படித்துப் பாருங்களேன்...

Daniel Jeayaraj, 2006 Bartholomaus Ziegenbalg, The Father of Modern Protestant, Bartholomaus Ziegenbaig.s

Genealogy of the south Indian deities ,Translate by Daniel Jeyaraj - 2005

தரங்கம்பாடி மறைத்தளம் கிறித்தவ சமயப்பரப்பில் ஒரு பகுதியாகச் சில பொதுப்பணிகளை மேற்கொண்டது. இப்பணிகள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவிகரமாக அமைந்ததுடன் தமிழரின் மருத்துவ அறிவை ஐரோப்பி யர்கள், குறிப்பாக ஜெர்மானியர்கள் அறியும்படி செய்தது.

இவ்வகையில் தரங்கம்பாடியில் பணியாற்றிய சீகன்பால்குவும், அவரது சகபணியாளர்களும் மேற் கொண்ட பணிகள் பின்வருமாறு அமைந்தன:

1.         பள்ளிக்கூடம் நிறுவுதல்

2.         அச்சகமும் காகித ஆலையும் நிறுவுதல்

3.         நூல்கள் எழுதுதல்

4.         தமிழ் மருத்துவத்தை ஜெர்மானியர் அறியச் செய்தல்

பள்ளிக்கூடம் நிறுவுதல்

தரங்கம்பாடி மறைத்தளம் நிறுவப்படும் முன் பிருந்தே தரங்கம்பாடிப் பகுதியில் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் செயல்பட்டிருந்த இப்பள்ளிக்கூடங்களில் அடிப்படை எழுத்தறிவும், கணித அறிவும் மாணவர் களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன. மடங்களிலும் கோயில்களிலும் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும் சமய நூல்களையும் கற்பித்தனர். என்றாலும் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக அடித்தள மக்கள் பிரிவினர் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறவில்லை. கல்வி ஜனநாயகப்படுத்தப்படவில்லை.

ஜெர்மன் லுத்தரன்மிஷன் பெரும்பாலும் அடித்தள மக்கள் பிரிவினரையே, கிறித்துவர்களாக்கியது. இவர் களில் பெரும்பாலோருக்கு, கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. விவிலிய வாசிப்பையும் அடிப்படையான சில கிறித்துவ நூல்களையும் அவர்களிடம் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. இப்புதிய கிறித்தவர்களின் பிள்ளைகளாவது இவற்றை அறிந்திருக்க வேண்டுமென்று மறைத்தளப் பொறுப்பாளர்கள் விரும்பினர். விவிலிய வாசிப்பிற்குச் சீர்திருத்த கிறித்தவம் முக்கியத்துவம் அளித்து வந்ததால் வாசிப்பறிவு புதிய கிறித்தவர்களிடம் இடம்பெறுவது அவசியமான ஒன்றாயிற்று.

இத்தகைய தேவையினால் 28 டிசம்பர் 1707 இல் கிறித்தவர்களாக மதம்மாறியவர்களின் பிள்ளைகளுக்காகத் தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினர். இங்கு பயிலும் மாணவர்களுக்கு எழுதுபொருள்களும், உணவு, உடை, உறையுள் ஆகியனவும் இலவசமாக வழங்கப் பட்டன. கத்தோலிக்கத்திலிருந்து சீர்திருத்தக் கிறித்து வத்திற்கு மதம்மாறிய ஒருவர் இப்பள்ளியின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மறைப் பணியாளர் எழுதிய அல்லது மொழிபெயர்த்த பாடநூல்களை மாணவர்கள் பயின்றனர். (டேனியல் ஜெயராஜ் 2006:169).

காலை 6 மணிக்குத் தொடங்கி 11 மணிவரை நடை பெறும் வகுப்புக்களில் கிறித்தவ மறைக்கல்வி கற்பிக்கப் படும். இடையில் காலை 8 மணிக்கு ‘பணியாரம்’ உண்பார்கள். 11 மணியிலிருந்து 12 மணிமுதல் மதிய உணவு நேரம் ஆகும். 12 மணிமுதல் 1 மணிவரை ஓய்வு நேரம் ஆகும். 1 மணியிலிருந்து 3 மணிவரை பையன்கள் படிப்பார்கள். பெண்குழந்தைகள் ஓய்வெடுப்பர். 3 மணியிலிருந்து 4 மணிவரை பையன்களும், பெண் குழந்தைகளும் கணிதம் பயில்வார்கள். 4 மணியிலிருந்து 6 மணிவரை மறைக்கல்வி. 6 மணியிலிருந்து 7 மணி வரை மொட்டைமாடியில் உடற்பயிற்சி, வானியல் கற்றல், கற்ற பாடங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஆகியன நிகழும். 7 மணிமுதல் 8 மணிவரை இரவு உணவு. மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போது புதிய ஏற்பாட்டிலிருந்து ஓர் இயலை ஆசிரியர்கள் உரக்கப் படிப்பார்கள். 8 மணியிலிருந்து 9 மணிவரை ஓய்வும் வழிபாடும். 9 மணிக்கு உறங்கச் செல்வர் (மேலது). 

ஓரே சாதியினர் உறவினர் நண்பர் என்றிருந்தாலும் கூட கிறித்தவராக மதம் மாறியவர்மீது கிறித்தவர் ஆகாதோர் பகைமையும் வெறுப்பும் பாராட்டினர். இதைத் தவிர்க்கும் முகமாக கிறித்தவர் அல்லாதவருக்கு என்று பள்ளி ஒன்றை குருண்ட்லர் என்ற மறைப் பணியாளர் 1715ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் நிறுவினார். இப்பள்ளியில் பயின்றோருக்கு ஐரோப்பியக் கிழக்கிந்திய கம்பெனிகளிலும் பிறவணிகரிடத்தும் வேலை வாய்ப்புக்கிட்டும் என்பதுடன், கிறித்துவ மாணவர்க்கிடையிலும் ஊடாட்டம் நிகழ்ந்து காழ்ப் புணர்ச்சி மறையும் என்றும் குருண்ட்லர் நம்பினார். இப்பள்ளி குறித்த அறிவிப்புகளைத் தரங்கம்பாடியின் பொது இடங்களிலும் இடம்பெறச்செய்தார். (மேலது 176).

இப்பள்ளி தொடங்கி நான்கு மாதங்களில் கிறித்தவர் அல்லாத 70 மாணவர்கள் சேர்ந்தனர். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த, பல்வேறு சமூகப் பொருளாதாரப் பின்புலத்தைச் சேர்ந்த இம்மாணவர்களும் கிறித்துவ மாணவர்களும் ஒன்றாகத் தங்கி ஒன்றாகக் கல்வி பயின்றது என்பது தமிழக வரலாற்றில் புதிய தொடக்கமாக அமைந்தது.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தம்வீடுகளில் கிறித்தவப் பிரார்த்தனைகளைக் கூற ஆரம்பித்தபோது அவர்களது பெற்றோர்கள் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். 1718 ஆம் ஆண்டில் இப்பள்ளி தரங்கம்பாடியில் இருந்து பொறையாருக்கு இடம்பெயர்ந்து சிலகாலம் செயல்பட்டது (மேலது 176).

அச்சகம்

இந்தியாவிலே முதல்முறையாக அச்சாக்கம் கோவாவிலும், கேரளத்தில் உள்ள அம்பலக்காட்டிலும் நிகழ்ந்தது. ‘தம்பிரான் வணக்கம்’ என்ற தமிழ்நூல் 1578இல் அம்பலக்காட்டில் அச்சானது. இந்தியாவின் முதல் அச்சுநூல் என்ற பெருமையை இந்நூல் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 1579-இல் ‘கிறிசித்தியாணி வணக்கம்’ என்ற நூலும் 1586இல் ‘அடியார் வரலாறு’ என்ற நூலும் அச்சாயின. இவற்றைக் கத்தோலிக்க மறைப்பணியாளரான அண்ட்ரிக் அடிகளார் வெளி யிட்டார். இதன் பின்னர் தமிழ் அச்சாக்கம் குறித்த செய்திகள் நமக்குக் கிட்டவில்லை. நீண்ட இடை வெளிக்குப்பின் 1712இல் தான் தமிழ் அச்சாக்கம் முயற்சிகள் சீகன்பால்குவால் தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டன.

பன்மொழி அச்சகம் என்று கூறத்தக்க அளவில் தமிழ் அச்சுக்கள் மட்டுமின்றி போர்த்துகீஸ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய ஐரோப்பிய மொழிகளின் அச்சுக்கள் இங்கிருந்தன.

1712இல் ‘தரங்கம்பாடியில் இருக்கும் குருமார்கள் தமிழ்ச்சாதியார் எல்லோருக்கும் எழுதின நிருபம்’ என்ற தலைப்பில் சீகன்பால்கு எழுதிய கடிதம் இவ்வச்சகத்தின் முதல் வெளியீடாக அமைந்தது. சமயம் சார்ந்தநூல்கள் மட்டுமின்றிப் பாடநூல்களும் இங்கு அச்சாயின. 1712 தொடங்கி 1719இல் சீகன்பால்கு மறையும் வரை தரங்கம்பாடி அச்சகத்தில் அச்சிடப்பட்ட நூல்கள், அறிவிக்கை, குறுநூல்கள் ஆகியனவற்றின் பட்டியலை டேனியல் ஜெயராஜ் (2006:187,190) தொகுத்தளித் துள்ளார்.

காகித ஆலை

தரங்கம்பாடி அச்சகம் அதிக அளவில் நூல்களை அச்சிடத் தொடங்கியதால் காகிதத்தின் தேவை அதிகரித்தது. இதை நிறைவு செய்யும் வகையில் பொறையாறில் உள்ள ஜெருசலம் தோட்டத்தில் 13 சனவரி 1716இல் காகிதஆலை நிறுவ அடிக்கல் நாட்டப் பட்டது. 20 டிசம்பர் 1716இல் ஆலையில் உற்பத்தி தொடங்கியது. பொருள்வளம் படைத்தோர் இக்காகித ஆலையில் முதலீடு செய்தனர்.

காகிதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் முறையாகக் கிட்டாமையாலும் போதிய அளவு நல்ல தண்ணீர் கிடைக்காததாலும் காகித ஆலையின் செயல்பாடு தடைப்பட்டது. 1722 நவம்பரில் காகித ஆலையின் எந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதன்மூலம் கிடைத்த பணம் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. காகித ஆலை இருந்த இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்படத் துவங்கியது.

நூல்கள் எழுதுதல்

சீகன்பால்கு தன் சமயப் பணியின் ஓர் அங்கமாக சிறுநூல்களையும் அறிவிக்கைகளையும் எழுதியுள்ளார். இவற்றுள் அவரது முக்கியமான எழுத்துப் பணியாக விவிலிய மொழிபெயர்ப்பு அமைகிறது. யேசுவின் நேரடிச் சீடர்களான மாற்கு, மத்தேயு, லூக்கா, யோவான் ஆகிய நால்வரும் எழுதிய நற்செய்தி ஏடுகள் நான்கும் ‘அப்போஸ்தர் நடபடிகள்’ என்னும் நூலும் இந்த மொழிபெயர்ப்பில் இடம்பெற்றிருந்தன. ஐந்து நூல்களின் தொகுப்பாக அமைந்தமையால் ‘ஐந்துவேதப் பொத்தகம்’ என்று தம்மொழிபெயர்ப்புக்குத் தலைப் பிட்டிருந்தார். பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தின் பேச்சுமொழியிலே அது இருந்தது. ஜெர்மானிய மொழியில் தென்னிந்தியத் தெய்வங்கள் குறித்து .Genealogy of the South Indian Deities. என்ற நூலை அவர் எழுதி உள்ளார். இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து டேனியல் ஜெயராஜ் 2005இல் வெளி யிட்டுள்ளார்.

இந்நூலில் சைவ வைணவ தெய்வங்களைக் குறித்த புராணச்செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் ஐயனார், எல்லம்மன், மாரியம்மன், அங்காளம்மன், பத்திரகாளி, சாமுண்டி ஆகிய தெய்வங்களைக் குறித்தும் குறிப் பிட்டுள்ளார். பேய்களில் 77 வகை இருந்ததை அவரது நூல் குறிப்பிடுகிறது. கலகப்பேய், காவல்பேய் தொடங்கி பரிகாசபேய், நிர்மூலப்பேய் என அவர்குறிப்பிடும் பேய்கள் குறித்த சொற்கள் தற்போது வழக்கில் உள்ளனவா என்று ஆராய இடம் உள்ளது. இதுபோல் பார்வதியைக் குறிக்கும் 57 பெயர்களையும் தொகுத்தளித்துள்ளார்.

தமிழ் மருத்துவம்

சீகன்பால்கு திறந்த மனதுடனேயே தரங்கம் பாடியில் செயல்பட்டுள்ளார். அவர் எழுதிய கடிதம் ஒன்றில் தமிழ் மருத்துவர்கள் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘பிரபலமான மருத்துவர் இங்குக் காணப்படு கின்றனர். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி, கண்நோய்கள், நெஞ்சுவலி, முடக்குவாதம் போன்ற பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

20 சூலை 1709இல் தரங்கம்பாடிவந்துசேர்ந்த குருண்ட்லர் என்ற குரு தமிழில் உள்ள மருத்துவ நூல்களைப் பயில ஆரம்பித்தார். பிராமணர் ஒருவரை நியமித்து தமிழ் மருத்துவம் குறித்த செய்திகளைத் தொகுத்தார். தரங்கம்பாடியில் இருந்த ஐரோப்பிய நாட்டு மறைப்பணியாளர்கள் நோய் குணமாக்கல் தொடர்பான உள்ளூர் மருத்துவ சிகிச்சை முறைகளையும் மருந்து தயாரித்தலையும் கேட்டறிந்து, அதை ஐரோப்பாவிற்கு எழுதி அனுப்பினார்கள். 1730இல் தமிழ் மருத்துவர் ஒருவர் கண்நோய்க்கு சிகிச்சை அளிப்பதைப் பார்த்தவுடன் அவர் பயன்படுத்திய களிம்பு தயாரிப்பு முறையையும் அவரிடத்தில் இருந்து விளக்கமாகத் தெரிந்துகொண்டார்.

மறைத்தளத்தின் முன்னாள் ஊழியரான சாமுவேல் என்பவர் நாகப்பாம்புக்கடி, வெறிநாய்க்கடி போன்ற வற்றிற்கு சிகிச்சை அளிக்கும் முறையை அறிந்திருந்தார். நச்சுக்கடிகளால் பாதிக்கப்பட்டோருக்கு மறைப் பணியாளர் பார்வையில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தி இருந்தார். அவருடைய சிகிச்சை முறையால் அவர் புகழ் பெற்றிருந்தார். அவரது சிகிச்சை முறையை அவர் மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். சென்னை அரசாங்கம் 200 நட்சத்திர பக்கோடா பணம் கொடுத்து அவரது சிகிச்சை முறையை 1792இல் அறிந்து கொண்டது. தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட பள்ளியில் தமிழ் மருத்துவம் கற்றுக்கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சீகன்பால்கு குறிப்பிட்டுள்ள செய்திகள் வருமாறு:

தமிழ்ப்பள்ளியின் மூத்தமாணவர்களுக்கு நாள் தோறும் ஒரு மணி நேரமாவது தமிழ் மருந்துவத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஏதாவது ஒரு கிராமத்திற்கு மாணவர்களுடன் சென்று மூலிகைகளை அவர்கள் அடையாளம் காண உதவுவதுடன் மருந்து தயாரிக்கும் முறையையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அத்துடன் மூலிகை வகைகளின் மாதிரிகளைக் கொண்டுவந்து அவற்றைத் தனி அறையில் வைக்கவேண்டும். நீண்டதொலைவிலிருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகளையும் அதே அறையில் சேகரித்து வைப்பதுடன் மாணவர்கள் அவற்றை அறிந்துகொள்ளும் படி உற்சாகப்படுத்த வேண்டும். இறுதியாகக் கிடைக்கக் கூடிய அனைத்துத்தமிழ் மருத்துவச்சுவடிகளையும் சேகரித்து அவற்றைப் படி எடுக்க வேண்டும். (டேனியல் ஜெயராஜ் 2006; 83,84).

இவ்வாறு அறிந்து கொண்ட தமிழ் மருத்துவ அறிவை குருண்ட்லர் “மலபார் மருத்துவர்” என்ற பெயரில் தொகுத்துள்ளார். ஜெர்மன் மொழியில் எழுதப் பட்ட இந்நூலின் கையெழுத்துப்படி 1711இல் ஜெர் மனியில் உள்ள ஹாலே என்னும் இடத்திற்கு அனுப்பப் பட்டது. ஆனால் அது நூல் வடிவம் பெறவில்லை.

Pin It