இரண்டாம் உலகப் போருக்குப் பின் பன்னாட்டு வல்லரசுகள் புதிய காலனியக் கொள்கையைப் பல துறைகளிலும் புகுத்தி வருகின்றன. வல்லரசு நாடுகள் தேசிய இன மக்களின் மரபு சார்ந்த உணவு, மருத்துவம், வேளாண்மை, தட்ப வெட்பம் போன்ற அனைத்து நிலைகளிலும் மாற்றம் செய்கின்றன. அதன்மூலம் இவற்றுக்கெல்லாம் தம்மைச் சார்ந்திருக்கும் நிலையை அவ்வரசுகள் தோற்றுவிக்கின்றன.

தமிழக மக்கள் தங்களது சொந்த மருத்துவ முறையான சித்தா, யோகா, வர்மம் ஆகியவற்றினை இழந்து அலோபதி மருத்துவத்தைச் சார்ந்து இருப்பதாலேயே பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுள்ளனர். காரணம், அம்மருத்துவம் நோய் நாடி நோய் முதல் நாடி எனும் அடிப்படையிலானது அன்று. அது நோயினை அப்போதைக்கு தணிக்கும், தள்ளிப் போடுமே தவிர அடியோடு களைவதில்லை என்பது இன்று புரிய வைக்க வேண்டிய செய்தியும் அன்று.

இந்திய அரசு பசுமைப் புரட்சி எனும் பெயரில் இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தப்படாத ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் செறிவூட்டி வேதி உரங்கள் எனும் பெயரில் திணித்து நம் நிலத்தை நஞ்சாக்கியது. மரபணு மாற்றுப் பயிர் என்பதன் மூலம் நமது விதைகளை அழித்துப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டது. இதனால், தமிழக மக்களில் 80 விழுக்காட்டினர் தொடர்ந்து நோயுடன் வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் வெற்றி கண்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வல்லாதிக்கத்துடன் தொடர்ந்து இணைந்து தமிழர்களது நிலத்தினை முற்றுகை இட்டுள்ளன. அவை கட்டுப்படுத்தப்படாத தொழிற்சாலைகள், கெய்லின் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஆற்று மணல் எடுப்பு, மலைகளை உடைத்து கிரேனைட் எடுத்தல், தாது மணல் எடுத்தல், கனிம வளங்கள் வெட்டி எடுத்தல், மலைகளைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுதல், கூடங்குளம் அணுஉலை என்று தொடர்கிறது. இதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் வான்வழியாகத் தமிழகத்தில் நிறைந்துள்ள கனிம வளங்களை அடையாளம் கண்டுள்ளன. இவற்றின் ஒரு பகுதிதான் மீத்தேன் எரிவாயுத் திட்டம்.

தமிழகத்தில் மீத்தேன், பழுப்பு நிலக்கரி, இருப்பு!

தமிழ்நாடு புதுச்சேரி கடலோரப் பகுதியான பாகூரில் தொடங்கி நெய்வேலி, திருமுட்டம் (சிறிமுஷ்ணம்), ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்குத் தெற்குப் பகுதி வரையான காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும் அத்தோடு சேர்ந்து மீத்தேன் என்ற எரிவாயுவும் இருக்கிறது. பழுப்பு நிலகரியின் மதிப்பீடு 27,389 மில்லியன் டன்னும், மீதேன் வாயுவின் மதிப்பீடு 98,000 கோடி கன அடியும் உள்ளன.

இந்திய தமிழக அரசுகளின் திட்டம்

மனித விலங்குக் கழிவுகள், அழுகிய காய்கறி, சாக்கடை, சகதி, குப்பைகள், நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படும் போது மீத்தேன் கிடைக்கிறது. தஞ்சாவூர் சாத்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திலும், நெல்லை மாவட்டம் சலவை சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையிலும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் இவ்வாறான மீத்தேன் தயாரித்து மின்சாரமும் சமையலும் செய்கின்றனர். இது நிலத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடில்லாத முறையாகும்.

இப்படி மீத்தேன் தயாரிக்கும் முறையினால் பன்னாட்டு நிறுவனங்களோ, இநதிய அரசியல் அதிகார வர்க்கங்களோ கோடிகோடியாகக் கொள்ளையடிக்க முடியாது. எப்படி மின்சாரம் தயாரிக்கப் பல முறைகள் இருந்தும் மக்களுக்குக் கொடிய ஆபத்தை உண்டுபண்ணும் அணுமின் நிலையங்களைத் திறக்கிறார்களோ அதேபோலத்தான் காவிரியை பாலைவனமாக்கப் போகும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளனர். அணுமின் நிலையங்களில் பல இலட்சம் கோடி புரள்கிறது என்றால் மீத்தேன் எரிவாயுத் திட்டத்திலும் இதே நிலைதான். அதனால்தான் மக்களின் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் இத்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றனர்.

இந்திய அரசின் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 27.07.2010 அன்று “கிரேட் ஈஸ்டேர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிட்டெட்’ என்ற நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளது. அதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினுடன் 04.01.2011 அன்று ஒப்பந்தமிட்டது.

மீத்தேன் எரிவாயுவின் குறைந்தபட்ச மதிப்பு ரூ 6 இலட்சம் கோடி.. இந்திய அரசு பெற்றுக்கொள்ளும் தொகையோ வெறும் ரூ. 5,000 கோடி மட்டுமே. முதற்கட்டமாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சில பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த நிலப்பரப்பு 691 சதுர கிலோமீட்டர். இதில் 24 ச.கி.மீ பரப்பு பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காகவும், 667 ச.கி.மீ பரப்பு மீத்தேன் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மீத்தேன் எடுக்கும் முறையும் அவற்றினால் ஏற்படும் விளைவுகளும்

நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடர்த்தியாக இருப்பதில்லை. நிலக்கரி படிமத்தில் அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப் பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டியிருக்கும். மன்னார்குடி பகுதியில் நிலக்கரி படிமங்கள் தரைமட்டத்திற்கு கீழே 500 அடிமுதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகிறது. தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்தப் படிமங்களை அழுத்திக்கொண்டுள்ளது. இந்த அழுத்தத்தினால் அடர்த்தியற்றற மீத்தேன் வாயு நிலக்கரி பாறைகளிலிருந்து வெளியேற முடிவதில்லை. நிலக்கரிப் பாறையில் அழுத்தம் கொடுக்கும் நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே மீத்தேன் வாயு வெளியேற முடியும்.

“நீரியல் விரிசல்” (Hydraulic fracturing) பயன்படுத்தப்படுகிறது. பூமியில் 2000 அடிவரை துளையிட்டு குழாய் அமைத்து அதிலிருந்து பக்கவாட்டில் பூமிக்கு அடியிலேயே இரண்டு கி.மீ தூரத்திற்கு எல்லா திசைகளிலும் குழாய் பதிக்கப்படுகிறது. நிலக்கரி படிமத்தை நொறுக்க நீரும் மணலும் 600 வகை வேதிப்பொருட்களும் கலந்த ஒரு கலவை அழுத்தத்துடன் உள்ளே செலுத்தப்படும். அப்போது நிலக்கரி படிமங்கள் நொறுங்கி இடுக்கில் உள்ள மீத்தேன் எரிவாயு நீரோடு உறிஞ்சப்பட்டுப் பிரிக்கப்படுகிறது. பூமியில் செலுத்தப்பட்ட வேதிக் கலவையில் 30 விழுக்காடு மட்டுமே வெளியே எடுக்க முடியும். மீதி பூமிக்குள்ளேயே தங்கி நீரினை நஞ்சாக்குகிறது. வெளியேற்றப்படும் நீர் கடல் நீரை விட 5 மடங்கு உப்பானது. இது பாசனக் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட உள்ளது. அக்கழிவுகளால் நீர் பாயும் நிலப்பகுதி விளைய முடியாத பொட்டல் காடாகும். மேலும் 500 முதல் 1,650 அடிவரை குழாய் வழியாக நீர் வெளியேற்றும் போது அதனை சமப்படுத்த கடல் நீர் உள்வாங்கப்படும். மேலேயுள்ள நன்னீரும் உள்வாங்கப்படும். 80 ஏக்கருக்கு ஒரு கிணறு வீதம் சுமார் 2,000 கிணறுகள் தோண்ட உள்ளனர். ஒரு கிணற்றிலிருந்து ஒரு நாளைக்கு 75,000 லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படும். இது 40 ஆண்டுகள் நடைபெறும். அடுத்து 100 ஆண்டுகள் நிலக்கரி எடுக்கப்படும்.

இதனால் இந்தப் படுகை மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை. சுற்றியுள்ள மாவட்டங்களின் நீர்த்தொகுப்புகள் (Aquifers) வறண்டு போகும். மேலும் நிலநடுக்கம், மண் உள்வாங்குதல் ஏற்பட்டு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் விரைவில் பாதிக்கப்படுவதுடன் அழிந்தும் போகும். மக்களுக்கு புற்றுநோய், மரபணு மாற்றக் கோளாறுகள், மூளை,நரம்புக் கோளாறு, நாளமில்லாச் சுரப்பிகள் பாதிப்பு, தோல் நோய், கண் பார்வை இழப்பு, தொடு உணர்வு அழிவு, ஈரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு இவைகள் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படும். மொத்தத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நிலமாக மாறிவிடும்.

காவிரிப் படுகையைப் பாதுகாப்போம்!

மத்தியிலுள்ள காங்கிரசு அரசும், மாநிலத்திலிருந்த திமுக அரசும் மக்கள் மீது துளியும் இரக்கமின்றி இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தன. இத்திட்டத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியைக் கண்ட அதிமுக ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது. இக்குழு மூன்று மாதக் காலத்திற்குள் அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருடம் ஆன பிறகும் அறிக்கை வந்தபாடில்லை. விவசாயிகளுக்கு ஒரு சிறு பாதிப்பு என்றாலும் இத்திட்டத்தை செயல்பட விடமாட்டோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா 17.07.2013 இல் உறுதியளித்தார். நாகப்பட்டின தேர்தல் வாக்குறுதியிலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மீத்தேன் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தொடங்கிய போது திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த நரசிங்கன்பேட்டை மற்றும் மதுக்கூர் வட்டத்தில் பாவாகி கோட்டை ஆகிய இடங்களில் மக்கள் திரண்டு முதல் கட்டப் பணியைத் தடுத்துள்ளனர். பல்வேறு வடிவிலானப் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. தற்போது மத்திய அரசுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் நயவஞ்சகமாக நாடகமாடுகிறார்கள். இதில் மக்கள் மதிமயங்கிவிடக் கூடாது.

“வேட்டைக்காரனைப் போலன்றி, ஓநாய் தனக்கு அடுத்த ஆண்டிற்குக் குட்டிகளை உணவாக அளிக்கும் பெண்மானை விட்டு வைப்பதில்லை” என ஏங்கெல்ஸ் பொருளாதாரம் பற்றி வர்ணிப்பார். அதுபோல் எதிர்கால மக்களின் தேவைகளைக் கருதிப் பார்க்காமலும், நிலங்கள் பாலைவனமாகப் போவதைப் பற்றிய கவலை இல்லாமலும் இந்திய வல்லாதிக்க அரசு தனது சொந்த இலாப நோக்கத்திற்காக மக்களின் வாழ்வைச் சூறையாடுகின்றது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகியவற்றுக்கான இயற்கைச் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இயற்கை நம்மை அழித்துவிடும். இயற்கையில் பயனில்லாப் பொருள் என்று ஏதுமில்லை. அனைத்தும் மறுசுழற்சிக்கு உள்ளாகும் வகையிலானொரு சுழல் வட்டக் கட்டமைப்புடன் இயங்குகிறது. அத்தொடர்புகள் அழிந்தால் நாம் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை தமிழ் மக்களாகிய நாம் உணர வேண்டிய தருணமிது.

இன்றைய உலக அரசியல் சூழலில் இந்திய, பன்னாட்டு சுரண்டல் இரக்கமற்ற நிலையில் இருப்பதை உலக நடப்புகள் உணர்த்துகின்றன. எந்த ஒரு அரசியல் கட்சியையும் நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை. மலையை உடைத்து, கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு எதிரான போராட்டம், நந்தி கிராம மக்களின் போராட்டம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்களின் போராட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் என இந்தியாவெங்கும் நடைபெற்று வரும் போராட்டங்களை இந்திய அரசு அடக்குமுறை கொண்டு நசுக்கி வருவதை நாமறிவோம்.

உள்ளாட்சி, மாநகராட்சி தேர்தல் வரும்போது கூடங்குளம் மக்களிடம் “உங்களில் ஒருத்தியாய் இருப்பேன்” எனக் கூறிய ஜெயலலிதா பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டு அம்மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டதை நாமறிவோம். அதே போல் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாகப்பட்டினத்தில் “மீத்தேன் திட்டத்தை நாங்கள் பங்குபெறும் ஆட்சி வந்தால் தடுப்பேன்” என ஜெயலலிதா கூறியது மக்களை ஏமாற்றுவதற்கே!

தமிழக மக்களே, தமிழகம் பல்வேறு நிலையில் இந்திய, பன்னாட்டு வல்லரசுகளால் முற்றுகை இடப்பட்டுள்ளது, இதனை எந்த ஒரு தேர்தல் அரசியல் கட்சியும் முறியடிக்க சக்தியற்றதே. தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் ஒன்றுபட்டப் போராட்டமே வெற்றி தரும். அத்திசைவழியில் முன்னேறுவோம்.

Pin It