இடுப்புக்கு மேலே ஆடை இன்றி
இருந்த பெண்களை – அன்று
வருந்தும் கண்களை
அடுப்புக்குக் காவல் ஆக்கி வைத்த
அவலம் போக்கினார் – அவர்கள்
சுவடு நோக்கினோம்!
பொட்டுக் கட்டிக் குட்டுப் பட்ட
புலம்பல் நிறுத்தினார் – அன்னை
களத்தில் இறங்கினார்!
எட்டிப் பறிக்கும் இளைய கன்னி
இழிவைத் துடைக்கவே – மூவலூர்
வழியைப் படைத்ததே!
இராமா மிர்தம் இல்லா விட்டால்
இருண்ட அறையிலே – ஒளி
வருகை புரியுமா?
பாரா முகமாய்ப் பலரும் இருந்தார்
பழைய நாளிலே – அவரோ
உழைத்த தோளிவே!
வறுமை யோடும் பொறுமை யோடும்
வாடும் பெண்களைச் – சாக
ஓடும் பெண்களை
நிறுத்தம் சட்டம் நிலத்தில் ஆக்கி
நிலைக்க வைத்தவர் – இந்தியைக்
கலைக்க வைத்தவர்!
– ஆலந்தூர் முனைவர். கோ.மோகனரங்கன்