
மகன்களுக்கு தனி வீடு,
மகள்களுக்கு லட்சக்கணக்கில் Fixed Deposit,
பீரோ நிறைய பணம் —
எல்லாவற்றையும் பூட்டி வைத்துவிட்டு,
நீச்சல் குளத்தில் மிதக்கிறார்கள்:
“வாழ்க்கை... நீர்க்குமிழி!”
15. ராமாயணம் மீண்டும்
“அக்காலத்தில் வாஷிங் மெஷின் இருந்தால்...”
“சலவைக்காரன் இல்லையென்றால்...”
“சீதையின் சேலையை யார் கழுவியிருப்பார்கள்?”
அவர்கள் இன்று ராமாயணத்தை
சலவைப் பெட்டியில் இருந்து தேடுகிறார்கள் —
ட்ரை கிளீன் மணம் பரப்பியபடி.
16. உணர்ச்சிகளின் விளையாட்டு
சோக நாட்களில் சந்தோஷம்
திடீரென சூழ்ந்துகொள்கிறது.
சந்தோஷ நாட்களில் சோகம்
மூலையில் பொறுமையாய் காத்திருக்கிறது.
அதனால்தான் நான்
எப்போதும் ஒரு நடுநிலை முகத்துடன்
நடக்கிறேன்.
17. தனிமையின் தத்துவம்
யாரும் இல்லை என்று உணரும்போதுதான்
யாரோ ஒருவர் மிகத் தேவைப்படுகிறார்.
மனிதனின் மிகப் பெரிய,
அழகான முரண்பாடு இதுவே.
18. மறைந்த காதல்
நான் உன்னைக் காதலித்தேன் —
இதை நீ ஒருபோதும் அறியமாட்டாய்.
இந்த இரகசியமே
என் காதலுக்கு
மிக உயர்ந்த சான்றிதழ்.
19. முன்னுரிமை
உன் “இல்லை”யைத் தாங்கும் வலிமையை
என் மனதுக்கு பயிற்சி கொடுத்த பின்னரே
உன்னிடம் வந்தேன்.
உன் காதல் உன் உரிமைதான்,
ஆனால்... எனக்கு முன்னுரிமை!
20. வெல்லும் வார்த்தை
“பெப்பர் ஸ்ப்ரே... செல்ஃபி டிபென்ஸ்...”
பாலியல் தொல்லைப் பாதுகாப்பு வகுப்பில்
பயிற்சியாளர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க,
ஒரு தொழிலாளி எழுந்து:
“போடாங்க...த்தா!
சொல்லத் தெரிஞ்சா போதும்!” என்றாள்.
வகுப்பு முடிந்தது.
21. பொம்மையின் ஞானம்
பொம்மையுடன் பேசினாள்,
நான் பொம்மையாகவே கேட்டேன்.
“ஞானியாக வேண்டாம் —
பொம்மையாய் இருப்பதே போதும்” என்றேன்.
உடனே
ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்
வரம் வேண்டும்... என்றாள்.
- அ.சீனிவாசன்