சித்தாள் வேலைக்காரர்கள்
சிக்னலில் பொம்மைகள்
காது குடையும் பஞ்சு விற்பவர்கள்
மூன்று சக்கர மிதிவண்டி அழுத்தி
பகலைக் கடந்து
இளநீர் விற்பவர்கள்
இருளோடு உரையாடும்
தமது உடையற்ற குழந்தைகளோடு
மரங்கள் அமைதியாய் உமிழும்
கார்பன்-டை-ஆக்ஸைடுகளின் கீழ்
மணங்கள் நிரம்பி வழியும்
குப்பைத் தொட்டி
நகரும் திரைகளாய் புறமிருக்க
பந்திப் பாயாய் விரிந்திருக்கும்
இரவுச் சாலை பிளாட்பாரங்களில்
இருட்டைப் போர்த்தியபடி
கொசுவலைக்குள்
பள்ளி கொண்டிருக்கிறார்கள்
அவர்களின் மூடிய விழிகள் புலம்பும்
கண்கூசும் உச்சிப் பகல்களை...

- ஆகாசமுத்து

Pin It