kaattaaru feb16ஜல்லிக்கட்டு என்ற இந்து - ஜாதி ஆதிக்க - ஆணாதிக்கப் பண்பாட்டு விழாவை அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக ஆதரிக்கின்றன. ஓட்டு வேட்டையாடப் போனவர்கள் ஆதரிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மே 17 இயக்கம், இளந்தமிழகம் இயக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான கடமைகளை மேற்கொள்ளும் அமைப்புகளும் ஜல்லிக்கட்டை ஆதரித்துப் போராட்டத்தில் இறங்கியது நமக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அவர்கள் வைத்துள்ள வாதங்கள் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு வழிவகுப்பதாகவே இருந்தது. அந்த வாதங்களையும் அவற்றிற்கு நமது விளக்கங்களையும் சொல்ல விரும்புகிறோம்.

தடையைப் பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்காடி பீட்டா என்ற அமைப்பு People for the Ethical Treatment of Animals (PETA) மீது நமக்குக் கடுமையான விமர்சனங்கள் உண்டு. அந்த அமைப்பில் முன்னணியில் இருப்பவர்கள் பார்ப்பனர்கள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பார்ப்பனர்கள் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை வழக்காடியது பீட்டாவாக இருந்தாலும், அந்த வழக்கால் கிடைத்த தீர்ப்பு தமிழர்களின் பண்பாட்டு உயர்வுக்கு வழிவகுக்கும் என்பது உறுதி. இதே தீர்ப்பை அடிப்படையாக வைத்து நாளை இறைச்சி உணவுக்கேகூட தடை வரலாம். வரும் போது அவசியம் எதிர்த்து நிற்போம்.

இளந்தமிழகம் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் வினோத் விடுத்துள்ள அறிக்கையில்,

“சல்லிகட்டு போன்ற மாடுபிடி போட்டிகளில் உழவுத் தொழில், மாடு இவற்றோடு தொடர்புடைய சில சாதிகள் தான் ஈடுபடுகின்றன. வட்டாரத்தன்மையோடு அந்தந்த சாதியினர் மட்டுமே பங்கெடுக்க முடிகிறது. பெண்களின் பங்கெடுப்பே இல்லை என்று சொல்கிறார்கள். இதை சனநாயகப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டுமே தவிர ‘தடையே இருக்கட்டும்’ என்று கருதுவது சரியல்ல. மாடுபிடிப் பண்பாடு என்பது வெறும் ஆதிக்கவாதிகளின் பண்பாடல்ல, வேடிக்கை பார்க்கும் சமீந்தாரிய பண்பாடல்ல. விலங்குகளை அடக்கி உழவில் ஈடுபடுத்திய வரலாற்றுப் போக்கின் நீட்சி. இது உழவுத் தொழிலில் ஈடுபடும் உழைக்கும் மக்களின் பண்பாடு.”

தாழ்த்தப்பட்டவர்கள் பங்கேற்க முடிவதில்லை என்ற உண்மையை மறைக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள்? வட்டாரத் தன்மையோடு அந்தந்தச் சாதியினர் மட்டுமே பங்கேற்க முடிகிறதாம். ஏன் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களே வாழவில்லையா?

உழவுத்தொழிலில் தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களாகவே உள்ளனர். பிற்படுத்தப்பட்டோரிலும், குறிப்பாக சுமார் 20 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், விவசாயம் மட்டுமல்லாமல் கந்துவட்டி, பண்ணைகள் போன்ற உப தொழில்களால் வருமானம் பெற்றுக்கொண்டிருக்கும் வசதி படைத்த பிற்படுத்தப்பட்டவர்கள் தான் ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க முடியும்.

உழைக்கும் மக்களின் பண்பாடு என்றால் ஜல்லிக்கட்டு நடக்கும் கிராமங்களில் எத்தனை தலித்துகள் ஜல்லிக்கட்டு மாடு வைத்துள்ளனர் எனக் கூற முடியுமா? தலித்துகள் மாடு வளர்ப்பது பற்றி மனுசாஸ்திரம் கூறுகிறது,

“அவர்களுக்கு உலோக பாத்திரங்கள் கூடாது. அவர்கள் தீண்டின பாத்திரங்களைச் சுத்தம் செய்தாலும், பரிசுத்தமாகாது. அவர்கள் மாடு முதலிய வைத்துக்கொண்டு ஜீவிக்கக்கூடாது.”

- அத்தியாயம் 10 ஸ்லோகம் 51

இந்த மனுசாஸ்திரக் கட்டுப்பாடுகளை மீறி தலித்துகள் இப்பொழுதுதான், ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கொடுக்கும் மாடுகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். பால் கொடுக்காத - வருமானம் தராத - ஜல்லிக்கட்டு மாடுகளை இன்னும் தலித்துகள் வளர்க்கவே தொடங்கவில்லை. உழவுத்தொழில் உண்மையாகவே உழைக்கும் தாழ்த்தப்பட்டவரிடம் பல ஆயிரம் ஆண்டுகளாக நிலமும் இல்லை, ஜல்லிக்கட்டு மாடும் இல்லை. பிறகு எப்படி இது உழைக்கும் மக்களின் பண்பாடாக முடியும்?

பிற்படுத்தப்பட்டவர்களிலும் 2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத்திருக்கும் சராசரி விவசாயிகள் தான் அதிகம். அவர்களால் வருமானம் வராத எந்த உயிரையும் வளர்க்க முடியாது. வீட்டில் உள்ள ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் வயலில் வேலை செய்தால்தான் பட்டினி இல்லாமல் வாழமுடியும் என்ற நிலையில்தான் இன்றைய விவசாயம் உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மாட்டை வளர்க்கும் வலிமை பொருளாதாரத்திலும் வலுவானவர்களுக்கே உண்டு.

குறிப்பிட்ட சில கிராமங்களில் பணத்திமிரும், ஜாதித்திமிரும் கொண்ட ஒரு சிலரால் நடத்தப்படும் இந்த விளையாட்டை ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்பாடு என்று கூறுவீர்களானால், இங்கு 90 விழுக்காட்டு மக்கள் தமிழர்களே இல்லை என்று கூறும் நிலைதான் ஏற்படும். மேலும் இளந்தமிழகம் இயக்கம் கூறுகிறது,

“(ஜல்லிக்கட்டு) ஒரு வட்டார ஒரு சாதிப் பண்பாடேயானாலும் அதுவும் பன்மைத்துவம் கொண்ட ஒரு சமூகத்தின் ஒரு கூறுதான். எல்லாத் தரப்பு, வட்டார, சாதி பண்பாடுகளையும் உட்செரித்துதான் பன்முகத் தன்மையோடு தேசப்பண்பாடு, சமூகப்பண்பாடு வளர்ச்சி பெறுகிறது. அது சல்லிக்கட்டு, ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு போன்ற அனைத்து மாடுபிடிப் போட்டிகளைக் கொண்டாடும் பண்பாட்டையும் சேர்த்துதான்.”- வினோத், செய்தி தொடர்பாளர், இளந்தமிழகம் இயக்கம். 09.01.2015

பன்முகத் தன்மை என்ற பெயரில், எந்தவிதக் குற்றஉணர்வும் இல்லாமல் - சிறிதும் கூச்சப்படாமல் - ஜாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்துகின்றன மேற்கண்ட வரிகள். நான் ஆதிக்க ஜாதிக்காரன் என்று திமிராகப் பூணூல் போட்டுத் திரியும் பார்ப்பானின் போக்கும், இந்த வரிகளின் பொருளும் ஒன்றுதான். மேற்கண்ட வரிகளை சமுதாயத்தில் உள்ள அனைத்துச் சீரழிவுப் பழக்க வழக்கங்களைக் காப்பதற்கும் பயன்படுத்தலாம்.

பிறக்கும்போதே சேரியில் வாழ வைப்பது, ஒரு ஊரின் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் ஒதுக்கி வைப்பது, இறந்த பிறகும் சுடுகாட்டிலும் பறையர் சுடுகாடு, பள்ளர்சுடுகாடு, படையாட்சி சுடுகாடு எனப் பிரித்து வைத்திருப்பது என அனைத்துமே இங்கு பண்பாடு, பழக்க வழக்கம்தானே? இதையெல்லாம் உட்செரித்துத்தான் உங்கள் தேசத்தின் பண்பாடு வளர்ச்சி பெறும் என்றால் அப்படிப்பட்ட தேசம் உருவாவதற்கும், அப்படிப்பட்ட பன்முகத்தன்மை உருவாவதற்கும் மனித குல வளர்ச்சியில் அக்கறை உள்ளோர் அனைவரும் எதிரிகளாகத்தான் இருப்பார்கள்.

பண்பாடு, பழக்கவழக்கங்களை மாற்ற முடியாது என்பதுதானே ஆகமங்கள்? இந்தப் பண்பாடு, பழக்க வழக்கங்கள் தானே இந்து லா-வில் பாதுகாக்கப்பட்டு, இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலை நீடிக்கிறது. இந்து தேசியமோ, தமிழ்த்தேசியமோ எது வருவதானாலும் ஜாதி - அப்படியேதான் இருக்கும் என்பதைத்தான் உங்கள் அறிக்கைகள் உறுதி செய்கின்றன.

ஜனநாயகப்படுத்த வேண்டாமா?

முகநூலில் இதுபற்றிய விவாதங்கள் எழுந்தபோது, மே 17 இயக்கத்தின் சார்பாகச் சிலர் ஒரு பதிவை வெளியிட்டனர். அதாவது, கோவில்களில் தீண்டாமையும், ஜாதியும், பெண்ணடிமைத்தனமும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை நன்கு அறிந்திருந்த தோழர் பெரியார், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றா கூறினார்? அவற்றை ஜனநாயகப்படுத்த முயற்சித்தார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற போராட்டம் கோவில்களை ஜனநாயகப்படுத்தும் முயற்சிதானே? என்று வாதிட்டார்கள். இளந்தமிழகமும் ஜல்லிக்கட்டை ஜனநாயகப் படுத்த வேண்டும் என்கிறது.

ஜனநாயகப்படுத்துவது என்றால், நாராயண குருவைப்போல பெரியாரும் ஆங்காங்கே சிவன்கோவிலை உருவாக்கியிருப்பார். இராமானுஜரைப் போல அனைத்து ஜாதியினருக்கும் நாமத்தைப் போட்டு விட்டிருப்பார். இதோ பெரியாரே கூறுகிறார்,

“இராமானுஜர் நாமத்தையும், பூணூலையும் பழைய சின்னம் என்பதாகக் கருதி அதை வைத்துக் கொண்டு ‘பறையன்’ என்பவர்களையெல்லாம் பிடித்து நாமமும், பூணூலும் போட்டு மக்களைச் சமத்துவம் அடையச் செய்வது என்பதான சீர்திருத்தம் செய்தார் என்பதாகச் சொல்லப்படுகின்றது. இதனால் பழைய சின்னம் காப்பாற்றப்பட்டதே தவிர, மக்களுக்கு சமத்துவம் கிடைத்ததா? சமத்துவ உணர்ச்சி உண்டாயிற்றா? நாமமும் பூணூலும் உடையவர்களுக்குள்ளாகவே உயர்வு தாழ்வும், அதுகள் இல்லாதவர்களை தாழ்மையாய்க் கருதுவதும் இன்று சூரியன் போல் துலங்குகிறது”. - குடி அரசு 02.12.28

எனவே ஜனநாயகப்படுத்துவது, சீர்திருத்துவது என்பதில் பெரியாருக்கு என்றுமே உடன்பாடில்லை. கருவறை நுழைவுக் கிளர்ச்சியில்கூட பெரியாரின் நோக்கம், முரண்பாடுகளைக் கூர்மையாக்குவது என்பதுதான். பகைமுரணை அடையாளப்படுத்துவதுதான் பெரியாரின் நோக்கம். கோவில் நுழைவில் பெரியாரின் நிலையைக் காண்போம்.

“இந்தப் பொதுக்கோவிலுக்குள் எல்லோருக்கும் செல்ல உரிமை உண்டு” என்று விளம்பரம் செய்ய வேண்டும். யாராவது ஆட்சேபித்தால் அவர்களை சிறையிலிட வேண்டும். இதை பொது ஜனங்கள் கூட்டம் போட்டு கண்டிக்க ஆரம்பித்தார்களானால் உடனே கோவிலை இடித்தெறிந்து விடவேண்டும்.

ஜாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். உயர்வு தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொதுஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளை தீவாந்திரத்திற்கு அனுப்பிவிட வேண்டும். சுவாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்று படிப்பில்லாதவர்களுக்கு படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலும் ஜீவனமும் ஏற்படுத்த உபயோகப்படுத்திவிட வேண்டும்.” குடி அரசு 09.12.1928

கோவில்களில் தீண்டாமை என்றால் அவற்றை இடித்துத் தள்ள வேண்டும், மடங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று முழங்கியவர் பெரியார். கிராமங்களில் ஜாதிமுறை தீவிரமாகக் கடைபிடிக்கப்படுகிறது என்பதற்காக அந்த கிராமம் என்ற முறையையே எதிர்த்தவர் பெரியார். கிராமங்கள் அழிய வேண்டும் என்றவர் பெரியார். அந்த கிராம முறையை ‘ஜனநாயகப்படுத்த வேண்டும்’ என்று ‘பூண்’ பிடித்துக் கொண்டிருக்கவில்லை.

பார்ப்பனர்களின் பண்பாட்டு விழாவான கும்பகோணம் மகாமகம் பற்றிப் பெரியார் பலமுறை தனது குடி அரசில் எழுதியுள்ளார். அந்த விழாவை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை, தடை போட வேண்டும் என்றுதான் முழங்கினார்.

“இந்த சர்க்கார் மனுதர்ம, புராண ஆட்சி சர்க்காராய் இல்லாமல் இருக்குமானால் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியங்களுக்கு மக்களை ஆளாக்காமல் மாமாங்கம் நடத்தக்கூடாது என்று 144 உத்தரவு போட வேண்டும். ” - குடி அரசு - 17.02.1945

சீர்திருத்தத்தில் நம்பிக்கை அற்றவர் பெரியார். தன்னை அழிவு வேலைக்காரன் என்றுதான் அறிவித்துக்கொள்கிறார். குறிப்பாக, தற்போது உள்ள பிரச்சனை என்னவென்றால், ஜல்லிக் கட்டுக்குத் தடை அறிவிக்கப்பட்டு விட்டது. அதுபோல,

நாளையே ஒரு அறிவுள்ள அரசாங்கம் உருவாகி, “கோவில்கள் அனைத்தும் இழுத்து மூடப்படும்; தடைசெய்யப்படும்” என அறிவிக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்போது, கோவில்கள் என்பவை நமது பண்பாட்டின் அடையாளம், அந்தத் தடையை நீக்க வேண்டும் என எந்தப் பெரியாரியலாளரும் போராட மாட்டார்கள்.

அதுபோல இப்போது நாம் போராடாமலேயே ஜல்லிக்கட்டு என்ற ஆதிக்கப் பண்பாட்டிற்குத் தடை வந்துவிட்டது. அதை வரவேற்பதுதான் தமிழர்கள் அறிவியல் அணுகுமுறையோடு வாழ வேண்டும் என விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பணி.

குழந்தைத் திருமணத் தடுப்புச்சட்டம், உடன்கட்டை ஏறுதல் தடுப்புச் சட்டம், நரபலித் தடுப்புச்சட்டம் எனப்பல சட்டங்களைக் கொண்டு வந்தது இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள்தான். இந்தத் தடுப்புச்சட்டங்கள் வருவதற்கு முன் நரபலியும், உடன்கட்டை ஏறுதலும், குழந்தை மணமும், தேவதாசிமுறையும் இந்தத் தமிழ்த்தேசத்தின் பண்பாடுகள்தான்; இந்தியப் பகுதியில் உள்ள பல தேசிய இனங்களின் பண்பாட்டு அடையாளங்கள் தான்.

ஆனால் அவற்றுக்குத் தடை வந்தபோது, அந்தத் தடைகளால் ஒருவேளை ஆங்கிலேயர்களுக்கும் பலன் இருந்திருக்கலாம். அதற்காக அந்தத் தடைகள் தவறு. அவை தேசிய இனங்களின் மீதான தாக்குதல் என்று குரல் கொடுத்தால் அது யாருக்கான குரலாக இருக்கும்? அதே போன்ற நிலையைத்தான் தற்போது மே 17, இளந்தமிழகம் இயக்கங்கள் எடுத்துள்ளன.

jallikattu 350

பூப்புனித நீராட்டு விழாவும், தாய்மாமனையே மணந்து கொள்வதும், அகமண முறையும் இதே ஜல்லிக்கட்டு கிராமங்களில் உள்ள மற்றுமொரு முக்கியமான பண்பாடுதான். எதிர்காலத்தில் ஏதோ ஒரு துணிவுள்ள அரசாங்கம் உருவாகி, இந்தப் பண்பாடுகளுக்குத் தடை விதித்தால், அந்தத் தடையை வரவேற்பதுதானே, அறிவும், மானமும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்? அதை விட்டுவிட்டு, ‘அகமண முறையும், பூப்புனித நீராட்டு விழாவும் எங்கள் சமுதாயத்தின் பன்முகத் தன்மையின் கூறு’ என்று அறிக்கை விட்டால் இது இளந்தமிழகமா? பழந்தமிழகமா? என்ற கேள்விதான் வரும். அந்தக் கேள்விதான் இப்போது நமக்கு எழுகிறது.

மாட்டிறைச்சி சந்தைக்கு ஜல்லிக்கட்டு எதிராக உள்ளதா?

“மாட்டிறைச்சிச் சந்தைக்கு ஜல்லிக்கட்டு எதிராக உள்ளது”, “நாட்டு மாடுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை மதிப்பு இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தால் அவை இறைச்சிச் சந்தைக்கு வரும், இந்தத் தடையின் பின்னணி இதுதான்” என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டின் மீதான தடையைக் கண்டித்து 13.01.2016-ல் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகம் மே பதினேழு இயக்க தோழர்களால் முற்றுகையிடப்பட்டது. பன்னாட்டு கார்ப்பரேட் வணிகத்திற்காக நாட்டு மாடுகளை அழிக்கவும், தற்சார்பு விவசாயத்தை அழிக்கவும், தமிழ்த்தேசிய இன மக்களின் பண்பாட்டின் மீது அடக்குமுறையாக கொண்டு வரப்பட்ட இந்தத் தடையை கண்டிப்பதற்காக இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்காக மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை காங்கேயம் காளைகள். அவைகளுக்காகவே ஒரு ஆராய்ச்சி மய்யத்தை நடத்தி வரும் காங்கேயத்தில் உள்ள, சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையப் பொறுப்பாளர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன் அவர்கள் 2013-ல் தினமணிக்கு அளித்த நேர்காணல் ஒன்றைப் படிப்போம்.

“காங்கயம் இனக் காளை கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். 1990ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 11 லட்சம் மாடுகள் இருந்தன. 2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 4 லட்சம் மாடுகள் இருந்தன. 2010ம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெறவில்லை. கணக்கெடுப்பு நடைபெற்றிருந்தால், சுமார் 2.5 லட்சம் மாடுகள் மட்டுமே இருப்பது தெரியவரும்”. - 11.02.2013 தினமணி

1990 முதல் 2013 வரை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்ததை நாம் அறிவோம். ஆக 2013 வரை ஜல்லிக்கட்டுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அப்படியானால் 1990ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 11 இலட்சம் காங்கேயம் காளைகள், 2000லேயே திடீரென எப்படி 4 இலட்சம் எனக் குறைந்தது? அடுத்த பத்தாண்டுகளில் 2010ல் 2.5 இலட்சமாக எப்படிக் குறைந்தது? அப்போதெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதானே இருந்தது? ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடந்து கொண்டிருந்தபோதே இப்படி இலட்சக்கணக்கில் ஒரு இனம் அழிந்துள்ளது என்றால், காங்கேயம் காளைகள் அழிந்ததற்கு ஜல்லிக்கட்டு ஒரு காரணமாக இல்லை என்பது தெளிவாகிறது.

மேலும், நாட்டு மாடுகளுக்கு வெளிநாட்டில் இறைச்சிச் சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதால் ஜல்லிக்கட்டுத் தடை என்கிறார் திருமுருகன். உண்மைதான். ஆனால் அந்த மதிப்பு இந்திய நாட்டில் உள்ள நாட்டுப்பசுக்களுக்குக் கிடையாது. நாட்டு எருமைகளுக்குத் தான் மிக நல்ல இறைச்சிச்சந்தை வாய்ப்பு உள்ளது.

Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) என்ற மத்திய அரசு நிறுவனத்தின் புள்ளிவிபரங்களைப் பார்க்கலாம். 2014 - 2015 ஆண்டில் 14,75,526.01 மில்லியன் டன் எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 29,282.6 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் எருமைகள் தான் என்பதற்கும் APEDA விளக்கம் தந்துள்ளது.

இந்தியாவிலிருந்து பசு இறைச்சியை ஏற்றுமதி செய்ய அனுமதி இல்லை என்ற மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள புதுடில்லியைச் சேர்ந்த அல்நூர் நிறுவனமும் தெரிவித்துள்ளது. 30.10.2015 நாளிட்ட The Economic Times ஏட்டில் விளக்கமான செய்திகள் வெளியாகி உள்ளன.

காங்கேயம் காளை எருமை வகையில் வராது என்பது மாடு பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும். ஜல்லிக்கட்டில் எந்த ஊரிலும் எருமைகளை அடக்குவது கிடையாது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

நாட்டு மாடுகளின் அழிவு இனிமேல் தானா?

1970லேயே நாட்டு மாடுகளுக்கு அழிவு தொடங்கிவிட்டது. அப்போது தொடங்கிய வெண்மைப்புரட்சியின் முக்கியப் பணியே நாட்டு மாடுகளை கலப்பு மாடுகளாக மாற்றி பால் உற்பத்தியைப் பெருக்கியது தான்.

National Dairy Development Board (NDDB) என்ற மத்திய அரசு நிறுவனம் வர்கீஸ் குரியன் தலைமையில் 1970 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மிகப் பெரிய பால் பண்ணைத் திட்டத்தைத் தொடங்கியது. Ananth Milk Union Ltd ( AMUL ) என்பது அதன் வணிகப் பெயர். அத்திட்டம் தொடங்கிய பிறகு, நமது நாட்டு ‘போஸ் இண்டிகஸ்’ பசுக்களையும் வெளிநாட்டுப் பசு வகைகளான ஜெர்ஸி, ஹோல்ஸ்டின் ஃபிரீசியன், அயர்ஷயர் போன்ற பசுக்களையும் இணைத்து விவசாயிகளுக்கு இலாபகரமான கலப்பினப்பசுக்கள் உயிராக்கப்பட்டன.

அந்நிறுவனத்தின் வெற்றி, இந்தியா முழுவதிலும் கூட்டுறவுப் பால்பண்ணைகள் உருவாக வழிவகுத்தது. 01.02.1981-ல் தமிழ்நாட்டில் AAVIN ஆவின் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற கூட்டுறவுப் பண்ணைகளின் வளர்ச்சி நாட்டு மாடுகளை முற்று முழுதாக கலப்பின மாடுகளாக மாற்றிவிட்டன. அந்தக் கலப்பினங்கள் இந்திய நாட்டின், தமிழ்நாட்டின் வெப்ப நிலைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்கி 45 ஆண்டுகள் முடிந்து விட்டன. அவை இன்று தமிழ்நாட்டின் மாடு என்ற இனத்தின் அடையாளமாகவும், 10 கோடித் தமிழர்களுக்குப் பாலை வழங்கிக் கொண்டும் உள்ளன. இப்போது வந்து ‘நாட்டு மாடுகளைக் காப்பாற்றுவோம்’ என முழக்கம் இடுவது இந்து - பார்ப்பன நலன்களுக்குத்தான் வழிவகுக்கும்.

நாட்டு மாடுகளா? ஜாதி ஒழிப்பா? என்றால் நாம் ஜாதி ஒழிப்பு என்ற இடத்தில்தான் நிற்க வேண்டுமே தவிர நாட்டு மாடுகளைக் காக்கும் இடத்திற்குப் போவது - ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டவர்கள் செய்யக்ககூடாத செயல் ஆகும்.

நாட்டு மாட்டுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது.....ஜாதி மாடு

இந்த நாட்டு மாடுகளுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது தான் ‘ஜாதி மாடுகள்’ இந்த ஜாதி மாடுகளைக் காப்பாற்றத்தான் ஜாதி இந்துக்கள் போராடி வருகின்றனர். அதனால்தான் மனுவின் காலம் முதல் இந்த ஜாதி மாடுகளை தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர்கள் சொந்தமாக வளர்க்க முடியாத சமுதாயச் சூழல் இருந்தது.

இந்தியாவில் மனிதர்களுக்குள் ஜாதிக்கலப்பை அனுமதிக்காதவர்கள் தான் மாடுகளுக்குள்ளும் ஜாதிக்கலப்பை அனுமதிக்காமல் - நாட்டு மாடுகளைக் காப்பாற்ற வேண்டுமெனப் போராடுகிறார்கள். அதுவும் குறிப்பாக நாட்டுப் பசுக்களைக் காப்பாற்றத்தான் பீட்டாக்களும், பார்ப்பன அமைப்புகளும், இந்து அமைப்புகளும், தமிழ்த்தேசிய அமைப்புகளும், தமிழீழத்திற்காகவே நடத்தப்படும் அமைப்புகளும் பாடுபடுகின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் சத்துணவான பசுமாட்டுக்கறியை உண்ணும் மக்களைப் பற்றியும் - நாட்டு எருமைகளைக் காப்பாற்றுவது குறித்தும் எவருக்கும் எந்தக் கவலையும் கிடையாது.

ஆண்டுக்கு 20 இலட்சம் டன் அளவுக்கு வெட்டிக் கொல்லப்பட்டு - ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கும் எருமை இறைச்சிச் சந்தையில்தான் கார்ப்பரேட் கம்பெனிகள் வலம் வருகின்றன. அதை எதிர்த்து எவரும் பேசக்கூட இல்லை. ஆனால், உழைக்கும் மக்களுக்குச் சிறிதும் பயன்படாத - காங்கேயம் பசுக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத் தடைகளை எல்லாம் மீறிக்கூடப் போராடுவார்கள்.

நாட்டுப் பசுக்களைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ் காரர்களும், இராமகோபாலன்களும், சங்கர மடங்களும், கோசாலைகளும் இருக்கின்றன. அவர்களுக்குத் தோள் கொடுக்க - மக்கள் விடுதலை அமைப்புகளாக நாம் நம்பும் இயக்கங்கள் செல்லவேண்டாம்.

புரட்சிகர இயக்கங்களின் போக்கு இப்படி என்றால், இந்நாட்டு இயற்கை விவசாய ஆர்வலர்கள் என்ற வேடத்தில் இருப்பவர்களின் போக்கு இன்னும் கூடுதலாக, பார்ப்பன அடிமைப் போக்காக இருக்கிறது. போலி அறிவியல் கருத்துக்களை நவீன அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் அள்ளிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். ஜல்லிக்கட்டுப் பிரச்சனையிலும் அப்படி ஒரு போலி அறிவியல் கருத்து பரப்பப்பட்டுள்ளது. அதாவது பாலில் ஏ1 பால், ஏ2 பால் என்ற கருத்து. அந்தக் கருத்துப்பரப்பலில் இருக்கும் மோசடியை அடுத்த இதழில் பார்ப்போம்.

(தொடரும்)

- அதிஅசுரன்

(காட்டாறு பிப்ரவரி 2016 இதழில் வெளியான கட்டுரை)

Pin It