10.06.1998

வல்லிக்கண்ணன்,
10, வள்ளலார் குடியிருப்பு,
லாயிட்ஸ் சாலை,
சென்னை 600 005.

திரு. தி.க.சிவசங்கரன்,
21-ணி, சுடலை மாடன் கோவில் தெரு,
திருநெல்வேலி  627 006.

பிரிய சகோதரரே வணக்கம். நேற்றும், இன்றும் உங்கள் கடிதம் இல்லை. எனவே, எனது 1ஆம் தேதிக் கவர் கிடைத்த தகவல் தெரியவில்லை.

அந்தக் கவருக்குப் பின்னர் 6ஆம் தேதி கார்டும், 9ம் தேதி இன்லண்டுக் கடிதமும் அனுப்பினேன்.

இன்று விசேஷமான விசேஷங்கள் இருப்பதால் இந்தக் கடிதம். இல்லையெனில், கடிதம் எழுத எனக்கு உற்சாகம் இராது. இன்று அதிகாலையில் சிந்தாதரிப்பேட்டை பாலகிருஷ்ணன் வந்தார். மே 26 அன்று. அதே நாளில் தான் ‘தீபம்’ அச்சுக்கோப்பாளர் ராது துரை மயக்கமுற்று, பாத்ரூமில் விழுந்து கிடந்து, பின் நண்பர்களால் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, செத்துப் போனராம். உடம்பைப் பெற யாரும் இல்லாததால், அது ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறதாம். ராஜதுரை காலமானார் என்ற சேதி ‘தினமணி’ 2ஆம் தேதி இதழில் வந்ததாம். (அதை நான் படித்தேன். ஆனால் அது நம்ம ராஜதுரை என்று எனக்கு விளங்கவில்லை. ‘மூலிகை முரசு’ ஆசிரியர் எனத் தரப்பட்டிருந்தது. வேலூர் ‘மூலிகை மணி’ பத்திரிகையாளர் பரம்பரையாக இருக்கும் என்று எண்ணிவிட்டேன்.)

‘சின்னக்குத்தூசி’ திருவாரூர் தியாகராஜனை ஒரு நாள் பார்க்கக் கூட்டிப் போகிறேன் என்று பால கிருஷ்ணன் சொல்லியிருந்தார். அதுக்காகத்தான் இன்று வந்தார். உங்கள் கடிதம் வந்ததையும் காட்டினார். ஆட்டோவில் அழைத்துப் போனார். திருவல்லிக்கேணி, வல்லப அக்கிரகாரம் லாட்ஜூக்கு தியாகராஜனுக்கு டி.பி. (செப்டம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது).மூல நோய் உண்டு. ‘ரத்தத்தில் சர்க்கரை’ வியாதியும் கூட. சிகிச்சைகள் பெற்று வருகிறார். ஆள் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறார். மெலியவில்லை.

8.15 மணிக்கு அருகில் உள்ள சி.சு.செல்லப்பாவை பார்க்கப் போனேன். ஜனவரி கடைசி வாரம், லாயிட்ஸ் ரோடு கிளினிக்கில் பார்த்தது. 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிளினிக்கில் தங்க நேர்ந்ததாம். பிறகும் சிகிச்சை பெற்றாராம். மூன்று டாக்டர்களிடம், பிழைக்க மாட்டார் என்று சொன்னார்களாம். மகன், மற்றும் உறவினர்கள் வந்தார்களாம். ‘ராமையா கதைகள்’ புத்தகம் போட வைத்திருந்த பணம் இருபதினாயிரமும் பலவழிகளில் செலவாகிவிட்டது. ஆனால் அவர் சாகவில்லை. வெறும் எலும்புக்கூடாகக் காட்சித் தருகிறார். ஆயினும் ஒரு அபிவிருத்தி. எழுந்து நின்று வீட்டினுள் நடக்க முடிகறது. உற்சாகமாக இருக்கிறார். அவருடைய மன உறுதி போற்றப்பட வேண்டியது. உங்கள் கடிதம் வந்தது பற்றிச் சொன்னார்.

Pin It