sinthanayalan march2014மார்க்சியப்  பெரியார்யப்  பொதுவுடைமைக் கட்சி 8.8.1976இல் நிறுவப்பட்டது.

இக்கட்சி 1977 முதலே நாடாளுமன்ற - சட்ட மன்றத் தேர்தல்களைப் புறக்கணிக்கிறது. ஏன்?

1.இந்திய அரசமைப்பு அவை 9.12.1946 முதல் கூடி, 25.11.1949 வரையில் விவாதித்து, 26.11.1949இல் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.“இந்தச் சட்டம் திராவிட நாட்டு மக்களைக் கட்டுப் படுத்தாது” என்று, 1946 முதலே தந்தை பெரியார் எழுதினார்; பேசினார். அச்சட்டத்தை எதிர்த்து 1957இல் போராடினார்.

2.மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 30.8.1947இல் அரசமைப்பு வரைவுக் குழுவின் முதல் கூட்டத்தை நடத்தினார்; 26.11.1949இல் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றினார்.

ஆனால், அம்பேத்கரே, 2.9.1953 முற்பகலில், தில்லி மாநிலங்கள் அவையில், நேரு முன்னிலையில், பின்வருமாறு பேசினார் :

“இந்தச் சட்டத்தில் என் விருப்பத்துக்கு மாறாக - எதையெல்லாம் எழுதச் சொன்னார்களோ அவற்றையெல்லாம் எழுதினேன். ஆனால், இந்தச் சட் டத்தை எரிப்பதற்கு நான் முதலாவது ஆளாக இருப்பேன். இந்தச் சட்டத்தை நான் விரும்பவில்லை; இது யாருக்கும் உதவாது” என்றே பேசினார்.
ஏன், இந்த இருபெருந் தலைவர்களும் மேலே கண்டவாறு பேசினர் - எழுதினர்?

இந்திய அரசமைப்புச் சட்டம் வருணாசிரமத்தையும் ஸ்மிருதி, சுருதிக் கொள்கைகளையும் காப்பாற்றும் என்று கூறுவதால், பெரியார் எதிர்த்தார்.

“இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதுவரையில் அமலில் இருந்த பழைய வழக்கச் சட்டங்கள் செல்லுபடி ஆகமாட்டா” என்று, அம்பேத்கர் ஒரு சட்டத் திருத் தத்தை முன்மொழிந்தார். அது நிறைவேற்றப்பட முடியாது என்று கூறிவிட்டனர். அதனால் மனம் நொந்து அப்படிப் பேசினார்.

இவற்றின் விளைவு என்ன?

‘சூத்திரர்’ என்கிற பிறவி இழிவு, இன்றும் - 2014-லிலும் சூத்திரரும், ஆதி சூத்திரரும் உள்ளிட்ட 94 விழுக்காடு மக்களுக்கு இருக்கிறது. இது உண்மை.

1946 சூன் முதல் 17 ஆண்டுகள் பண்டித நேருவும், இன்றுவரையில் 55 ஆண்டுகள் நேரு குடும்பத்தின் தலைமையிலான காங்கிரசுக் கட்சியும், ஓர் எட்டு ஆண்டுகள் சனதா, பாரதிய சனதா கட்சிகளும், மற்றக் கட்சிகளும் இந்தியாவை ஆண்டுவிட்டன.

இக்கட்சிகள் ஆளுவதற்குப் பொதுவுடைமைக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும், மற்றக் கட்சிகளும் மாறி மாறி ஆதரவு அளித்தன. ஆனாலும் விடுதலை பெற்ற ஒரு நாட்டில், வெகுமக்களாக இருப்பவர் களுக்கு, குறிப்பிட்ட காலத்தில், என்ன என்ன உரிமை கள் வந்திருக்க வேண்டுமோ அவை வந்துசேரவில்லை, இது இன்றும் உண்மையா? ஆம்!

இன்றைய இந்தியாவில் 127 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களுள், 2014இல், 28.7 கோடிப் பேருக்கு எழுத்தறிவு இல்லை.

எழுத்தறிவு இல்லாதவர்களில் ஒரு பார்ப்பானோ, சத்திரியனோ, வைசியனோ, மேல்சாதிச் சூத்திரனோ; மேல்தட்டு இசுலாமியனோ, கிறித்துவனோ, சீக்கியனோ இல்லை; இல்லை; இல்லை. எழுத்தறிவு இல்லாத எல்லோரும் சூத்திரரும் - ஆதிசூத்திரரும் - பழங்குடிகளும் ஆன உழைப்பாளி மக்களே ஆவர்.

அதிலும் தமிழ்நாட்டில் எழுத்தறிவு இல்லாத 115 இலக்கம் பேரும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் ஆதித்திராவிட மக்களே.

85 விழுக்காடு பேருக்கு எழுத்தறிவு உள்ள தமிழ் நாட்டில், 5ஆம் வகுப்பில் படிக்கும் ஒரு குழந்தைக்கு, இரண்டாம் வகுப்புப் புத்தகத்தைப் பார்த்து எழுதவோ, படிக்கவோ தெரியாது என, கல்விநிலை பற்றிய ஓர் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இது `அப்படி இல்லை’ என்று தமிழக அரசு மறுக்கிறது. திராவிடக் கட்சி களின் ஆட்சியில் தொடக்கக் கல்வி பாழடிக்கப்பட்டு விட்டது என்பது உண்மை; உண்மை; உண்மை.

இந்தியஅளவில், 10 வரையிலான “பள்ளிப் படிப்பை”, 1 முதல் 10 வரை தொடர முடியாமல், இடையில் விட்டுவிடுகிறவர்கள் 40 விழுக்காடு பேர். அதாவது, 100 பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தால், 40 பேர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். இது ஏன்?

இதற்கு, முதலாவது காரணம் ஏழ்மை; இரண்டாவது காரணம் பெற்றோரின் கல்வி அறிவு இன்மை; மூன்றாவது காரணம் அரசுப் பள்ளிகளின் - ஈன நிலை யும், ஆசிரியர்களின் கழிப்பிணித்தனமும்; மற்றும் புறச் சூழல்களும் ஆகும்.

எல்லோருக்கும் இலவசமான - கட்டாயமான - ஒரே வகையான - ஒரே தரம் உள்ள பள்ளிக் கல்வியை 67 ஆண்டுகளாக அளிக்கத் தவறிய காங்கிரசுக் கட்சியும் அதன் அடிதாங்கிகளும் எதற்காக இனியும் இந்தியாவை ஆளவேண்டும்? இதற்கு மாறி மாறித் துணைபோகும் குட்டிக்குட்டி மாநிலக் கட்சிகள் எதற்காக நாடாளுமன்றத் துக்கும், சட்டமன்றத்துக்கும் அனுப்பி வைக்கப்படவேண்டும்?

790 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், 4200 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்து, அவரவர் பதவி பெறவும், பவிசு பெறவும், பணக் கொள்ளை அடிக்கவும் வேண்டியா இவர்களுக்கு வாக்குப் போட வேண்டும்? இத்துடன் மட்டுமா?

2014லிலும் எந்தப் படித்த - படிக்காத பார்ப்பானும் மேழி பிடித்ததில்லை; ஏர் ஓட்டியது இல்லை; எரு இறைத்தது இல்லை; எந்தப் பார்ப்பனத்தியும் களை வெட்டியது இல்லை; பயிர் நட்டது இல்லை; ஆடு, மாடு மேய்த்தது இல்லை.

இவற்றை யெல்லாம், உடலைத் தண்டித்து, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பனியில் நடுங்கி உழைத்து, உழைத்து 25 கோடி டன் உணவுத் தானியங்களை இன்று உற்பத்தி செய்கிறவர்கள் ஏழைச் சூத்திரர்களும், வஞ்சிக்கப்பட்ட ஆதிசூத்திரர்களுமே ஆவர். இப்படிப்பட்ட நிலையில், 2012 கணக்குப்படி இந்தியாவில் இராப்பட்டினி கிடப்பவர்கள் 30 கோடிப் பேருக்கும் மேல்.

இவர்கள் எந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்? சொந்தமாக வேளாண் நிலம் இல்லாத சூத்திரரும், ஆதிசூத்திரரும் அல்லவா?

இவர்கள் இனியும் ஏன் வாக்குப் போடவேண்டும்? இந்திய அரசும், மாநில அரசுகளும் தமிழ்நாட்டு அரசும் குடிமக்களுக்கு நல்ல குடிநீர் தர வக்கற்றவை.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதிலும் ஓர் இலக்கம் குடிசைக் குடியிருப்புகள் (Slums) இருக்கின்றன. உண்மையில் இக்குடிசைகளில் குடியிருக்கும் பல கோடி மக்கள் யார்? முதலில் ஆதிசூத்திரரும் அடுத்து மீனவரும் மற்றச் சூத்திரருமே அல்லவா? விடுதலை பெற்ற 67 ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் இந்த இழிநிலை இருக்கவேண்டும்?

சிற்றூர்ப்புறங்களில் அவரவர் வீட்டில் ஊராட்சி, நகராட்சிக் குழாய் நீர் 46 விழுக்காடு வீடுகளுக்கே கிடைக்கிறது; நகர்ப்புற வீடுகளில் 77 விழுக்காடு வீடுகளுக்கே கிடைக்கிறது. பாதி எண்ணிக்கை வீடுகளில், சிற்றூர்ப் புறங்களில் கழிவறை - குளியலறை இல்லை. இது எப்படி நாகரிக வாழ்க்கை நிலையாகும்? இதை ஏன் நாம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என இளைஞர்களும் படித்தவர்களும் கொதித்து எழவேண்டாமா?

27.1.2014இல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம், மின்துறை நிபுணர்கள் அளித்த அறிக்கையின் படி, இந்தியாவில் 7.5 கோடி வீடுகளுக்கு மின்இணைப்பு இல்லை.

சிற்றூர்களில் சராசரியாக ஒரு மாதத்துக்கு 8 யூனிட் மின்சாரமும், நகரங்களில் சராசரியாக ஒரு மாதத்துக்கு 24 யூனிட் மின்சாரமும் தரப்படுகிறது.
இந்தக் குறைந்த அளவு மின்சாரமும் தடையில் லாமல் கிடைப்பது இல்லை.

இதைக்கொண்டு வீடுகளில் விளக்கு எரிப்பது, வேளாண் நிலங்களுக்கு நீர் இறைப்பது, குறு-சிறு தொழில்களைப் பல குடும்பத்தினர் செய்வது எப்படி முடியும்?

இந்திய அரசமைப்பின் முகவுரையில், “இந்தியா ஒரு முற்றுரிமை பெற்ற சமதர்ம மதச் சார்பற்ற மக்கள் நாயகக் குடிஅரசு” என்று நீட்டி முழக்கி எழுதினார்கள்.

மேலே கண்ட கேடுகெட்ட தன்மையில் ஆட்சி செய்தவர்களுக்கு, சோவியத்து இரஷ்யாவில், மின் வசதி பற்றி, இலெனின் எப்படிப்பட்ட கொள்கையை வகுத்தார் என்பது தெரியாதா? “மின்சாரமும் கூட்டுறவு அமைப்பும் சமதர்மத்துக்குச் சமம்” (Electricity plus Co-operatives is equal to socialism) என்று 1920களிலேயே இலெனின் சொன்னாரே!

சோவியத்து நாட்டை 1930களிலேயே பார்த்துவந்த பண்டித நேரு மனம் வைத்திருந்தால், நெய்வேலி லிக்னைட் குழுமம் (NLC) போல், எண்ணற்ற பொதுத் துறை மின் உற்பத்திக் குழுமங்களை மூன்றாவது அய்ந்தாண்டுத் திட்டத்துக்குள் நிறைவேற்றியிருக்க முடியுமே!

நேருவின் மகள் இந்திராகாந்தி 1984க்குள் மின் தேவையை நிறைவேற்றியிருக்க முடியுமே! 2004 முதல் பத்து ஆண்டுக்காலமாக ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமையேற்றிருக்கிற சோனியா காந்தியும், அவருடைய ஏவலராக இயங்குகிற பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் இந்தியாவுக்கு வேண்டிய மின்தேவையை நிறைவு செய்திருக்க முடியுமே!

“பாரத் நிர்மாண்” என்கிற இந்திய அரசுத் துறையின் - 6.2.2014 அன்றைய செய்தித்தாள் விளம்பரப்படி, இந்தியாவில் 2012-13இல் தனியொருவர் மின்சார நுகர்வு ஆண்டுக்குச் சராசரியாக 813 யூனிட்டுகள் மட்டுமே. 2012-13ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தி 20,660 மெகாவாட் மட்டுமே.

கடந்த 9 ஆண்டுகளில் மொத்த மின்உற்பத்தி 32,431.6 கோடி மெகா வாட் மட்டுமே! ஏன்? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமராக உள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பொறுப்பில் இயங்கிய - அனல்மின் உற்பத்திக்கான நிலக்கரிக் கனிமச்சுரங்கங்கள் ஏலத்தில், 1.86 இலட்சம் கோடி ரூபாவுக்கு மேல் பலரால் கொள்ளையடிக்கப் பட்டுவிட்டது.

ஆட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், மொட்டைப் பார்ப்பனத்தி திருட்டுத்தனமாகப் பெற்ற பிள்ளையை மூடி மறைப்பதுபோல - இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலக்கொள்கையில் நடந்த கையாடலை மூடி மறைக்கிறார்கள். அப்புறம் விரைந்த அனல் மின் உற்பத்தித் திட்டம் எப்படிச் செயல்படும்?

இவ்வளவையும் எல்லோரும் படியுங்கள். பின்வரும் செய்திகளைப்பற்றிப் படித்த இளைஞர்களும், அரசியல் பற்றிக் கவலைப்படுகிறவர்களும் ஆர அமரச் சிந்தி யுங்கள் - விவாதியுங்கள் என அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

1. பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் மெத்தப் படித்தவர்; நாட்டு விடுதலைப் போராளி; தாம் எழுதிய நூல்களுக்குக் கிடைத்த மதிப்பூதியம் - உரிமைத் தொகை போன்ற தனி வருமான வழியை மட்டுமே கொண்டிருந்தவர்.

அவர் 1955இல் முதன்முதலாகத் தம்மை ஒரு பார்ப்பனர் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். காகா கலேல்கர் என்கிறவர் தலைமையிலான முத லாவது பிற்படுத்தப்பட்டோர் குழு அறிக்கையைப் பெற்றுக் கொண்ட அந்த நாளில், அவர் தன்னை ஒரு பார்ப்பனர் எனக் காட்டிக் கொண்டார்.

அதே நேரு, தாம் பிரதமராக இருந்தபோது, தம் மகள் பிரியதரிசினி இந்திராகாந்தியை அனைத்திந்தியக் காங்கிரசுக்குத் தலைவராக ஆக்கினார்.
தந்தை பிரதமர்; மகள் ஆளும் கட்சிக்குத் தலைவர்.

அதாவது, இந்தியாவில் குடும்ப வாரிசு அரசியல் கொள்கைக்கு வித்திட்டவர் - சமதர்மம் பேசிய - சமாதானப் புறா, நேருவே. அப்புறம்தான் - சவுத்ரி சரண் சிங், தேவிலால், பட்நாயக், தேவகௌடா, கலைஞர் கருணாநிதி, பாபு ஜகஜீவன்ராம், முலாயம் சிங், லாலு பிரசாத், இராம தாசு போன்றோர் அதையே பின்பற்றினர்.

இந்தியத் தேசியக் காங்கிரசுக்கு இன்று வயது 129!

இன்று 95ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பின ராக உள்ளவர் காங்கிரசு விடுதலைப் போராட்ட வீரர் ரிஷாங் கேஷிங் என்கிற மணிப்பூர் மாநிலக்காரர். இவர் 1952-57இல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார்; பிறகு நான்கு தடவைகள் மணிப்பூர் முதலமைச்சராகப் பணியாற்றினார்; இரண்டாந்தடவை யாக 2009-2014 நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் (“தினமணி”, 3.2.14).

இவரைப்போன்று 75, 85, 95 அகவை நிரம்பிய இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரேனும் உயிரோடு நலமாக நம்மோடு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஓர் இந்தியரை மணந்ததால், மதிப்புமிக்க இந்தியக்குடிமகளாக இருக்கிற ஒரு சோனியாகாந்தி - மாபெரும் வரலாறு படைத்த இந்தியத் தேசியக் காங்கிரசுக்குத் தலைவராக இருப்பது ஓர் அவமானம்; ஓர் அவலம் என்கிற உணர்வு மான முள்ள காங்கிரசாருக்கு வரவேண்டும்.

ஒரு பிரதமரான இராஜீவ் காந்தி - சோனியா இணையரின் மகன் என்கிற ஒரே தகுதி காரணமாக, ஒரு கற்றுக்குட்டியான - மைக்ரோ சாஃப்ட் முதலாளி யான பெரும்பணக்காரர் பில்கேட்சின் மற்றும் பில் கேட்சு மனைவியின் பின்புலத்தோடு இயங்குகிற - மானங்கெட்ட காங்கிரசுக் கட்சியின் இன்றையத் துணைத்தலைவரான இராகுல்காந்தி நாளைய இந்தியப் பிரதமராக வர விரும்புவது சரியா, முறையா, நீதியா, நியாயமா - இதுதான் மக்கள் நாயக ஆட்சி முறையின் இலக்கணமா? என எல்லோரும் சிந்திக்க வேண்டும்.

1969இல் காங்கிரசின் குடிஅரசுத் தலைவர் வேட்பாள ராக, நீலம் சஞ்சீவி ரெட்டியை முன்மொழிந்தவர் இந்திரா காந்தி. அடுத்த நாளே, காங்கிரசு வேட்பாளருக்கு எதிராகப், போட்டியாக, வி.வி.கிரியை இந்திராகாந்தியே முன்மொழிந் தார். 16.8.1969 இரவு, முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் ஆதரவைப் பெற்ற இந்திராகாந்தி அவர்கள், காமராசரின் நன்பர் சஞ்சீவி ரெட்டியைத் தோற்கடிக்க வழி கண்டார். காமராசர் தோற்றார். அந்தக் காமராசர் காங்கிரசை இனித் தமிழகத்தில் தலைதூக்க வைக்கவே முடியாது.

1969க்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரசுக்குள் வந்த காங்கிரசுத் தலைவர்கள் எல்லோரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் இவர்களைத் தமிழர்கள் புறங்காண வேண்டும்; புறம் காண்பார்கள்.

அடுத்துத் தமிழகத்து ஊர்தோறும் “தாமரை” தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்திய பெரிய கேட்டினை இரண்டு திராவிடக் கட்சிக்காரர்களும், அவர்களின் அணிக்காரக் கூட்டணிக்கட்சியினருமே செய்தனர்.

தமிழகம் என்றால் அ.தி.மு.க. - தி.மு.க. இரண்டுக் கும் அப்பால்தான் என்ற நிலை இருந்தது.

இன்று இந்தியாவின் பிரதமர் இராகுலா, நானா என்று அறைகூவல் விடுத்து, இந்தியா முழுவதையும் வலம் வரும் ஆர்.எஸ்.எஸ். அருந்தொண்டர் நரேந்திர மோடி, தன் கொள்கையை, ஒரே வரியில், கல்கத்தாவில், 5.2.2014இல் துலாம்பரமாக அறிவித்துவிட்டார். அது என்ன?

“இந்திய அரசமைப்புச்சட்டம், இந்திய அரசாங்கத்துக்கு ஒரே மதப் புத்தகம்” என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார் (“தினத்தந்தி”, 6.2.2014).
இந்திய அரசமைப்புச் சட்டம் மனுநீதியின் மறு பதிப்பு.

எனவே, பாரதிய சனதா ஆட்சிக்கு வந்தால், இதன்படி, 1. இராமர் கோவில் கட்டப்படும். 2. சேதுக் கால்வாய்த் திட்டம் கைவிடப்படும். 3. ‘இந்துத்துவா’ என்பது “இந்தியத் தேசிய உணர்ச்சி” - வேற்றுமையில் ஒற்றுமை என்பது காக்கப்படும். அதாவது, மனுநீதிக்கொள்கை இந்தியாவிலுள்ள 6 இலட்சம் சிற்றூர்களிலும் கொடிகட்டிப் பறக்கும்.

ஆனால், எல்லோருக்கும் எல்லாம் வரவேண்டும் என்கிற இலக்கை நோக்கி, இவர்களில் எவரும் இந்தியரை - தமிழரை அழைத்துச் செல்ல மாட்டார்கள். இது உறுதி.

எனவே,

எல்லோரும் இவர்களைப் புறக்கணியுங்கள்!

எல்லோரும் தேர்தலைப் புறக்கணியுங்கள்!

ஒடுக்கப்பட்ட வகுப்பினரை ஒன்றுதிரட்டி, மக்களுக்கான மாற்று அரசைக் காண எல்லோரும் மனமுவந்து முன்வாருங்கள்!

- வே. ஆனைமுத்து

Pin It