நான்
மனிதனாகவே
இருக்க விரும்புகிறேன்
மனிதனாக இருப்பதற்கு
அதுவாகவும்
இதுவாகவும்
இருக்க வேண்டிய அவசியமில்லை
மூடிக்கொண்டிருத்தலே
போதுமானது
ஒரு பறவையின்
இறகில்
பயணம்
மிகையன்பற்ற
பெருந்துணை
அகம்புதைத்து
ஆற்றுப்படுத்தும்
அன்பர் சபை
நினைக்கும் தருவாயிலெல்லாம்
நனைக்கும்
நிகழ்தல்
கண்டபடி பச்சைபச்சையாய்
பேசித் தீர்த்திட
பெருமலையொன்றின்
உச்சி
களிப்புடனே
கழிக்கும்
காலப்பிரணவம்
நான் சொல்லும் வரை
விடியாத
இரவு
சொல்லும் போதெல்லாம்
பூக்கும்
பூக்கள்
அருகே அமர்ந்து
கால்சுற்றும்
நாய்க்குட்டி
இதமான போதையில்
தேநீரும்
தேங்காய் ரொட்டியும்
கையில் ஒரு
தூவல்
கசங்கிய நினைவுகளுடன்
சில காகிதங்கள்
நான்
எழுதும் கவிதை
அதில்
எனக்கானதொரு
உலகம்
யாவையுமாய்
அல்லவுமாய்...!
- கருவை ந.ஸ்டாலின்