அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது!

தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார். கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார். டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார். அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார். உடனே வடிவேலு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துறை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா? நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அடித்து நொறுக்கிவிட்டு, "எங்ககிட்டயவே..." என்று கத்திக்கொண்டே தனது கோஷ்டிப் பரிவாரங்களுடன் ஓடி ஒரு மறைவில் இருந்துகொண்டு, தன் கோஷ்டி ஆளிடம், "டேய்... அந்தக் கடைக்காரன் கடையை இழுத்து மூடிவிட்டு ஓடுறானான்னு பார். அவன் ஓடிட்டா அவன் நமக்கு அடிமை, ஓடாவிட்டால் நாம் அவனுக்கு அடிமை" என்று மூச்சிரைக்கச் சொல்வார். கோஷ்டியிலிருந்து ஒருவர் எட்டிப் பார்க்கையில், டீக்கடைக்காரர் கடையை இழுத்து மூடிவிட்டு தனது வேட்டியால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடிப்பார். இதனைப் பார்த்தவுடன் கோஷ்டியில் ஒருவர், "அண்ணே ஓடுறாண்ணே!" என்று சொல்வார். அப்போது வடிவேலு மிக உற்சாகமாக, "அப்ப இன்னையிலருந்து நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா" என்று பெரிய ரவுடி போல 'ஃபிலிம்' காட்டுவார்.

படித்துறைப் பாண்டியைப் போல அய்யா நெடுமாறன் தனது படை பரிவாரங்களுடன் தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார். நெடுமாறன் வகையறாக்கள் இவ்வளவு காலமும் வீராவேசமாகப் பேசினார்கள். கருணாநிதியை ரவுண்டு கட்டினார்கள். வா... வந்து பார்... என்கிற அளவில் பிளந்து கட்டினார்கள். தமிழர் துரோகி என்றார்கள், தமிழர்களுக்கு எதிரி என்றார்கள், தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்றார்கள். உச்சகட்டமாக தெலுங்கர் என்றுகூறி மார் தட்டினார்கள். புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்தால்தான் எல்லாம் மாறும் என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள். இன்னும் கூடுதலாகப் போய் ஜெயலலிதாவை 'ஈழத் தாய்' என்றார்கள். உண்மையான புரட்சித் தலைவி அம்மாதான் என்றார்கள். அதிமுகவினரைவிடக் கூடுதலாக ஜெயலலிதாவை 'அம்மா அம்மா' என்று ஊர் ஊராய் தொகுதி தொகுதியாய் கூவினார்கள். ஈழவிடுதலையை வாங்கித் தருபவர் என்று அடையாளப்படுத்தினார்கள். அம்மா வந்தால் தமிழகத்தில் ஈழவிடுதலைக்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார்கள். ஏன்... அம்மாவே தலைமை தாங்கி ஈழப் போரை நடத்துவார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.

அம்மா ஆட்சிக்கு வந்தார்; இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்கவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றினார். தீர்மானத்தை வரவேற்று பழ.நெடுமாறன் ஆகா.. ஓகோ.. என வானுக்கும் மண்ணுக்கும் குதித்து அறிக்கை வெளியிட்டார். எதிலும் இரண்டடி தாவி ஓடநினைக்கும் அண்ணன் சீமான், அதே அம்மாவைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார். அது மட்டுமல்லாது அம்மாவைப் பாராட்டி வேலூரிலிருந்து சென்னை வரை நடை பயணம் வேறு. அம்மாவே நாணி வெட்கப்படுமளவுக்கு புகழாரப் பொதுக்கூட்டங்கள்.

இந்தக் காட்சிகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின. கடந்த இரண்டாண்டுகளாகவே தமிழகத்தில் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை நடத்த ஈழத்தாய் மறுத்து வருகிறார். மேதகு பிரபாகரன் அவர்களின் படங்களை அச்சிட்டு ஒட்டப்படும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு வருகின்றன. எந்த இடத்திலும் மாவீரர் நாள் விழாவுக்கோ, மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டங்களுக்கோ தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவரும் நெருக்கடிகள் தொடர்கின்றன. இந்நிலையில்தான் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனால் நெடுமாறன் வகையறாக்களோ இத்தகைய எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை. வெற்றி அல்லது வீரச்சாவு என முழங்கி 15 நாட்களாக உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்ட தோழர் தியாகு அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் குதித்தபோதுகூட, அவருக்கு வாழ்த்துச் சொல்லக்கூட நேரமில்லாமல் நெடுமாறன் தஞ்சை விளாரில் தங்கி முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

தமிழர்களின் உணர்வுகளை மதித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே - அதாவது நவம்பர் 13 அதிகாலை - முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர்களையும், பூங்காவையும் தமிழகக் காவல்துறை இடித்துத் தள்ளியது. அங்கிருந்த நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரை, பணி செய்ய விடாமல் தடுத்தாகச் சொல்லி வேனில் அள்ளிக்கொண்டுபோய் ஒரு திருமணத்தில் அடைத்தார்கள். எப்படியும் மாலை 5 மணிக்கு மேல் விட்டுவிடுவார்கள் என்று நினைத்திருந்தவர்களின் நினைப்பில் ஜெயலலிதா மண்ணைப் போட்டார். இரவோடு இரவாக 83 பேரையும் திருச்சி சிறைக்குள் திணித்தார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்தும், நெடுமாறன் உள்ளிட்ட 83பேர் கைதைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டன. 'டெசோ' சார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கே சென்று பார்வையிட்டு, தமிழக அரசைக் கண்டித்ததோடு, இடிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசே கட்டித் தரவேண்டும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

9 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் வெளிவந்த அய்யா நெடுமாறனை, 'வாராது வந்த மாமணி', 'தமிழ்த் தேசியப் போராளி' ம.நடராசன் சிறைவாயிலிலேயே ஆரத்தழுவி வரவேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் நெடுமாறன், மிகுந்த கோபத்துடனும், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டும், அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். (இந்த இடத்தில் உங்களுக்கு வடிவேலு ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல)

"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவாகத்தான் இருக்க முடியும். அவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்வரைத் தவறாக நினைப்பார்கள்" என்று 'வீராவேசமாகப்' பேசினார். முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்றும், அதிகாரிகள் தன்னிச்சையாகவே இடித்தார்கள் என்றும் நெடுமாறன் கூறுவதன் மூலம் நிகழ்ந்த தவறுகளுக்கு ஜெயலலிதா காரணமல்ல என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறாராம்.

தமிழகத்தை ஆட்சி செய்பவருக்கு தமிழகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் தெரிந்திருக்க வேண்டும்தானே. "அமைச்சரே மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று வெளியில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் அந்தக்கால அரசியா ஜெயலலிதா? என்ன சொல்ல வருகிறார் நெடுமாறன்? ஒன்றுமே தெரியாமல் ஜெயலலிதா ஆட்சிபுரிகிறாரா? அல்லது ஜெயலலிதாவைக் காப்பாற்ற நினைக்கிறாரா? சரி, ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் இடித்தார்கள் என்றால், அய்யா சிறைக்குப் போனது கூடவா அம்மாவுக்குத் தெரியாது. நீதிமன்றத்தில் பிணை கேட்டதுகூடவா தெரியாது? முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பின்போது, அரசு அனுமதி வழங்காததால் அய்யா நீதிமன்றத்திற்குப் போனாரே, இதுகூடவா அம்மாவுக்குத் தெரியாது? கொளத்தூர் மணி அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுகூடவா தெரியாது? இவையும் அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவுதானா? மாவீரன் நெடுமாறன் இப்படி அந்தர் பல்டி அடித்துப் பேசும் அரசியல்தான் என்ன!

சரி, நெடுமாறன்தான் இப்படி என்றால், வீழ்ந்துவிடாத வீரத்துக்கும், மண்டியிடாத மானத்துக்கும் சொந்தக்காரரான சீமான், நெடுமாறன் கைதையொட்டி முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே செய்தியாளர்களிடம் பேசும்போது "இந்நிகழ்வுக்கு மத்திய உளவுத்துறைதான் காரணமாக இருக்க முடியும். மத்திய அரசால்தான் தமிழக அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள். இப்போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்" என்றார். நெடுமாறன் எப்படிப் பேசினாரோ அதையே சீமானும் தமிழக அரசுக்கும் முள்ளிவாய்க்கால் இடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்.

இவ்வளவு கடுமையாகவும், தமிழினத்திற்கு விரோதமாகவும் நடந்துகொள்ளும் ஜெயலலிதாவைப் பார்த்து, ஜெயலலிதா செய்வது மக்கள் விரோதம் என்று சொல்லக்கூடத் துணிச்சல் இல்லாதவர்களாக இந்த 23ஆம் புலிகேசிகள் தமிழகத்தில் வலம் வருகிறார்கள். இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒன்றுமில்லை. அடிப்படையில் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புதான். தமிழீழ விடுதலையோ, தமிழர் ஒற்றுமையோ, தமிழின விடுதலையோ, தமிழ்த் தேசிய அரசியலோ.. இந்த நெடுமாறன் வகையறாக்களுக்கு முக்கியமல்ல; கருணாநிதி எதிர்ப்புதான் முக்கியம் என்பதை முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்குப் பின்னான இவர்களின் அரசியல் நமக்கு உணர்த்துகிறது. கலைஞர் கருணாநிதி சாதாரணமாகத் தட்டினாலே அய்யோ இரத்தம்... என்று கூப்பாடு போட்டவர்கள், ஜெயலலிதா உலக்கையை வைத்து இவ்வளவு மோசமாக அடித்தும் தலையில் வருவது தக்காளி சட்னிதான் என்று சிரித்துக்கொண்டே துடைத்துக்கொண்டு வருகிறார்கள்.

இப்போது முதலில் சொன்ன வடிவேலுவின் காமெடிக் காட்சியை நினைத்துப் பார்த்தால், நெடுமாறனின் அரசியல் கண்டு நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

பாவம்... நெடுமாறன் வகையறாக்களுக்கு 'பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்...' என்ன செய்வது?  இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்!

இவர்களது அரசியல் கண்டு ஜெயலலிதாவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் சொல்கிறது - "எவ்வளவு அடிச்சாலும் நெடுமாறன் தாங்குறாரே... இவர் ரொம்ப நல்லவரு..."

‍- வன்னிஅரசு, மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Comments

8 comments

8
kandasamy
மொக்கை யான பதிவு
Brus/Qatar
Wonderfull artical, without VCK support no one can Ellam issue, also we need no make solution against" Duplicate Dr.Ramadoss"
குமாரசாமி
இவ்விரண்டு அரசியல் வாதிகளும் தமிழீழம் அமைய உளமாற விரும்புபவர்கள் இல்லை. அவ்வச்சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்பவர்கள். அப்படி இருக்க அந்த இரண்டு கொள்ளிகளை யும் இரண்டு கொள்ளிகளாகவே அடையாளப்படுத்துவதே சரியாக இருக்கும்.
ம.செந்தமிழ் பாண்டியன்
மிக சரியான, தெளிவான பதிவு, இந்த பதிவை
நெடுமாறனும், டுபாக்கூர் சீமானும்
படிக்க வேண்டும்.
தி.அரப்பா தமிழன்
கீற்று..இதன் ஆனிவேர் எது என்று தெரிந்து கொண்டால் விசிக நலமாயிருக்கும்..
mathiarasan
Tamilthesiya outfits thoughts and actiion only LTTE Propagnda is not rehabilitate for sri lankan tamils. this article time to record.
Muhunthan
Very sad to see this article on keetru
Aleem
நல்ல பதிவு

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.