சாணத்தின் மணம் நீளும்
ஒரு விடியா விடியலின் வாசலில்
மா நிறைந்த கைகளுடன் நிற்கிறேன்...
மூடுபனியின் இறுக்கத்தில் நனையும் மௌனத்தை
இலகுவாய் உரசிச் செல்கிறது,
இடைவிடாது ஒலித்த
பால்காரச் சிறுமியின் வளையோசை..
மீள்மூச்சுடன் தட்டிக் கொண்டிருந்த
சிறுமிக்கு எள்ளளவும் செவிசாய்த்ததாய்
தெரியவில்லை,
இருள் மூகமூடியணியாத எதிர்வீட்டு மரக்கதவு..
நிமிடத்தின் தொடர்ச்சியிலும்
திறவாத கதவுகளின்
பெருங்கோப்பை அளவிலான அகாலத்தை
நொசிவிழைக் கயிற்றின் நெடி
அரவமற்று கதைத்துக் கொண்டிருக்கிறது..
விடியும் விடியலின் ஓரத்தில்
ஒரிரு புள்ளிகளுக்குள் அடங்கி விடுகிறது
இழுக்க நினைத்த மாக்கோடுகள்..
- தேனப்பன் [