வீட்டில் சில செடிகளை
நட்டு வைத்து விட்டுச் சென்றேன்
பெருமரமாகி
கிளைபரப்பி நிற்கிறது..!

சின்னஞ்சிறு மழலையாய்
கொஞ்சி மகிழ்ந்த என் மகள்
பருவப் பெண்ணாக..
சிவந்து நிற்கிறாள்..!

அடர்ந்த மெளனத்தால் கனத்திருந்த
மலைகளின் உச்சியில்
என் துயரத்தின் பெருமூச்சையும் தாண்டி
சில குறிஞ்சிப் பூக்கள்
பூத்திருந்தன..!

என்னோடு சிறைக்கு வந்த
கொலைக் கைதிகளில் சிலர்
தண்டனைக் காலம் முடிந்து
வீடு திரும்பி விட்டனர்..!

எனக்கான விசாரணைக் காலம்
முடிவதற்குள்
சிலரின் ஆயுள் தண்டனையும்
முடிந்திருந்தது..!

நீதி தேவதையின் குருட்டு விழிகள்
கண் திறந்து பார்ப்பதற்குள்
என் இளமை வனப்பு
எரிந்து சாம்பலாகி இருந்தது..!

பிடிபட்ட முதல் நாள்
சித்ரவதைகளுக்கு ஊடாக
நான் சொன்ன வாக்குமூலத்தையே
இறுதியில்
தீர்ப்பாகத் தந்தார்கள்
”நான் குற்றமற்றவன்” என்று..!

Comments

2 comments

2
ஆத்மார்த்தி
எனக்கான விசாரணைக் காலம்
முடிவதற்குள்
சிலரின் ஆயுள் தண்டனையும்
முடிந்திருந்தது..!

சிறப்பு.
சொல்ல வந்ததை நறுக்குத் தெறித்தாற் போல சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்
[email protected]
வெகு இயல்பாக வார்த்தைகள் கூடுதல் உணர்வுகளுடன் கவிதைகள் படைக்க உஙகளைப்போல் வெகு சிலரால்தான் முடியும். நான் சமீபத்தில் ரசித்துப் படித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. நன்றி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.