tharinaada 300இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டு தோறும் அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில் சுப்ரபாரதிமணியனின் நாவல் “தறி நாடா” சிறந்த நாவலுக்கானப் பரிசைப் பெற்றது. நல்லி குப்புசாமி பரிசுகளை வழங்கினார். குறிஞ்சி வேலன், பாவைச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிற நூல்களுக்கானப் பரிசு பெற்றவர் களில் சிலர்: ஆட்டனத்தி, க.ப அறவாணன், (சிறுகதை), யூமா வாசுகி (மொழிபெயர்ப்பு), தஞ்சாவூர் கவிராயர் (கவிதை), தேவி நாச்சியப்பன் (சிறுவர் இலக்கியம்), இரா. மோகன் (இலக்கிய ஆய்வு) வீரநாதன் (அறிவியல்), மதுரை கர்ணன். (பொது) மற்றும் இலக்கிய இதழ்கள் முகம், தொடரும், ஆலம்பொழில். சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் தலைமையிலான குழு விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

சுப்ரபாரதிமணியனின் நாவல் “தறிநாடா” பற்றி...

நெசவாளர் வாழ்க்கை சார்ந்த இலக்கிய பதிவுகள் தமிழில் குறைவாகவே இருக்கின்றன. சோசலிச யதார்த்த வாதம் என்ற முத்திரையுடன் தொ.மு.சி இரகுநாதனின் “பஞ்சும் பசியும்” முன் நிற்கிறது. திருப்பூரில் நடை பெற்ற நாற்பதாண்டுகளும் முந்திய நெசவாளர் போராட்டம் ஒன்றினை இந்நாவல் மையமாகக் கொண்டுள்ளது. கூலி உயர்விற்காக கூட அவர்கள் போராடவில்லை.

குறைத்த கூலியை சீராக்கக் கோரி தான் அப்போராட்டம் நடைபெற்றது. தொழிற்சங்கரீதியாக நெசவாளர்கள் போராடினார்கள் என்பதை விட ஜாதிய ரீதியில் ஒன்றுபட்டது அந்தப் போராட்டத்தின் பலவீனமாகும். நெசவாளர் சமூகம் சார்ந்த தொன்மக் கதைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன. தொன்ம மனிதர்களின் பிரதிகளான அவர்கள் வாழ்க்கை நிகழ் காலத்தில் விரிகிறது.

ஜாதீய வன்முறைகளைக் கண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அரசின் அலட்சியமும் அவர்களை அந்நியமாக்குகிறது. பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு அரிசி கடத்தவும் செல்கிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழ்க்கை மீதான பார்வையும் அவனின் எதிர்கால லட்சியமும் மாறுவதை இந்நாவல் சித்தரிக்கிறது.
“இதென்ன எம்.ஜி. ஆர் வாளா. கையில் எடுத்ததும், பிரச்சினை தீர்ந்து போறதுக்கு.

கொல்லன் பட்டறை யிலே இருக்கறது, தட்டித்தட்டிதா செழுமையாக்க முடியும். தானே செழுமையாகும்” என்ற இயங்கியல் அவனின் வாழ்க்கையில் வித்தாகிறது. போராட்டமும் பொதுவுடமை இயக்க வாழ்வும் அவன் ஏற்றுக் கொள்கிறதாகிறது.

உலகமயமாக்கல் சூழலில் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவிழந்து கொண்டிருக்கும் நிலையிலும், இளைஞர்களின் கவனம் அரசியலுக்கு மாறாத நுகர்வுச் சூழலிலும் இந்நாவலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது.

தொழிற்சங்கங்கள் அரசியலுக்குள் வரவேண்டும். அரசியல் அதிகாரம் இல்லாமல் தொழிற்சங்கங்கள் செயல்பட முடியாது. தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியாது. பொருளாதார இயல்பில் எல்லாம் மாறும், வளரும். ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வுகளின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவது புதிய சமூகத்தை நிர்ணயிக்கும் என்பதை வலீழ்வியல் மூலம் இந்நாவல் முன்வைக்கிறது.

தறிநாடா

ஆசிரியர்: சுப்ரபாரதிமணியன்

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-க்ஷ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098.

விலை: ரூ. 185/-

Pin It