மணமாலை வாடாத
புதுமாப்பிள்ளை ஒருவன்
பிணமாகிக் கிடக்கின்றான்.!

கர்ப்பிணி மனைவிக்கு
மருந்து வாங்க வந்த
கணவன் ஒருவன்
கலவரத்தில் சிக்கி..
காவல்துறை சுட்டதில்
வீழ்ந்து கிடக்கின்றான்..!

சாதிகளின் கெளரவம்
வன்முறைகளின்
வழியாகவே
வழிமொழியப் படுகிறது..!

கொன்று தீர்க்கப்பட்ட
குருதியின் சுவை
அதிகாரத்தின் விருந்திற்கு
அவசியப்படுகிறது..!

நாற்காலிகளை நம்பும்
கருங்காலிகளின் அரசியல்
எப்போதும் நம்மை
வாக்காளர் பட்டியலிலும்
சாதிச்சங்கத்திலும்
விடுபட்டு விடாமல்
பார்த்துக் கொள்கிறது..!

ஆடுகளையும்
கோழிகளையும்
படையல் இட்ட..
குலசாமி கோயில்களின்
முன்னோர் வழிபாடு
முறைமாறி இப்போது
ஆட்களை பலியிட்டு
ஆவேசமடைகிறது..!

சமாதிக்குப்
போகிற வழியில்
சந்ததிகள் பலரும்
சமாதிகள் ஆகின்றனர்
குருபூஜை இப்போது
குருதிகளின் பூஜையானது..!

ஒரு சாதி -
இன்னொரு சாதிக்கு
எதிராக நிற்கும் போது
மனித சாதி அங்கே
மரிக்காமல்
என்ன செய்யும்?

சேதப்படுத்துவதால்
சேரிகளை எரிப்பதால்
உண்டாகும்
ஜோதிகளில் மட்டுமே
சாமிக்கு தீபராதனைகள்..!

இல்லாத சாமிக்கும்
பொல்லாத சாதிக்கும்                     
எப்போதும் தேவைப்படுகிறது
கட்டுப்படுத்த முடியாத
வெறியூட்டும் கலவரங்கள்..!

கருணையற்ற கடவுள்களால்
கைவிடப்பட்ட குழந்தைகள்
தேம்பியழும் தேசத்தில்
தெய்வங்கள் ஏதுமில்லை..!

வழியும்
நம் வியர்வையின்
வரலாற்றை
எவரோ எழுதும் வரை
இந்த இழிவுகள் தொடரும்..!

நம்மை எரிப்பதற்கு
வழிகாட்டும் அக்ரஹாரம்
எப்போதும் எரிவதில்லை..!
எந்நாளும் ஒளிர்கிறது..!

Pin It