'கரணம் தப்பினால் மரணம்'என்று சொல்வார்கள். சரி, அது இருக்கட்டும்.
தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் தேதியை எதிர்பார்த்துக்கொண்டு பரபரப்பாக இருக்கின்றன அரசியல் கட்சிகள்.
தமிழ்நாட்டில் இலைக் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் அதனதன் பலம் தெரியும், தெரியாததுபோல இருக்கின்றன. திமுகழகத்தின் மிகப்பெரும் பலம், தலைவர் ஸ்டாலின். காற்றிலும் கடுகி அவர் வேகமாக முன்னோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறார் களத்தில்.
வடநாடெல்லாம் பொய் பேசி, நாடகமாடி ஆட்சியைப் பிடித்து விட்டார்கள். இங்கே தென்னாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் ஆர்எஸ்எஸ் காவிக் கூட்டங்கள் அந்தர்பல்டிகள் அடித்துக் கரணங்கள் போடுகிறார்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று. போட்டு என்ன செய்ய...?
தஞ்சாவூர் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கில், கட்டாய மதமாற்ற முயற்சி என்று விஸ்வ இந்து பரிசத்தும், அண்ணாமலையும் புரளியைப் பரப்பினார்கள், சிபிஐ அறிக்கை அதை மறுத்துவிட்டது. திருப்பங்குன்றத்திலும் இப்படி ஒரு மதக் கலவரத்திற்காகக் கரணம் போட்டார்கள்? போட்டு என்ன செய்ய?
மாணவர்களின் கல்விக்கு நிதிதர மறுத்தார்கள், நீட் தேர்வை புகுத்தினார்கள், இந்தியை நுழைக்க இன்னமும் முயல்கிறார்கள், நம்முடைய இருமொழிக் கொள்கையை அழிக்க முயல்கிறார்கள், இதுபோல எத்தனையோ கரணங்களைப் போடுகிறார்கள் ஒன்றிய காவி ஆட்சியாளர்கள். போட்டு என்ன செய்ய?
மோடியும், அமித்ஷாவும் மாறிமாறி தமிழ்நாடு வருகிறார்கள், போகிறார்கள், கரணமும் போடுகிறார்கள். போட்டு என்ன செய்ய?
இங்கே தந்தை பெரியார் இன்னமும் வாழ்கிறார். பெரியாரின் கைத்தடி ஸ்டாலினிடம் இருக்கிறது.
ஓரிரு மாதங்களில் வருகிறது தேர்தல். பாஜக போடும் கரணங்கள் அங்கேயும் தப்பத்தான் போகிறது!
அதாவது, 'கரணம் தப்பினால் மரணம்' என்பது அரசியலுக்கும் பொருந்தும்!
- கருஞ்சட்டைத் தமிழர்