வர்க்கச் சமுதாயத்தில் கல்வியில் பள்ளிகளில் ஏற்படும் முன்னேற்றம், மாற்றம் என்பது மாணவர்களைத் தத்தம் வர்க்கத்தில் சிறப்பாக பொருத்துவதற்கே இன்னும் சாதியும் வர்க்கமும் பின்னிக் கிடக்கும் சமுதாயத்தில் நவீன அடிப் படையில் சாதியையும் வர்த்தகத்தை யும் பாதுகாக்கச் செய்கின்றது. பொதுவாக மனித குலத்திற்குக் கல்வி ஏன் தேவைப்படுகின்றது? விலங்கு களில் இருந்து மாறுபட்டு இருக்கும் மனித குலம் தன்னை மேலும் ஆளுமை கொண்ட மனிதனாக மாற்றிக் கொள்வதற்குக் கல்வி தேவைப்படுகிறது.

ஆனால் வர்க்கச் சமுதாயத்தில் மிகப் பெரிய கூட்டத்திற்குக் கல்வி எட்டாக் கனியாகவே உள்ளது, அல்லது புறநிலை எதார்த்தத்தைப் புரிய வைப்பதற்குப் பதில் இயந்திர ரீதியான கல்வி அளிக்கப்படுகின் றது. எந்த ஒரு ஒடுக்கப்பட்டவனும் தன் ஆண்டையின் இருத்தலைப் புரிந்து கொள்ளாத வகையில் கல்வி அளிக்கப்படுகின்றது.

நடைமுறை ரீதியான கல்வி என்பது சமுதாயத்தில் வேர் ஊன்றாமல் தடுக்கப்படுகின்றது. பொருளாதார உற்பத்தியில் ஒவ்வொரு தனி மனிதனும் அதன் ஏதோ ஒரு பாகத்தில் சிக்க வைக்கப்பட்டு அதைத் தாண்டிச் சிந்திக்க முடியாதவாறு கல்வி முறை உருவாக்கப்படுகிறது. மேற்கூறிய புரிதலுடன் இந்தியக் கல்வி முறையை உற்று நோக்கினால் தற்போது ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக நடுவண் அரசு கொண்டு வந்து இருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி இருக்கும் சமச்சீர்க் கல்வி ஆகியவற்றின் பின்னால் இருக்கும் பொருளாதாரச் சூழலைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழகச் சமூக சூழலில் கல்வி யென்பது பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனாலும் கூடக் கேடு கெட்ட சாதி குறிப்பிட்ட அளவு பங்கு வகித்ததால் கல்வி பெரும்பாலும் மேட்டுக்குடி வசமே இருந்திருக்கும் என்பதே தினம் 19ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் வருகைக்கு முன் தமிழகக் கல்வி முறையை வரலாற்றுத் தகவல், இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இதில் மூன்று மரபான கல்வி முறையைக் காண முடிகிறது. 1. குருகுலக் கல்வி முறை. 2. திண்ணைப் பள்ளிக் கல்வி முறை, 3. தனி நிலைக் கல்வி முறை இம்மூன்று கல்விமுறையும் குறிப்பிட்ட சமூகத்தினரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின் தமிழகச் சமூக பொருளாதாரத் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இவை கல்வி முறையிலும் எதிரொலித்தது.

 சுரண்டல் நோக்கத்துடன் ஆக்கிரமித்த வல்லரசு ஏன் கல்வி அளிக்க வேண்டும்? முற்றிலும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட ஆதரவற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மேற்கத்திய கல்வியைக் கற்கச் சிறிதளவு வாய்ப்பு போன்ற நிகழ்வுகளால் இந்தியக் கல்வி முறையைப் பரிசீலனை செய்யப் பெரும்பாலோர் திணறுகின்றனர். துவக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் எந்த முறையான கல்வி முறையையும் வளர்த்தெடுக்க ஆர்வம் காட்ட வில்லை.

ஏனெனில் அதன் முதன்மை நோக்கம் வர்த்தகம், இலாபம் என்றிருந்தது. அதன் பிறகு பிரிட்டிசு ஆட்சி பரவலான பின் அது நிதி நெருக்கடியைச் சந்தித்தது. ஆங்கில அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அதிக சம்பளம் முக்கியச் செலவாக அமைந்தது. இதைச் சரிக்கட்ட ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர் களை இந்தியத் துணைக் கண்டத்தில் உருவாக்க வேண்டியிருந்தது. துணைநிலை வேலைகளைப் புரிவதற்கு பிரிட்டிசு ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சியை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. வணிக நோக்கம், 2. இந்தியக் கண்டத்தில் இருந்த மூலப் பொருள்களின் ஏற்றுமதி மற்றும் தொழில் துறை வளர்ச்சி, 3. நிதி மூலதன வளர்ச்சி. ஒவ்வொரு பொருளாதாரக் கட்டத்திலும் கல்வித் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக 1835 இல் மெக்காலிய திட்ட வரைவு மூலம் அமுல்படுத்தப் பட்ட அடிமைக் கல்வி முறை இன்றும் தொடர்கிறது. மெக்காலிய வார்த்தையில் இக்கல்வி முறையை விளக்குவது என்றால் இக்கல்வி முறை மூலம் சிலரை நமக்கான (பிரிட்டிஷ்) பலமாக உருவாக்குவதும் நாம் யாரை ஆட்சி செய்ய விரும்புகிறோமோ அவர்கள் இரத்தத்தாலும், வண்ணத்தாலும் இந்தியர்களாகவும், சுவையிலும் எண்ணத்திலும் புரிந்து கொள்வதிலும் பிரிட்டிசாராக இருக்க வேண்டும். 1835இல் இக்கல்விக் கொள்கை பெரும்பாலும் நகர்ப்புற மேட்டுக்குடி களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெரும் பான்மையோருக்கான கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் பள்ளிகளில் இணைந்தவர்களில் 31% சதவீதம் பேரினர்தான் தொடக்கக் கல்வியை நிறைவு செய்திருந்தனர். 1947இல் பிரிட்டிசார் நேரடியாட்சியை விலக்கிக் கொண்ட காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் கிட்டத்தட்ட 15% சதவீதம் பேரினர்தான் கல்வியறிவு பெற்றிருந்தனர்.

1951 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 83.4% சதவீதம் பேர் பள்ளி வாசலை மிதித்ததில்லை. 92.9% சதவீதம் பெண்கள் பள்ளி வாழ்க்கையை அறிந்திராமல் இருந்தனர். அக்காலக் கட்டத்தில் பெரும்பாலும் அறிவியல் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது. சிறிய அளவில் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் இவையனைத்தும் வேலைவாய்ப்பைச் சார்ந்ததாக இருந்தது. இரயில்வே, பாசனம், அஞ்சல், தந்தி போன்ற நிறுவனங்களுக்கு உற்பத்தியாளர்களைத் தயார் செய்வதற்கு அக்கல்வி நிறுவனம் பயன்பட்டது.

ஆனால் கவனிக்கப்பட வேண்டியது என்ன வெனில் அனைத்துத் துறைகளிலும் உயர் பதவிகள் வெள்ளையருக்கே ஒதுக்கப்பட்டது. ஒரு மாணவன் தன் துறையில் வல்லமை பெற வேண்டுமென்றால் பெரும்பான்மையான நேரம் தன் பள்ளிப் பருவத்தில் அன்னிய மொழியான ஆங்கிலத்தைக் கற்க வேண்டியிருந்தது.

எதனால் தமிழக மக்கள் வெள்ளையன் அறிமுகப் படுத்திய கல்வியைக் கற்றனர்? 1. கிழக்கிந்திய கம்பெனியுடன் தொழில் ரீதியாக உறவு கொண்டிருந்த தரகுக் கும்பல் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தொழில் நுட்ப அறிவும் ஆங்கில மொழித் தேர்ச்சியும் பெற வேண்டியிருந்தது. ஆகையால் ஆங்கிலக் கல்வி முறையைப் பொறுப்புடன் படித்தனர். 2. அதிகார வர்க்கமாக மாற விரும்பிய நடுத்தர வர்க்கம் ஆங்கிலக் கல்வியைப் பெறுவதன் மூலம் அரசாங்க வேலைகளில் அமர்வதற்கும் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக ஆவதற்கும் கற்றனர். 3. சாதி ரீதியாக பிளவுண்ட சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாகக் குரல் நெரிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்கிலக் கல்வி பெறுவதன் மூலம் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க முடிந்தது.

ஆங்கிலக் கல்வி முதலில் பிராமணர் மத்தியில் தாக்கம் செலுத்தியது. அடுத்ததாக ஆதிக்கச் சாதி மற்றும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் கல்வி பெற மிகப் பெரிய போராட்டங்கள் நடத்த வேண்டியிருந் தது. வட இந்திய தரகு முதலாளிகளுக்கும், தென்னிந்திய தரகு முதலாளிகளுக்கும் முரண்பாடு முற்றியபோது அதன் உச்சத்தில் தென்னிந்தியாவில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.

இவ்வியக்கம் பார்ப்பனர் அல்லாதோர் உரிமைக்காக சமூக தளத்தில் போராட்டத்தை முன்னெடுத்தது. இதன் விளைவாக இடைநிலைச் சாதிகளில் சிலர் கல்வி கற்க வாய்ப்பாக அமைந்தது. ஆனால் தாழ்த்தப் பட்டோர் கல்வி கற்பிப்பது கடினமான ஒன்றாக இருந்தது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மாணவன் பள்ளியில் இணைந்ததனால் ஒட்டுமொத்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து நின்ற வரலாற்றை நாம் காண முடிகிறது.

பொருளாதார ரீதியாக ஆதிக்கச் சாதியைச் சார்ந்திருந்த தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பிள்ளை களைப் பள்ளிக்கு அனுப்ப அஞ்சினர். கல்வி குறித்து தாழ்த்தப்பட்ட தலைவர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவின. அதாவது பொதுக் கல்வி முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக் கல்வி கவனம் செலுத்த வேண்டும் என்று மறு தரப்பினரும் கூறி வந்தனர். இரண்டு நிலைபாடுகளிலும் நியாயங்கள் இருந்தன.

சமுதாயத்தில் நிலவிய சாதிய வன்மம் பொதுக் கல்வி முறையினால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப் படுவார்கள் என்று எண்ணினர். தாழ்த்தப்பட்டோருக் கான தனிப்பள்ளி அமைத்தால் தாழ்த்தப்பட்டோர் இருத்தலை அது இறுக்கமாக்கும் என்று அஞ்சினர். சில தாழ்த்தப் பட்டோர் தன் சொந்த முயற்சியில் கல்வி நிறுவனங்கள் உருவாக்கிச் செயல்படுத்தினர்.

பிரிட்டிசார் உழைக்கும் மக்களுக்கும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் கல்வி அளிப்பது என்பது கீழ்க்கண்ட நோக்கங்களுக்கே. 1. இந்திய ஆளும் கும்பலைப் பணிய வைக்கச் சில முரண்பாடுகளை உருவாக்க வேண்டியிருந்தது. 2. பிரிட்டிசார் தன் இருத்தலை உறுதி செய்யச் சமூக ரீதியில் அங்கீகாரம் பெற வேண்டியிருந்தது. 3. ஒவ்வொரு சமுதாயத்திலும் (சாதிக்குள்) ஒரு குறிப்பிட்ட அதிகார வர்க்கக் கும்பல் உருவாக்குவதின் மூலம் ஒட்டுமொத்தச் சமுதாயத்தை யும் அடக்கி விடலாம் என்று திட்டமிட்டது.

மொத்தத்தில் மெக்காலிய கல்வி முறை என்பது பிரிட்டிசார் ஆசியுடன் தரகு முதலாளியை வளர்த்து எடுப்பதற்கும், அத்தரகு முதலாளிக்குச் சேவை செய்யக் கூடிய அதிகார வர்க்கத்தை உருவாக்கவும், இவர்களை எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க இயந்திர ரீதியான கல்வி முறையில் சிக்க வைத்துக் கிளிப் பிள்ளைபோல் சொன்னதைச் சொல்லும் அடிமைப் புத்தியை நம் மனதில் உருவாக்கியதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை.

உலகச் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக பிரிட்டிசார் தன் நேரடி ஆட்சியை விலக்கிக் கொண்ட பிறகு, 1947 ஆகஸ்டில் தரகு முதலாளிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்தில் தாம் எதிர் கொள்ள வேண்டிய கடினப் பணியை அதாவது நேற்று வரை பிரிட்டிசு மூலதனத்தை பாதுகாத்த இவர்கள் மற்ற ஏகாதிபத்திய மூலதனத்தை ஈர்க்க உழைக்க வேண்டியிருந்தது.

சனநாயகம் விடுதலை என்று குரல் எழுப்பிய வர்கள் கையில் அடிமைச் சங்கிலி இறுக்கப்பட்டது. கல்வியிலும் அடிமைத்தனம் தொடர்ந்தது. போலி விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48 ஆம் பிரிவின்படி பத்தாண்டுகளில் (1960க்குள்) எல்லாக் குழந்தைகளுக்கும் 14 வயது வரை கல்வி கற்பிக்கப்படும் என்ற வாக்குறுதி இன்றளவும் எட்டப்படாமலேயே இருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் நிறைந்திருந்த கனிம வளங்களை ஏகாதிபத்தியங்கள் சுரண்டுவதற்கும், இந்தியத் தரகு முதலாளிகளின் தொழிற்சாலைக்கு ஏற்ப உட்கட்டுமான வசதி பெருக்கிடப் பல பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இப்பொதுத் துறை நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மனித வளங்களை உருவாக்கும் வண்ணம் உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியா முழுவதும் பரவியிருந்த பல்கலைக் கழகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. ஆனால் விடுதலை கிடைக்கப்பட்டதாக நம்பிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தேவை யான தொடக்கக் கல்வியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1964 67 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசால் அமைக்கப்பட்ட கொத்தாரிக் குழு பரிந்துரைத்த அனைத்து முக்கிய அம்சங்களும் நிராகரிக்கப்பட்டன. அக்குழு வேண்டிய பொதுக் கல்வி முறை இன்றளவும் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பொதுக் கல்வி அமைத்ததின் மூலம் வர்க்க ரீதியாகப் பிரிந்திருக்கும் சமுதாயங்களைப் பள்ளிகளில் ஒன்றிணைப்பதின் மூலம் சமுதாயத்தில் சமத்துவம் அமையும் என அக்குழு கூறியது. அப்படிப் பொதுக் கல்வி அமையாவிட்டால் கல்வி நிறுவனங்களே சமுதாயப் பிரிவை உருவாக்கும் கருவியாக மாறும் என்று எச்சரித்தது.

ஆனால் இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத ஆளும் கும்பல் 1968ஆம் ஆண்டில் கல்விக் கொள்கையை மாற்றியமைத்தது. மீண்டும் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்று பொய் உரை உரைத்தது.

1975ஆம் ஆண்டில் இந்திய தேசிய அரசாங்கத்தை கருத்தியல் ரீதியாக ஒருங் கிணைக்கும் வண்ணமாக மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி 42ஆவது திட்டப் பிரிவு திருத்தத்தின் மூலம் பொது வான பட்டியலுக்கு மாற்றப் பட்டது. இதன் மூலம் இந்தியாவில் சிறை வைக்கப் பட்ட தேசிய இனங்களில் மூச்சுக் காற்று இறுக்கப் பட்டது. இனித் தமிழகத்திற்கான தனிக் கல்வி முறை என்பது சாத்தியமற்றதாக மாறிவிட்டது. 1986இல் இந்தியத் தரகு முதலாளிகள் மத்தியில் ஏற்பட்ட பொருளுதார ரீதியான மாற்றம் அதாவது உலக வங்கியின் ஆணைக் கிணங்கத் தனியார் மயத்தை ஊக்குவிப்பது என்ற நடவடிக்கை கல்வியிலும் எதிரொலித்தது.

அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற முறை மாறி எல்லோருக்கும் எழுத்தறிவு என்ற சொத்தைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொழில் சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. அதாவது, ஐ.டி.ஐ., டிப்ளமோ குறுகிய காலத் தொழில் நுட்பப் படிப்பு இவை அனைத்தும் தொழிற் சார்ந்த நடவடிக்கையாக இருந்தது. இக் காலக் கட்டத்தில் உயர்கல்வியில் மானியம் குறைப்பு உயர் கல்வியில் தனியார் உயர்வு வேரூன்ற வழிவகை செய்யப்பட்டது.

1995இல் ஏற்படுத்தப்பட்ட எஅகூகூ ஒப்பந்தம் கல்வியிலும் தீவிர மாற்றத்தைக் கோரியது. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை 8%லிருந்து 10% வீதம் பேரே உயர் கல்வியை எட்ட முடிகிறது. இங்குக் கல்வி பொருளாகவே மாற்றப்பட்டு விட்டது. 1995க்கு பிறகு அஞ்சல் வழிக் கல்வி, தனியார் பல்கலைக் கழகம், ஏகாதிபத்திய மூலதனத்தைப் பல்கலைக் கழகம்பால் ஈர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலக மயச் சூழலுக்குப் பிறகு தமிழகச் சுய பொருளாதாரம் விவசாயியின் வாழ்க்கை, கிராமப்புற இளைஞர்களின் மேம்பாடு ஆகியவை காவு கொடுக்கப்பட்டு, வளர்ந்த ஏகாதிபத்தியத்திற் கான சேவைத் துறை வளர்ச்சியை ஈடுகட்டும் வகையில் ஐ.டி. போன்ற உயர் கல்வி வளரத் தொடங்கியது. இது மாணவர்கள் மத்தியில் சமத்துவக் கருத்து வேரூன்றுவதற்குப் பதில் போட்டி பொறாமை வளர்த்தெடுக்கப்பட்டது.

விலங்கிலிருந்து மாறுபட்ட மனித நாகரீகம் மறைந்து ஆயிரத்தில் ஒருவனாகத் தன் பிள்ளை இருக்க வேண்டும் என்ற மனநிலை பெற்றோர்களிடம் வளர ஆரம்பித்து விட்டது. மனித நாகரீகம் வளர்க்கும் சமூக அறிவியல், மொழி, இலக்கணம் போன்ற கல்வி புறந்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் பிஞ்சுகள் நெஞ்சில் நஞ்சை விதைப்பதைப் போல் மதவெறிக் கருத்துகளைப் பாட நூற்களில் புகுத்தியது.

2000ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பேய் அமைச்சகத்தைச் சார்ந்த வணிகம் மற்றும் தொழிலுக்கான குழு கல்வியில் சீர்திருத்தங்களைக் காண ஒரு கோட்பாட்டு அணுகுமுறை என்றொரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. இங்கே குறிப்பிட வேண்டியது என்னவெனில் இக்குழுவின் தலைவர் அம்பானி, உறுப்பினர் பிர்லா இவ்வறிக்கையின் பிரதான அம்சம் உயர் கல்வி முழுவதும் தனியார் மயம் ஆக்கப்பட வேண்டும் என்பதே. மேலும் அவற்றில் குறிப்பிடத் தக்க அம்பானி, பிர்லா ஆகியோரின் பரிந்துரைகள் பின்வருமாறு:

1. இந்திய தேசிய அளவிலான ஒரு பொதுவான பாடத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் இச்சவாலை நாம் எதிர் கொள்ள வேண்டும். இப்பரிந்துரையின் மூலம் வெகு விரைவில் கல்வி நடுவண் அரசின் கீழ் வந்து விடும் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ளலாம். 2. சந்தை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். (இந்தியச் சூழலில் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்குவது). 3. பள்ளிகளுக்கான உட்கட்டு மானத்தை மேம்படுத்த நன்கொடை கட்டணம் ஊக்குவிக்கப்பட வேண்டும். பெருந்தொழில் நிறுவனங்களோடு இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்டுபிடிப்புகளுக்கான உழைப்பு ஊதியம் மூலம் நிதி பெற்றிட வேண்டும். 4. உயர் கல்வியில் அரசின் கட்டுப்பாட்டைத் தளர்த்திட வேண்டும். 5. உயர் கல்வியில் நேரடி அந்நிய மூலதனத்தை அனுமதித்திட வேண்டும். 6. உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தேசிய அளவில் மதிப்பீடு செய்து தனியார் நிறுவனங்கள் மூலம் குறியீடு வழங்கப்பட வேண்டும்; குறைந்த குறியீடு வாங்கும் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். 7. பல்கலைக் கழக வளாகங்களில் மாணவர், ஆசிரியர் ஆகியோரின் அரசியல் நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும். அம்பானி, பிர்லா ஆகியோரின் பரிந்துரைகளை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வருவதை நாம் அறிந்ததே. அப்படியானால் ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது பேராசையாகவே கருதப்படும். மேலும் சமூக நீதி முற்றிலும் உயர் கல்வியில் கேள்விக்குறியாக்கப்படும்.

12.8.2005 அன்று ஏழு நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அரசு உதவி பெறாத சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று உத்தரவிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியது. இவ்வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நீதிபதி ஹாசி லொகாத்தி, “நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு பிடிக்காவிட்டால் சொல்லுங்கள், பேசாமல் நீதிமன்றத்தை மூடி விடுகிறோம்'' என்று அரசு வழக்கறிஞர் அட்டார்னி ஜெனரலிடம் கோபத்துடன் கூறினார்.

இது இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் உலக மயத்திற்கு ஏற்ப எவ்வாறு நீதிமன்றங்கள் செயல்படு கின்றன என்று அறியலாம். இத் தீர்ப்புக்குப் பின் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மோசடியான முறையில் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதிலும் அரசுக்கு ஒதுக்கப்படும் 50% சதவீதம் இடத்தில் மட்டுமே.

அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது சமீபத்தில் ஜூலை 20, 2009ம் ஆண்டில் நடுவண் அரசால் நிறைவேற்றப்பட்ட கட்டணம் இல்லாத கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைத்தான். அச்சட்டம் முதன்மையாக 1லிருந்து 6 வரை உள்ள குழந்தை களுக்கான கல்வியிலிருந்து அரசு விலகி நிற்பது சட்டப்படியானது. இதுவரை பேசப்பட்டு வந்த பொதுக் கல்வி முறைக்குச் சட்டப்படியாகச் சவப் பெட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இச் சட்டப்படி தொடக்கப் பள்ளிகளில் தனியார் பங்களிப்பை உறுதி செய்திருக்கிறது நடுவண் அரசு. இதைத் தாண்டி பள்ளிக் கல்விகளில் எந்த முன்னேற்றத்தையும், கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் நாம் பெற முடியாது.

இறுதியாகத் தமிழக அரசு அமுல்படுத்துவதாகச் சொல்லப்படும் சமச்சீர் கல்வியைக் கவனிக்க வேண்டும். சமச்சீர் கல்வி அமைப்பதற்கான சூழலை ஆராயத் தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 உறுப்பினர்களைக் கொண்ட முத்துக்குமரன் குழு தம் அறிக்கையில் ஜூலை 2007இல் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் இந்த அறிக்கையை ஒட்டி இரண்டு வருட காலம் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. பல்வேறு மாணவர் போராட்டத்திற்குப் பின் இறுதியாக 2010 ஆகஸ்டில் தமிழக முதல்வர் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பெற்றோருக்குப் புகார் கடிதம் அனுப்பியும் வைத்தார். முத்துக்குமரன் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் நிராகரிக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பாக மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் போன்ற கல்வி வாரியங்கள் கலைக்கப்பட்டு பொதுக் கல்வி வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை திரிக்கப்பட்டு மேற்கூறிய வாரியங்கள் கலைக்கப் படாமலேயே தமிழகப் பொதுக் கல்வி வாரியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத் தில் தனியார்க் கல்வி மற்றும் அரசுக் கல்வி உட்பட உட்கட்டமைப்பு சமச்சீராக இல்லாத நிலையில் சமச்சீர்க் கல்வி என்பது கேள்விக்குறியானது.

கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் நிலைமை யைப் பற்றிய பரிந்துரைகள் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடக்கக் கல்வி யில் தமிழ் வழிக் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண் டும் என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது. முத்துக் குமரன் குழு பதிவு செய்த இடைநிறுத்தம் பின்வருமாறு:

உயர்நிலைப்பள்ளி 42.45% சதவீதம், மேல்நிலைப் பள்ளிகளில் 69.45% சதவீதம். ஏன்? இந்த இடை நிறுத்தம் என்று அந்தக் குழுவும் சிந்திக்கவில்லை; தமிழக அரசும் கவலைப்படவில்லை. பெரும்பாலும் ஆங்கிலப் பாடப் பிரிவில் தேர்ச்சி பெறாமலேயே இடைநிறுத்தம் ஏற்படுகிறது என்பதைக் கவனிக்காமல் இருப்பது கவலைக்குரியது.

2009ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்திக் கொண்டு வரப்பட்ட வரைவுச் சட்டம் பல்வேறு ஓட்டைகளைக் கொண்டுள்ளது. இச்சட்டப்படி பள்ளிகளில் கட்டணம் தீர்மானிக்கப்படும்போது அப்பள்ளி அமைவிடம், உட்கட்டமைப்பு, நிர்வாகச் செலவுகள் மற்றும் பராமரிப்பு எனப் பலவற்றைக் காரணிகளாகக் கொண்டு கட்டணம் தீர்மானிக்கலாம் என்று கூறுகிறது.

இது எப்படிச் சமச்சீர்க் கல்வியை உறுதி செய்யும். பணம் இருந்தால் தரமான பள்ளிகளில் சேரலாம் என்று சட்டப்படி அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இச்சட்ட வரைவு கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகத் தமிழக பள்ளிகள், சாதியையும், வர்க்கத்தையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. கல்வியில் தமிழும், சமத்துவமும் இல்லாத நிலை தொடர்கிறது. மறுபுறம் இந்தியத் தரகு முதலாளிகளின் சமூக, பொருளாதார இருத்தலை உறுதி செய்ய கட்டாய அடிமைக் கல்வி உறுதி செய்யப்படுகிறது. இதை எதிர்த்து மாணவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயச் சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம் கண்முன்னே இருக்கும் கோரிக்கைகள் இவைதாம்.

1. தமிழ் வழிக் கல்வி, 2. சமத்துவக் கல்வி (பொதுக் கல்வி முறை), 3. தனியார் தலையீடு இல்லாத கல்வி முறை, 4. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடிய கல்வி முறை, 5. கிளிப்பிள்ளை உருவாக்கும் அடிமைக் கல்வியை ஒழித்து விஞ்ஞானப்பூர்வமாக கல்வி முறை. ஆனால் மேற்கூறியவற்றைச் சாத்தியப்படுத்த நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.

கல்வியில் தமிழைக் கொண்டுவர வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டிய நாமே தனித் தமிழ் மொழிப் பள்ளி நடத்துவது சமரசத்திற்கு இட்டுச் செல்லும் இறையாண்மைக் கொண்ட தமிழக அரசு, அந்நிய தலையீடு இல்லாத தமிழக சுயப் பொருளாதாரம் சாத்தியப்படுத்துவதன் மூலம்தான் தமிழை வழக்கத்திற்குக் கொண்டுவரமுடியும். பொதுக் கல்வி கொண்டுவர வேண்டிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊர், சேரி என வர்க்கமாகப் பிரிந்திருக்கும் தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் பொதுப் பள்ளியில் படிக்க வாய்ப்பளிக்கப்படுவதன் மூலம்தான் பிஞ்சு நெஞ்சங்களில் சமத்துவத்தைப் பதிக்க முடியும். இட ஒதுக்கீட்டினால் பயன் அடைந்த நடுத்தர வர்க்கமாக மாறியிருக்கும் மேட்டுக்குடி தாழ்த்தப்பட்டவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தம் அரசியல் நடவடிக்கைகளைச் செயல்படுத்தி விடுகின்றனர். அதைத் தவிர்த்து தொடக்கப் பள்ளிகள் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களை உருவாக்கிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரிவ தில்லை.

தமிழகத்திற்கான உணவுத் தேவை, நுகர்வுப் பொருட்களின் தேவை, அடிப்படை மூலப் பொருட் களைப் பற்றித் திட்டமிட, இறையாண்மை கொண்ட தமிழக அரசு இல்லாத நிலையில் ஒரு மாணவன் தன் துறையில் வல்லமை கொண்டவனாக மாற வேண்டும் என்றால் ஆங்கிலம் கட்டாயம் கற்க வேண்டும் என்ற அவல நிலை தொடர்கிறது. ஆகையால் நமக்கான திட்டத்தை நாமே உருவாக்கும் நிலையைப் பெற்றிட வேண்டும்.

அதாவது அனைத்துப் பெரும் தொழிற்சாலைகளும், விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களும் இறையாண்மை கொண்ட தமிழக அரசின் கீழ்க் கொண்டு வருவதன் மூலமாகத்தான் அந்நிய தலையீடுகளை அகற்றுவதன் மூலமாகத்தான் உயர் கல்வியில் தமிழைக் கொண்டு வர முடியும். ஆக இந்தியத் தரகு முதலாளிகளின் ஏகாதிபத்தியங்களைப் பாதுகாக்கும் இந்தியக் கல்வி முறையை எதிர்த்து மாணவர்களை ஒன்று திரட்டுவோம். பலமிக்க இயக்கங்களைக் கட்டியமைப்போம் புதிய தமிழகம் படைத்திடுவோம்.

Pin It