(ஏப்ரல் 2025 இதழின் தொடர்ச்சி)
சென்ற நூற்றாண்டுக் காலத்தில்தான் ஐயப்பனுக்கு சமஸ்கிருதத் தோத்திரங்கள் உருவாயின. அதன் பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது.
சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பீகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது - ஜெயமோகன்.
இக்கூற்றின் முக்கிய சாரமாகப் பின்வரும் மூன்று செய்திகளை வகைப்படுத்தலாம்:
சென்ற நூற்றாண்டில்தான் அய்யப்பனுக்கு சமஸ்கிருத மொழியில் தோத்திரங்கள் உருவாயின.
அதற்கு முன்னர் அய்யப்பன் நாட்டார் தெய்வமாக இருந்தார்.
இதன் பின்னரே அய்யப்பன் உலகெங்கும் உள்ள இந்துக்கள் அனைவரும் வணங்கும் கடவுளானார்.
இம் முன்றும் அவரது கற்பனையில் தோன்றியவை அல்ல. அவை வரலாற்று அடிப்படையில் முற்றிலும் உண்மையானவை. அய்யப்பன் என்ற நாட்டார் கடவுள் இருபதாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத் தோத்திரங்களை ஏற்று வைதீகமரபினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறை இந்நூலின் பிற்பகுதி எடுத்துரைக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடும் அய்யப்பன் மீதான சமஸ்கிருத தோத்திரங்களுக்கான வித்து இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியை அடுத்து இடப்பட்டுள்ளது.தொன்மம் உருவாதல்:
தேவலோக முற்பிறவி ஒன்றை நாட்டார் தெய்வங்களுக்கு வழங்கி அதன் வழியாக அத்தெய்வங்களை வைதீக மரபுடன் தொடர்பு படுத்துவது என்ற வழிமுறை பழமையான ஒன்று. இம் முயற்சியின் முதற்படியாக அமைவது அத் தெய்வத்திற்கு தேவலோக முற்பிறப்பு வழங்குவது அமையும். (மனிதர் என்றால் உயர்குடிப் பிறப்பு வழங்கப்படும்) அவ்வகையில் ‘ஸ்ரீ பூத நாதோபாக்கியானம்’ என்ற புராணம் 19 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது என்பதை முன்னர் குறிப்பிட்டோம்.இது முற்றிலும் புராணமரபை உள்வாங்கியதாக அமைந்திருந்தது. அய்யப்பன் சிவலோகத்தில் சிவபெருமானின் பூதகணங்களுக்குத் தலைவனாக விளங்கி வந்ததுடன் பூர்ணா, புஷ்கலா என்ற இருபெண்களின் கணவராகவும் இருந்துள்ளார். அவரது பூலோக அவதாரமே அய்யப்பன் ஆகும். (ஓரளவுக்கு இது தமிழ்நாட்டின் காவிரிச் சமவெளியில் பரவலாகக் காணப்படும் காத்தவராயன் வழிபாட்டில் நிகழ்ந்த மாற்றத்தை ஒத்ததாக உள்ளது). இச் செய்திகளைக் குறிப்பிடும் இப் புராணம் இருபதாம் நூற்றாண்டில்(1929), அச்சாக்கம் பெற்று நூலாக வெளிவந்தது. (தற்போது தமிழிலும் வெளிவந்துள்ளது).
இப் புராணத்தை அடியொற்றி ‘ஐயப்பன் கிளிப்பாட்டு' என்ற இலக்கிய நூல் மலையாளமொழியில் தோன்றியது. அன்னம், கிளி போன்ற பறவைகளை அழைத்து ஒரு செய்தியைக் கூறும் முறையிலமைந்த கிளிப்பாட்டு என்ற மலையாள இலக்கிய முறையியலைப் பின்பற்றி உருவான இந்நூல் அய்யப்பன் வழிபாட்டின் பரவலுக்குத் துணை நின்றது. இருப்பினும் இன்று பரவலாக அறிமுகமாகியுள்ள அய்யப்பன் வழிபாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1950இல் நிகழ்ந்த தீவிபத்துதான்.
1950 தீ விபத்து:
இவ்விபத்து குறித்து 1950 ஜூன் மாதம் வெளியான இந்து (The Hindu 18 June 1950)) மிகச் சுருக்கமாகப் பின்வரும் செய்தியை வெளியிட்டது:
‘திருவிதாங்கூரின் வடகிழக்கு எல்லையில் உள்ள மக்கள் நடமாட்டமில்லாத மலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சபரிமலைக் கோயிலின் மீது அண்மையில் சில குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் சிலையை உடைத்து, கோயிலைக் கொள்ளையடித்து தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.’ 19 ஜூன் 1950 இந்து நாளேட்டில் இந் நிகழ்வு தொடர்பாக திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட பின்வரும் அறிக்கை வெளியாகியுள்ளது:
‘14 ஜூன் அன்று சாந்திக்காரன் (பூசை செய்பவர்) கோயிலுக்குச் சென்றபோது கோயிலின் கருவறை, மண்டபம், பொருள்கள் வைக்கும் அறை ஆகியன நெருப்பினால் அழிந்து போனதையும், கருவறையில் இருந்த கடவுளின் சிலை ஓரளவுக்கு ஊறுபட்டிருப்பதையும் கண்டார்.’
மொத்தத்தில் கோயில் பெருமளவில் அழிவுக்காளாகியிருந்தது. 21 ஜூன் 1950 இல் வெளியான இந்து நாளேட்டில், கருவறையில் இருந்த மூலவர் படிமத்தின் தலையும் கைகளும் உடைக்கப்பட்டு, உடல்பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தன.
உடைந்த பகுதிகள் மூலவர்படிமத்தின் கீழே சிதறிக்கிடந்தன. கோயில் கதவின் மேல் வெட்டப்பட்ட அடையாளம் காணப்பட்டது.பொருள்கள் வைக்கும் அறையும் உடைக்கப்பட்டு பொருள்கள் சூறையாடப் பட்டிருந்தன.
இந்நிகழ்வு குறித்து ஆராய விசாரணை ஆணையம் மாநில அரசால் அமைக்கப்பட்டது.டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த கேசவமேனன் என்ற உயரதிகாரி புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரணை ஆணையத்தின் அறிக்கைப்படி கருவறைக்குச் செல்லும் வழியிலிருந்த கதவில் பதினைந்து வெட்டுக்கள் பதிந்து வன்முறையாக நுழைந்தமைக்குச் சான்று பகர்ந்தன. மூலவரின் சிலை உடைக்கப்பட்டு, தலை, இடதுகையின் உள்ளங்கைப் பகுதி, கைவிரல்கள் அகியன துண்டு துண்டாக்கப்பட்டிருந்தன. மூலவர் சிலையின் முகத்திலும் நெற்றியிலும் வெட்டப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டன. இச் சான்றுகளின் அடிப்படையில் இத்தகைய அழிவுச் செயலானது திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்ற முடிவுக்கு விசாரணை ஆணையம் வந்தது. அத்துடன் இச் செயலைச் செய்தவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது, கிறித்தவர்களாக இருக்கலாம் என்ற மத அடிப்படையிலான யூகத்தையும் முன்வைத்தது.இவாறு யூகித்தமைக்கான காரணங்களாக அது பின்வருவனவற்றைக் குறிப்பிட்டது.
சிலை வழிபாடு குறித்த மாறுபாடான கருத்து இருந்தாலும் ஒரு இந்து கடவுளின் திருவுருவை உடைத்தல், கோயிலுக்கு நெருப்பு வைத்தல் போன்ற செயல்களைச் செய்வானா என்பது சந்தேகத்திற்குரியது.
சிலை வழிபாட்டை விரும்பாதவன் என்றால் கோயிலுக்குச் செல்லாமலிருப்பான். ஆனால் சிலையை உடைத்து கோயிலுக்கு நெருப்பு வைக்கமாட்டான்.
இப்பகுதியில் இந்துக்களுக்குச் செல்வாக்கு இல்லை. இந்துக்களின் கட்சி எதுவும் கிறித்தவர்கள் பார்வையில் படாது இக்காட்டுப்பகுதியில் செயல்படமுடியாது.
சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் கிறித்தவர்களின் கைவரிசை இதில் இருப்பதாக ஆணையத்தின் அறிக்கையில் அதன் புலனாய்வு அதிகாரியான கேசவமேனன் குறிப்பிட்டார். இதை உறுதிப்படுத்தும் முகமாக அவுசோப் (Ouseph) என்ற பெயர்கொண்ட ஒருவர் கிடைத்தார். பணம் படைத்த கிறித்தவர்கள் சிலரை முதலாளிகள் என்று பொதுவாகக் குறிப்பிட்டதுடன் அவர்களில் ஒரு சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அய்யப்பன் கோயில் மீதான வன்முறைச் செயல்கள் நடந்தேறியது குறித்து வாக்குமூலம் அளித்தார். இறுதியில் விசாரணை ஆணையம் மத அடிப்படைவாதத்தின் பங்களிப்பை இவ்வாறு பதிவு செய்தது:
‘பொருத்தமான முடிவு என்னவென்றால் இக் கிறித்தவ முதலாளிகள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு எதிராக எதாவது செய்ய ஆயத்தமாக இருந்தார்கள். கோவிலானது தங்களுடைய இருப்புக்கு அச்சுறுத்தல் என்று நம்பினார்கள்.’
ஆணையத்தின் விசாரணை அதிகாரி கேசவ மேனன் தீ வைத்ததன் நோக்கத்தை பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
‘அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடும் கோயில், இந்துக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு சக்தியாக மட்டுமல்லாமல், கீழ்சாதி இந்துக்கள் கிறிஸ்தவமதத்தில் படிப்படியாக உள்வாங்கப்படுவதையும் அவர்களின் மதமாற்றத்தைத் தடுக்கும் சக்தியாகவும் கருதுவது.’
அய்யப்பன் கோயில் தீப்பற்றி எரிந்ததை அடுத்து புதிய கோயில் கட்டப்பட்டது. இக் கோயில் உருவாக்கம், அதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்பன குறித்து இந்நூல் குறிப்பிடும் செய்திகள் மிகவும் முக்கியமானவை.. சென்ற இதழில் படித்த செய்திகளுடன் ஒப்பிட்டுப் பாரக்கவேண்டியவை.
புதிய கோயில்- புதிய வழிபாட்டு முறை:
சபரிமலைக் கோயிலில் 19 ஜூன் 1950இல் நடந்த தீ விபத்து அன்றையக் கேரளப் பகுதியிலும், தமிழ்நாட்டிலும் இந்து உணர்வைத் தோற்றுவித்தது.இது தன்னியலார்ந்த எழுச்சியாகும். வெகுமக்களின் இவ்வுணர்வை இந்துசமய அமைப்புகள் நன்றாகவே பயன்படுத்தலாயின.சபரிமலை வன்முறையைக் கண்டித்து 1950 ஜூலை முதல் நாளன்று தலைநகர் திருவனந்தபுரத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு ‘இந்து மகாமண்டல்’என்ற அமைப்பு அழைப்பு விடுத்தது. இது சமூகத்தின் பொது உணர்விலிருந்து துண்டித்துக் கொண்டு், இந்து சமூகம் என்ற உணர்வை மேற்கொள்ளத் தூண்டியது. இந்துப் பண்பாடு, இந்து நிறுவனங்கள் என்பனவற்றைப் பாதுகாக்கவென்று துடிப்பான இளைஞர்களைக் கொண்ட இளைஞர் படை ஒன்று சபரிமலை அய்யப்பன் கோயில் வளாகத்தில் உருவாக்கப்பட்டது.அப்பாஸ்(ABASS: Ayyappa Seva Sangham) என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட அய்யப்ப சேவா சங்கம் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் இது செயல்பட்டது.
அய்யப்பன் வழிபாட்டை வெகுமக்களிடம் கொண்டு செல்வதன் முன்னோட்டமாகக் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் அய்யப்ப ஜோதி உலா நிகழ்ந்தது. இது அய்யப்பன் வழிபாட்டைப் பரவலாக்குவதில் குறிப்பிடத் தக்க அளவில் பங்காற்றியது. தமிழ்நாட்டில் அய்யப்பன் வழிபாட்டைப் பரவலாக அறிமுகம் செய்ததில் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஓருவரான சர். பி.டி.ராஜனின் பணி குறிப்பிடத்தக்கதாய் இருந்தது.
தமிழ்நாட்டிலிருந்து நிதி திரட்டித் தருவதில் அவரது பங்களிப்பும் இருந்ததாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். வன்முறைக்கு ஆளான சபரிமலை அய்யப்பன் கோயில் புனரமைப்பும் நடந்து முடிந்து மீண்டும் கோயிலில் வழிபாடு தொடங்கியது. இப்போது வழிபாட்டில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. முன்னர் பின்பற்றப்படாத புதிய நடைமுறைகள் இடம் பெற்றன.
உறக்கப்பாட்டு (தாலாட்டு):
அய்யப்பன் குறித்து நாட்டார் பாடல்கள் பல வழக்கில் இருந்துள்ளன. இவை அவரை பன்முகத்தன்மை கொண்டவராக அறிமுகப்படுத்தும் தன்மையில் இருந்துள்ளன. குறிப்பாக வாவர் என்ற இஸ்லாமியர் அவரது உற்ற தோழராக இருந்தமை குறித்த மரபுவழிச் செய்திகள் பாடல்கள் என்பனவற்றைக் கூறலாம். அய்யப்பன் கோவில் புனரமைக்கப்பட்ட பின்னர் வாவரின் இஸ்லாமியக் குடிப்பிறப்பு மறைக்கப்பட்டு, வாபரன் என்று பெயர் மாற்றம் பெற்று, சிவனின் பூதகணங்களில் ஒருவரானார்.
நாள் வழிபாடு முடிந்து இரவில் கோயில் கருவறை மூடப்படுவது பொதுவான மரபு.இந்நிகழ்வு ஒரு சடங்காக நிகழும். தீ விபத்துக்குப் பின் இந்நிகழ்வில் பாடுவதற்கென்று அய்யப்பனை மையமாகக் கொண்ட தாலாட்டுப் பாடல் ஒன்று சமஸ்கிருதத்தில் ‘உறக்கப்பாட்டு-ஹரிவராஷணம்’ என்ற பெயரில் எழுதப்பட்டது. மேல்சாந்தி என்றழைக்கப்படும் தலைமைப் பூசாரி இதைப் பாடுவார். இந்நிகழ்வு தொடர்பாக நூலாசிரியர், கள ஆய்வு மேற்கொண்டு சேகரித்த செய்திகளை நூலில் பதிவிட்டுள்ளார். இச் செய்திகளில் ஒன்று உறக்கப்பாட்டு பாடுதலின் தோற்றம் குறித்தது. 1950 ஆவது ஆண்டு ஆகஸ்ட் 13ஆவது நாள்தான் உறக்கப்பாட்டுப் பாடுதல் தொடங்கியுள்ளது. (இப்பாடலின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேற்கோளாகக் காட்டியுள்ளார்). இப் பாடல் அய்யப்பன் பாட்டுகள் என்ற பெயரில் மக்களிடையே வழங்கிவந்த பாடல்களின் உள்ளடக்கத்தில் இருந்து விலகி புராணத் தன்மை கொண்டுள்ளது. அய்யப்பன் ஹரிஹரபுத்திரன் என்ற கடவுளாகவும் வேதங்களால் போற்றப்படுபவனாகவும் உறக்கப்பாட்டில் சித்தரிக்கப்படுகிறார் என்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
உறக்கப் பாட்டை அடுத்து 1950க்கு முன் பின்பற்றப் பட்ட நடைமுறைகளில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எருமலை பேட்டைத்துள்ளல் என்ற சடங்கு மலையாள மாதம் 27 இல்நிகழும். தற்போது 20 க்கு முன்பே நடந்து விடுகிறது. 1969 இல் ஆகம விதிமுறைப்படி, கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.அதற்கு முன்னர் கொடிக்கம்பம் கிடையாது.கோயிலுக்குள் செல்வதற்கு அமைக்கப்பட்ட 18 படிகளில் தேங்காய் உடைக்கும்வழக்கம் இருந்தது. 1950க்குப்பின் படிகளில் உடைத்தல் நிறுத்தப்பட்டு அதற்கென்று கீழ்ப் பகுதியில் நிறுவப்பட்ட பீடத்தில் உடைக்கும் வழக்கம் அறிமுகமாயிற்று. மரபை வலியுறுத்துபவர்கள் மேற்கொண்ட இச் செயல்கள் குறித்து ‘மரபு என்பது வளைந்து கொடுக்கக் கூடிய ஒன்று' என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இக் கோயில் வழிபாட்டுடன் தொடர்புடைய ஒன்று மகரவிளக்கின் ஒளி தெரிவதாகும்.இது குறித்து நேர்காணல், ஆவணங்கள் வழி நூலாசிரியர் கண்டறிந்த செய்திகளின் தொகுப்பு துப்பறிவாளர் ஒருவரின் பதிவுபோல் உள்ளது.இது தவிர 1983இல் சபரிமலையில் இருந்து இருபது கி.மீ. தொலைவிலுள்ள நிலக்கல் என்ற இடத்திலுள்ள குருசடியையும், அய்யப்பனின் பூங்காவனப் பகுதியில் அது இடம் பெற்றிருப்பதாக இந்துக்கள் நம்புவதையும் அடிப்படையாகக் கொண்டு கிறித்தவர்கள், இந்துக்களிடையே எழுந்த முரண்பாட்டையும் ஆராய்ந்துள்ளார்.இவற்றையெல்லாம் எடுத்துரைப்பின் கடந்த மார்ச் திங்களில் தொடங்கிய இக் கட்டுரை ஜூன் திங்களுக்கு நீண்டுவிடும். எனவே இந்நூலின் இறுதியில் இந்நூலாசிரியர் முன்வைக்கும் பின்வரும் கருத்துக்களை மேற்கோளாகக் காட்டி இந்நூல் அறிமுகத்தை முற்றுப்பெறச் செய்துவிடுவது பொருத்தமாக இருக்கும்.
‘கேரளத்தில் உள்ள மற்ற திருத்தல யாத்திரைகளுடன் ஒப்பிடும் போது சபரிமலை யாத்திரையின் தனித்தன்மை இந்து சமய ஒற்றுமையை வலுப்படுத்த உதவுகிறது. திருத்தல யாத்திரை என்பது ஒரு கூட்டுச் செயல்பாடு.பெரும்பாலும் ஆண்கள், சில இளம்பெண்கள் மற்றும் முதிய பெண்களுடன் பயணம் செய்கிறார்கள். கோயில் மற்றும் திருத்தலப் பயணம் தொடர்பான மாற்றங்கள் ஒரே மாதிரியான அடையாளங்களை (Homogeneous identity)மிகுதியாக வழங்கியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் குறிப்பிடத்தக்க மற்றும் விரைவான மாற்றங்கள் நிகழ்ந்தன.’
நூலாசிரியர் குறிப்பிடும் மாற்றங்கள் என்பன இஸ்லாம், கிறித்தவம் என்ற பிற சமயங்களுடனான தோழமையுறவைத் துண்டித்தமையும் ஆகம விதிமுறைகளை அய்யப்பன் வழிபாட்டில் அறிமுகப்படுத்தியமையும் ஆகும்.
Jitheesh P.M (2o22) Sabarimala : Social History Of a Temple in Kerala. left Word Books. New Delhi 110008.
- ஆ.சிவசுப்பிரமணியன்