இன்னெழில் முகத்தினன்; ஈகியன்
இளைஞரின் காவிய நாயகன்!
தன்னல மற்றவன்; சாதியைத்
தணலெரி நெஞ்சினால் சாய்த்தவன்!
நன்னலம் துறந்தவன்; நாளெலாம்
நாட்டிலும் காட்டிலும் நடந்தவன்!
குன்றெனத் தமிழ்க்குடி மக்களின்
குடிசையைக் கோட்டையாய்க் கொண்டவன்!

தென்னவர் வளர்தமிழ் மண்ணினைத்
தில்லியர் ஆண்டிடக் கொதித்தவன்!
இன்னலை மாற்றிட ஏறென,
இந்தியம் எதிர்த்திட எழுந்தவன்!
தன்னிக ரற்றமா மறவனாய்,
தமிழரின் தரைப்படை கட்டியோன்!
மன்றிலில் மக்களின் போர்வையில்
வஞ்சகர் சதிசெய மாய்ந்தவன்!

தமிழ்நாடு விடுதலை பூணவும்
தமிழ்மக்கள் உரிமையைக் காக்கவும்
தமிழ்நிலத்தின் எல்லையை மீட்கவும்
தமிழினத்தின் இழிவினைப் போக்கவும்
தமிழறத்தை எங்ஙணும் நாட்டவும்
தமிழிளைஞர் படையினைக் கட்டிய
தமிழரசன் வாழ்கவே வாழ்கவே!
தமிழ்நாடு விடுதலை வெல்கவே!

Pin It