காணாது போன கடைசி மாமனை
தோழர் என்றால்தான் தெரியும்
ஊருக்குள் பலருக்கு
தேடிவந்த கட்சிப் பொறுப்பை மறுத்து
தொண்டர்களைத் தயாரித்தலே
தோழர்களுக்குப் பொறுப்பு என்றிருந்தவர்
மக்காப்போன் இல்லாத நேரங்களில்
மைக்காய்ச் சுருட்டிய துண்டறிக்கையால்
தெருமுனைப் பிரச்சாரம் செய்தவர்
மரித்துப் போனால் தன்னுடலை
செங்கொடி தரித்தே அஞ்சலி செலுத்த
அன்றே எழுதி வைத்தவர்
கலகம் செய்யப் பிறந்தவராய்
கழகத்தின் அழைப்புகளை மறுத்து
களம் பல கண்டவர்
புரட்சி செய்யாமல்
விடியாது கிழக்கு
புரட்சியாளனுக்கு
விடியலே இலக்கு
என்றவாறு காணாது போனார்
ஒருநாள்
தேடிச் சலித்தபின்
மேற்கு வங்கம் சென்றதாய்ச் சிலரும்
செஞ் சீனம் சென்றதாய்ச் சிலரும்
ஆதாரமற்றுக் கூறினர்
சேருமிடம் அறிவிக்காது
காணாமல் போயிருந்தாலும்
கொள்கைக் குன்றாய் விளங்கியவரை
பறைசாற்றியபடி பட்டொளி வீசிப் பறக்கிறது
அனைவரின் பார்வையிலும்
பிழைக்கத் தெரியாதவன்
என்றவரின் வீட்டில்..
அவர் தாங்கிய செங்கொடி
- மகிவனி