நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார் என்று அண்மையில் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
நான்கு ஆண்டு கால திமுகழக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு என்னென்ன செய்திருக்கிறார் என்பதை மக்கள் வியந்து பேசுகிறார்கள்.
போட்டே ஷூட் நடத்துகிறாராம் முதல்வர். அது போட்டோ ஷூட் அல்ல. மக்களை நேரில் சென்று முதல்வர் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பது கூடத் தெரியாமல் ஞானசூன்யமாக அல்லவா இருக்கிறார் எடப்பாடி!
அரசியலைத் தெரிந்து பேசுவது எதிர்கட்சித் தலைவருக்கு அழகு. அரசியலே தெரியாமல், அரசியல் போல எதையாவது பேசிக்கொண்டிருப்பவர் இன்றைய எதிர்கட்சித் தலைவர்.
ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியைத் தரமறுக்கிறது. தெரியாதா எடப்பாடிக்கு? சரஸ்வதி நதியை இன்னமும் தேடிக்கொண்டு இருக்கும் ஒன்றிய அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுத்து வருகிறது என்பதாவது தெரியுமா எடப்பாடிக்கு?
இரயில்வே, அஞ்சலக, வங்கிப் பணிகள் போன்றவைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பது கூடத் தெரியவில்லையா எடப்பாடிக்கு?
கட்டுக்கோப்பாக அம்மையார் ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக, தன்னால்தான் சிதைந்து, பலவீனப்பட்டுப் போய்விட்டது என்பது கூட புரியவில்லையா எடப்பாடிக்கு?
அண்ணா திமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த அவருக்கு அரசியலும் தெரியவில்லை, தன் கட்சியும் புரியவில்லை. ஆனால் அவர்தான் எதிர்கட்சித் தலைவர்!
எடப்பாடி நேர்மையாக அரசியல் பேசவேண்டும், வரவேற்போம். அதைவிட்டு திமுகவை, தமிழ்நாடு முதல்வரைப் பற்றி உளறிக் கொட்டக் கூடாது.
2026இல் திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று சொல்லும் எடப்பாடியார்தான் இனி எப்போதும் வீட்டிற்குள்தான் இருப்பார், கோட்டைக்கு போகமாட்டார். இது மக்களின் முடிவு!
- கருஞ்சட்டைத் தமிழர்