கீற்றில் தேட...

மழைக்குறிப்பு

துளி விழத் தொடங்கியதும்
அவரவர்க்கான பணிகளை
வேகமாக செய்ய....

தேநீர் கடைகளில் கோப்பைகளை
தயார் செய்தும்....

இருசக்கர வாகன ஓட்டிகள்
பேருந்து நிறுத்தத்தின் நிழல்
குடைகளையொட்டி நிறுத்தியும்...

கடைக்கு சென்ற அம்மா
தலை நனைந்தவாறே
பொருள் நனையாமல்
வீடு கொண்டு சேர்த்தியும்...

தான் போட்ட கோலம்
அவன் காணாமல்
நனைந்து விடுமோ என்று அவள்
ஏங்கும் நிமிடங்களோடு தொடங்கும்...

மழை நேரத்தில்....
எப்படி நனையாமல்....
நடைபாதை வாழ் படுத்துறங்கும்
மனிதர்களும்.........
என்ன செய்து கொண்டிருக்கும்
என் வீட்டுப் பின்புற மரத்தில்
புதிதாய்
கூடு கட்டியிருக்கும்
குருவியும்....

காலையும் இன்னொரு காலையும்.....

மிதமான சூட்டில்
உறிஞ்சும் தேநீரோடு
தொடங்கும் அதிகாலையில்....

பல் துலக்கிக்கொண்டே
நாளிதழ் வாசித்து...

அவசர அவசரமாய்க்
குளித்து முடித்து...

தேய்த்து மடித்து வைத்த
உடைகளில் உடல் நுழைத்து...

உப்போ சுவையோ
எதுவும் கேளாமற் ....

சொல்லியும் சொல்லாமலும்
அலுவலகம் கிளம்பும்
வேகமான நிமிடங்களில்....
கிட்டும் பரபரப்புக்கும்
எட்டாத நிம்மதிக்கும்..

ஆறுதலாய் இருக்கிறது.
எனைக் கடந்து போகும்
மகிழுந்தின்
பின்னிருக்கை கண்ணாடியில்
முகம் பதித்து சிரிக்கும்
சிறுகுழந்தையின்
குறும்புன்னகை.....

- இளையபாரதி.இ (ly_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)