எனது மொழிபெயர்ப்புப் பட்டறிவுகள்
தமிழின் மிகப் பெரிய பதிப்பகம் என்.சி.பி.எச், பல நூல்களை வெளியிட்டிருந்தாலும், வரலாற்றுநர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் நூல்களைத் ‘தமிழ் மக்கள் வரலாறு’ மற்றும் ‘தமிழியல் நூல்கள்’ எனும் இரு பொதுத் தலைப்பில் சூலை 2017ல் தொடங்கி, பிப்ரவரி 2025 வரை 25 நூல்கள் மற்றும் 8 நூல்கள் ஆங்கிலத்தின் வழியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டுள்ளது. இது ஒரு சிறப்பு வாய்ந்த பணியாகும். ரகு அந்தோணி, சு.முத்துக்குமரவேல், அ.சாமிக்கண்ணு, எஸ்.தோதாத்திரி, ந.அதியமான், க.ஐயப்பன், கி.இளங்கோவன், கி.ரா.சங்கரன் ஆகியோர் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். நான் மொழிபெயர்த்த நூல்களும் வெளியிடப்பட்டுள்ளது என்பது எனக்குப் பெருமையே.
தொடக்கத்தில் பாக்களையே ஆங்கில வழித் தமிழில் மொழிபெயர்த்தேன். அம்மொழிபெயர்ப்புகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. பிறகு 2022இல் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்த்து வருகிறேன். ‘தமிழ் மக்கள் வரலாறு’ எனும் வரிசையில் நான் மொழிபெயர்த்தது 5 நூல்களாகும்.
‘தமிழ் மக்கள் வரலாறு’ வரிசையில் பிறருடன் இணைந்து மொழிபெயர்த்தது 3 நூல்களாகும். ‘தமிழியல் நூல்கள்’ எனும் வரிசையில் நான் மொழிபெயர்த்தது 2 நூல்களாகும்.
I
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2005ஆம் ஆண்டு முதல் ‘விடுதலை வீரர்’ சீனுவாசன் – தனலட்சுமி அறக்கட்டளை’, என் பெற்றோர் பெயரில் நிறுவப்பட்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 12ஆம் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்த ஜெயசீல ஸ்டீபனை நான் அணுகிக் கேட்டேன். ஏற்றுக்கொண்ட அவர் ‘‘புதுச்சேரியில் தமிழ்ப் புத்தக அச்சு வரலாறும், அதன் தாக்கமும்’’ (19ஆம் நூற்றாண்டு) எனுந் தலைப்பில் 10-04-2019இல் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாற்றினார். அச்சொற்பொழிவின்போது புதுச்சேரியில் அச்சிடப்பட்ட பல புத்தகங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். அந்த உரை பதியப்பட்டது. அந்நாள் முதல் நான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றேன். அவர் சில நூல்களை என்னிடம் தந்து படிக்கச் சொன்னார். நான் படித்து என் கருத்துகளைச் சொன்னேன். ‘இந்த நூல்களை நான் தமிழில் மொழி பெயர்க்கலாமா?’ எனக் கேட்டேன். ‘சரி’ என்றார். அதனடிப்படையில்தான் நான் அவர் நூல்களை கடந்த 2022 முதல் மொழிபெயர்த்து வருகின்றேன்.
மொழிபெயர்த்து அனுப்பும்போது என்னைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதோடு. சிறுசிறு பிழைகளைத் திருத்தி ‘இப்படி இப்படி மொழிபெயர்க்க வேண்டும்’ என்பார். பிற வரலாற்றறிஞர்களிடமிருந்து இவர் வேறுபடும் புள்ளி யாதெனில், இவருக்குத் தமிழ், ஆங்கிலம், போர்ச்சுக்கீசு, டச்சு, பிரெஞ்சு, டேனிஷ், ஜெர்மன் ஆகிய மொழிகள் தெரியும். இவர் போர்ச்சுக்கல், நெதர்லாந்து, ஸ்பெயின், பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, வாட்டிகன், ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆவணக்காப்பகங்களில் தரவுகளைத் திரட்டி தன் சிறப்புமிக்க வரலாற்றறிவால், அரிய, இதுநாள் வரை நாம் படித்திராத, பல வரலாற்றுண்மைகளை, நூல்களின் வழித் தெரிவிப்பவராக இருக்கிறார் என்பதே உண்மை. ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் வரலாற்றாய்வு என்பது, கி.பி.1500 முதல் 1900 வரையாகும். ஆக, இதுவரை அவர் தான் கற்ற மொழியின் வழி, தமிழகக் கடல்சார் வணிக வரலாறு, தமிழ் மொழி வரலாறு, அச்சுப் பதிப்பு மற்றும் இதழியல் வரலாறு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு, மொழிபெயர்ப்பு வரலாறு, நெசவுத் தொழில் வரலாறு, வண்ண ஓவியங்கள், உள்ளூர்க் கலைஞர்கள் வரலாறு, அடிமைகள் வரலாறு, நெசவு வரலாறு, சாதி வரலாறு, தமிழக மக்கள் மற்றும் விலங்கினங்களுடனான தொடர்பு குறித்த ஐரோப்பியர்களின் விலங்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ விலங்கியல் வளர்ச்சி வரலாறு, தமிழரின் சித்த மருத்துவ வரலாறு, தமிழக இசைக் கலைஞர்கள், நடனக்காரிகள், நாடக நடிகர்கள் வரலாறு, தமிழ் உரைநடையில் வாழ்க்கை-வரலாறு, தன்-வரலாறு, கதை, சிறுகதை, புதின வரலாறு மற்றும் தருக்க நூல்கள் வரலாறு, இலக்கண வரலாறு எனப் பல வரலாற்று நூல்களை அவர் எழுதியுள்ளார்.
II
என் மொழிபெயர்ப்பு குறித்த சில பட்டறிவுகளை நான் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். என் மொழிபெயர்ப்பில் பெரும்பாலும் எளிய தூய தமிழ்ச் சொற்களையே கையாண்டுள்ளேன். அவை பிறருக்கும் புரியும்படியாக இருக்கும். பல சிறந்த கலைச்சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
பிற மொழிச்சொல் தமிழ்ச்சொல்
Company குழுமம்
Jelly fish இழுதுமீன்
Carrot சிவப்பு முள்ளங்கி
Mica காக்கைப் பொன்
Missionary மதப்பரப்புநர்
Magnesium வெளிமம்
Magnazite வெளிமடம்
Chromic acid குரும்புளிமம்
Nitrate வெடியகி
Chromic oxide கருமவுயிரகை
Peroxide வெடிய ஈருயிரகை
Chromate இரும்புக் குருமளம்
Potassium nitrate சாம்பரிய வெடியகி
Fauna மாவடை
Tale, Story கதை
Fable கட்டுக்கதை
Legend பழைய மரபுக் கதை
ஜெயசீல ஸ்டீபனின் ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இதுவரை மூன்று பரிசுகள் கிடைத்துள்ளன. ‘தமிழகக் கடல்சார் பொருளாதாரமும், போர்ச்சுக்கீசிய காலனியமயமாக்கமும்’ என்ற க.ஐயப்பன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த நூல் தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு (2024ல்) வழங்கப்பட்டது. ‘காலனிய வளர்ச்சிக் காலம்: புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை’ என்ற ரகு அந்தோணி மொழிபெயர்ப்பில் வெளிவந்த நூலுக்கு தொ.மு.சி. ரகுநாதன் விருது (2019ல்) கிடைத்தது. ‘தமிழ்நாட்டில் காலனியக்கால வண்ண ஓவியங்களும், அய்ரோப்பியர்களும், உள்ளூர்க் கலைஞர்களும் என்ற எனது மொழிபெயர்ப்பில் வெளிவந்த நூலுக்கு தொ.மு.சி. ரகுநாதன், எழுத்தாளர் சந்திரகாந்தன் நினைவு விருது (2022ல்) கிடைத்தது. நூலாசிரியருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும், நூல்களை வெளியிட்ட என்சிபிஎச் நிறுவனத்திற்கும் இதனால் பெருமையாகும்.
ஆங்கிலம் அறியா தமிழ் மக்கள், எஸ்.ஜெயசீல ஸ்டீபனின் அரிய வரலாற்று நூல்களைப் படிக்க வேண்டும் என்ற பேரவாவின் காரணமாக, விலை அதிகமான, கனமான ஆங்கில நூல்கள், பகுதி பகுதியாகப் பிரித்து மொழிபெயர்க்கப்பட்டு, என்சிபிஎச் வெளியீட்டகத்தால் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு, வரலாற்றறிவில் தமிழ்நாட்டு மக்களுக்குப் புதுவெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு வருகிறது. அந்த வெளிச்சத்தைப் பாய்ச்சும் பணியில் நானும் ஒருவன் என்பது எனக்குப் பெருமிதமே. தொடர்ந்து மொழிபெயர்க்க என்னை ஊக்கப்படுத்தும் வரலாற்றறிஞர், முனைவர், பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன் அவர்களுக்கு என் நன்றி! தொடரட்டும் என்சிபிஎச்சின் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டுப் பணி!