தனிமையின் தழும்புகள்
ஒரு
இருள் போர்வையைப் போல்
கவிந்து மறைக்கிறது
அந்த அறைகளை

தனிமையின்
துயர்மிகுந்த வடுக்கள்
படிந்திருக்கின்றன
அறையின் சுவர்களில்
விரிப்பில்
புழுதியில்
என
எங்கும்

அடிக்கொரு முறை
ஊடறுத்துக் கவியும்
தனிமையின் பதிலீடுகளை
ஒளியைத் தின்று செரிக்கும்
இருளென
தின்று
தனித்து அலைகின்றன
தனிமையின் அறைகள்

- ந.செந்தில்குமார்

Pin It