தலையில் ஒன்றிரண்டு நரைமுடி..
முகத்தில் ஒரு வித மூப்பு...
மனதில் எப்போதும் ஏதோவோர் ஏக்கம்....
நகரத்துத் தரகர் வீட்டுத்
தகரப் படலைக்கும்
கிராமத்து எங்கள் வீட்டு
திண்ணைப் படிக்குமாய்
நடந்து நடந்தே தேய்ந்து போனது-என்
பெற்றோரின் பாதங்கள்.
என் சமூக அமைப்பில்
கிராமத்து ஏழைத்
தமிழச்சி நான்
நாற்பது கடந்தும்
அங்கங்கு நரைவிழுந்தும்
காப்பேதும் இல்லா
கலைக்கோயிலாய் -இன்னும்
யாரோ ஓர் மீட்பனின் வருகையை
எதிர்பார்த்தபடி.....