தென்னாட்டில் பிறப்பெ டுத்த
திராவிட இயக்கந் தன்னின்
முன்னோடித் தலைவர் மூவர்;
நடேசனார், தியாக ராயர்,
பொன்னாய் நம் டி.எம்.நாயர்
பொதுவாழ்வில் இம்மூவர்போல்
தன்னலம் துளியும் இல்லாத்
தலைவர்கள் யாரும் இல்லை
ஆறடி உடம்புக் குள்ளும்
அடங்காத தோற்றம்; சிங்க
ஏறுபோல் தாவிப் பாய்ந்து
எதிரியைக் குதறும் சீற்றம்
யாரையும் கூர்த்த தம்மின்
அறிவினால் வெல்லும் தேற்றம்
சீரற்றுக் கிடந்த மக்கள்
செழிப்புக்குக் கண்டார் ஏற்றம்
ஆங்கில மருத்து வத்தில்
அழியாத புகழைப் பெற்றார்
தீங்கான பார்ப்ப னர்தம்
செயல்கண்டு சினமே உற்றார்
தேங்கியே கிடந்த அந்நாள்
திராவிடர் உறக்கம் போக்கும்
ஓங்கிய தொண்டுக் காய்த்தன்
உடல்பொருள் ஆவி விற்றார்
இங்கிலாந்து சென்றும் அங்கே
எண்ணற்ற பேரைக் கண்டும்
தங்கியே பணிகள் செய்தார்
சமூக நீதிக் கொள்கை
பங்கப்ப டாமல் காத்தார்
பாழ்பட்ட உடம்பி னோடே
அங்கேயே மடிந்தார்; அந்தோ
அவர்புகழ் மடிவ துண்டோ?
- கவிஞர். தமிழேந்தி