ஆளுநருக்கு பதிலாக ஆரியனர்!
மாநிலங்களுக்கு ஆளுநர்கள் வருவார்கள் என்று பார்த்தோம். ஆனால், ஆளுநருக்கு பதிலாக ஆரியனர்கள்தான் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆளுநர் வேலையைப் பார்ப்பதற்குப் பதிலாக, கல்வி வளாகங்களில் சங்கிகளை உருவாக்குகின்ற வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு ஒரு ஆரியனர் இருக்கிறார். நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். உயர்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றாகவே தெரியும்.
திராவிட இயக்கம், பல ஆண்டுகள் பாடுபட்டு, தமிழ்நாட்டில் நிறைய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைக் கட்டி வைத்தால், அங்கு எல்லாம் சென்று விழா என்கிற பெயரில் சங்கிக் கருத்துகளைத் தொடர்ந்து பரப்பி கொண்டு வருகிறார். அவருக்கு தமிழ்நாடு என்ற வார்த்தை பிடிக்காது. அவருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தும் பிடிக்காது. திராவிடம் என்கிற வார்த்தையும் பிடிக்காது. அவருக்குப் பிடித்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஒரேயொரு வார்த்தைதான் அது என்ன வார்த்தை என்றால், மன்னித்துக் கொள்ளுங்கள்.
இவை எல்லாவற்றையும் அண்ணாவையும், திராவிடத்தையும் கட்சியின் பெயரில் வைத்திருக்கின்ற அடிமைகள் என்றைக்காவது கண்டித்து இருக்கிறார்களா? இல்லை, கண்டு கொள்கிறார்களா? கண்டு கொள்ள மாட்டார்கள்.ஏனென்றால், அவர்களுக்கு எதுவுமே தெரியாது.திராவிடத்திற்கு அர்த்தமே என்ன என்று சொல்லத்தெரியாதவர்தான் அந்தக் கட்சியின் தலைவர். ஆனால், இவை எல்லாவற்றையும் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சங்கத்தின் தேவை!
இந்த மாதிரியான நேரத்தில் இந்த சங்கத்தின் தேவை என்பது மிக மிக முக்கியமானது. எனவே இந்த பணியை முன்னெடுத்த பேராசிரியர் அண்ணன் சுப.வீ அவர்களுக்கும், அக்கா அருள்மொழி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சகோதரர் எழிலன் அவர்களுக்கும், இந்த சங்கத்தை ஒருங்கிணைத்த மாரப்பன் உள்ளிட்ட அனைவருக்கும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியமாக அண்ணன் சுப.வீ அவர்கள், அக்கா அருள்மொழி அவர்களெல்லாம் இன்றைக்கு திராவிட இயக்கத்தின் பேராசிரியர்களாக இருந்து, நம் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நம் கொள்கையை, வரலாற்றை எல்லோரிடமும் சேர்க்கவேண்டும் என்று தி.மு.க இளைஞர் அணியின் சார்பாக, கலைஞரின் மூத்தப்பிள்ளை என்று அவர் எப்போதும் செல்கின்ற `முரசொலி’யில் `பாசறைப் பக்கம்’ என்ற ஒரு பக்கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தோம்.
அதில் அண்ணன் சுப.வீ அவர்கள் `எழுதி வளர்ந்த இயக்கம்’ என்ற ஒரு தொடரை தொடர்ந்து எழுதினார். அதேமாதிரி அக்கா அருள்மொழி அவர்கள் திராவிட இயக்க பெண் போராளிகளை பற்றி தொடர்ந்து எழுதினார்கள்.
நம் மருத்துவர் எழிலன் அவர்கள் `டாக்டர் கலைஞர்’ என்ற தலைப்பில், மருத்துவத் துறைக்கு நம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய பணிகளைப் பற்றி ஒரு தொடராக எழுதியுள்ளார். அவர்களின் கொள்கைப் பணி போற்று தலுக்கு உரியது. இதுவரைக்கும் இரண்டு வருடங்களில்
அவர்களுக்கு நன்றி சொன்னதில்லை. அந்தப் பணிகளுக்காக இந்த மேடையை அவர்கள் மூன்று பேருக்கும் நன்றி சொல்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறேன்.
திராவிட இயக்கம்!
1920-–களில் தமிழ்நாட்டில் சமஸ்கிருதப் பேராசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டது. எவ்வளவு தெரியுமா மாதம் 300 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு எவ்வளவு தெரியுமா சம்பளம். மாதம் வெறும் 75 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடி, தமிழ்ப் பேராசிரியர்களின் சம்பளத்தை உயர்த்திய இயக்கம்தான் திராவிட இயக்கம்.
அந்தக் காலத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் அந்த மாணவர்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை தகுதி. அப்போதுதான் மருத்துவக் கல்லூரி விண்ணப்பங்களே கொடுக்கப்படும். அதை எதிர்த்து போராடி ஒழித்ததும் நம் திராவிட இயக்கம்தான். அதனால்தான் இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மாணவர்கள் எல்லாம் மருத்துவருக்குப் படிக்கிறார்கள்.
ஆனால், இன்றைக்கு எத்தனை மருத்துவர்களுக்கு இந்த வரலாறு தெரியும். இந்த வரலாறு எல்லாம் பல மருத்துவர்களுக்கு தெரியவே தெரியாது. அந்தக் காலத்தில் இருந்த சங்கிகள் மட்டும், நம் கல்வி வளர்ச்சியைத் தடுக்கவில்லை. இப்போது இருக்கின்ற சங்கிகளும் அதே வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீட் க்யூட் என்று பல பெயரில் நம் கல்வியைத் தடுக்கலாம் என்று பார்க்கிறார்கள்.
குடும்பத் தொழில்!
நாம் கஷ்டப்பட்டு மாணவர்களை உயர் கல்விக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறோம். ஆனால், சங்கிகள் எப்படியாவது மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விரட்டி அடிக்க, பல திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதுகூட ஒன்றிய அரசு `விஸ்வகர்மா திட்டம்’ என்று கொண்டு வந்து இருக்கிறார்கள். நம் மாணவர்களை அவர்களின் குடும்பத் தொழிலைச் செய்ய வைத்து, அவர்களின் படிப்பை கெடுக்கின்ற திட்டம்தானே அது.
திராவிடம் என்ன சொல்கிறது, வங்கிக் கடன் வாங்கியாவது உயர்கல்வி படி என்று சொல்வதுதான் திராவிடம். ஆனால் நீ குலத்தொழில் செய், நான் உனக்கு கடன் தருகிறேன் என்று சொல்வதுதான் ஆரியம். இந்த மாதிரி பிற்போக்குத்தனமான திட்டங்களைக் கொண்டு வந்துவிட்டு அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி, மாநில அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு.
இதையெல்லாம் நடைமுறைப்படுத்தாத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதற்கான முறையான நிதியையும் ஒதுக்குவது இல்லை. இதற்கு மத்தியில்தான் நம் திராவிட மாடல் அரசு மாணவர்களுக்கு அடுக்கடுக்கான திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
(கடந்த 26.10.2024 அன்று நடைபெற்ற திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் தொடக்க விழாவில் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.)