உறுதியான முடிவென
அடித்துச் சொல்கிறாய்
அன்று போல் இன்றும்
உன்னை திருமணம் செய்யாவிட்டால்
தற்கொலை செய்வேனென
அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்தாய்

எத்தனையோ முறை மறுதலித்தும்
உன் முடிவில் மாற்றமில்லையெனக் கூறினாய்
உன் நம்பிக்கையை நடவுசெய்ய துணிந்து
எதிர்ப்புகளைக் கடந்து கரம்பிடித்தேன்

எத்தடைகள் வந்தாலும்
பிரியவே கூடாதென முடிந்த வரை
உன்னோடு சமரசம் செய்து வாழ
பழக்கப்படுத்திக் கொண்டது மனது

நமக்கான பயணத்தில் அழகியலோ பொருளியலோ
முரண்பாடாய் மோதிக் கொள்ளவில்லை
இரத்தவெறி கொண்ட சாதியாதிக்கம்
விடாப்பிடியாய் என்னிலிருந்து
விலகிச் செல்ல மெதுமெதுவாய்
தரவு சொல்லி அழைத்துப் போனது உன்னை

அன்று காதலை வெல்ல சாதியை உடைத்தெறிந்தாய்
இன்று சாதியை வெல்ல காதலையே
உடைத்தெறிகிறாய்

எதற்காக என்னுள் நுழைந்தாய்
எதற்காக என்னிலிருந்து பிரிந்து செல்கிறாயென
தெரியவில்லை எனக்கு

நானும் உறுதியாய் பதிவுசெய்து போகிறேன்
சாதியை உடைக்க உன் கரம்பிடித்த நான்
சாதியை தகர்க்கும் வரை கொடுக்கப் போவதில்லை
உனக்கு
விவாகரத்து எனும் விடை

- வழக்கறிஞர் நீதிமலர்

Comments

1 comment

1
pandiya
மிக அருமையான கவிதை தோழர் . ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஒரு ஆதிக்கசாதி ஆண் எளிதில் திருமணம் செய்யு கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட ஆண் ஒரு சாதி இந்துப் பெண்ணை போராடி திருமணம் செய்தாலும் அப்பெண்ணிற்குள் இருக்கும் சாதிய எண்ணத்தை உடைத்தெறிந்து வாழ்க்கையை வாழ்வதென்பதும் ஜெயிப்பதென்பதும் அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. நாங்களும் சொல்லிக் கொள்கிறோம் சாதியை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கிறோம் என்று.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.