muslimgal kuriththu ambedkarபார்ப்பனீய, ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கூட்டத்தின் கொடூர நோக்கங்களை தெளிவாகக் கண்டு, அதனை வீழ்த்த கூர்மையானத் தனது எழுத்துக்களை ஆயுதங்களாக்கி அதை எதிரியின் கூடாரத்தை நோக்கி குறி பார்த்து வீசிக்ச்கொண்டிருக்கும் அறிவு ஜீவிதான் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே அவர்கள்.

"முஸ்லீம்கள் குறித்து அம்பேத்கர் " என்ற தலைப்பில், 'இந்துத்துவ வாதிகள் பரப்பி வரும் பதினொரு கட்டுக்கதைகளும் அவை குறித்த உண்மை விபரங்களும்' என்றத் துணை தலைப்பில் ஒரு நூலை நமக்கு கொடுத்திருக்கிறார்.

மேலும்... மதவெறி அச்சுறுத்தலுக்குப் பணியாமல், குஜராத் இனப்படு கொலையில் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முஸ்லீம் மக்களுக்கு துணை நின்று, இந்தியாவின் எதிர்காலத்துக்கு ஒரு நம்பிக்கை ஒளியைக் காப்பாற்றித் தந்த அனைவருக்கும்...."என“ இந்நூலை காணிக்கை யாக்கியிருக்கிறார் ஆனந்த் டெல்டும்டே.

முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் பற்றி என்ன மனப்பான்மையை இந்துத்துவ சக்திகள் கொண்டுள்ளன வோ, அதே போன்ற மனப்பான்மையைத்தான் தலித்துகள் பற்றியும் கொண்டுள்ளன". என்ற முன்னுரையுடன் தொடங்குகிறது இந்த நூல், அம்பேத்கரின் சிந்தனைகள் இந்த மண்ணின் ஒரு விளைபொருள் ஆகும்.

அதன் சிக்கலை தானே வாழ்ந்து உணர்ந்து அதற்கு ஒரு அனைத்தளாவிய தரிசனத்தோடு கூடிய தீர்வை வழங்க நேர்மையாக முயன்ற ஒருவரின் உருவாக்கமாகும் அது. எவ்வளவுதான் பலவிதப்பட்டதாக அது இருந்தாலும், சாரத்தில் அது இந்த நாட்டின் புரட்சிகர சக்திகளின் கருத்தியல் கையிருப்புத் தொகுதி யின் ஒரு முக்கியமான பகுதியாகவே அமைகிறது.

அதனை நாம் முழு ஆர்வத்தோடும் ஆற்றலோடும் காத்து நிற்பது அவசியமாகும்" என்ற ஒரு அழகான அறிமுகத்துடன் இந்த நூல் பேசத் தொடங்குகிறது.

இசுலாமியர் மீது அம்பேத்கர் கொண்ட கருத்துக்களாக;

1.அம்பேத்கர் முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தார்.“

2.முஸ்லீம்களை 'பயங்கரவாதிகள்' என அம்பேத்கர் குறிப்பிட்டார்.

3.அம்பேத்கர் இரு தேசக் கோட்பாட்டை நம்பினார்.

4.அம்பேத்கர் பண்பாட்டு தேசியவாதத்தை நம்பினார்.

5.பவுத்தத்தை ஒழித்தவர்கள் முஸ்லீம்கள் என அம்பேத்கர் கருதினார்.

6.அம்பேத்கர் எழுதிய "பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை" - ஒரு முஸ்லீம் எதிர்ப்பு நூல்

7.முஸ்லீம்கள் எப்போதுமே இந்துக் களுக்கும் இந்தியாவுக்கும் எதிராக வெறுப்பை கக்கி வந்ததாக அம்பேத்கர் எண்ணினார்.

8.இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து அமைதியாக வாழ முடியாது என அம்பேத்கர் நம்பினார்.

9.முஸ்லீம்கள் சீர்திருத்தத்துக்கு எதிரானவர்கள் என்று அவர் களை அம்பேத்கர் வெறுத்தார்.

10.அம்பேத்கர் இந்துக்களின் தரப்பில் இருந்தார்.

11.அம்பேத்கர் ஒரு தேசிய வாதி ஆவார் என்று பல காலமாக இங்கே பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டுக் கதைகளையே தலைப்பு களாக்கி அதை மிக ஆழமாக விவாதித்திருக்கிறார் டெல்டும்டே. “சங்பரிவார் கூட்டத்தின் கறுப்பு பக்கங்களையும், காவிக் கூட்டத்தின் கொடூர சிந்தனைகளையும் அச்சமில்லாமல் அம்பலப் படுத்தியிருக்கிறார்.

1935லே மதம் மாற்றம் பற்றி முதன்முதலில் அம்பேத்கர் அறிவித்த நேரத்தில் ,அவரிடம் அவரது தொண்டர்கள் மதம் மாற விருப்பம் தெரிவித்தபோது அவர்களிடம் இசுலாத்துக்கு மாறும் மாறு அவர் அறிவுருத்தியதை ஆதாரத்துடன் இந்நூல் விளக்குகிறது.

அம்பேத்கர் இசுலாமியர் மீது விமர்சனங்கள் கொண்டிருந்தது உண்மை என்றும், அது பகை முரண் அல்ல; நட்பு முரண் என்றும் இந்நூல் பேசுகிறது.“அதற்கு ஆதாரமாக லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டின்போது இசுலாமியத் தலைவர்கள் மீது அம்பேத்கருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை குறிப்பிடுகிறார்.

இசுலாத்தின் சமத்துவக் கொள்கையை உயர்வாக மதித்தார் அம்பேத்கர். இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களின் பிற்பட்ட நிலைமைக்கு காரணம், இங்கே அமைந்துள்ள தனித்தன்மையான 'இந்து' சூழல்தான். இந்து சுற்றுப் புறத்தின் இந்த பண்பே முஸ்லீம்களுக்குள் ஓயாத பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்குகிறது, அவர்களை மிகுந்த பழமைவாதச் சார்பாளராகவும் ஆக்கியுள்ளது.

மேலும், முஸ்லீம்களுக்கிடையே நிலவிய கேடுகளை அவர் விவாதித்த போதெல்லாம்,அவர்களின் பழமைப் பிடிப்பைக் குறித்து கடுமையாக திறனாய்ந்ததாகத் தெரிகிறது.; ஆனால், கூடவே அதற்கான பழி இந்துக் களையே சாரும் என பகுத்தாய்ந்தார். என்ற அம்பேத்கரின் ஆய்வை இந்நூலிலே நிறுவுகிறார்.

பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை " என்ற அம்பேத்கரின் ஆய்வு நூலில், “சிறுபான்மையினருடன் அதிகாரத்தைப் பகிர்ந்துக் கொள்ள இந்துப் பெரும் பான்மையரிடமிருந்த உள்ளார்ந்த இயலாமைதான் பிரிவினையை தவிர்க்க முடியாததாக்குகிறது என்று அம்பேத்கர் குறிப்பிட்டதை இந்நூல் வலியுறுத்தி சொல்கிறது.

இறுதியாக...“பார்ப்பனீயத்துக்கு எதிரான கலகக் குறியீடாக பவுத்தம் திகழ்ந்ததினாலும், மனித குலத்துக்கு "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற உயர்ந்த கோட்பாட்டை வழங்கியதினாலும், அது ஒரு மதமாக இல்லாமல் இருந்ததினாலும் அம்பேத்கர் பவுத்தத்தை தழுவினார்.

இந்திய ஜனநாயகப் புரட்சியின் திறவு கோலுக்கான வடிவமைப்பை கோடிட்டு காட்டியதினால் தான் அம்பேத்கரின் மேதமை தங்கியுள்ளது என்றும் இந்நூல் நிறுவுகிறது.

எல்லா ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையுடன் இணைந்துதான் தமது விடுதலையையும் அடையப்பட முடியும் என்பதை தலித்துகள் கட்டாயம் உணர வேண்டும்.

ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் அவர் ஆணோ / பெண்ணோ - எந்த நாடு, மதம், வர்ண, இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தலித்தின் தோழர் ஆவார்; “ஒவ்வொரு ஒடுக்குமுறையாளனும் தலித்தின் எதிரி ஆவான்!. என இந்நூல் முடிகிறது.

சிறுபான்மையினரையும், தலித் மக்களையும் சம காலத்தில் சுருட்டிக் கொள்ளப் பார்க்கும், ஆக்டோபஸ் கரங்களை கொண்ட ஆர்.எஸ்.எஸ்.,சங்பரிவார் கும்பலின் சதித்திட்டத்தை புரிந்திட இந்நூல் கட்டாயம் பெருந் துணை புரியும். வாசிப்போம்..! யோசிப்போம்....!

- இரா.திருநாவுக்கரசு

Pin It