இந்தியாவில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக தேச விடுதலைக்கான போராட்டம் நடந்த காலம், ஆனால் அதே நேரத்தில் சமூக சமத்துவத்திற்கான பெரிய போராட்டங்களும் எழுந்தன.

சமூகத்தில் அடக்கப்பட்ட மக்களுக்கு தெருவில் நடக்கும் உரிமை, பொதுக் கிணறுகளை பயன்படுத்தும் உரிமை, கல்வி கற்கும் உரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகளுக்கு எழுந்த போராட்டங்கள் அவை!

இந்த சமூக மாற்றப் போராட்டம் வட இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் பல்வேறு சீர்திருத்தப் பெருமக்கள் வழியாக வளர்ந்தது.

வட இந்தியாவில் சாகு மகாராஜா, மகாத்மா ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்றோர் சமூக சமத்துவத்திற்கான கல்வி உரிமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பாக ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே தொடங்கிய பள்ளிகள், பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும் கல்வி கிடைக்க வழி செய்த முக்கிய நிகழ்வாகும்.

அதேபோல் தென் இந்தியாவில் வள்ளலார், நாராயண குரு, அய்யா வைகுண்டர், அய்யன் காளி போன்ற சமூக சீர்திருத்திகள் சமத்துவத்தின் விதைகளை விதைத்தனர்.

இந்த சிந்தனைத் தொடர் பின்னர் தந்தை பெரியார் மற்றும் நீதிக்கட்சி இயக்கத்தில் வலுவாக வெளிப்பட்டு, தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து சமூக நீதி அரசியலை உருவாக்கியது.

ஒரு காலத்தில் “பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்க வேண்டும்” என்ற மனநிலையால் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தில், இந்த சீர்திருத்த இயக்கங்களின் போராட்டங்களால் கல்வி பொதுமக்களுக்கு திறந்தது.

நீதிக்கட்சியின் ஆட்சி, பின்னர் காமராசர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிகள் வழியாக கல்வி பொதுமக்களிடம் பரவியது. பெரியார் பெருந்தொண்டர் ஐயா ஆனைமுத்து அவர்களின் பெரும் முயற்சியாலும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் முன்னெடுப்பாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடும் உறுதி செய்யப்பட்டது.

இன்று அதே சமூக நீதி பாரம்பரியத்தைத் தொடரும் அரசாக திராவிட மாடல் ஆட்சி தன்னை முன்வைக்கிறது. ஆனால் கல்வி சமத்துவத்தின் இன்னொரு முக்கிய பரிமாணம் பாலின சமத்துவம் ஆகும்.

மாணவர்கள் பள்ளி வாழ்க்கையிலேயே பாலின அடிப்படையிலான வேறுபாடுகளை உணராமல் வளர வேண்டும் என்ற சிந்தனை பல சமூக சீர்திருத்திகளால் முன்வைக்கப்பட்டது.

தந்தை பெரியார் இதை மிகவும் தெளிவாக கூறியுள்ளார். 1935 ஜூன் 9 ஆம் தேதி குடிஅரசு இதழில் அவர், “ஆண் பெண் மாணவர்கள் ஒன்றாகவே படிக்க வேண்டும்”
என்று வலியுறுத்தினார்.

அதேபோல் 1930 நவம்பர் 9 ஆம் தேதி குடிஅரசு இதழில், “பொது உடைகள் இருக்க வேண்டும்” என்ற கருத்தையும் முன்வைத்தார்.

இந்தக் கருத்து இன்று உலகின் பல முன்னேற்ற நாடுகள் பேசும் Unisex Uniform என்ற எண்ணத்திற்கே முன்னோடியான சிந்தனையாகும்.

இன்றைய உலகில் பாலின சமத்துவம் குறித்து பெரிய விவாதங்கள் நடைபெறுகின்றன. மேற்கத்திய நாடுகளில் கூட பள்ளிகளில் பாலின வேறுபாடு இல்லாத பொதுச் சீருடை பற்றிய விவாதம் தற்போது தான் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலேயே கூட, கேரளாவில் 2019 ஆம் ஆண்டு முதல் சில அரசு பள்ளிகளில் பாலின வேறுபாடு இல்லாத பொதுச் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான உடை வடிவம் வழங்கப்பட்டு, பாலின சமத்துவம் குறித்து புதிய கல்வி சூழல் உருவாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பெரியார் வாழ்ந்த தமிழ்நாட்டில், “ஆண் பெண் மாணவர்கள் ஒன்றாக படிக்க வேண்டும்” என்று 1935-லேயே சொல்லப்பட்ட தமிழ்நாட்டில், “பொது உடைகள் வேண்டும்” என்று 1930-லேயே எழுதப்பட்ட தமிழ்நாட்டில், இன்றுவரை பள்ளிகளில் Unisex Uniform முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது சிந்திக்க வேண்டிய விஷயம்.

பள்ளிகளில் பாலின அடிப்படையிலான உடை வேறுபாடு பல சமயங்களில் மாணவர்களிடையே மனப்பாங்கு வேறுபாட்டையும் உருவாக்குகிறது. பள்ளி என்பது அறிவை மட்டுமல்ல, சமத்துவ மதிப்புகளை கற்றுக் கொடுக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். அதற்காக பாலின வேறுபாடு இல்லாத பொதுச் சீருடை ஒரு முக்கியமான கல்வி மாற்றமாக அமைய முடியும்.

திராவிட இயக்கத்தின் அடிப்படை இலக்குகள் சமத்துவம் – சுயமரியாதை – சமூக நீதி என்பவையாகும்.

அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக இன்று திராவிட மாடல் அரசு, பள்ளி கல்வியில் பாலின சமத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் Unisex Uniform (பொது சீருடை) அறிமுகப்படுத்துவது ஒரு முன்னேற்றமான செயலாக மட்டுமல்லாமல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் !

அதனால், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளில் பாலின வேறுபாடு இல்லாத பொதுச் சீருடையை அறிமுகப்படுத்த திராவிட மாடல் அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இது ஒரு உடை மாற்றம் மட்டும் அல்ல. இது பாலின சமத்துவத்தை பள்ளி வாழ்க்கையிலேயே கற்றுக்கொடுக்கும் சமூக மாற்ற முயற்சி ஆகும்.

பெரியார் கூறிய சிந்தனையை நடைமுறையில் கொண்டு வரும் நாள் இதுவாக இருக்க வேண்டும்.

- நெய்வேலி அசோக், பொதுச் செயலாளர், தோழர் களம்