secundrabad book 350மனிதன் பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உண்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள். காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது. புறா, கொக்கு, நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும். சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர். திருப்பூரில் பிறந்து குன்னூர், ஹைதராபாத், பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை எனப் பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர். ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம். எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை.

சுப்ரபாரதிமணியனின் தொலைநோக்குப்பார்வை இந்த நூலில் தெளிவாய்த் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைப் பயணத்தில் உடன் நடக்கும் மனிதர்களோடு தனக்கேயான உறவை அளவிட்டு வைத்துக் கொள்வார்கள். தனக்கும் தன் நண்பர் களுக்குமான உறவைத் தன் தனித்தன்மையான எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பதில் அவர் வெற்றியடைந் திருக்கிறார் என்பது இந்நூலை படிக்கும்போது தெரிகிறது. அவர்களை நினைவு கூர்ந்து கொள்கிறார்,

ஓ... செகந்திராபாத்... மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது... சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது  கிடைத்த  அனுபவங்களைத் தந்திருக்கிறார்.

அனைவருக்கும் அனுபவம் இருக்கிறது, தன் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவரும் திறமை சுப்ரபாரதிமணியனுக்கு இருக்கிறது என்பதற்கு இந்நூல் உதாரணம். தன் எண்ணங்களை இவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்தும் ராசி சிமெண்ட் அமிர்தனோ, ராமாநாயுடு ஸ்டுடியோ மணியோ, நா.கதிர்வேலனோ, அவர்களின் குணங்களை பட்டியலிட்டிருக்கிறார். நாளை அவர்களை நேரில் சந்திக்கும் போதும் எதிர்கொள்ளும் துணிவு இவர் எழுத்தில் திடமாய்த் தெரிகிறது. அதி லேசாக எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று படுகிறது.

“ரங்கண்ணாவை எங்கே ஆளையே காணோம் என்று கேட்டுவிட்டால் போதும் எப்போதும் ஒரே பதிலாக இருக்கும். மோண்டா மார்க்கெட்டில் எருமை யோட ஒண்ணா இருப்பேன் மார்க்கெட் எருமையில் ஒண்ணு கொறஞ்சு போச்சுன்னா ரங்கண்ணா இல்லேன்னு அர்த்தம்Ó

இந்த ஒரு பத்தியில் அவர் எழுத்தின் ஆளுமை தெரிகிறது.  மோண்டா மார்க்கெட் என்பது செகந்திரா பாத்தின் ஒரு காய்கறி மார்க்கெட். முக்கிய இடம்.

செகந்தராபாத் கீஸ் ஹைஸ்கூலில் புத்தகக் கண்காட்சி நடத்தியதிலிருந்து, கனவு இதழ் வெளிவரக் காரணமாக இருந்த எல்லோரையும் நினைவு கூறும் அவர் மூளைத்திறன் வியக்க வைக்கிறது. கனவு இன்னும் முப்பது ஆண்டுகளாயும் வெளிவந்து கொண்டிருப்பது நல்ல விசயம்.

சிலக்கூர் பாலாஜி, பாஸ்போர்ட் கடவுள் என்று ஒரு நிகழ்வை எழுதி இருக்கிறார் இதேஅனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது. இதைப் படிக்கும் போது இருவருக்கும் ஒரே நிகழ்வு எப்படி என்ற கேள்வி எழுந்தது . பல நிகழ்வுகள், பல நினைவுகள் ஒரே மாதிரித் தெரியும் போது ஆச்சர்யமாக உள்ளது.

என் டி ஆர் மூன்று முழுக்கோழி அதிகாலையில் தின்பார் என்பது வியப்பான தகவல்.

எனக்கும் சுப்ரபாரதிமணியனுக்கும் உள்ள நட்பின் இறுக்கம் பலப்பல ஆண்டுகள் கடந்தது. எத்தனையோ ஞாயிறு பகல் பொழுதுகளில் அவர் குடும்பத்தாருடன்  கழித்ததற்கு மிக்க நன்றி. இத்தொகுப்பு அந்த நினைவு களையெல்லாம் வெகுவாகத் தூண்டி விட்டது.  ஓ... செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள் என்பது சரியான  தலைப்பே ஆகும்.

செகந்திராபாத் அசோகமித்திரனின்  சொந்த ஊர் என்பதால் அவர் செகந்திராபாத்தை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இரு நாவல்கள் (18வது அட்சக்கோடு உட்பட) எழுதியிருக்கிறார். சுப்ரபாரதிமணியனும் செகந்திராபாத்தை  வைத்து சுமார் அய்ம்பது சிறுகதைகள், இரு நாவல்கள் (மற்றும் சிலர், சுடுமணல்) எழுதியிருக்கிறார்.

இருவரும் ஒரே அலை வரிசைக்காரர்கள். அசோகமித்திரன்  மரணமடைந்து விட்ட தற்போதையச் சூழலில் இந்நூலில் சுப்ரபாரதிமணியனின் செகந்திராபாத் அனுபவங்கள் இலக்கிய மதிப்பீட்டில் உயர்ந்து நிற்கிறது.

ஓ... செகந்திராபாத்
(நினைவுக்குறிப்புகள்)
சுப்ரபாரதிமணியன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,
அம்பத்தூர், சென்னை - 600 098
விலை : ` 100/-

Pin It