நீரில்லா நெடுங்குளம்
ஏமாற்றவே இல்லை
நெடு நேரம் காத்திருக்கும்
மீன்கொத்திக்கு
தன் வெடிப்புகளில் இருந்து
சிறு பூச்சியை விருந்தளித்து
வெறும் வயிற்றோடு
மனம் நிரம்பித் தளும்புகிறது
இதைக் கண்ட இயல்வாகை மரம்
பூத்துக் குலுங்கி
குளம் முழுதும் மஞ்சள் பூக்களைத் தூவிட
நீந்திக் குளிக்கிறது வெயில்.

- சதீஷ் குமரன்

Pin It